Pages

Friday, November 3, 2017

அந்தணர் ஆசாரம் - 21 -ஔபாசனம் தொடர்ச்சி 2




ஔபாசன அக்னியை எப்போதும் பராமரிக்க வேண்டும். ஏதேனும் காரணத்தால் அணைந்து போனால் அரணியை மதனம் செய்து க்ரஹிக்கலாம் அல்லது வேத அத்யயனம் செய்த க்ருஹஸ்தன் வீட்டிலிருந்து க்ரஹிக்கலாம்.
அக்னி அணையாமல் பராமரிக்கப்பட்டாலும் நான்கு நாட்களுக்கு ஹோமம் செய்யவில்லையானால் அது லௌகீக அக்னியாகிவிடும். அதாவது ஹோமம் செய்ய அருகதை அற்றதாகிவிடும் என்று பொருள்.
ஹோம காலத்தில் அக்னியை விட்டுவிட்டு தம்பதிகள் வெளியூர் போய்விட்டாலும் அது லௌகீகம் ஆகிவிடும். யஜமானன் அருகில் இல்லாவிட்டாலும் பத்னி இருந்தால் போதும். ஏழு வேளைகளுக்கு அவளே ஹோமம் செய்யலாம். மந்திரமில்லாமல் பரிசேஷனம் செய்து ஹோமம் செய்ய வேண்டும்.
அக்னி அனுகதமாகி 3 நாட்களுக்குள் அயஸே அக்னயே என்னும் மந்திரத்தால் ப்ராயச்சித்த ஹோமம் செய்து மேற்கொண்டு ஔபாசனம் செய்யலாம்.
பின் 6 நாட்கள் வரை தந்துமதீ என்னும் ரிக்கினால் ப்ராயச்சித்தம் செய்யலாம். பின் 12 நாட்கள் வரை மனோர்ஜ்யோதி என்ற ரிக்கினால் ப்ராயச்சித்தம் செய்யலாம். அதற்கு மேற்பட்டால் புனர் சந்தானம் செய்து கொள்ள வேண்டும்.
இந்த விஷயத்தில் அவரவர் க்ருஹ்ய சூத்திரத்தை அவசியம் பார்த்து செய்யவும். வேறாக இருக்க வாய்புகள் அதிகம்.
அக்னியை ப்ரத்யக்‌ஷமாக வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் அரணியிலோ, ஸமித்துக்களிலோ தன்னிலோ ஆரோபணம் செய்து கொள்ளலாம். இதில் ஆத்ம சமாரோபணம் யஜமானனே செய்ய வேண்டியது. மற்றதை ரித்விக்குகள் செய்யலாம்.
ஸ்வர்ணமயமான மேருவை அல்லது சகல பூமியையும் ஒருவன் தானம் செய்தால் உண்டாகும் புண்ணியம், ப்ராதர்- ஸாயம் ஔபாசனத்தை முறைப்படி செய்யும் ஒருவன் புண்ணியத்துக்கு ஈடாகுமா இல்லையா என்று தெரியவில்லை என்கிறார் ஆங்கீரசர்!
அக்னியில் செய்யப்படும் ஹோமம் சூரியனை அடைகிறது. சூரியனால் மழை பெய்விக்கப்படுகிறது. மழையால் பூமியில் அன்னம், ஔஷதிகள் ஆகியன உற்பத்தி ஆகின்றன. இதனால் ஜனங்களுக்கு சௌக்கியம் ஏற்படுகிறது. ஆகவே முறைப்படி ஔபாசனம் செய்பவன் உலகை ரக்ஷிக்கிறான் என்று அறியவும் என்கிறார் மனு.
மழைக்காலத்தில் விராட்டி, தவிடு/ உமி, ஆகியவற்றை உலர்ந்ததாக இருக்கும்படி கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். பக்‌ஷத்துக்கு ஒரு முறை ஸ்தாலீபாகம் செய்யும் போது உகையை பசுஞ்சாணத்தால் மொழுகி வைத்துக்கொள்வது நன்று.

No comments: