Pages

Wednesday, September 28, 2016

கிறுக்கல்கள் -168




மாஸ்டரின் முதல் குழந்தை பிறந்த பின்னர் அவர் அலுக்காமல் குழந்தையையே பார்த்துக்கொண்டு இருப்பார்.
பெரியவன் ஆன பிறகு இவன் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டார் ஒருவர்.
மிக மிக மகிழ்ச்சியுடன்!” என்றார் மாஸ்டர்

Tuesday, September 27, 2016

கிறுக்கல்கள் - 167




மக்கள் ஒருவரை ஒருவர் எப்படி பார்க்கிறார்கள் என்பதற்கு மாஸ்டர் இந்த கதையை சொன்னார்.
அவர் திருமணம் செய்து கொண்ட பிறகு நகரில் பத்தாவது மாடியில் வசித்து வந்தார். அவருடைய இளம் மனைவி ஒரு நாள் குளித்துவிட்டு துண்டை எடுக்க அறைக்கு வந்தார்; உறைந்து போனார்.

ஜன்னலுக்கு வெளியே இருந்துகொண்டு ஒருவர் கண்ணாடியை சுத்தம் செய்து கொண்டிருந்தவர் இவரை பார்த்துக்கொண்டு இருந்தார். உறைந்து போன அம்மணி நகரக்கூட முடியாமல் பேச்சற்று வெறித்து பார்த்துக்கொண்டு நின்றார். ஒரு நிமிடம் சென்றது. வெளியே இருந்தவர் கேட்டார். “ஏன் அம்மணி, முன்னால் நீங்க கண்ணாடி சுத்தம் செய்கிறவரை பார்த்ததே இல்லையா?” 

Monday, September 26, 2016

பஞ்சகச்சம்





பஞ்ச கச்சம் வெச்சு வேட்டி கட்டறது நம்ம நாட்டுல பரவலா இருந்த ஒண்ணு. இது கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சு போச்சு. இப்ப சிலர்மட்டுமே அதுவும் ஏதேனும் விசேஷ தினத்தில் மட்டுமே அப்படிக்கட்டுகிறார்கள். பஞ்சகச்சம் வெச்சு ஏன் கட்டணும் என்கிறதெல்லாம் வேற விஷயம். இப்ப இங்கே எழுத வந்தது, அதை கட்டும் விதத்தில இருக்கற ஒரு சில நுணுக்கங்களை.
பஞ்ச கச்சம் - 5 கச்சம். இந்த அஞ்சும் எங்கே எங்கே வரது?
வலது, இடது பக்கங்கள் இடுப்பில.
ரைட், ரெண்டு!
முன் பக்கம் ஒண்ணு.
ரைட், மூணு.



பின்னால ஒண்ணு, நாலு!
இல்ல. அது குச்சம்!
ம்ம்ம்ம்ம்???
இடது பக்கம் கட்டும் போது கிடைக்கற போல்டுல ஒண்ணு. நாலு.



நிறைய பேர் செய்யாத அஞ்சாவது - வெர்டிக்கலா தொங்கற பார்டரை பிடிச்சு மேலே தூக்கி முன் பக்க கச்சத்தோடவே சொருகணும். இதுல எவ்வளோ உசரம் என்கிறதை அட்ஜஸ்ட் செய்யலாம். வேட்டி தரையில புரளாம ஓரளவு தடுக்கும். இதை அட்ஜஸ்ட் செஞ்சும் புரண்டுதுன்னா இடுப்பு மடிப்பில சுருட்டி விட்டு அட்ஜெஸ்ட் செய்யலாம். இல்லைன்னா வேற சைஸ் பாத்துதான் வாங்கணும்!

கிறுக்கல்கள் - 166




தேர்தல் அன்றைக்கு மாஸ்டர் முதலில் ஓட்டு போடுபவர்களில் ஒருவராக இருப்பார்.
அவருடைய சீடர்களில் சிலர் ஏன் ஓட்டு போடுவதில்லை என்பது அவருக்கு புரியவே இல்லையாம்!
மக்கள் வரி கட்டுகிறார்கள்; நாட்டுக்காக சண்டைக்கு போய் உயிரை இழக்ககூட தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஏன் ஓட்டு போட்டு ஜனநாயகம் தழைக்கச்செய்ய மாட்டார்கள்?


Friday, September 23, 2016

கிறுக்கல்கள் - 165





மன நோய் மருத்துவர்களுக்கு எதிராக மாஸ்டர் ஏதும் சொல்வதில்லை. இருந்தாலும் அவர்களால் பெரியதாக ஒன்றும் செய்ய முடியாது என்பார். ஒரு பிரச்சினையை இன்னொரு பிரச்சினையாக மாற்றிவிடுவார்கள்; அவ்வளவே. இதற்கு ஒரு கதை சொன்னார்:
பஸ்ஸில் ஒருவர் செய்தித்தாளால் சுற்றி ஒரு பெரிய கனமான பார்சலை எடுத்துக்கொண்டு போய்க்கொண்டு இருந்தார்.
பக்கத்தில் இருந்தவர் அதை பார்த்து அது என்ன என்று அறிய விழைந்தார். ஆவலை அடக்கமாட்டாமல் கேட்டார் “பார்சலில் என்ன?”
இது ஒரு வெடிக்காத குண்டு. அரசு அலுவலகத்தில் ஒப்படைக்க எடுத்துப்போகிறேன்!”
கடவுளே இதை எல்லாம் மடியில் வெச்சுக்கொண்டு போவாயா? நீ முட்டாளா? சீட்டுக்கு அடியில வை!” 

Thursday, September 22, 2016

கிறுக்கல்கள் - 164





ஒரு செக்ஸ் பத்திரிகை மிகவும் பிரபலமாகிவிட்டது; விற்பனை பிய்த்துக்கொண்டு போகிறது என்று யாரோ மாஸ்டரிடம் சொன்னார்கள்.
மாஸ்டர் சொன்னது “ஐயோ பாவமே! உண்மையில் நீ அதைக்குறித்து எவ்வளவுக்கு எவ்வளவு படிக்கிறாயோ அவ்வளவுக்கு அவ்வளவு குழப்பமே ஏற்படும்; குறைவாகவே தெரிய வரும்.”
பின்னால் இதையும் சொன்னார் “ இன்னும் குறைவாகவே அதை இன்பத்துடன் அனுபவிக்கவும் முடியும்!” 

Wednesday, September 21, 2016

கிறுக்கல்கள் - 163





மிகவும் முன்னேறிவிட்ட நாடு அது.
நாளாக ஆக நவீன உலகத்தில் பாலியல் வறட்சி அதிகமாகிக்கொண்டு இருக்கிறது” என்றார் மனநோய் மருத்துவர்.
அதென்ன?” என்று கேட்டார் மாஸ்டர்.
உடலுறவுக்கு இச்சை இல்லை”.
ஓஹோ! அதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்?”
எங்களுக்கு தெரியவில்லை! உங்களுக்கு ஏதேனும் ஐடியா இருக்கா?”
இருக்கே!”
என்னது?”
அதை மீண்டும் பாபச்செயல் ஆக்கிவிடலாம்” என்றார் மாஸ்டர் ஒரு குறும்புப்புன்னைகையோடு! 

Tuesday, September 20, 2016

விதவைத் தாய்க்கு கிடைத்த அமுதசுரபி




இந்த பதிவுகளில் இது வரை மற்ற இடத்தில் இருந்து கட் பேஸ்ட் செய்யவே இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் இன்று அப்படி செய்யத்தோணுகிறது. படித்த கதை அப்படி இருக்கிறது.
ஸ்ரீ மடத்து சன்யாசிகளுக்கு பல கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றை மிகவும் கடுமையாக கடைபிடித்தவர் மஹா பெரியவர் எனப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள். அந்த காலத்து வழக்கப்படி விதவை கோலம் பூணாத விதவைகளுக்கு அவர் தரிசனம் தர மாட்டார். இருந்தாலும் கைவிடவில்லையே! படிக்கும்போது கண்ணீர் வந்துவிட்டது. கதையை படியுங்கள். கொஞ்சம் நீண்ட பதிவு. வாட்ஸப்பில் வந்ததில் முதல் முறையாக உருப்படியாக வந்தது!
----
காஞ்சி மாமுனி மஹாபெரியவாளின் நிகழ்வுகள்

  மாமுனியின் கருணையா – கொடையா

(ஸ்ரீ மும்பை விஜயன் ஸ்வாமிகளின் சொற்பொழிவிலிருந்து...)

விதவைத் தாய்க்கு கிடைத்த அமுதசுரபி

                        அடியேன் கல்கத்தாவில் பயணிகள் கப்பலில் வரும் என் நண்பரைக் காணத் துறைமுகம் சென்றேன். கப்பல் இரண்டு மணி நேரம் தாமதம் எனத் தெரிந்தது. அவருக்காக காத்திருக்க முடிவு செய்து அந்த சாலையில் இருந்த ஒரு ஹோட்டலின் முன் இருந்த பெஞ்சில் அமர்ந்தேன். அது ஒரு சிறிய ஹோட்டல்.  வருவோர் போவோர் அதிகம் இருந்த நிலையில் அந்த ஹோட்டல் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. என் பார்வை கல்லாவில் இருந்தவரின் மீது செல்ல, அவர் அமர்ந்து இருந்த இருக்கைக்குப் பின்னால் ஒரு படம் பூக்களாலும், வண்ணக் காகிதங்களாலும் அலங்கரிக்கப்பட்டு பார்வையை இழுக்கும் வகையில் இருந்தது.. அந்தப் படம் என்னை ஈர்க்க, நான் அருகே சென்று பார்க்க, அது மஹா பெரியவாளின் படம். கல்கத்தாவில் 90 சதவிகித இடங்களில் காளி மற்றும்  ராம கிருஷண பரமஹம்சர் விவேகானந்தர் படங்களைப் பார்த்த எனக்கு, என் குரு நாதரைக் கண்டவுடன்  உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

                  கல்லாவில் அமர்ந்திருந்தவரிடம். படத்தைக் காட்டி  யார் இவர் என வினவ அந்த நபர் உள்ளம் பூரித்து கண்கள் விரிய “என் தாக்குர்ஜி என் தாக்குர்ஜி” என பரவசப் பட்டார். இவரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என அடியேன் கேட்க அந்த கேள்விக்கு காத்திருந்தவர் போல நொடியும் தாமதிக்காது மிகுந்த உணர்ச்சி வசப்பட்டவராய் பேசத் தொடங்கினார். அவர் உள்ளத்தில் பெருகிய பக்தி – மடை திறந்த வெள்ளம் என வார்த்தைகளாக பெருக்கெடுத்தது. பக்தியில் நனைந்து நனைந்து வந்து விழுந்த குரு நாதரைப் பற்றிய ஒவ்வொரு சொல்லும் தேனாக என் காதில் பாய்ந்தது. பக்தியில் பொங்கி பொங்கி கொப்பளித்த அவர் உள்ளம் சற்று சம நிலை அடைய, அடியேன் அவர் பேச்சின் இடை இடையே மஹாபெரியவாளைப் பற்றி ஒரிரு வரிகள் சொல்ல, தன் பேச்சை நிறுத்தியவர் கண்களில் வியப்புடன் தாக்குர்ஜி பற்றி தெரிந்தும் என்னிடம் தெரியாதது போல் கேட்டீர்களா என வாய் விட்டு சிரிக்க அந்த சிரிப்பில் கள்ளம் கபடம் இல்லா அவரின் குழந்தை உள்ளம் தெரிந்தது.

                           அருகே இருந்த பணியாளரிடம் கல்லாவைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, என் கைகளைப் பிடித்து அழைத்து ஒரு இருக்கையில் அமர்த்தினார். இருவரும் மஹாபெரியவாளைப் பற்றி பேசி பேசி  களிப்படைய,  நேரம் போனதே தெரியவில்லை. கப்பல் வந்துவிட்ட அறிவிப்பு வர அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன். என் கைகளை அழுத்திப் பிடித்தவர் உங்களைப் பிரிய ஏனோ மனம் வரவில்லை, இன்று மாலை என் இல்லம் வாருங்கள். தாக்குர்ஜி என் குடும்பத்துக்கு செய்த ஒரு உன்னதமான அதிசயத்தை சொல்லுகிறேன், வருவீர்களா என ஏக்கத்துடன் கேட்க - அவரிடம் , ஐயா அதை விட பெரும் பாக்கியம் என்ன இருக்க முடியும் கட்டாயம் வருகிறேன் என சொல்லி அவர் முகவரியைப் பெற்றுக் கொண்டு விடை பெற்றேன்.
                 அன்று மாலை அவர் இல்லம் சென்றேன். அழகான எளிமையான சிறிய இல்லம். மணம் கமழும் ஒரு சிறு அறையில் மஹா பெரியவாளின் படம். மஹா பெரியவாளின் முன்னிலையில் ஒரு சிறு பெட்டி இருக்க அதிலிருந்து ஒரு பாத்திரத்தை பய பக்தியுடன் வெளியே எடுத்து வைத்தார், அந்த புனிதப் பாத்திரம்  சொல்லாமல் சொன்ன நிகழ்வு இது.

           கல்கத்தாவைச் சேர்ந்த இளம் விதவை. கணவர் குடும்பத்தினர்  பரம்பரை பரம்பரையாக செக்கு வைத்து எண்ணெய் வியாபாரம் செய்து வந்தனர். கணவர் காலத்தில் வியாபாரம் முடங்க ஆரம்பிக்க, அவள் திருமணம் முடித்த  சில வருடங்களில் வியாபாரம் முழுதுமாக நொடித்து விட்டது. வியாபாரத் தோல்வி கணவர் உள்ளத்தையும் உடலையும் உருக்க, நோய்வாய்ப்பட்டு சில வருடங்களிலேயே அவர் இறந்தும் போனார். இளம் விதவை - ஐந்து குழந்தைகளுக்குத் தாய் - கணவர் இறந்த மறு நாளே புகுந்த வீட்டினர் அவளை அண்ட விடாது ஒதுக்கியும் ஒதுங்கியும் விட்டனர். பிறந்த வீட்டில் பாதுகாப்பு கிடைக்கும் எனக் கதவைத் தட்டியவளுக்கு, பிறந்த வீட்டார் ராசியில்லாதவள் அமங்கலி என இரட்டைத் தாழ்ப்பாள் போட்டனர்.

                       தன் உடலையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு - ஒன்றும் புரியாத பிஞ்சுகளாய் இருக்கும் ஐந்து குழந்தைகளை வளர்க்க வேண்டிய பாரம் - எல்லாவற்றுக்கும் மேலாக சமுதாயம் ராசியில்லாதவள் என சூட்டிய முள் கிரீடம் - எல்லாம் அவளை அழுத்தியது. கணவர் சேமித்து வைத்து விட்டுப் போன சிறு தொகையைக் கொண்டு பசி பட்டினி இல்லாது குடும்பத்தை நடத்தினாள். அதுவும் சில காலமே. வருடங்கள் செல்ல செல்ல இரு வேளை சோறு ஒரு வேளையானது. பின்னர் அதுவும் கஞ்சியாக மாறியது. கைப் பணம் கரைய கரைய அச்சமும் கவலையும் சூழ்ந்தது. குடும்ப வருமானத்திற்கு குப்பை பொறுக்குவது என முடிவு செய்தாள். நாள் முழுதும் அலைந்து பெரிய அலுவலகங்களாக சென்று காகிதங்களை பொறுக்கி, அவற்றை விற்று அதன் மூலம் வரும் வருமானம் கொண்டு குடும்பம் நடத்தினாள். துறைமுகப் பகுதியில் வாகனங்களிலிருந்து விழும் நெல் அரிசி கோதுமை போன்ற தானியங்களை  சாலையைப் பெருக்கி  எடுத்து வந்தாள். சிதறிய தானியங்களைக் கொண்டு தன் பிள்ளைகளின் வயிற்றுக்கு கஞ்சி ஊற்றினாள். ஆனால் எப்படி ஐந்து பிள்ளைகளையும் கரை சேர்ப்பேன் என்ற கவலை அவளைத் தினமும் வாட்டியது. குடும்பம் மிகவும் பரிதாப நிலையில் இருந்தது. கணவர் இறந்து இப்படியே ஐந்து வருடங்கள் போய்விட்டது.
               இந் நிலையில் நமது மஹாபெரியவா கல்கத்தாவில் முகாமிட்டிருந்தார். அவரைத் தரிசித்த மக்கள் அவரைப் பற்றி பலவாறு ப்ரமிப்புடனும் பக்தியுடனும் பேச பேச அந்த பேச்சுக்கள் இவள் காதையும் எட்டியது. அவளுக்கும் அவர்கள் சொல்லும் தாக்குர்ஜியை பார்க்க வேண்டும் என ஆவல் பிறந்தது.  அவரை தரிசித்து விட்டு வந்தால் என் வாழ்வில் ஒரு விடியல் இருக்கும் என எண்ணினாள். இரவெல்லாம் அதே நினைவுடன் உறங்கியவள், மறு நாள் ஸ்நானம்  செய்து விட்டு, கையில் ஒரு காலி எண்ணெய் தூக்கை எடுத்துக் கொண்டு மஹா பெரியவா முகாமிட்டிருந்த இடம் வந்தாள். தாக்குர்ஜியை சுலபமாக சந்தித்து ஆசி பெற்றுவிடலாம் என நினைத்து வந்தவள் அங்கிருந்த கூட்டத்தைக் கண்டு திகைத்து நின்றாள். வருவோர் போவோரின் ஏளனப் பார்வையும், அவர்கள் அவளைக் கண்டு விலகிச் செல்வதையும் கண்ட பொழுது தான் - அவளுக்கு அவளின் நிலைப் புரிந்தது.  தாக்குர்ஜியை காண வந்த கூட்டத்தினரின் மீது அவள் பார்வை சென்றது. அனைவரும் நல்ல ஆடை அணிந்தவர்கள் – படித்தவர்கள் – உயர் அதிகாரிகள் – என பலதரப்பட்ட மக்கள்.  தன்னை எண்ணினாள். எண்ணெய் ஆட்டுவதைக் குலத் தொழிலாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவளின் தலையில் ஒரு சொட்டு எண்ணெய் இல்லை. வறண்ட கூந்தல்; எத்தனை துவைத்தும் நீங்காது அழுக்குப் படிந்து போன  சேலை; தன் வாழ்க்கை தரத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டும் கிழிந்த ஒட்டுப் போட்ட ஆடை. எப்படி இந்தக் கூட்டதில் நம்மை இணைத்துக் கொள்வது; கூட்டத்தில் கலக்க முயற்சித்தால் நிச்சயம் விரட்டப் படுவோம் என புரிந்துக் கொண்டாள். அந்தக் கூட்டத்தைப் பார்க்க பார்க்க உள்ளத்தில் அச்சம் சூழ்ந்தது. ஆனால் தாகுர்ஜியிடம் ஆசி பெற வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் போகவில்லை.

             கூட்டத்திலிருந்து சற்று விலகி நின்றாள். கூட்டத்தினர் பார்வையாலையே அவளை விரட்ட தள்ளி  நின்றாள். அங்கிருந்தவர்கள் மேலும் அவளை விரட்ட - மேலும் மேலும் ஒதுங்கினாள் . இப்படியே கூட்டத்தை விட்டு 60 - 70 அடி தள்ளி விரட்டப்பட்டாள். கூட்டம் கலைந்தவுடன் அவரைத் தரிசிக்கலாம் எனக் காத்திருந்தாள். ஆனால் வருவதும் போவதுமாக இருந்த மக்கள் கூட்டம் குறையவில்லை. நேரம் நகர்ந்துக் கொண்டே போனது. மனதில் தன் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் வந்து போயின. தன் வாழ்க்கை சம்பவங்களால் கண்களும் மனதும் பொங்கியது, தன் நிலையைப் புரிந்துக் கொண்டவள் தாகுர்ஜியை அருகில் சென்று ஆசி பெறும் எண்ணத்தைக் கைவிட்டாள். அவரை தூரத்திலிருந்தாவது தரிசித்து விட்டால் போதும் , தன் வாழ்க்கையில் மாற்றம் வரும் என பரிபூரணமாக நம்பினாள் .கூட்டத்தை விட்டு தள்ளி ஒடுங்கி நின்றவளின் பார்வை மட்டும் தாக்குர்ஜி இருந்த இடத்தை விட்டு விலகாது இருந்தது.
               சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்தவளுக்கு இன்னும் மஹா பெரியவாளின் தூர தரிசனம் கிடைக்கவில்லை. ஆனால் மஹா பெரியவா அவளைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார் – உள் முகமாக. அருகே இருந்த தன் உதவியாளரை அழைத்தார். சில குறிப்புகள் சொல்லி அவளிடம் இருக்கும் பாத்திரத்தை வாங்கி வரும் படி சொன்னார். உதவியாளரிடம் பாத்திரத்தை தந்தவளின் கண்கள் தாக்குர்ஜியை காணத் துடித்தது. தாக்குர்ஜி என்னை உள்முகமாக பார்த்துவிட்டார். எனக்கு அவரின் தரிசின பாக்கியம் கிடைக்குமா என உள்ளம் ஏங்கியது. உதவியாளார் சென்ற பாதையிலேயே தன் கண் பார்வையை செலுத்தினாள். உதவியாளர் சென்ற பொழுது ஒரு இடைவெளி கிடைக்க அந்த  இடைவெளியில் தாக்குர்ஜியைப் பார்த்தாள். பரவசப்பட்டாள். கை தொழுது நின்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. தாகுர்ஜியின் முன் பாத்திரம் வைக்கப் பட அதில் மஹாபெரியவா தன் கமண்டத்திலிருந்து  நீரை ஊற்றுவதைக் கண்டாள். கூட்டம் மறைக்க இந்த தரிசினமே போதுமானது என திருப்தி அடைந்தாள். உதவியாளர் கொண்டு வந்து தந்த பாத்திரத்தைத் தன் சேலைத் தலைப்பில் மடிப் பிச்சையாக வாங்கிக் கொண்டாள். அதை பவித்திரமாக பாவித்து தன்னுடன் அணைத்துக் கொண்டு கண்ணீர் மல்க நன்றி சொன்னாள். அவள் உடலும் உள்ளமும் ஆனந்தப் பரவசப் பட கால்கள் சிறிது தள்ளாட அருகே இருந்த சுவரில் சாய்ந்தாள்.

                 கண்கள் மூடிய பரவச நிலையில் இருந்தவளுக்கு மஹாபெரியவாளின் வார்த்தைகள் இடி முழக்கமாக கேட்டது. “பரவாயில்லை இத்தனை நேரம் காத்திருந்தாயே. உண்மையில் நீ மிகவும் பொறுமைசாலி” என சொல்ல, அந்தப் பெண், “ தாக்குர்ஜி நான் பொறுமைசாலியல்ல. எத்தனையோ மக்கள் தங்களிடம் ஆசி பெறவும் அனுக்ரஹம் பெறவும் காத்திருக்க, வந்த அனைவருக்கும் பல மணி நேரமாக இடை விடாது ஆசி தந்து கருணை மழை பொழிந்துக் கொண்டிருப்பதோடு எங்கோ நின்று கொண்டிருந்த இந்த விதவைக்கும் அல்லவா அனுக்ரஹம்  காட்டினீர். என் காத்திருப்பில் சுய நலம் இருக்கிறது. ஆனால்  தங்களை நாடி வந்த பக்தர்களின் நலம் கருதிய தங்களின் பொறுமையிலோ அன்பும் கருணையும் அல்லவா வழிந்துக் கொண்டிருக்கிறது. நான் பொறுமைசாலி அல்ல. தாங்கள் தான் பொறுமையின் பிறப்பிடமும் அதிபதியும்” என்றாள். “அம்மா உன் நிலை அறிவேன். இதைக் கொண்டு 17 ஆண்டுக் காலம் உன் குடும்பத்தை நடத்தி நீயும் ஜீவித்து வா. இதுவே உன் வாழ்வாதாரம். துளிர்த்து தழைக்கும்” என ஆசி வழங்கினார். பரவச நிலையிலிருந்து வெளி வந்து சம நிலை அடைந்தாள். தாகுர்ஜியின் திசை  நோக்கி மீண்டும் நன்றியோடு வணங்கினாள். பாத்திரத்தை இறுக்கி பிடித்தபடி தன் வீடு  நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
                        மனதில் தாக்குர்ஜியின் தரிசனமும் அவரின் வார்த்தைகளுமே வியாபித்திருந்தது. ஐந்து கிலோமீட்டருக்கும் மேலான நடை பயணம் களைப்பைத் தரவில்லை. பரவச நிலைக்குப் பின் உலகமே அவளுக்கு புதிதாகத் தோன்றியது. மனதை அழுத்திக் கொண்டிருந்த பாராமும் - பிறர் சூட்டிய பட்டங்களும் - கவலையும் போன இடம் தெரியவில்லை. தாகுர்ஜியின் தரிசனம் கிடைத்துவிட்டது. அவரின் ஆசி வார்தைகளையும் கேட்டு விட்டேன் . இனி தாக்குர்ஜியின் ஆசியே என் குடும்பத்தை வழி நடத்தும் என திடம் கொண்டாள். ஒரு வழியாக தாக்குர்ஜியை தரிசித்த மகிழ்வுடன் வீடு வந்து சேர்ந்தாள். தான் கொண்டு சென்ற பாத்திரத்தில் தாக்குர்ஜி ப்ரசாதமாக கொடுத்த  நீர் , பாத்திரம் முழுதுமாக சுமார் ஒன்றரை லிட்டர் நிரம்பி இருக்க, அதை வேறு பாத்திரத்தில் நிரப்ப நினைத்து மற்றொரு பாத்திரத்தில் ஊற்றினாள். ஊற்றிய பொழுது நடந்த அதிசயத்தை அவள் கண்களால் நம்ப முடியவில்லை.

                   அவள் கொண்டு சென்ற பாத்திரத்திலிருந்தது ப்ரசாத நீர். ஆனால் அதை மற்றொரு பாத்திரத்தில் நிரப்பிய பொழுது அது எண்ணெய்யாக வழிந்தது. வழிந்துக் கொண்டே இருந்தது.  நடக்கும் ஆச்சர்யத்தை அவளால் நம்ப முடியவில்லை. தாக்குர்ஜி ப்ரசாதமாக தந்தது நீர் தானா என பார்த்தாள் . நீர் தான் இருந்தது. அது எப்படி வழியும் பொழுது எண்ணெய் ஆயிற்று? தாக்குர்ஜி தாகுர்ஜி என வாய் முணுமுணுத்தது. உள்ளம் ஆச்சர்யத்திலும் சந்தோஷத்திலும் திளைத்திருக்க , மஹா பெரியவாளின் ஆசி வார்த்தைகள் அவள் மனதில் மோதின. “இதைக் கொண்டு 17 ஆண்டுக் காலம் உன் குடும்பத்தை நடத்தி நீயும் ஜீவித்து வா. இதுவே உன் வாழ்வாதாரம். துளிர்த்து தழைக்கும்” ஆசி வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது புரிய ஆரம்பித்தது. பட்டுப் போன குலத்தொழிலான எண்ணெய் வியாபாரத்தை தாக்குர்ஜி மீண்டும் துளிர்க்க வைத்துவிட்டார் எனப் புரிந்துக் கொண்டாள். இனி இந்த எண்ணெய்யை விற்று குடும்பத்தை நடத்துவது என முடிவு செய்தாள்.
                       ‘தாக்குர்ஜியை நான் அருகில் சென்று கூட வணங்கவில்லை. அவர் முன் என் நிலையை எடுத்தும் சொல்லவில்லை. எங்கோ ஒதுக்கப்பட்டு ஓரமாக நின்ற இந்த விதவையின் மீது தன் உள்ளக் கருத்தைப் பதித்து எத்தனை பெரிய அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்தி ஆசியும் அளித்தார். இதுவரை ஒரு முறை கூட இந்த தாக்குர்ஜியைப் பற்றி நான் அறிந்ததும் இல்லை. நாளும் தொழுததும் இல்லை. ஆனால் எத்தனை பெரிய கருணையைப் பொழிந்திருக்கிறார்’ என எண்ணி எண்ணி அவள் உள்ளம் கசிந்தது. என் தாகுர்ஜிக்கு எப்படி நன்றி செலுத்துவேன் என கலங்கினாள்.  அவள் துக்கம் சந்தோஷம் ஆச்சர்யம் என அனைத்தும்  அழுகையிலேயே கலந்து கரைந்தது. மனதில் தாகுர்ஜியின் ஆசிகளும் அவருக்கான நன்றிகளுமே பதிந்து இருந்தது. தெளிவுக் கொண்டு எழுந்தவள் அந்த பாத்திரத்தை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டினாள். பாத்திரத்தோடு ரகசியத்தைக் காக்க தன் வாயையும் மனதையும் சேர்த்து அந்தப் பெட்டியில் பூட்டினாள்.

                              மறு நாள் ஸ்நானம் செய்து விட்டு பெட்டியிலிருந்த தாக்குர்ஜி ஆசிர்வதித்து தந்த பாத்திரத்தை தொட்டு வணங்கினாள்.  மனதில் தாகுர்ஜியை நினைத்தாள். வார்த்தைகள் உள்ளத்திலிருந்த வெடித்துக் கிளம்பின.

        நான் விழுந்துப் போன நேரத்தில் என் மக்கள்
                              எல்லோரும் நகைத்தனர்
         வியாதியஸ்தி (ராசியில்லாதவள்) என சொல்லி என்
                           ஜனமே என்னை வெறுத்தது
          என்னை சுகப்படுத்தி புது வாழ்வு தந்த தாக்குருவே!

என்று மனம் உருகிப் பிரார்த்தித்தாள்.  (இதுவே அவளின் குரு மந்திரம் ஆனது. ஒவ்வொரு நாளும் இதை சொல்லியப் பின்னே எண்ணெய் எடுத்தாள்)

மஹா பெரியவா ஆசிக் கொடுத்தப் பாத்திரத்தை சாய்த்தாள். ஒரு குடம் நிறைய நிரப்பினாள். பாத்திரத்தைப் பூட்டினாள். எண்ணெய்யை எடுத்துக் கொண்டு அக்கம் பக்கத்தினர் அறியா வண்ணம் மூன்று நான்கு மைல்களுக்கு அப்பால் சென்று வியாபாரம் செய்தாள். கையில் குரு நாதரின் கருணையால் கிடைத்தப் பணம் அவளுக்கு திடனைத் தந்தது. அந்த வருவாய் அவளின் குடும்ப ஜீவனத்திற்குப் போதுமானதாக இருந்தது. தாகுர்ஜிக்கு மறவாது நன்றி செலுத்தினாள்.

                     மறு நாள் பாத்திரத்திலிருந்து ஒரு குடம் நிறைய எண்ணெய்  எடுத்தாள். வியாபாரம் செய்தாள். ஒவ்வொரு நாளும் ஒரு குடம் என்பதை அளவாக வைத்துக் கொண்டாள். அவள் அதற்கு மேல் என்றுமே எடுக்கவில்லை. அந்தக் கட்டுப்பாட்டை அவள் தனக்குத் தானே  விதித்துக் கொண்டாள். இப்படியே காஞ்சி மாமுனியின் வாக்குப்படி அவள் தன் குடும்பத்தை நடத்தினாள்.

          வருடங்கள் கடந்தன. பரிதாப நிலையில் இருந்த குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியது. மூத்த மகன் டீக் கடை வைத்து வியாபாரம் செய்தான்.  நான்கு பெண் குழந்தைகளுக்கும் உரிய வயதில் கடன் இல்லாது திருமணமும் முடித்தார் அந்தத் தாய். ஒரு சிறு வீடும் அவர்களுக்கு சொந்தமானது. தாகுர்ஜியின் ஆசியில் மகனின் வியாபாரம் சிறக்க அவன் சிறு ஹோட்டல் வைக்கும் அளவு உயர்ந்தான். மகனின் திருமணமும் நடந்தது. பாரத்தை எப்படி சுமப்பேன் என போராடித் தவித்த அந்த விதவைத் தாய் மாமுனியின் கருணையால் இப்பொழுது பெரும் நிம்மதி அடைந்தாள். 17 ஆண்டுக் காலம் அவரின் கருணையால் ஜீவிதம் நடந்தது. இனி தனக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும் என உள்ளம்  நிறைவுக் கொள்ள நினைவெல்லாம் தாக்குர்ஜியாகிப் போனார்.

                    ஒரு நாள் இரவு தாக்குர்ஜியின் கருணையை நினைத்து நினைத்து கண்ணீர் பெருக தொழுது நின்றாள். இரவு தாக்குருஜியின் தரிசினம் கிடைத்தது.
மஹரிஷியே மாமுனியே
சித்தனே சுத்தனே
சர்வனே சத்தியனே
நீர் செய்த உபகாரங்கள்
கணக்காலே எண்ண முடியுமா
என தொழ

தாக்குருஜியின் வார்த்தைகள் இடியாய் அவளுள் ஒலித்தன.
ஆதி அன்பு என்றும் குன்றிடாமல்
பேரின்பம் என்றும் பொங்கிட
நீடித்த ஆசிகள் இருக்கும்.

என்றார் மாமுனி கருணை நாதர்.

                                   17 ஆண்டுக் காலம் முடியும் தருவாயில் அவள் சிறு நோய்வாய்ப் பட தாக்குர்ஜி குறிப்பிட்டக் காலம் முடிந்து விட்டதை அறிந்தாள். தன் ஜீவிதம் முடியப் போவதையும் அறிந்தவள் தன் மகனிடம் பாத்திரத்தை ஒப்படைத்து அனைத்து ரகசியத்தையும் கூறினாள். இனி இதிலிருந்து எண்ணெய் வராது. அதன் பெலன் முடிந்தது. தாகுர்ஜியின் கருணையால் நாமும் நன்றாக இருக்கிறோம் என்றாள். ஒரிரு நாளில் தாக்குர்ஜியின் நினைவாலேயே அவள் உயிரும் பிரிந்தது.
                          “ என் தாய் இத்தனை ஆண்டுக் காலம் எங்கள் குடும்பத்துக்குக் கூடத் தெரியாது ரகசியத்தைக் காத்து வந்தது எனக்கு பிரமிப்பைத் தந்தது. என் தாய் சிறு வயது முதல்   எங்களுக்கு யார் மூலமோ  கிடைக்கப் பட்ட தாக்குர்ஜியின் படத்தைக் காட்டி காட்டி பக்தியை ஊட்டி வளர்த்திந்தார். எங்களுக்கு நினைவு தெரிந்தது முதல் தாக்குர்ஜியைத் தவிர வேறு தெய்வம் தெரியாது. என் தாய் மூலம் எப்பொழுது அந்த ரகசியத்தை அறிந்துக் கொண்டேனோ அன்று முதல் என் தாக்குர்ஜியின் மீது எனக்கு இருந்த பக்தி பன்மடங்காகியது. என் தாய் மூலம் ஆறு ஜீவன்களின் வாழ்வைக் காத்து உயர்த்திய  அவரின் கருணையை நினைத்து நினைத்து கண்ணீர் வந்தது. அவரை காஞ்சி சென்று சந்தித்த பின் தான் என் மனம் அமைதி அடைந்தது. என் தாய் அந்த பவித்ர பாத்திரத்தை என்னிடம் தந்து இதை பாதுகாத்து போற்று – என்றும்  நம் தாகுர்ஜிக்கு நன்றி சொல்ல மறக்காதே என்றார். என் தாக்குருஜியின் கருணையாலும் கொடையாலும் ஆசியாலும் ஒவ்வொரு நாளும் எனக்கு மூவாயிரம் ரூபாய்க்கு குறையாமல் வியாபாரம் நடந்துக் கொண்டிருக்கிறது” எனக் கண்கள் கலங்க பக்தியோடு கூறினார் அந்த ஹோட்டல் உரிமையாளர்.  

                                  இந்த நிகழ்வைக் கேட்ட அடியேன் என் குரு நாதர் மஹா பெரியவாளின் சூட்சும வார்த்தைகளைக் கண்டு வியந்தேன். பட்டுப் போன தொழில் துளிர்த்து தழைக்கும் அதாவது பெருகும் என்ற ஆசி வார்த்தைகள். தன் சிறு கமண்டத்திலிருந்து வார்த்த நீர் எப்படி ஒன்றரை லிட்டர் பாத்திரத்தை நிரப்பியது. அங்கேயே குரு நாதர் அமுதசுரபியின் தத்துவத்தைக் காட்டி விட்டாரே. குரு நாதர் இப்படி ஒரு அமுத சுரபியை அப் பெண்ணுக்கு வழங்கினார் என்றால் அந்தத் தாய் எப்படிப்பட்ட குணவதியாக இருந்திருக்க வேண்டும். குரு நாதர் அவரைப் பொறுமைசாலி என்ற பொழுது அவள் பெருமைக் கொள்ளவில்லை. தன்னைத் தாழ்த்தி குருவை வாழ்த்தி வணங்கினாள். அவரின் அடக்கமும் நன்றியுமே அவரின் தூய மனதைக் காட்டுகிறது. ராசியில்லாதவள் என தூற்றிய மக்களின் வார்த்தைகளை பொய்ப்பிக்கும் விதமாக மஹா பெரியவா ஆசி கொடுத்த அமுத சுரபி ஒவ்வொரு நாளும் அவள் ஊற்ற ஊற்ற பொங்கிப் பெருகும் படி அல்லவா ஆசிக் கொடுத்தார். அந்தத் தாயோ கிடைத்த அமுத சுரபியை அந்த வறுமை நிலையிலும் துஷ்பிரயோகம் செய்யாது இது போதும் என்று கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தாள் என்றாள், மஹா பெரியவா அவளின் குணத்தைப் புரிந்து அல்லவா இப்படிபட்ட அமுத சுரபியை வழங்கியுள்ளார்.  அவள் தன் குடும்பப் பொறுப்பை முடிக்கவும் மற்றும் அவள் ஜீவிதக் காலத்தையும் தன் தீர்க்க தரிசனத்தில் அறிந்து  17 ஆண்டுகள் அந்த அமுதசுரபிக்கு பெலன் தந்தார். மஹா பெரியவா கொடுக்கும் ஆசியில் தான் எத்தனை  நுணுக்கங்கள்! பரிதாப நிலையிலிருந்த அந்தத் தாயின் நிலையை உயர்த்தி பல ஜீவன்களை தழைக்கச் செய்த மஹா பெரியவாளின் கருணை மனதில் கசிய கண்களில் கண்ணீர் துளிர்க்க விடை பெற்றேன்

.
பக்தர் குறைக் கேட்டு அச்சத்தை  நீக்கி அருள காத்திருக்கின்றீரே, அக் கருணை எங்களைக் காத்தருளட்டும்!
  (ஸ்ரீ மும்பை விஜயம் ஸ்வாமிகள் அருளிய காஞ்சி 6-10-8 ம் பீடாதிபதியின் ஸ்தோத்ரமாலா விலிருந்து..)

மாமுனியே சரணம் சரணமையா!

Monday, September 19, 2016

சயன்ஸ் 4 ஆன்மீகம் - பூக்கள்




பூக்கள்:
இறைவனுக்கு பூக்களாலும் இலைகளாலும் அர்ச்சனை செய்யலாம். அனேகமாக எல்லா பூக்களையும் முழுமையாகவும் அனேகமாக எல்லா இலைகளையும் பிய்த்தும் அர்ச்சிக்க வேண்டும். (துளசியும் வில்வமும் எக்ஸெப்ஷன்.)
வாசனை இல்லாத பூக்களால அர்ச்சிக்கக்கூடாது.
பூவோ இலையோ பறித்த சில மணி நேரங்களில் - சுமார் 4 - பயன்படுத்திவிட வேண்டும். நேரம் ஆக ஆக அதிலிருந்து ப்ராண சக்தி வெளியேறி பயன் இல்லாம போகும். எல்லாத்துக்கும் விதி விலக்கு இருக்கு இல்லையா? சண்பகம் (1 முழு நாள்), அரளி (3 நாட்கள்), விஷ்ணு க்ரந்தி(3) தாமரை (5), தாழை (5), துளசி (3 மாதங்கள்) வில்வம் (6 மாதங்கள்)
வில்வத்தை நீரால் சுத்தி செய்து அதே தேவதைக்கு திருப்பித்திருப்பி பயன்படுத்தலாம். மற்ற எதையும் மீண்டும் பயன்படுத்துவதில்லை.

நம்ப ஃப்ரெண்டு பிள்ளையாருக்கு ரொம்ப பிடிச்சது அருகம்புல். சிவப்பு மலர்கள் எல்லாம் இவருக்குப்பிடிக்கும். உதாரணமா சிவப்பு தாமரை, செம்பருத்தி, ரோஜா. இன்னும் பல இருக்கு.

சீசல்பீனியே குடும்பத்தை சேர்ந்த எல்லா பூக்களும் சிவனுக்கு உகந்தவையா சொல்லிருக்காங்க. இன்னும் சிம்பிளா கஷ்டமே கொடுக்காத சமாசாரம் ஒண்ணு இருக்கு. அதை பறிக்க மரம் ஏற வேணாம். அதை பறிக்கப்போய் முள்ளு குத்திக்க வேணாம். கஷ்டப்பட்டு வளர்க்க வேணா. ரோடு ஓரம் அது பாட்டுக்கு வளந்து கிடக்கும். இப்பல்லாம் ரோடு ஓரமே முழுக்க சிமெண்ட்ன்னு சொல்லறீங்களா? அதுவும் சரிதான். இருந்தாலும் பெரும்பாலான பகுதிகளில் அப்படி கிடைக்கும். அதுதான் தும்பைப்பூ!

சிவனுக்கு ரொம்ப பிடிச்சது நாகலிங்கப்பூ. மேலும் அலரி, செவ்வந்தி, தாமரை ஆகியன உகந்தவை. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா ஆகியவற்றின் இலைகள் சிவனுக்கு உகந்தவை.

விஷ்ணுவுக்கு உகந்த இலைகள்: துளசி, மகிழம், சண்பகம், தாமரை. வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, நாயுருவி, விஷ்ணுக்ரந்தி, நெல்லி ஆகியன. பரம சந்தோஷத்தை கொடுக்கக்கூடியது துளசி. ஆசிமம் ஜீனஸ். குடும்பம் லெமிஸீ. இதில பல வகைகள் இருக்கு. நந்தவனத்தில் எத்தனைச் செடிகள் இருந்தாலும், அது நந்தவனமாகாது. அதே நேரத்தில் ஒரு துளசி செடி மட்டுமே இருந்தாலும் அது நந்தவனம் ஆகிவிடும் என்கிறது வேதம். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தை. 300க்கும் மேற்பட்ட துளசி வகைகள் இருந்தாலும், வெண்துளசியைத்தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி, கஞ்சாங்கோரை, திருத்துழாய், காடு துளசி ன்னு சில வகைகளை விக்கிபீடியா சொல்லுது. திருத்துழாய் என்கிறது கருந்துளசி போலிருக்கு.
Ocimum tenuiflorum என்கிறதுதான் இந்தியாவில பெரும்பாலும் பூஜைக்கு பயன்படுது. இதெல்லாம் இல்லாம பல ஹைப்ரிட்ஸ் இருக்கு. இத்தலில இனிக்கிற துளசி, தாய்லாந்து துளசி, எலுமிச்சை சுவையோட துளசின்னு பலதும் உண்டு! மேலும் நீல நிறமான பூக்களை பெருமாளுக்கு பூஜிக்கலாம். உதாரணமா நீல சங்குபுஷ்பம். பொதுவா வேறு எந்த தெய்வத்துக்கும் நீல நிற பூக்களால பூஜிக்கறதில்லை.
 
வெண்மையான பூக்கள் சாத்விகம். இதனால் முக்தி விரும்பறவங்க பூஜை செய்யலாம். இந்த காலத்துல அதை யாரும் விரும்பறது இல்லை. இந்த லோகத்துக்கான வசதியைத்தான் விரும்பறாங்க. அப்படிப்பட்டவங்க சிவப்பு நிற பூக்களால அர்ச்சிக்கலாம். தங்க நிற பூக்களால இது ரெண்டுமே கிடைக்கும்! முருகனுக்கு பிடிச்சது கடம்பம், காந்தள், குறிஞ்சி, செவ்வலரி ஆகியன. மஹாலக்ஷ்மிக்கு மிகவும் உகந்தது தாமரை. 
 
காலையில் பயன்படுத்தக்கூடியவை தாமரை, புரசம்பூ, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை. மந்தாரை, முல்லை, சண்பகம், புன்னாகம் ஆகியன. 
 
நடுப்பகலுக்கு வெந்தாமரை அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம், மருதாணி, கோவிதாரம். 
 
மாலைக்கு செந்தாமரை, அல்லி, மல்லி, ஜாதிமுல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம். 
 
பொதுவா வாடிப்போன பூக்கள், பூச்சி அரிச்சது, பின்னமானது, முகர்ந்து பார்த்தது அசுத்தமான இடத்தில் மலர்ந்தது, அசுத்தமான கூடையில வெச்சது, தானாக விழுந்தது - இதெல்லாம் சிலாக்கியமில்லை. பாரிஜாதம் செடியில் இருந்து விழு முன்னே பறிக்கப்பாருங்க!

துர்கைக்கு மல்லி, முல்லை, செவ்வரளி, செம்பவள்மல்லி, சூரிய காந்தி உகந்தவை.
சூரியனுக்கு நந்தியாவட்டை சிலாக்கியம்.

இதெல்லாம் இல்லாம சில தெய்வங்களுக்கு சில பூக்கள் பயன்படுத்துவதில்லை. விஷ்ணுவுக்கு அக்ஷதையால அர்ச்சனை செய்யறதில்லை (எல்லா பூஜைக்கும் முன்னால் செய்யற பிள்ளையார் பூஜைக்கு எல்லாத்தையும் அக்ஷதையால செய்யறாப்போல). அது போலவே வெள்ளெருக்கு, ஊமத்தையாலும் அர்ச்சனை இல்லை. பொதுவா இந்த விஷமுள்ள இலைகள், பூக்கள் எல்லாம் சிவனுக்குப்பயனாகும்.

தாழம் பூ சிவனுக்கு ஆகாதுன்னும் ஏன்னு கதையும் தெரிஞ்சிருக்கும். அதே போல குந்தம், கேசரம், குடஜமம், ஜபா புஷ்பம் ஆகியவையும் அவருக்கு ஆகாது. பிள்ளையாருக்கு விருப்பமான அருகு, வெள்ளெருக்கு, மந்தாரம் ஆகியன அம்மனுக்கு சரிப்படாது. பஞ்சாயதனத்துல பக்கத்து பக்கத்துல இருக்கிறதால் கவனமா இருக்கவும். பிள்ளையாருக்கு துளசி; வில்வம் சூரியனுக்கு; பவழமல்லி சரஸ்வதிக்கு கூடாது.

இதைப்பத்தி இன்னும் எக்கச்சக்க சமாசாரம் இருக்கு. ஆனா இங்கே இது போதும்!
ஆர்வம் இருந்தா இங்கே படிக்கலாம். http://rightmantra.com/?p=7545


Friday, September 16, 2016

கிறுக்கல்கள் - 162




குடும்பக்கட்டுப்பாடு பற்றி வெவ்வேறு கருத்துகள் நிலவிய காலம். ஒரு சாரார் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்பது அவரவர் சொந்த்த விஷயம் என்றனர். ஒரு சாரார் இல்லை அது நாடுதான் முடிவு செய்ய வேண்டும் என்றனர். மாஸ்டரை கேட்ட போது அவர் இந்த கதையை சொன்னார்.

ஒரு தேசம் இருந்தது. அங்கே தொழிற்நுட்பம் வெகுவாக முன்னேறி யார் வேண்டுமானாலும் கைப்பிடி அளவுக்கு - கையெறி குண்டு அளவுள்ள - ஒரு அணுகுண்டை தயார் செய்து வைத்துக்கொள்ள முடியும் என்றாகிவிட்டது. அது அவ்வளவு சின்னதானாலும் ஒரு நகரத்தையே முழுக்க முழுக்க தகர்க்கக்கூடிய சக்தி வாய்ந்தது.

இதை வைத்துக்கொள்ள சுதந்திரம் குறித்து கசப்பான விவாதங்கள் பல நடந்தன. கடைசியில் ஒரு சமாதானம் எட்டப்பட்டது. அதன் படி லைசென்ஸ் இல்லாமல் யாரும் பொது வெளியில் அணுகுண்டை எடுத்துச்செல்லக்கூடாது. ஆனால் யாரும் வீட்டில் என்ன செய்கிறார்கள் என்பது அவரவர் பாடு!

Thursday, September 15, 2016

கிறுக்கல்கள் - 161





கடவுளை சார்ந்து இருப்பது குறித்து பிரசங்கி மாஸ்டருடன் விவாதம் செய்தார்.
கடவுள் நம்மோட தந்தை. அவரோட உதவி தேவையில்லைன்னு ஒரு கணம் கூட கிடையாது!”
மாஸ்டர் பதில் சொன்னார் “வளரும் குழந்தைக்கு அப்பா உதவி செய்யும் போது உலகமே அதை பார்த்து சந்தோஷப்படுகிறது. வளர்ந்த பையனுக்கு அப்பா உதவி செய்தால் அதைப் பார்த்து அழுகிறது!” 

Wednesday, September 14, 2016

கிறுக்கல்கள் - 160




மாஸ்டர் எப்போது பார்த்தாலும் நிலம் வாங்கிப்போட்டுக்கொண்டு இருக்கும் தன் பக்கத்து வீட்டுக்காரர் பற்றி சொன்னார்.
ஒரு நாள் அவர் சோகமாக ‘எனக்கு இன்னும் கொஞ்சம் நிலம் இருந்தா தேவலை’ என்றார்.
அதான் நிறையவே இருக்கே. இன்னும் எதுக்கு?”
இன்னும் அதிக நிலம் இருந்தா இன்னும் அதிக மாடுகளை வளர்க்கலாம்!”
அத வெச்சுகிட்டு என்ன செய்வீங்க?”
அத வித்து காசு பாக்கலாம்!”
காசு பாத்து?”
இன்னும் அதிக நிலம் வாங்குவேன்! இன்னும் அதிக மாடு வளர்ப்பேன்!” 

Tuesday, September 13, 2016

கிறுக்கல்கள் - 159





அதீதமாக பிரார்த்தனை செய்வதைக்குறித்து மாஸ்டர் அடிக்கடி பேசுவார்.
அட! நாம் கடவுளை மட்டும் நம்பி இருக்க வேண்டாமா? என்றார் ஒருவர்.
காதலியின் நலத்தை விரும்பும் காதலன் சிலதுலேந்து அவளுக்கு விடுதலை கொடுக்கணும். குறிப்பா காதலியை தன்கிட்டேந்து காப்பாத்தணும்!

பின்னால் கடவுளுக்கும் பக்தனுக்குமான கற்பனை உரையாடலை சொன்னார்.
பக்தன்: என்னை விட்டு போயிடாதீங்க கடவுளே!
கடவுள்: நான் போறது உன்னுக்குள்ள பரிசுத்த ஆவி வரதுக்குத்தான்.
பக்தன்: அது எங்கே இருக்கு?
கடவுள்: எது மேலேயும் சார்ந்து இருக்காம இருக்கிற சுதந்திரத்துலேந்துதான்! 

Monday, September 12, 2016

அந்தணர் ஆசாரம் - 7




பலவித ஸ்னானங்கள்:
ஸ்னானம் கௌணம் முக்கியம் என இரு விதம். நீரில் முழுகி செய்வது முக்கியம். மற்ற விதங்கள் கௌணம்.
முக்கிய ஸ்னானத்தில் ஆறு வகைகள்: நித்தியம் விதிக்கப்பட்ட காலை, மாத்யான்னிக ஸ்னானங்கள். ஏதேனும் ஒரு நிமித்தத்தால் ஏற்படுவது நைமித்திகம். தொடக்கூடாததை தொட்டால் ஸ்னானம் செய்யச்சொல்லுகிறார்கள் இல்லையா? அது போல.
ஜ்யோதிடர்கள் இன்ன பலனுக்கு இன்ன இடத்தில் இன்ன காலத்தில் ஸ்னானம் செய் என்று சொல்கிறார்கள் இல்லையா? அல்லது ஒரு பலனை விரும்பி ஸ்னானம் செய்தால் அது காம்ய ஸ்னானம். இந்த விருப்பம் இல்லாதவர்கள் இதை செய்ய வேண்டியது இல்லை. ஒரு கர்மாவை செய்ய ஆரம்பிக்கும் போது கிரமத்தில் /சூத்திரத்தில் ஸ்னானம் விதித்து இருந்தால் அது கார்யாங்க ஸ்னானம். உடல் சுத்தியை வேண்டி எண்ணை தேய்த்துக்கொண்டு ஸ்னானம் செய்வது மலகர்ஷண ஸ்னானம். புண்ய தீர்த்தங்களிலோ நதிகளிலோ, தேவர்களால் வெட்டப்பட்ட குளங்களிலோ ஸரஸ்களிலோ ஸ்னானம் செய்வது க்ரியா ஸ்னானம். இதில் ஸ்னானமேதான் கிரியை.
அசக்தனாக இருக்கும் பக்‌ஷத்தில் தலையை தவிர்த்து நீரில் முழுகுவது; இடுப்பளவு முழுகுவது; ஈரத்துணியால் உடலை துடைத்துக்கொள்வது போன்றவை செய்யலாம் இவை கௌண ஸ்னானம் ஆகும்.
ஆக்னேயம், வாருணம், ப்ராம்மம், வாயவ்யம், திவ்யம், மானஸம், பார்த்திவம், காபிலம், ஸாரஸ்வதம் என ஒன்பது விதமும் உண்டு.
முன் சொன்னபடி நீரில் முழுகி தேவ பித்ரு தர்பணம் கொடுப்பது வாருணம்.
ஆக்னேய ஸ்னானம் என்பது நீர் இல்லாத நேரத்தில் செய்யக்கூடியது. இதில் அக்னிஹோத்ர பஸ்மாவாலோ வேறு பஸ்மாவாலோ உடல் முழுதும் பூசிக்கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் ஏதோ நெற்றியில் விபூதி இட்டுக்கொண்டு பஸ்ம ஸ்னானம் செய்து விட்டேன் என்கிறார்கள். அது சரியில்லை. பின் வரும் மந்திரங்களால் குறிப்பிட்ட இடத்தில் பஸ்மாவை பூச வேண்டும். ஈசான மந்திரத்தால் - சிரஸ்; தத் புருஷாய – முகம்; அகோர – ஹ்ருதயம்; வாமதேவ – குஹ்யம்; ஸத்யோஜாதம்- பாதங்கள்; பிரவணத்தால் மீதி அங்கங்கள் அனைத்தும்.
குசங்களின் நுனிபாகங்களால் ஆபோஹிஷ்டா எனும் மந்திரம் சொல்லி ப்ரோக்‌ஷணம் செய்து கொள்வது ப்ராம்ம ஸ்னானம் அல்லது மந்திர ஸ்னானம்.
சூர்ய அஸ்தமன நேரத்தில் கொட்டிலுக்கு திரும்பும் பசுமாடுகளின் குளம்புகளால் எழுப்பப்பட்ட புழுதி நம் உடலில் விழுவது வாயவ்ய ஸ்னானம்.
உத்தராயண காலத்தில் வெய்யில் காயும் போது மழை ஏற்பட்டால் அதில் நனைவது திவ்ய ஸ்னானம்.
ஸங்கு சக்ர கதா தரனாக நான்கு புஜங்களோடு மஹாவிஷ்ணுவை த்யானம் செய்வது மானஸம்.
சுத்தமான பூமியில் இருந்து மண்ணை எடுத்து உடலில் பூசிக் கொள்வது பார்த்திவ ஸ்னானம்.
ஈரத்துணியால் துடைத்துக்கொள்வது காபிலம்.

மஹான்களுடைய வாக்காலோ உபதேசத்தாலோ ஏற்படும் சுத்தி ஸாரஸ்வதம்.

Friday, September 9, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 13





அப்ப கொல்லறது தப்பில்லங்கறீங்களா?”
இளைஞன் பெரியவரை பார்த்து கேட்டான்.
நிதானமாக டீயை உறிஞ்சியவர் முகத்தில் ஒரு சிறு புன்னகை.
அது நேரம், சந்தர்பம், ஆளை பொறுத்தது!”
என்ன சொல்றீங்க? அதெப்படி பொறுத்தது? புரியலையே!”
உன் குழந்தை நடக்கிறப்ப ஒரு எறும்பை மிதிச்சுது; அது செத்துப்போச்சு. குழந்தையோட தப்பா?”
உம்... இல்லைதான்”
நீயே வண்டி ஓட்டிகிட்டு இருக்கே. ஒரு நாய்க்குட்டி குறுக்கே திடுதிப்புன்னு வந்துடுத்து; நிறுத்தப்பாத்து மோதிட்டே. அது செத்து போச்சு. அது உன் தப்பா?”
ஹும்ம்ம்ம்ம்”
அதான் சொன்னேன். இதுக்கு ஒரு பொதுவான பதில் இருக்க முடியாது. தேசம் காலம் சூழ்நில பொருத்து மாறும். பனி மட்டுமே இருக்கிற ஐஸ்லாந்து மாதிரி ஊர்ல என்ன சாப்பிடுவாங்க? அங்கே கிடைக்கற மீன் முதலான அசைவ உணவுதான் இருக்கும். வேற வழி? இவங்க பாபம் செய்யறதா சொல்ல முடியுமா? ”
செடி கொடிகளுக்கும் உசிரு இருக்கே? அதை சாப்பிடறது?”
வெண்டக்கா, கத்திரிக்காயை பிச்சா செடி சாகறதில்லையே!”
சரி, கீரை? அதை முழுக்க பிச்சுத்தானே சாப்பிடறோம். அது போல கிழங்குகள். கொய்யாக்காவை நல்லா அரைச்சு சாப்டா எத்தனை எத்தனை விதைகள் சாகுது!”
இதுல எல்லாம் பாபம் இல்லையான்னு கேட்டா, ஆமாம் இருக்கு. இப்ப காணாமப்போய்கிட்டு இருக்கற அக்னிஹோத்ரம் என்கிற கர்மாவை செய்யறவங்க இஷ்டி ந்னு ஒரு ஹோமம் ஒவ்வொரு பாட்டிமைக்கும் செய்வாங்க.”
தசரதர் செஞ்சாரே புத்ர காமேஷ்டி அது மாதிரியா? ”
அட! ஆமாம். சரியா பிடிச்சுட்டே, புத்திர காம இஷ்டி - குழந்தையை விரும்பி செய்கிற இஷ்டி அதான் அது! இது ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமிக்கும் அப்பறம் வரது. அதுல நெல்லை கொண்டு வந்து குத்துவாங்க, அரிசியாகும்; அதை திருப்பி மாவாக்க இடிப்பாங்க. இந்த நெல் முளைக்காம இப்படி செஞ்சிட்டதால இது ஒரு பாபம்ன்னு சொல்லி இதுக்கு ப்ராயச்சித்தம் செய்வாங்க! குடும்பஸ்தன்னா இருந்தா இப்படி பாபம் செய்யறதை தவிர்க்க முடியாது!
ப்ரம்மச்சாரி பத்தி விஷயம் இல்லே. அவன் மாணவன்; கத்துக்கறப்ப தவறுகள் நடக்கும். க்ருஹஸ்தன் பாவம், அவன் செய்யக்கூடிய பல விஷயங்களும் ஏதோ ஒரு வகையில் ஜீவ ஹிம்சை செய்யத்தான் செய்யும். இதை ஒத்துகிட்டு இதுக்குன்னு பிராயச்சித்தங்கள் விதிச்சு இருக்காங்க பெரியவங்க, அதுக்கு வைஶ்வதேவம்ன்னு பேரு.
இதெல்லாம் வழக்கு ஒழிஞ்சுகிட்டு இருக்கு. க்ருஹஸ்தன் இல்லாம உலகம் இயங்காதே! அதனால ப்ராயச்சித்தங்கள் சொல்லி இருக்கு.”
அது சரி! நீங்க பாட்டுக்கு எல்லாம் பாபம்; ப்ராயச்சித்தம் பண்ணு ந்னு சொல்லிட்டா எப்படி? யாரும் கடுமையா அஹிம்சை கடைபிடிக்க வேண்டாமா?”
சரிதான். இப்பவும் கடுமையா அஹிம்சை கடை பிடிக்க வேண்டியது சந்நியாசிகள்தான்.
இவங்களுக்கு முதன்மையான தர்மம் அஹிம்சைதான். இவங்க எந்த அக்னி காரியத்திலேயும் சம்பந்தப்படக்கூடாது. இவங்க ஹோமங்கள் செய்யக்கூடாது. சமைச்சு சாப்பிடக்கூடாது. இப்படி பல கட்டுப்பாடுகள்.”
ஜைன துறவிகள் உயிர் கொல்லாமைந்னு செய்யறது எல்லாம் கேள்விப்பட்டு இருப்பியே?
தெருவில நடக்ககூட பெருக்கிண்டே நடப்பாங்க.
அந்த காலத்து காட்டில ஜபம் செய்யற துறவிகள் தினசரி மூணு முறை ஆறுக்கு போய் குளிப்பாங்க. இன்னைக்கு காலை போறார். வழில மரத்துலேந்து ஒரு பழம் கீழே விழுந்து இருக்கு. அதை எடுத்து சாப்பிடலாம் இல்லே? மாட்டார். அது வேற யாருக்கும் தேவைப்படலாமே? அடுத்த தரம் அடுத்த தரம்… அடுத்த நாள் மாலை வர அது அங்கேயே இருந்தா அதை எடுத்து சாப்பிடுவார்.
எது கொல்லப்படுது என்கிறதுலேயும் விஷயம் இருக்கு. அந்த காலத்து யாகங்களில காட்டு மிருகங்கள் நாட்டு மிருகங்கள்ன்னு வகைப்படுத்துவாங்க. நாட்டு மிருகங்கள் என்பது கிராமங்களில் வளர்க்கப்படுவது. இவைதான் பலி கொடுக்கப்படும். காட்டு மிருகங்கள் அழியும் (endangered species ஆகும்) வாய்ப்பு இருக்கு; அதை நெருப்பால தலை மூணு தரம் சுத்தி காட்டுக்குள்ள விரட்டி விட்டுடுவாங்க.”
என்னென்னவோ சொல்றீங்க. இப்ப நான் என்ன செய்யணும்? சொல்லுங்க!”
அத நீயேதான்பா முடிவு செய்யணும்! நீ எங்கே நிக்கப்போறே? கொசு கடிச்சா ரிப்லெக்ஸ்ல அடிப்பியா, மெதுவா ஊதி விரட்டுவியா இல்ல கடிச்சுட்டு போகட்டும்ன்னு விடப்போறியா? இல்லை கொசு பேட்டை எடுத்து தேடி தேடி அடிக்கப்போறியா?
வீட்டில ஆடு கோழின்னு வளத்து கொன்னு சாப்பிடப்போறியா? கடையில் வாங்கி சாப்பிடுவியா? இல்லை அசைவமே தொடபோறதில்லையா?
முழு அஹிம்சையில இருந்து ப்ராக்டிகல் அஹிம்ஸை வழியா ஹிம்ஸை வரை தேர்வு இருக்கு. நீயேதான் முடிவு செய்யணும்! ஏதானாலும் நீ முடிவு பண்ணு கடைபிடி. உன் வீட்டு மனுஷாளுக்கு இது நல்லதுன்னு சொல்லலாம். அல்லது வந்து கேட்கிறவங்களுக்கு சொல்லலாம். மத்தபடி வலிஞ்சு யார்கிட்டேயும் இப்படி இருன்னு சொல்லப்போனாத்தான் வம்பு! அது சரியில்லை. யோசி! ”
இளைஞன் யோசிக்கலானான்.