Pages

Thursday, June 15, 2017

காயத்ரி யக்ஞம்- ஆட்சேபணைக்கு பதில்




அன்பின் நாராயணன், ஆசிர்வாதங்கள். நீங்க அனுப்பின செய்தி பார்த்தேன். காயத்ரி யக்ஞம் அபத்தம்ன்னு யாரோ சொன்னதாக சொல்லியிருந்தீங்க. அதுக்கு சமாதானம் சொல்ல வேண்டியது என் கடமை.
அதுக்கு முன்னே... யார் எந்த க்ரூப்பில் போஸ்ட் செய்வதையும் அதன் அட்மின் தவிர யாரும் தடுக்க முடியாது. யாரையாவது பிடிக்கவில்லைன்னா அவரை மட்டுமே ப்ளாக் செய்ய வசதி இருக்கே? நிறைய படங்கள் போடறாங்கன்னா கேட்டாலொழிய படத்தை இறக்காதேன்னு சொல்ல செட்டிங் இருக்கே? ஏன் அதை பயன்படுத்தலாமே? போகட்டும்; இது நீங்க உங்க நண்பர், அட்மின் நடுவில இருக்கிற சமாசாரம். கோபப்பட இதில ஒண்ணுமில்லைன்னு சொல்ல வந்தேன்.
விஷயங்கள் கேள்விப்படறப்ப இது சாஸ்திர சம்மதமான்னு நண்பர் ஆராய்ச்சி செய்கிறார் என்கிறதே ஆச்சரியமா இருக்கு. இது மாதிரி மனிதர்கள் இப்ப அருகிப்போயாச்சு! அவருக்கு என் நமஸ்காரங்கள்.
நண்பர் காயத்ரி ப்ராயச்சித்த கர்மான்னு சொல்லறார். நூத்துக்கு நூறு உண்மை. அப்படி செய்யறப்ப பலாச சமித்தால தனித்தனியா செய்யறதே வழக்கம் என்கிறார். இதுவும் சரியே. அடுத்து அப்படி இல்லாம 8 பேர் சேர்ந்து செய்யறதோ எட்டு த்ரவ்யங்கள் பயன்படுத்தறதோ தப்பு என்கிறார். அது அவர் அபிப்யராயம். அது சாஸ்த்ர விரோதம் என்கிறார். இங்கேதான் பிரச்சினை இருக்கு.
எது சாஸ்த்ர விரோதம்? எது சாஸ்திர சம்மதம் இல்லை என்கிற இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு.
வேதத்தில் இப்படி சொல்லி இருக்கு; சாஸ்திரத்தில் அப்படி சொல்லி இருக்கு என்கிறது வேதோக்தம், சாஸ்த்ரோக்தம். காலையில இன்னின்ன குச்சியால பல் தேய்ன்னு சொல்லி இருக்கு. ஔபாசனம் செய்ன்னு சொல்லி இருக்கு.அது சாஸ்த்ரோக்தம். பூண்டு சாப்டாதேன்னு சொல்லி இருக்கு. இதை மீறி சாப்பிட்டா அது சாஸ்திர விரோதம்.
அநேகமா எல்லாரும் - நம் நண்பர் தவிர, அவர் சரியாத்தான் செய்வார்ன்னு நம்பறேன். 3 வேளை சந்தி காயத்ரி ஜபத்தோட, க்ருஹஸ்தரா இருந்தா ஔபாசனம் செய்து கொண்டுதானே இருப்பார்?- இப்ப குச்சியை பயன்படுத்தறதில்லையே? பிரஷ் பேஸ்ட்தானே பயன்ல இருக்கு? இது சாஸ்திர விரோதமா? இது சாஸ்திர சம்மதமில்லைன்னு சொல்லலாம். சாஸ்திர விரோதம்ன்னு சொல்லலாமா? நான் மாட்டேன்.
சாஸ்திரங்களில சிலது செய்யாதேன்னு சொல்லி இருக்கு; அதை செய்தா அது சாஸ்திர விரோதம். இந்த காலத்தில பலதும் புதுசா இருக்கறப்ப விரோதமான்னு நிர்ணயிக்கிறது கொஞ்சம் கஷ்டம். வேதத்தில் ஜலத்தில மலத்தை கழிக்காதேன்னு சொல்லி இருக்கு. நம் டாய்லெட்களில் என்ன இருக்கு?
இப்ப பாப்புலரா இருக்கிற பல ஹோமங்கள் பலதும் சாஸ்திரத்தில் சொல்லப்படலை. மஹாகணபதி ஹோமம், நவக்ரஹஹோமம், சண்டி ஹோமம் எல்லாம் சொல்லப்படலை. பின்னே செய்யறாங்களேன்னா அதெல்லாம் தாந்த்ரீகம். சாஸ்த்ரோக்தம் இல்லைன்னாலும் தப்பு இல்லை. அது போலவேதான் இந்த காயத்ரி ஹோமமும்.
தர்ம சிந்து என்கிற கிரந்தத்தை எடுத்து காயத்ரி புரச்சர விதியை படித்தால் சமித் இல்லாமல் ஹோமம் செய்யும் மற்ற பொருட்கள் பற்றி சொல்லி இருக்கு. ஸ்ரீ சோமதேவ சர்மா எழுதிய சந்தியாவந்தனம் என்கிற புத்தகத்தில் இருந்து நான்கு பக்கங்களின் படங்களை இத்துடன் இணைக்கிறேன். இன்னும் பல பொருட்கள் பயனாவதை பார்க்கலாம்.
நடைமுறை கருதி ஹோமத்தில் பயன்படுத்தக்கூடாத பொருட்களை விட்டுவிட்டு ஹோமார்கமான பொருட்களையே ஹோமத்தில் பயன்படுத்துகிறோம். நண்பர் அடுத்த வருஷத்துக்கு 64512 பலாச சமித்துகள் - நல்ல தோல் உள்ளவையாக இருக்க வேண்டும். கோணலில்லாமல் நேராகவும்; 10-12 விரற்கடை நீளமும்; காய்ந்ததும் ஆனால் கொஞ்சமாவது ஈரத்துடனும்; சரியா வெட்டப்பட்டவையாகவும்; ஆள்காட்டி விரல் பருமனாகவும்; பிளக்கப்படாமலும்; கிளைக்காமலும்; புழுவெட்டு இல்லாமலும் இருக்கும் சமித்துகளாக பார்த்து அனுப்பித்தருவாரானால் அதையே பயன்படுத்த சித்தமாக இருக்கிறோம்.
சமஷ்டியாக செய்யகூடாது என்கிறார். தனியாக செய்த பாபத்தை தனியாக ஹோமம் செய்து கழித்துக்கொள்ளலாம்; சமஷ்டியாக செய்யும் பாபம்? நாட்டில் எத்தனையோ பாபம் நடப்பதை பார்த்துக்கொண்டு ஒன்றும் செய்ய முயலாமல்தானே சும்மா இருக்கிறோம்?
இது சாஸ்திர விரோதம், சுனாமி வரும் என்கிறார். நாங்கள் சுனாமியை பார்த்தாயிற்று. கடற்கரை மீனவ குடியிருப்புகள் சேதமாயின; நகரில் பாதிப்பே இல்லை. அப்போதைய கடலூர் கலெக்டர் முதன்முதலாக இந்தியாவில் சுனாமி தாக்கம் என்று ப்ளாஷ் செய்ததால்தான் கடலூர் பிரபலமாயிற்று. உண்மையில் நாகைப்பட்டினம் போன்ற இடங்கள் இன்னும் அதிக பாதிப்புக்கு உள்ளாயின.
இருக்கட்டும். இதனால் பயன் விளைகிறதா என்பது ஒரு முக்கிய பிரமாணம் இல்லையா?
கடந்த வருடங்களில் இங்கு மழை பெய்கிறதோ இல்லையோ ஜலத்துக்கு கஷ்டம் இல்லை. போன முறை மழை பொய்த்துபோயும் இப்பவும் எங்கள் வீட்டு கிணற்றில் 15 அடி ஆழத்தில் ஜலம் இருக்கு. ஏற்கெனெவே இந்த பதிவு பெரிசா போச்சு. அதனால ஜப யக்ஞத்தில் கலந்து கொண்டவர்களின் அனுபவம் பற்றி இங்கே எழுதி இருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் படித்துக்கொள்ளலாம். https://goo.gl/2QZzf4
பதிவு நீண்டு விட்டதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.



No comments: