Pages

Tuesday, March 1, 2016

ஜீவனின் சரித்திரம் - 7


காலத்தின் மகள் ஒருவள் தனக்கு ஏற்ற கணவன் ஒருவனை தேடி மூவுலகிலும் அலைந்தாள். அவளுக்கு யாரும் திருப்தியாக தோன்றவில்லை. இந்த துர்பாக்கியத்தால் அவள் துர்பகா என்றழைக்கப்பட்டாள். யயாதியின் மகன் புரு ஒருவனே அவளை விரும்பி ஏற்றுக்கொண்டான். அவளோ அந்த திருப்தியுடன் அவனுக்கு ராஜ்யம் என்னும் பரிசை அளித்துவிட்டு மீண்டும் தன் தேடலை துவக்கினாள். ஒரு முறை பூலோகம் நோக்கி சென்று கொண்டிருந்த நாரதரைக் கண்டாள். அவருடைய ப்ரம்ஹ தேஜசை பார்த்து மோகித்து தன்னை ஏற்கும்படி வேண்டினாள். அவரோ தான் நித்திய பிரம்மச்சாரியானதால் இயலாதென்று சொல்லி நிராகரித்துவிட்டார்.
துர்பகா கோபமுற்றாள். ”இப்படி அலைந்து கொண்டிருப்பவளை ஏற்க முடியாதென்றா சொல்லுகிறீர்? நீரும் என்னைப்போல் ஓரிடமின்றி திரிவீர்!” என்று சபித்தாள். நாரதர், “கோபிக்காதே! நீ சென்று அடைய வேண்டியவன் யாரென்று நான் அறிவேன். யவனர்களில் சிறந்தவன் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் பீஷணன். நீ அவனிடம் சென்று உன் பிரச்சினையை சொல்வாயாக” என்றார்.
துர்பகாவும் அவனைச்சென்றடைந்தாள். “அவனைப்பார்த்து “ உம்மை என் கணவனாக வரிக்கிறேன். தர்மப்படியும் நியதிப்படியும் கொடுக்கவோ பெறவோ கூடிய ஒன்றை செய்யாமல் இருத்தாலாகாது. அப்படிச்செய்பவன் பின்னால் அதற்காக வருந்துவது நிச்சயம். ஆகவே என்னை ஏற்பீராக!” என்றாள். பீஷணன் அவளைப்பார்த்து புன்சிரிப்புடன் தெய்வ ரகசியத்தால் உனக்குரிய பதியை நான் அறிந்துள்ளேன். உன்னை அமங்கலமானவளாக உலகோர் நினைக்கின்றனர். அதனால உருவத்தை காட்டாமல் உன்னை வெறுக்கும் உலகையே பதியாக அடைவாயாக!” என்றான். “அப்படிச்செய்தால் உலகே உன்னை ஒழித்துவிடுமோ என்று அஞ்சாதே! என் சைன்யத்தை அழைத்துப்போனால் சுலபமாக உலகை ஒழித்துவிடலாம். எனக்கு ப்ரஜ்வாரன் என்றொரு தம்பி உண்டு. நீ இப்போது என் சகோதரி. உங்கள் அனைவரையும் கொண்டு உலகம் அறியாத வகையில் சஞ்சரித்து ஒழிப்பேன்!” என்றான்.

பின் அனைவரும் சேர்ந்து உலகில் சஞ்சாரம் செய்து பலரையும் அழித்தொழித்தார்கள். நாளடைவில் ஜீவாவின் நகரத்தையும் வந்தடைந்தனர்

No comments: