Pages

Monday, September 19, 2016

சயன்ஸ் 4 ஆன்மீகம் - பூக்கள்




பூக்கள்:
இறைவனுக்கு பூக்களாலும் இலைகளாலும் அர்ச்சனை செய்யலாம். அனேகமாக எல்லா பூக்களையும் முழுமையாகவும் அனேகமாக எல்லா இலைகளையும் பிய்த்தும் அர்ச்சிக்க வேண்டும். (துளசியும் வில்வமும் எக்ஸெப்ஷன்.)
வாசனை இல்லாத பூக்களால அர்ச்சிக்கக்கூடாது.
பூவோ இலையோ பறித்த சில மணி நேரங்களில் - சுமார் 4 - பயன்படுத்திவிட வேண்டும். நேரம் ஆக ஆக அதிலிருந்து ப்ராண சக்தி வெளியேறி பயன் இல்லாம போகும். எல்லாத்துக்கும் விதி விலக்கு இருக்கு இல்லையா? சண்பகம் (1 முழு நாள்), அரளி (3 நாட்கள்), விஷ்ணு க்ரந்தி(3) தாமரை (5), தாழை (5), துளசி (3 மாதங்கள்) வில்வம் (6 மாதங்கள்)
வில்வத்தை நீரால் சுத்தி செய்து அதே தேவதைக்கு திருப்பித்திருப்பி பயன்படுத்தலாம். மற்ற எதையும் மீண்டும் பயன்படுத்துவதில்லை.

நம்ப ஃப்ரெண்டு பிள்ளையாருக்கு ரொம்ப பிடிச்சது அருகம்புல். சிவப்பு மலர்கள் எல்லாம் இவருக்குப்பிடிக்கும். உதாரணமா சிவப்பு தாமரை, செம்பருத்தி, ரோஜா. இன்னும் பல இருக்கு.

சீசல்பீனியே குடும்பத்தை சேர்ந்த எல்லா பூக்களும் சிவனுக்கு உகந்தவையா சொல்லிருக்காங்க. இன்னும் சிம்பிளா கஷ்டமே கொடுக்காத சமாசாரம் ஒண்ணு இருக்கு. அதை பறிக்க மரம் ஏற வேணாம். அதை பறிக்கப்போய் முள்ளு குத்திக்க வேணாம். கஷ்டப்பட்டு வளர்க்க வேணா. ரோடு ஓரம் அது பாட்டுக்கு வளந்து கிடக்கும். இப்பல்லாம் ரோடு ஓரமே முழுக்க சிமெண்ட்ன்னு சொல்லறீங்களா? அதுவும் சரிதான். இருந்தாலும் பெரும்பாலான பகுதிகளில் அப்படி கிடைக்கும். அதுதான் தும்பைப்பூ!

சிவனுக்கு ரொம்ப பிடிச்சது நாகலிங்கப்பூ. மேலும் அலரி, செவ்வந்தி, தாமரை ஆகியன உகந்தவை. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா ஆகியவற்றின் இலைகள் சிவனுக்கு உகந்தவை.

விஷ்ணுவுக்கு உகந்த இலைகள்: துளசி, மகிழம், சண்பகம், தாமரை. வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, நாயுருவி, விஷ்ணுக்ரந்தி, நெல்லி ஆகியன. பரம சந்தோஷத்தை கொடுக்கக்கூடியது துளசி. ஆசிமம் ஜீனஸ். குடும்பம் லெமிஸீ. இதில பல வகைகள் இருக்கு. நந்தவனத்தில் எத்தனைச் செடிகள் இருந்தாலும், அது நந்தவனமாகாது. அதே நேரத்தில் ஒரு துளசி செடி மட்டுமே இருந்தாலும் அது நந்தவனம் ஆகிவிடும் என்கிறது வேதம். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தை. 300க்கும் மேற்பட்ட துளசி வகைகள் இருந்தாலும், வெண்துளசியைத்தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி, கஞ்சாங்கோரை, திருத்துழாய், காடு துளசி ன்னு சில வகைகளை விக்கிபீடியா சொல்லுது. திருத்துழாய் என்கிறது கருந்துளசி போலிருக்கு.
Ocimum tenuiflorum என்கிறதுதான் இந்தியாவில பெரும்பாலும் பூஜைக்கு பயன்படுது. இதெல்லாம் இல்லாம பல ஹைப்ரிட்ஸ் இருக்கு. இத்தலில இனிக்கிற துளசி, தாய்லாந்து துளசி, எலுமிச்சை சுவையோட துளசின்னு பலதும் உண்டு! மேலும் நீல நிறமான பூக்களை பெருமாளுக்கு பூஜிக்கலாம். உதாரணமா நீல சங்குபுஷ்பம். பொதுவா வேறு எந்த தெய்வத்துக்கும் நீல நிற பூக்களால பூஜிக்கறதில்லை.
 
வெண்மையான பூக்கள் சாத்விகம். இதனால் முக்தி விரும்பறவங்க பூஜை செய்யலாம். இந்த காலத்துல அதை யாரும் விரும்பறது இல்லை. இந்த லோகத்துக்கான வசதியைத்தான் விரும்பறாங்க. அப்படிப்பட்டவங்க சிவப்பு நிற பூக்களால அர்ச்சிக்கலாம். தங்க நிற பூக்களால இது ரெண்டுமே கிடைக்கும்! முருகனுக்கு பிடிச்சது கடம்பம், காந்தள், குறிஞ்சி, செவ்வலரி ஆகியன. மஹாலக்ஷ்மிக்கு மிகவும் உகந்தது தாமரை. 
 
காலையில் பயன்படுத்தக்கூடியவை தாமரை, புரசம்பூ, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை. மந்தாரை, முல்லை, சண்பகம், புன்னாகம் ஆகியன. 
 
நடுப்பகலுக்கு வெந்தாமரை அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம், மருதாணி, கோவிதாரம். 
 
மாலைக்கு செந்தாமரை, அல்லி, மல்லி, ஜாதிமுல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம். 
 
பொதுவா வாடிப்போன பூக்கள், பூச்சி அரிச்சது, பின்னமானது, முகர்ந்து பார்த்தது அசுத்தமான இடத்தில் மலர்ந்தது, அசுத்தமான கூடையில வெச்சது, தானாக விழுந்தது - இதெல்லாம் சிலாக்கியமில்லை. பாரிஜாதம் செடியில் இருந்து விழு முன்னே பறிக்கப்பாருங்க!

துர்கைக்கு மல்லி, முல்லை, செவ்வரளி, செம்பவள்மல்லி, சூரிய காந்தி உகந்தவை.
சூரியனுக்கு நந்தியாவட்டை சிலாக்கியம்.

இதெல்லாம் இல்லாம சில தெய்வங்களுக்கு சில பூக்கள் பயன்படுத்துவதில்லை. விஷ்ணுவுக்கு அக்ஷதையால அர்ச்சனை செய்யறதில்லை (எல்லா பூஜைக்கும் முன்னால் செய்யற பிள்ளையார் பூஜைக்கு எல்லாத்தையும் அக்ஷதையால செய்யறாப்போல). அது போலவே வெள்ளெருக்கு, ஊமத்தையாலும் அர்ச்சனை இல்லை. பொதுவா இந்த விஷமுள்ள இலைகள், பூக்கள் எல்லாம் சிவனுக்குப்பயனாகும்.

தாழம் பூ சிவனுக்கு ஆகாதுன்னும் ஏன்னு கதையும் தெரிஞ்சிருக்கும். அதே போல குந்தம், கேசரம், குடஜமம், ஜபா புஷ்பம் ஆகியவையும் அவருக்கு ஆகாது. பிள்ளையாருக்கு விருப்பமான அருகு, வெள்ளெருக்கு, மந்தாரம் ஆகியன அம்மனுக்கு சரிப்படாது. பஞ்சாயதனத்துல பக்கத்து பக்கத்துல இருக்கிறதால் கவனமா இருக்கவும். பிள்ளையாருக்கு துளசி; வில்வம் சூரியனுக்கு; பவழமல்லி சரஸ்வதிக்கு கூடாது.

இதைப்பத்தி இன்னும் எக்கச்சக்க சமாசாரம் இருக்கு. ஆனா இங்கே இது போதும்!
ஆர்வம் இருந்தா இங்கே படிக்கலாம். http://rightmantra.com/?p=7545


No comments: