Pages

Thursday, June 1, 2017

ஆன்மீக விசாரம் - 15




சில நாட்களுக்கு முன்னே நண்பர் சுனந்தன் நம்பூதிரி அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போ கூடுதலா இன்னொரு தேவதா உபாசனை குறித்து பேச்சு எழுந்தது. அவர் இது யோசிச்சு செய்யறது நல்லது என்றார். கொஞ்சம் ஆச்சரியத்துடன் ஏன்னு கேட்டேன். அவர் இது வரைக்கும் இதை செய்யலை. அதனால ஒண்ணும் பிரச்சினை இல்லை. இப்ப ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த உபாசனையை ஆரம்பிச்சா அத தொடர்ந்து செய்யணும். அப்படி இல்லாம நடுவில் விட்டுவிட்டா அது அந்த தேவதையோட கோபத்தை கிளரிவிடும். ஏன் நிறுத்தினேன்னு அது கேட்கும். திருப்பி துவங்காவிட்டா அதனால அந்த தேவதையால கொஞ்சம் பிரச்சினையை சந்திக்க நேரிடும். அதான் விஷயம்ன்னார்.
இது எனக்கு கொஞ்சம் புதுசா இருந்தது. இதை குறிச்சு கொஞ்சம் -வழக்கம் போல கோளாறான- விசாரனையை ஆரம்பிச்சேன்.
வழக்கமா ஒரு கோவிலுக்கு போய்கொண்டு இருக்கோம். ஒரு தீபாராதனை, கண்ணுல ஒத்திண்டு, தட்டுல ஏதோ காசு போட்டு, பிரசாதம் வாங்கிண்டு வந்துடுவோம். அப்பப்ப ஏதாவது ஒரு அர்ச்சனை செய்வோம். இப்படியே போயிண்டு இருக்கும். ஏதோ ஒரு பிரச்சினை வரது. அதை அந்த கோவில் தெய்வத்துக்கிட்டேயே முறையிடலாம். செய்தாலும் செய்வோம். இப்ப நடுவில் யாரோ வந்து "ஓஹோ! இப்படி பிரச்சினையா? நீ இந்த கோவிலுக்கு போய் இப்படி செய்ன்னு சொல்லுவார். நாமும் ரைட்டுன்னு அதை ஆரம்பிச்சுடுவோம். இது வரை போய்கொண்டு இருந்த கோவிலை 'தற்காலிகமா'ன்னு நினைச்சு நிறுத்தி அது நின்னே போகும். கொஞ்ச நாள்ல அடுத்த கோவில். அதுக்கெல்லாம் என்ன குறைச்சல்? நிறையவே ஊர்ல இருக்கும்.
வீட்டிலே ஏதோ பூஜை செய்து கொண்டு இருப்போம். ஏதோ ஒரு படம் அல்லது சின்ன விக்ரஹம். திடீர்ன்னு யாரோ வருவாங்க. “இந்த ஊருக்கு/ கோவிலுக்கு போனேனா? அந்த கடவுள் அவ்வளோ வரப் ப்ரசாதி. நினைச்சது நடக்குதாம். எனக்கு இந்த பிரச்சினை இருந்தது; இப்ப சரியாப்போச்சு. நீயும் பூஜை பண்ணு. இந்தா படம்ன்னு ரொம்ப கரிசனத்தோட நல்லது செய்யறதா நினைச்சு ஒரு படத்தை கொடுத்துட்டுப் போவாங்க. நாமும் ரைட்டுன்னு இது வரை பூஜை பண்ணி வந்ததை கொஞ்சம் ஓரம் கட்டிட்டு இதை வெச்சு பூஜை செய்வோம். அடுத்த படம் வந்தவுடன் இதுவும் ஓரம் கட்டப்படும். முன்னே இருந்தது இன்னும் ஓரமா போகும்.
இந்த ஆன்மீக வாதியா அறியப்படறதுல ஒரு சின்ன பிரச்சினை. யார் வந்தாலும் ஏதோ ஒரு படத்தை கொடுத்துட்டு போவாங்க. அதை வெச்சுக்கொண்டு என்ன செய்யறதுன்னு முழிப்போம்! எனக்கு ஒரு நண்பர். அவர் இப்படித்தான். அதுவும் சின்ன சின்ன படங்களில்லை. ரெண்டு அடிக்கு மூணு அடி சைஸ்ல ப்ரேம் பண்ணதா கொண்டு வந்து கொடுப்பார். ஒரு காலகட்டத்துல அவர்கிட்ட சிரிச்சுண்டே சொன்னேன். “இப்படி நீ படங்கள் கொண்டு வரது ரொம்ப சந்தோஷம். ஒரே ஒரு சின்ன விஷயம் இதுக்கு வேணுமே?”
"என்னது?”
"இதை எல்லாம் வைக்க ஒரு வீடு கட்டி கொடுத்துட்டாப்போறும்!”
அத்தோட படங்கள் வரது நின்னுப்போச்சு!
இந்த கோவில்கள் மாறறது உபாசனை மாற்றம் எல்லாத்துலேயும் சாதாரணமா பெண்கள் அதிகமா மாட்டிக்கறா மாதிரி தோணறது. பின்ன? ஐயாதான் பூஜை எல்லாம் பொம்பிளைங்க சமாசாரம்ன்னு கண்டுக்காம இருக்காரே!
என் செய்யலாம்?
- சிந்தனை தொடரும்

No comments: