Pages

Tuesday, September 6, 2016

விநாயகர் விசர்ஜனம் - மீள்பதிவு





இதன் முக்கியத்துவம் கருதி மறு பதிவு, சிறு திருத்தங்களுடன் : 
https://anmikam4dumbme.blogspot.in/2012/09/blog-post_3061.html

விநாயக சதுர்த்தி முடிந்திருக்கும், அனேகமாக எல்லா இடங்களிலும் விசர்ஜன ஏற்பாடுகள் நடந்து முடிந்திருக்கும். வருஷா வருஷம் சில விஷயங்கள் இந்த சமயத்தில் அடிபடும். நீர்நிலைகள் மாசு படுகிறது என்பதொன்று. விநாயகரை தடியால், காலால் அடித்து/ உதைத்து உடைத்து விசர்ஜனம் செய்கிறார்கள் என்பதொன்று.
என்னதான் அரசு ப்ளாஸ்டர் ஆஃப் பாரீசில் பிள்ளையார் உருவங்களை செய்யாதீர்கள் என்றாலும் நாம் கேட்கிறோமா? என்றைக்கு அரசு உத்தரவை / வேண்டுகோளை – அது என்னதான் நல்லது என்றாலும் செயல்படுத்தி இருக்கிறோம்? மின் சிக்கனம் ன்னு சொல்லி அலங்கார விளக்குகள் வேண்டாம் ன்னு சொன்னா என்ன, கரடியா கத்தினா என்னஎல்லா திருமண மண்டபங்களிலேயும் எக்கச்சக்கமாத்தான் எரியுது. கிடக்கட்டும்.
அடுத்து விநாயகரை உடைக்கிற விஷயம்.
இதுலதான் கொஞ்சம் வித்தியாசமா யோசிக்கிறேன்.
உடைக்கிறது விநாயகரையா அல்லது அப்படிப்பட்ட ஒரு உருவத்தையா? நாம கடையில் விநாயகர் பொம்மைய வாங்கும் போது அதுல விநாயகர் இருக்காரா? பிள்ளையார் பொம்மை வேணும்ன்னு கேட்டே பார்த்து வாங்குகிறோம். அதுல எப்ப பிள்ளையார் வருவார்?
நாம் பூஜை செய்ய ப்ராணப்ரதிஷ்டை செய்யும்போது வருவார். அப்படி செய்யும்போது என்ன சொல்கிறோம்? “அப்பா பிள்ளையாரே பூஜை செய்யும் வரை எங்களிடம் ப்ரீதியுடன் இருப்பா” என்கிறோம். பூஜை முடியும் வரை – இது முக்கியம். ப்ராணப்ரதிஷ்டை ன்னு இல்லாட்டாலும் பூஜை கிரமத்துல ஸுமுகம்/ ஸித்திவிநாயகம் அல்லது பிள்ளையாரின் ஏதோ ஒரு பெயரை சொல்லி "த்யாயாமி, ஆவாஹயாமி" என்னும் போது வருவார். அப்படி இல்லைன்னா அந்த படிக்கு அர்த்தமே இல்லையே?
சரி இப்படி ஆரம்பிச்சு பூஜை செய்கிறோம். சாதாரணமா இப்படி மற்ற பூஜைகள் செய்யும்போது பல நாட்கள் வைத்து இருக்க மாட்டோம். அப்படி வைக்கிறதானால் வேளா வேளைக்கு பூஜை செய்யணும். அதனால பூஜை முடிந்த உடனே அல்லது அடுத்த நாள்  பூஜை செய்து முடிந்த பிறகு புனர் பூஜை ன்னு செய்து :…. யதா ஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. க்‌ஷேமாய புனராகமனாய ச” என்போம். அதாவது “உன்னை உன் இடத்துக்கு அனுப்பி வைக்கிறேன். நலத்தோடு மீண்டும் வருவாய்” என்கிறோம். அதாவது அதன் பின் ப்ரதிஷ்டை செய்த பிம்பத்திலே/ படத்திலே அந்த தெய்வ சக்தி இல்லை. அது சாதாரணமாக எங்கே இருக்குமோ அங்கே அனுப்பி விட்டோம். பிள்ளையார் ஊர்வலங்களிலேயும் நீர் நிலைக்கு போன பின் சூடம் காட்டி அவரை அனுப்பி வைத்து விடுகிறார்கள்.
எங்கோ எப்படி அனுப்பி முடியும்? பகவான் எங்கேயும் இருக்கிறான்னா…. ஒத்துக்கறேன். பகவான் எங்கேயும் இருக்கிறான் என்பதே என்னோட தத்துவமும். அப்ப நாம இப்படி உதைக்கிறாங்களே ன்னு எல்லாம் வருத்தப்படறதுல நியாயமே இல்லை. உதைப்பதும் அவனே, உதை வாங்குவதும் அவனே, அப்புறம் என்ன?
ஆக சரியான லெவெல்லேந்து யோசிக்கணும். பகவான் எங்கும் இருக்கிறானா? இல்லை அழைத்தால் மட்டும் வருகிறானா? அழைத்தால் மட்டும் வருகிறான் னா, போய் வா ன்னு விடை கொடுத்தாலும் போய் விடுவான்தானே?
அப்படி போய் விட்ட பிறகு உடைக்கப்படுவது வெறும் பொம்மை, சிலை. அதுல ஒண்ணும் பிரச்சினை இல்லை.
இதை பெரும்பாலானவர் ஒத்துக்க கஷ்டப்படுவீங்கன்னு தோணுது. நமக்கு நெருங்கிய ஒத்தர் இறந்து போய்விட்டா… இருக்கிற உடல் வெறும் பஞ்சபூதங்களால ஆனதுதானே? அதனால அதை என்ன வேணுமானாலும் செய்யலாமா? முறைப்படி அடக்கம் செய்யறது இல்லையா?
இது சரியான கேள்வி. விநாயகரை கொண்டு நீர் நிலையில் கரைப்பதே ஒரு தத்துவத்தை உணர்த்த. மண்ணிலிருந்து வருவது மண்ணாகவே போய் விடுகிறது. பஞ்ச பூதங்களை பஞ்ச பூதங்களில் ஒன்றான மண்ணோடோ நெருப்போடோ ஐக்கியப்படுத்துகிறோம். அதே போல மண்ணாலான பிள்ளையாரை தெய்வ சக்தியை அனுப்பி விட்ட பின் மண்ணாகவே ஆனதை நீரில் கரைத்து விடுகிறோம்.
அப்ப ஒன்று செய்யலாம். அலங்காரத்துக்காக பெரிய பெரிய பிள்ளையாரை மனசுக்கு இதமா எல்லாரும் கண்டு களிக்க நிறுவி, அதன் அடியில் ஒரு சின்ன மண் பிள்ளையாரை நிறுவலாம். பூஜை எல்லாம் இந்த மண் பிள்ளையாருக்கே செய்ய வேண்டும். ஊர்வலமா எல்லா பிள்ளையாரையும் கொண்டு போகலாம். ஆனால் மண் பிள்ளையாரை கரைத்துவிட்டு பெரிய பிள்ளையாரை அதே வண்டியில் படுக்கப் போட்டு ஒரு இடத்துக்கு கொண்டு வந்து விட வேண்டும். அங்கே தகுந்தபடி டிஸ்போஸ் செய்து கொள்ளலாம். அல்லது வைக்க இடம் இருந்தால் அவரையே அடுத்த வருஷம் பெய்ண்ட் அடித்து புதுப்பித்து மறு சுழற்சி செய்து விடலாம். 

No comments: