Pages

Monday, February 29, 2016

மாதவிலக்கு -1


ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன். சாத்திரங்களிலேயோ வேதத்திலேயோ நம்பிக்கை இல்லாதவர்கள் இதை படிக்கத்தேவையில்லை.
சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்வது குறித்த கட்டுப்பாடு இப்போது சுப்ரீம் கோர்ட் அளவில் விவாதிக்கப்படும் விஷயம் ஆகிவிட்டது. கோவில் வழிபாடுகள் வரையறுக்கபட்டவை. ஆகமங்களும் வேதமும் சொல்லும் கருத்துக்களுக்கு இவை முரணாக போக முடியாது. இது சம்பந்தமாக சில விஷயங்களை முன்னிலை படுத்தப்படவில்லை.
பெண்கள் ஆன்மீகத்தில் நிறையவே ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள். நிறைய ஆண்கள் ‘பூஜையா அது பொம்பளைங்க சமாசாரம்’ என்று விட்டுவிடுகிறார்கள். பெரும்பாலான பூஜை நடக்கும் வீடுகளில் பூஜை செய்வது பெண்கள்தான்.
பாரம்பரியமாக வீட்டுப்பெண்கள் மாதவிலக்கு ஏற்படும் நாட்களில் பூஜை, சமையல் செய்வதில்லை. பலரும் இது ஏதோ பழக்கவழக்கத்தில் வருவதாக நினைக்கிறார்கள். அப்படி இல்லை. இதற்குப் ப்ரமாணம் வேதத்திலேயே இருக்கிறது.
க்ருஷ்ண யஜுர் வேதம் தைத்திரீய சாகை 2 ஆம் காண்டம் 5 ஆம் பிரச்னத்தில் வேதம் ஒரு கதையை சொல்லுகிறது. (அது கதையாக இல்லாமல் கதைச் சுருக்கமாக இருப்பதால் கொஞ்சம் கொஞ்சம் விவரம் கற்பித்து கதையாக ஆக்கி இருக்கிறேன்)
தேவர்களின் குருவான ப்ருஹஸ்பதி ஒரு முறை கோபித்துக்கொண்டு போய்விட்டார். குரு இல்லாமல் தேவர்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாயினர். என்ன முயற்சி செய்தும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் வேறு ஒருவரை குருவாக ஏற்க முடிவு செய்தனர்.
த்வஷ்டா என்று ஒரு முனிவர் இருந்தார். அவருடைய மகன் விஸ்வரூபன். அவன் நான்கு வேதங்களையும் நன்கு கற்றுத்தேர்ந்து இருந்தான். அவனுக்கு மூன்று தலைகள். அவனை குருவாக ஏற்க முடிவு செய்து அவனிடம் வேண்டி ஏற்றனர்.
விஸ்வரூபனின் தாய் ஒரு அசுர ஸ்த்ரீ. ஆகையால் அசுரர்களிடன் அவனுக்கு ஒரு அபிமானம் இருந்தது. ஆகவே யாகங்கள் நடக்கையில் விஸ்வரூபன் உரக்க தேவர்களுக்கு அவி கொடுங்கள் என்று கூவிவிட்டு ரகசியமாக ஹோமம் செய்பவரிடம் அசுரர்களுக்கு அவி கொடுங்கள் என்பான். எப்போதும் ரகசியமாக சொல்வது உரக்கச்சொல்வதைவிட வலுவானது; ஆகையால் அசுரர்களுக்கே அவி கொடுக்கப்பட்டது.

தேவ லோகத்தில் இந்திரன் திகைத்தான். ஹோமங்கள் நடைபெற்றும் தேவர்களுக்கு அவி வந்து சேரவில்லையே என்று குழம்பினான். சற்று கவனித்துப்பார்த்ததில் விஸ்வரூபன் அசுரர்களுக்கு அவி கொடுக்கச்சொல்வது தெரிய வந்தது. கோபத்துடன் இந்திரன் வஜ்ராயுதத்தை வீச அது விஸ்வரூபனின் மூன்று தலைகளையும் கொய்தது. அவன் இறந்து போனான்.
விஸ்வரூபன் வேதங்களை கற்றவன் ஆகையால் அவனைக்கொன்றது ப்ரம்ம ஹத்யா தோஷத்தை கொடுத்தது. இது கவனத்துக்கு வந்த போது இந்திரன் பயந்து நடுங்கினான். யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய் தாமரைத்தண்டு ஒன்றில் மறைந்து ஓராண்டு காலம் வாழ்ந்தான். பின் மெதுவாக கொஞ்சம் தைரியம் வர வெளி வந்தான். எல்லா தேவர்களும் தமக்கு ஒரு பிரச்சினை என்றால் அணுகுவது ப்ரஜாபதியைத்தான். இவனும் பிரஜாபதியிடம் போய் தனக்கு ஒரு வழி சொல்லுமாறு வேண்டினான். அவரோ "விஸ்வரூபன் செய்தது தவறு என்றாலும் அவனைக்கொன்றது உனக்கு ப்ரம்மஹத்யா தோஷத்தை கொடுத்தது. இதை அனுபவித்தே தீர்க்க வேண்டும். உனக்காக ஒரு சலுகை தருகிறேன். இந்த தோஷத்தை உனக்காக அனுபவிக்க யாரும் மனம் ஒப்பி முன் வந்தால் அவர்களுக்கு இதை மாற்றிக்கொடுத்துவிடலாம்.” என்று அருளினார்.
தன் தோஷத்தை யார் ஏற்பார்கள் என்று இந்திரன் அலைந்து திரிந்தான். யாரும் ஒப்பவில்லை. ஒரு வழியாக பூமி ஒப்புக்கொண்டது. என்னால் முழுக்க ஏற்க முடியாது. வேண்டுமானால் மூன்றில் ஒரு பங்கை ஏற்கிறேன் என்றது. இந்திரனும் மகிழ்ந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டான்.
இந்த மனிதர்கள் என்னைத்தோண்டி விட்டு குழியை மூடாமல் போய்விடுகிறார்கள். அதனால் இப்படிப்பட்ட குழிகள் தானாக ஒரு வருஷ காலத்தில் மூடிக்கொள்ளவேன்டும் என்று வேண்டியது. இந்திரனும் அப்படி வரமளித்தான். இதனால்தான் குழிகள் ஒரு வருஷ காலத்தில் புழுதி படிந்து தானாக நிரம்பிவிடுகின்றன. பூமி வாங்கிக்கொண்ட தோஷத்தால் அதன் சில பகுதிகள் ஒன்றுமே முளைக்காத கட்டாந்தரையாக ஆயிற்று. இந்த இடம் வசிப்பதற்கு உகந்த இடமல்லாமல் போயிற்று.
- தொடரும்

No comments: