Pages

Thursday, December 31, 2015

கிறுக்கல்கள் - 73


மாஸ்டர் ஒரு நாள் சொன்னார்: அருமையான செயல்கள் எல்லாம் நினைவு பூர்வமாக செய்யப்படுவதில்லை. அவை நினைவற்ற நிலையில் செய்யப்படுகின்றன.

இதற்கு பதிலாக நிறைய ஆட்சேபனைகள் எழுந்தன. சரியான நேரம் வரவில்லை என்று தோன்றினால் மாஸ்டர் பதில் சொல்வதில்லை. வழக்கம் போல எல்லாவற்றையும் பதில் சொல்லாமல் தவிர்த்துவிட்டார்.

ஒரு நாள் அவரும் சிலரும் ஒரு மேதையின் பியானோ கச்சேரிக்கு போனார்கள். எல்லோரும் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருக்கும் வேளையில் மாஸ்டர் அருகில் இருந்தவரிடம் கிசுகிசுத்தார்.. “கைவிரல்கள் பியானோ மீது நர்தனமாடுவதை பார்த்தாயா? அதை நினைவால் செய்ய முடியாது. உயர்தரம் வேண்டுமென்றால் அதை நினைவற்ற நிலைக்கு விட்டுவிட வேண்டும்.”

Wednesday, December 30, 2015

நான் யார்? - 6


ஏன், உலகம் இருக்கிறப்பவே, தெரியறப்பவே சொரூப தரிசனம் கிடைக்காதா?
கிடைக்காது.
ஏன்?
நாம் உள்ளதை உள்ளபடி பார்க்கவில்லை என்கிறதே அடிப்படையில் பிரச்சினை.
சயன்ஸ்படியே பார்க்கலாம். பல வருஷங்களுக்கு முன்னால (atom) ஆட்டம் ந்னு சொன்னாங்க. அதுக்கு அர்த்தமே பிளக்க முடியாதது என்பது. அப்புறமா அதை பிளந்தாங்க. ந்யூட்ரான் ப்ரோட்டான் எலக்ட்ரானு சொன்னாங்க. அப்புறம் இன்னும் மாறித்து… க்வார்க்ஸ் ந்னாங்க. இப்படியே போய் அது எனர்ஜியா இல்லை பருப்பொருளான்னே சந்தேகம் வந்துகிட்டு இருக்கு.
வெளிப்புறமா பார்க்க பல ஆட்டம்கள் சேர்து ஒரு எலெமெண்டாவும் அது பலது சேர்ந்து காம்பவுண்டாவும் அதுவே இன்னும் பல சேர்க்கையில் விதவிதமான பொருட்களாவும் எல்லையில்லாம விரிஞ்சுகிட்டே போகிறது. இப்படி ஒரு பொருளை உள்ளே நுணுக்கமா பார்க்கையில் ஒரு விதமாகவும் வெளியே விரிச்சு பார்க்கையில் பலவிதமாவும் இருக்கு.
ஆக உள்ளதை உள்ளபடி பார்க்க முடியலை.
மனசு ஒரு பொருளை எதுவா நினைக்குதோ அப்படி அது தோணுது. அதனால உண்மைப்பொருள் மேலே மனசு ஏற்றி வைக்கற பிம்பம்தான் நாம் “பார்க்கிற” பொருள். ந்த பிம்பம் போகாமல் உண்மையான பொருளை பார்க்க முடியாது. அரை குறை இருட்டுல கயிறு பாம்பா தெரியும் போது அது கயிறுதான் பாம்பு இல்லைன்னு நிச்சயமா தெரியறவரைக்கும் அதை பாம்பாத்தான் பார்ப்போம். அது போல இந்த லகங்களின் உண்மை இதுதான்னு சரியா தெரியற வரை அதன் அடிப்படையான சொரூபத்தை பார்க்க முடியாது.

  1. ஜகமுள்ள போதே சொரூப தரிசனம் உண்டாகாதா?
    உண்டாகாது.
  1. ஏன்?
    திருக்கும் திருசியமும் ரஜ்ஜும் சர்ப்பமும் போல. கற்பித சர்ப்பஞானம் போனாலொழிய அதிஷ்டான ரஜ்ஜுஞானம் உண்டாகாதது போல கற்பிதமான ஜக த்ருஷ்டி நீங்கினாலொழிய அதிஷ்டானமான சொரூப தரிசனம் உண்டாகாது.

Saturday, December 26, 2015

நான் யார்? - 5


நான் எதுவெல்லாம் இல்லைன்னு லிஸ்ட் போட்டாச்சு. அப்ப யார்தான் நான்?
விசாரித்து இதெல்லாம் நானில்லை நானில்லைன்னு பட்டியல் போட்டோம் இல்லையா? இது எதிலேயும் சம்பந்தப்படாம விசாரிச்சு மிஞ்சி நிக்கற பேரறிவேதான் நான்.
  1. இவையெல்லாம் நான் இல்லாவிடில் பின்னர் நான் யார்?
    மேலே சொல்லிய எல்லாவற்றையும் நானல்ல நானல்ல என்று நேதி செய்து தனித்து நிற்கிற அறிவே நான்.

ம்ம்ம்? முன்னேயே ஐந்து புலன்கள் வழியா விஷயங்களை கிரகிக்கற அறிவு நான் இல்லைன்னு சொல்லியாச்சே! அப்ப இது வேறயா? இது எப்படிப்பட்டது? இதோட சொரூபம் என்ன? இதோட சொரூபம் மூன்றா சொல்லப்படும். ஒன்று இருப்பு. ரெண்டு பேரறிவு. மூன்று பேரானந்தம். இதை மூணும் சேத்து சத் சித் ஆனந்தம் - சச்சிதானந்தம் என்கிறாங்க.

  1. அந்த அறிவின் சொரூபமென்ன?
    அந்த அறிவின் சொரூபம் சச்சிதானந்தம்.

த்து சித்துன்னு ஏதேதோ சொல்லறீங்க. இதை பாத்தாத்தானே அது என்னன்னு புரியும்? அதை எப்போ பாக்கிறது?
மனசு ஒண்ணு வெளியே பார்க்கும்; அல்லது உள்ளே பார்க்கும். வெளியே பார்க்க பார்க்க விஷயங்கள் அதிகமாகிட்டுத்தான் போகும். கண்ணுக்கு எட்டியதை பார்க்கிறோம். பிறகு கண்ணுக்கு எட்டாததை ஏதேனும் கருவி வைத்து பாக்கிறோம். உலகத்தில் இதை எல்லாம் ஆராய ஆராய இன்னும் அதிகமா அது வளர்ந்து கொண்டேதான் போகும். நமக்கு புரியலை என்கிறதுதான் அதிகமாகிக்கொண்டே போகும்.
இதையே உள்முகப்படுத்தலாம். உள்ளே கவனி. இது என்ன என்ன என்று விசாரி. வெளியே பார்த்ததை என்ன என்ன என்று விசாரிக்க இன்னும் தெளிவில்லாமல் போச்சு. ஆனா உள்ளே கிளம்புவதை இது என்ன என்ன என்று விசாரிக்க அவை மறையும். அதனால தெளிவுதான் அதிகமாகும். பார்க்கிற உலகம் என்கிற பொருட்களில் கவனத்தைவிட்டு பார்க்கிறவன் யார்ன்னு கவனித்தால் - கவனிக்க முடிஞ்சா - எல்லாம் விளங்கும். இந்த வழியைத்தான் பகவான் சொல்கிறார். விளக்கமா பின்னால பார்க்கலாம்.

4. சொரூப தரிசனம் எப்போது கிடைக்கும்?
திரிசியமான ஜகத் நீங்கியவிடத்து திருக்காகிய சொரூப தரிசனம் உண்டாகும்.

Friday, December 25, 2015

கிறுக்கல்கள் - 72


ஏன் நிறைய பேர் ஞானம் அடையறதில்லை?”
ஏன்னா அவங்க உண்மையை தேடலை. எது வசதியா இருக்குமோ அதைத்தான் தேடறாங்க.”

இதுக்கு ஒரு சுஃபி கதை சொன்னார்.
ஒத்தருக்கு பணம் தேவையா இருந்தது. தன்கிட்ட இருந்த ஒரு தரைவிரிப்பை விற்க சந்தைக்குப்போனார். வியாபாரி ஒருத்தர் அதை பாத்துட்டு “இது ரொம்ப பழசா இருக்கு. ரொம்பவே சொர சொரப்பாவும் இருக்கு” ந்னு சொல்லி சல்லிசான விலைக்கு வாங்கினார். பணத்தை வாங்கிகிட்டு பத்தடி போறதுக்குள்ள இன்னொருத்தர் அதை பாத்துட்டு விசாரிச்சார். வியாபாரி “ இதப்போல தரைவிரிப்பு கிடைக்காது சார். சில்க் போல எவ்வளோ வழவழப்பா இருக்கு பாருங்க” என்றார்.
இதை எல்லாம் பாத்துக்கொண்டு இருந்த சுஃபி சொன்னார் “ ஓ, வியாபாரி, சொர சொரப்பான தரைவிரிப்பை சில்க் மாதிரி ஆக்கின மந்திரப்பெட்டியில என்னையும் வெச்சு எடேன்!”

மாஸ்டர் சொன்னார் மந்திரப்பெட்டி வேற எதுவும் இல்லை. நம்மோட சுயநலம்தான்!

Thursday, December 24, 2015

நான் யார்? - 4


அப்படி கிடைக்க நம்மை நாம யார்ன்னு தெரிஞ்சுக்கணும்!

யோவ்! என்னை எனக்கு தெரியாதா என்ன? என்ன உளரல் இது?

ம்ம்ம்! தெரியறதான்னு பாத்துடலாமே!
நான் இந்த உடம்பா? சர்வ சாதாரணமா என் கை, என் கால், என் உடம்பு வலிக்கறது ந்னு எல்லாம் சொல்லறோமே? அப்ப உடம்பும் நானும் வேற வேறத்தானே? ரொம்ப ரொம்ப சிம்பிளா நான் செத்துப்போனப்பறமும் இருக்கற இந்த உடம்பை நான்ன்னு எப்படி சொல்லறது? அப்படியேவிட்டா சில நாட்கள், பதப்படுத்தி வெச்சா இன்னும் பல நாட்கள் இருக்கிற இந்த உடம்பு நானா? இதயம் துடிச்சு கொண்டிருந்தாலும் மூச்சு லேசா விட்டுக்கொண்டு இருந்தாலும் கூட சில சமயம் டாக்டர்கள் இது தேறாதுன்னு சொல்லிடறாங்களே? ப்ரெய்ன் டெட் ந்னு சர்டிஃபை பண்ணி அதிலேந்து சிறுநீரகம் முதற்கொண்டு பல உறுப்புக்களை எடுத்து வேற வேற ஆசாமிங்களுக்கு வெச்சுடறாங்களே? இந்த உடம்பு நானா இருக்க முடியாது.

இந்த உலகத்தை நான் அஞ்சு உணர்வுகளால அறியறேன். எல்லாமே இந்த அஞ்சுல அடங்கிடுமே? பலதும் பார்க்கலாம்; இல்லை இசை மாதிரி பார்க்க முடியாத சிலதை கேட்கலாம். பார்க்கவும் கேட்கவும் முடியாதது காத்துன்னா அதை நம் தோலால உணரலாம். இதுக்கெல்லாம் அகப்படலைன்ன அதுக்கு ஒரு வாசனையாவது இருக்கும்; தெரிஞ்சுக்கலாம்.
அல்லது ஒரு ருசியாவது இருக்கும்.
எல்லாம் சரிதான். ஆனா தூக்கத்திலே இதெல்லாம் இருந்ததா? நான் ஒண்ணுமே சாப்பிடலை; ஆனா ரசிச்சு ருசிச்சு லட்டு சாப்டா மாதிரி கனவு கண்டேனே? கனவுல கண்ட தீ சுட்டுதே?
அப்ப இதெல்லாம் தப்பா காட்டுது. பொய்! அது நானா இருக்க முடியாது. கண்ணில்லாத காது கேளாத ஆசாமிங்க இருக்காங்களே? அது எல்லாம் இல்லை என்கிறதால அவங்க இல்லாமலா போயிட்டாங்க?
ஒரு இடத்தில் உக்காந்து ஏதே ப்ரசங்கம் கேட்டுண்டு இருக்கேன். திடீர்ன்னு மின் தடை. கும்மிருட்டு. பக்கத்துல இருக்கற ஆள் கூட தெரியலை. ஆனா நானிருக்கேனான்னு சந்தேகம் கூட வரலை. ஒண்ணுமே சத்தமே இல்லாட்டாலும் ஒரு வாசனையும் இல்லாட்டாலும் தொட்டுப்பார்த்தா நான் இருக்கேன்னு தெரிஞ்சுக்கணும்? தானே நானிருக்கேன்னு தெரியறதே? ஆக எந்த உணருகிற கருவியோ அந்த சிக்னலை ப்ராசஸ் செஞ்சு இதான் ந்னு நிர்ணயிக்கிற விஷயமோ நானில்லை.
இந்த நுரையீரலையோ வயித்தையோ குடலையோ இயக்கற சக்தியும் நானில்லை. மூச்சை இழுத்து விடாம இருக்கப்பாத்தா அது கொஞ்ச நேரத்துக்கு மேலே என்னால முடியலை. டாய்லெட் போக இப்ப வேணான்னு தள்ளிப்போடப்பாத்தா அதுவும் கொஞ்ச நேரத்துக்கு மேல என்னால முடியலை. என் கண்ட்ரோல்ல இல்லாத எதை நான் நான்னு ஒத்துக்கறது?

தூக்கத்தில இருக்கற மனம் நான் அறிஞ்ச மனமா இல்லே. அது என் கண்ட்ரோல்ல இல்ல. அது என் கண், மூக்கு, காது முதலானது வழியா எதையும் உள் வாங்கிக்கலை. அது பாட்டுக்கு புதுசு புதுசா எதை எதையோ லாஜிக் இல்லாம உருவாக்கிகிட்டு இருக்கு. ஆழ்ந்த தூக்கத்தில சுகமா இருந்தேன். அப்போ மனசு இல்லை. ஆனாலும் அந்த சுகம் இருந்ததே! அந்த சுகத்தை நான் அறிஞ்சேனே? ஆக மனசு நான் இல்லை.
--

ஸப்த தாதுக்களாலாகிய ஸ்தூல தேகம் நானன்று. சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்தமெனும் பஞ்ச விஷயங்களையும் தனித்தனியே அறிகின்ற சுரோத்திரம், துவக்கு, சக்‌ஷுஸ், ஜிஹ்வா, க்ராணம் என்கிற ஞானேந்திரியங்கள் ஐந்தும் நானன்று.வசனம், கமனம், தானம், மல விசர்ஜனம், ஆனந்தித்தல் என்னும் ஐந்து தொழில்களையும் செய்கிற வாக்கு, பாதம், பாணி, பாயு, உபஸ்தம் என்னும் கர்மேந்திரியங்கள் ஐந்தும் நானன்று.சுவாஸாதி ஐந்தொழில்களையும் செய்கின்ற ப்ராணாதி பஞ்ச வாயுக்களும் நானன்று.நினைக்கின்ற மனமும் நானன்று. சர்வ விஷயங்களும் சர்வ தொழில்களும் அற்று விஷய வாசனைகளுடன் மாத்திரம் பொருந்தி இருக்கும் அஞ்ஞானமும் நானன்று.

Wednesday, December 23, 2015

கிறுக்கல்கள் - 71


மாஸ்டரின் சீடர் ஒருவருக்கு அடிக்கடி டிப்ரஷன் வரும்
இதை கண்ட்ரோல் பண்ண டாக்டர் மருந்து சாப்பிடசொல்லறார் மாஸ்டர்!”
பின்னே சாப்பிடேன்!”
அது என்னோட கல்லீரலை பாதிக்கலாம்!”
பாதிக்கலாமா? உனக்கு எது வேணும்? ஆரோக்கியமான கல்லீரலுடன் டிப்ரஸ்டா இருக்கறதா? இல்லை, சிரிச்சுகொண்டு இருக்கிறதா? ஒரு வருஷம் உருப்படியா வாழறது இருபது வருஷம் சோம்பி வழியறதுக்கு சமம்!”

பிறகு தன் சீடர்களிடம் சொன்னார்: ”வாழ்கை கதை மாதிரி. எவ்வளவு நீளம் என்கிறது விஷயமில்லை. எவ்வளவு நல்லா இருந்தது என்கிறது முக்கியம்!”

Tuesday, December 22, 2015

நான் யார்? - 3


என் குழந்தையை பிடிக்கும். ஏன்? ஏன்னா இது என் குழந்தை. என் மனைவியை பிடிக்கும். ஏன்னா இது என் மனைவி. என் மதத்தை பிடிக்கும்.; ஏன்னா இது நான் சார்ந்து இருக்கிற மதம். என் நாட்டை பிடிக்கும்; ஏன்னா இது என்னோட நாடு.
இது எல்லாத்துலேயும் ஒரு பொதுவான சமாசாரம் இருக்கு இல்லே? ’என்!’ அந்த என் இல்லைன்னா அவ்வளோ ருசிக்கிறதில்லை. என் குழந்தை என்கறதால் இந்த குழந்தையை எனக்கு பிடிக்கிறது. என் ஜாதி என்கிறதால என் ஜாதியை எனக்கு பிடிக்கிறது, என் நாடு என்கிறதால் என் நாட்டை எனக்குப்பிடிக்கிறது!
ஸ்வீட் எனக்கு பிடிக்காது. ஜிகிர்தண்டா எனக்குப் பிடிக்காது. இந்த ரீதியில பலது எனக்கு பிடிக்காது!
ஆனா என்னை எனக்கு பிடிக்கும்; ரொம்பவே பிடிக்கும்! எனக்கு சுகம் தருவது எதானாலும் எனக்குப்பிடிக்கும்.
ஆனா இதுவும் ஒரு எல்லைக்கு உட்பட்டு இருக்கு! பிடிச்ச ஸ்வீட்தான். ஆனா ஒரு அளவுக்கு மேல “போதும்ப்பா! திகட்டிடுத்து” என்கிறோம். என் குழந்ததான். எவ்வளவு நேரம் அதோட விளையாடுவேன்? ஒரு அளவுக்கு மேல இந்தா வெச்சுக்கோன்னு இன்னொருத்தர்கிட்ட கொடுத்துடறோம். கொஞ்சம் பெரிய குழந்தையானா “போய் சித்த விளையாடுட்டு வாயேன்!” ந்னு சொல்லி அனுப்பி வைக்கிறோம். மத்த எந்த பிடிச்ச விஷயங்களுக்கும் கூட ஏதோ ஒரு கால அளவு இருக்கு. அது ஒரு சில நிமிஷங்களோ அல்லது சில பல வருஷங்களோ; அதுக்கு மேல அதுல ஈர்ப்பு தங்கறதில்லை. ஏதாவது ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். போரடிக்கிறது என்கிறோம். ஏன்? நமக்கு நாமா கொஞ்ச நேரமாவது இருக்க உள்ளூர ஒரு உந்துதல் இருக்கு!
மத்த எல்லாத்தையும்விட நம்மைத்தான் நமக்கு பிடிக்கிறது. பிற விஷயங்கள் நமக்கு பிடிக்கிறதுல ஒரு சுயநலம் இருக்கு; அதனால பிடிக்கிறது!

என்னதான் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கிற ஆசாமியானாலும் தூங்கிட்டா சந்தோஷத்தை அடையறார். ரொம்ப கவலை இருக்கறப்ப தூக்கம் வரலை என்கிறது வேற விஷயம்.
ஒருத்தர் விழிப்போட இருக்கறப்ப சந்தோஷம் துக்கம் எல்லாம் அனேகமா மாறி மாறி வரும். தூங்கறப்பவும் இனிமையான கனவுகள் பயங்கரமான கனவுகள் எல்லாம் வரக்கூடும்! இது இல்லாம ஆழ்ந்த உறக்கம்ன்னு ஒண்ணு இருக்கு. (அறிவியல் பூர்வமாகவே!) இதில கனவு இராது. விழித்து இருக்கறப்ப நமக்கு உடம்பு இருக்கு; மனசு இருக்கு. சுத்துப்பட்டுல என்ன நடக்கறது என்கிறதெல்லாம் தெரியறது. இத ஜாக்ரத் என்பாங்க.

கனவு காண்கிற போதும் உடம்பு இருக்கு. ஆனால் வித்தியாசமா இருக்கலாம். நாம இளமையோட இருக்கலாம். வேறு வித உடை உடுத்தி இருக்கலாம். பல வேரியேஷன்ஸ் இருக்கலாம். மனசும் இருக்கும். அது நாம ரியாலிடின்னு சொல்கிறதுக்கு அப்பால எதையாவது உணரலாம். (எனக்கு அப்பப்ப கனவில வர இந்த மாதிரி சமாசாரம் வானத்தில பறக்கறது!) லாஜிக் எல்லாம் இந்த கனவு நிலைல அப்ளை ஆகாது!

தூங்கி கனவு கண்டு எழுந்த ஒத்தரை கேளுங்க. அவர் கண்ட கனவு அப்ப திருப்பி நினைவுக்கு கொண்டு வந்தாதான் ஆச்சு. கொஞ்ச நேரம் போனா முழுக்க முழுக்க மறந்து போயிட வாய்ப்பே அதிகம். அவர் பயங்கர கனவு, ரொம்ப துக்கப்பட்டேன் ந்னு சொல்லலாம்! கனவுல துக்கம் சந்தோஷம் ரெண்டுமே வரலாம்!

ஆனா ஆழ் உறக்கத்தில் இந்த உடம்பு பத்தின உணர்வு இல்லை; மனசும் இல்லை. ஆனா சுகம் இருக்கும்!
நல்லா தூங்கி எழுந்த ஒத்தரை கேளுங்க. அவர் சொல்லுவார்: “அப்பாடா! படுத்ததுதான் தெரியும். நல்ல தூக்கம். சுகமா இருந்தேன்!“
கவனியுங்க; சுகமா இருந்ததுன்னு கூட சொல்லறது இல்லை. சுகமா இருந்தேன்! இது ஏதோ அடைஞ்ச விஷயமாக்கூட இல்லை. அதுவாவே இருக்கோம்!
இந்த சுகம் அந்த நேரத்தோடயே போயிடும். நாம விழிச்சு இருக்கறப்ப அது கிடைக்கறதில்லை. ஆனா தவறாம தூக்கத்தில இது கிடைக்கறது. விழிச்சு இருக்கும்போது கிடைச்சா எவ்வளோ நல்லா இருக்கும்?
அப்படி கிடைக்க நம்மை நாம யார்ன்னு தெரிஞ்சுக்கணும்!

யோவ்! என்னை எனக்கு தெரியாதா என்ன? என்ன உளரல் இது?

Monday, December 21, 2015

கிறுக்கல்கள் - 70


உங்களோட முயற்சிகள் ரொமப குறைவா பலன் தருதுன்னு நீங்க கவலைப்பட்டதில்லையா?
மாஸ்டர் பதிலுக்கு ஒரு சின்ன கதை சொன்னார்.
இலையுதிர் காலத்தின் கடைசியில் குளிர்காற்று வீசும் oரு நாளில் ஒரு நத்தை செர்ரி மரத்தின் மேலே ஏற ஆரம்பித்தது. பக்கத்து மரத்தில் இருந்த குருவிகள் எல்லாம் இதை பார்த்து சிரித்து கும்மாளமிட்டன.
அப்புறம் ஒரு குருவி நத்தை அருகில் போய் கேட்டது. “ஏண்டா முட்டாப்பயலே! இந்த மரத்தில ஒரு செர்ரி பழம் கூட இல்லைன்னு உனக்கு தெரியாதா?”
நத்தை சொன்னது “பரவாயில்லை. நான் அங்கே மேலே போய் சேரும்போது இருக்கும்!”

Saturday, December 19, 2015

நான் யார்? - 2


சகல ஜீவர்களுக்கும் துக்கமென்பதின்றி எப்போதும் சுகமாயிருக்க விரும்புவதாலும், யாவர்க்கும் தன்னிடத்திலேயே பரம ப்ரியம் இருப்பதாலும், ப்ரியத்துக்கு சுகமே காரணமாதலாலும், மனமற்ற நித்திரையில் தினமனுபவிக்கும் தன் ஸ்வபாவமான அச்சுகத்தை அடைய தன்னைத் தான் அறிதல் வேண்டும். அதற்கு 'நான் யார்?' என்னும் ஞான விசாரமே முக்கிய சாதனம்.

எல்லோருக்கும் சுகமாக இருப்பதிலேயே விருப்பம் இருக்கு. துக்கத்தை விரும்பறவங்க யாரும் இல்லை! யாரானா டாக்டர்கிட்ட போய் “எப்பவும் சந்தோஷமாவே இருக்கேன்; கொஞ்சம் துக்கமா இருந்தா பரவாயில்லை. ஏதாவது மருந்து உண்டா?” ன்னு கேட்கறாங்களா என்ன?
உனக்கு என்ன வேணும்ன்னு கேட்டா எனக்கு இது வேணும் அது வேணும்ன்னு சொல்வாங்க. வீடு வேணும் கார் வேணும், நல்ல வேலை வேணும். நிறைய பணம் வேணும் ….. இப்படி லிஸ்ட் முடிவில்லாம போகும். ஆனா மேலும் ’அது எதுக்கு உனக்கு வேணும்?’ ன்னு கேட்டுக்கொண்டே போனா ஏதோ ஒரு இடத்தில ’அப்படி இருந்தா நான் சந்தோஷமா இருப்பேன்!’ என்கிறதுல போய் முடியும்.

இதைத்தான் துக்கமில்லாம சுகமா இருக்கவே எல்லாரும் விரும்பறோம்ன்னு சொல்லறது. இது இல்லாஜிகல்தான். எல்லாருக்கும் உள்ளூர தெரியும். சுகம் வரதும் துக்கம் வரதும் மாறி மாறி இவை ரெண்டும் வரதும் இயற்கைதானே? ஆனாலும் துக்கமில்லாம சுகமாவே இருக்கவே எல்லாரும் உபாயம் தேடறாங்க!

உனக்கு என்ன வேணும்? நிறைய பணம் வேணும். எதுக்கு? கார் வீடு எல்லாம் வாங்குவேன். அது எதுக்கு? அதெல்லாம் இருந்தா சௌக்கியமா சந்தோஷமா இருப்பேன்.
கார் வீடு இருந்தா சந்தோஷமா இருப்போமா இல்லையா என்கிறது இப்ப இங்கே முக்கியமில்லை. அப்படி இருப்போம்ன்னு நம்பறோம். அதனால வேணும்ன்னு சொல்லறோம்.
இந்த சுகத்தை எது தருமோ அதில நமக்கு ஒரு ப்ரியம் வரதுல ஒரு ஆச்சரியமும் இல்லை. சுகத்தை தர விஷயம் நமக்கு பிடிக்குது!


கவனியுங்க; ’நான் சுகமா’ இருப்பேன். என் பிள்ளக்குட்டி சுகமா இருக்கும்னோ, இல்லை மனைவி சுகமா இருப்பான்னோ சொல்லுவது ரொம்பவே அரிதாத்தான் இருக்கும். அடிப்படையில நாம சுகமா இருக்கற வழியைத்தான் பார்க்கிறோம். அப்படியே மத்தவங்களுக்கு சந்தோஷம் இருக்கன்னு ஒண்ணை சொன்னாலும், அப்படி மத்தவங்க சந்தோஷத்துல இவங்களுக்கு ஒரு திருப்தி இருக்கும்! அப்படிப்பாத்தாலும் அது தன்னோட சந்தோஷம்தானே?
உனக்கு என்ன பிடிக்கும்? ’லட்டு பிடிக்கும்; ஜிகிர்தண்டா பிடிக்கும்’ ரீதியில விடை வரலாம். ஏன்? 'அதெல்லாம் சாப்பிட்டா எனக்கு சந்தோஷமா இருக்கும்!’

Friday, December 18, 2015

கிறுக்கல்கள் - 69


ஞானம் பெற்ற பின் நிலை எப்படி இருக்கும் என்று ஒருவர் மாஸ்டரிடம் கேட்டார்.
அது அடர்ந்த காட்டுக்குள் போன பிறகு திடீரென்று, நம்மை கவனிக்கிறார்கள் என்று தோன்றினால் எப்படி இருக்கும்? அது போல!”
கவனிப்பது யார்?”
”கற்கள், மரங்கள், மலைகள்….”
பயங்கரமான அனுபவமா இருக்கே?”
இல்லை. அப்பாடான்னு ஆறுதலா இருக்கும்! ஆனா இதுக்கு நாம் பழகலை. அதனால் உடனே திருப்பி நகரத்துக்கு ஓடி வர நினைக்கறோம். அவங்களோட சத்தம், வார்த்தைகள், சிரிப்புகள், கத்தல்கள்…. இவைதான் நம்மை உண்மையான எதார்த்த நிலையிலிருந்து விலக்கி வைக்குது!”

Thursday, December 17, 2015

நான் யார்? - 1


ஞான விசாரம்ன்னாலே பலரும் “ஓ அது நமக்கு ஒத்து வராது" ன்னு நினைப்பாங்க. “நமக்கு இது பத்தி எல்லாம் என்ன தெரியும்? ஞானம்ன்னா என்ன விசாரம்ன்னா என்ன? ஆள விடப்பா!”
இப்படித்தான் ஒருத்தர் ஆத்ம வித்தை மிகக்கடினம் ந்னு ஒரு பாட்டே எழுதினார்.
கோபாலகிருஷ்ணபாரதியார் ‘நந்தன் சரித்திரம்’ எழுதினார். அதில், "ஐயே மெத்தக்கடினம்” என்று ஒரு பாடல் தொடங்குகிறது. சிவபெருமானையே சதா நினைந்து உருகி, சிதம்பரத்தில் அவனது பொன்னம்பல தரிசனத்தைக் காண ஏங்கி நின்ற, நந்தன் பாடுவதாக அது அமைந்தது.
பகவான் ரமண மகரிஷி அதுக்கு பதிலா ”ஐயே அதி சுலபம்; ஆத்ம வித்தை ஐயே அதி சுலபம்’ ந்னு பாட்டு எழுதினார்! முருகனார் பல்லவி அனு பல்லவி எழுதின பின் பாட்டை தொடர முடியாமல் பகவானிடம் கொடுத்துவிட்டார். பகவான் சரணங்களை எழுதி பூர்த்தி செய்தார். பாடல் பின் குறிப்பாக வருகிறது.

பொதுவா ஒரு புத்தகத்தில என்ன எழுதி இருக்குன்னு தெரிஞ்சுக்க அதோட உள்ளடகத்தை படிக்கணும். ஆனா இந்த 'நான் யார்' புத்தகத்தில தலைப்பே அது என்னன்னு சொல்லிடுது. என்ன செய்ய வேணும் என்கிறதையும் உணர்த்திடுது. இன்னும் விளக்கமா தெரியணும்ன்னாத்தான் படிக்கணும்! ஆத்ம விசாரணை எப்படி செய்யணும்ன்னு கேட்ட பக்தர்களுக்கு அவ்வப்போது பகவான் ரமணர் எழுதிக்கொடுத்தவற்றின் தொகுப்புதான் இந்த புத்தகம். கையடக்க பதிப்பு வெறும் 14 பக்கங்கள்தான்!

இத படிச்சு புரிஞ்சுக்க ஆன்மீகவாதியா இருக்கணும்ன்னு ஒண்ணும் கட்டாயமில்லை. கடவுளை நம்பாத ஆசாமியாக்கூட இருக்கலாம். ஏன்னா சொல்லபடற விஷயம் கடவுள் கான்சப்டையும் தாண்டினது.
வழக்கம் போல நான் இதை எழுதக்காரணம் சப்ஜெக்டை புரிஞ்சுக்கத்தான். இதில் நான் வல்லுனனன் இல்லை! இது காப்பி பேஸ்ட் இல்லை - … ம்ம்ம் ஒண்ணு ரெண்டு தவிர, அந்த பாடல் மாதிரி- என்கிறதால புரிஞ்சாலே ஒழிய அதை எழுத முடியாது. எழுதும்போது சில விஷயங்கள் இன்னும் தெளிவா புரியுது. அவ்ளோதான். கூடவே பயணம் செய்ய ரெடியா நீங்க? ரைட் ஆரம்பிக்கலாம்!
சகல ஜீவர்களுக்கும் துக்கமென்பதின்றி எப்போதும் சுகமாயிருக்க விரும்புவதாலும், யாவர்க்கும் தன்னிடத்திலேயே பரம ப்ரியம் இருப்பதாலும், ப்ரியத்துக்கு சுகமே காரணமாதலாலும், மனமற்ற நித்திரையில் தினமனுபவிக்கும் தன் ஸ்வாபவமான அச்சுகத்தை அடைய தன்னைத் தான் அறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் ஞான விசாரமே முக்கிய சாதனம்.

அந்த காலத்தில் எழுத்து ஸ்டைல்! பயப்படாதீங்க. இதெல்லாம் என்னன்னு பாத்துண்டு போகலாம்!
----
பின் குறிப்பு:
பல்லவி:

ஐயே! அதி சுலபம் ஆன்ம வித்தை
ஐயே! அதி சுலபம்
அனுபல்லவி:

நொய்யார் தமக்கும் உளங்கை ஆமலகக் கனி
பொய்யாய் ஒழிய மிகு மெய்யாய் உளது ஆன்மா (ஐயே!)
சரணம் 1

மெய்யாய் நிரந்தரம்தான் ஐயாது இருந்திடவும்
பொய்யாம் உடம்பு உலகம் மெய்யா(ய்) முளைத்தெழும் பொய்-
மை ஆர் நினைவு அணுவும் உய்யாது ஒடுக்கிடவே
மெய் ஆர் இதயவெளி வெய்யோன் சுயம் ஆன்மா ---
விளங்குமே; இருள் அடங்குமே; இடர் ஒடுங்குமே;
இன்பம் பொங்குமே (ஐயே!)
சரணம் 2

ஊன் ஆர் உடல் இதுவே நான் ஆம் எனு(ம்) நினைவே
நானா நினைவுகள் சேர்ஓர் நார்எனும் அதனால்
நான் ஆர்?இடம் எது? என்று உள்போனால், நினைவுகள் போய்
நான், நான்” எனக் குகையுள் தானாய்த் திகழும் ஆன்ம --
ஞானமே; இதுவே மோனமே ஏக வானமே;
இன்பத் தானமே .......... (ஐயே)
சரணம் 3

தன்னை அறிதல் இன்றிப் பின்னை எது அறிகில் என்?
தன்னை அறிந்திடில் பின் என்னை உளது அறிய?
பின்ன உயிர்களில் அபின்ன விளக்கு எனும் அத்
தன்னை த(ன்)னில் உணர மின்னும் த(ன்)னுள் ஆன்ம --
ப்ரகாசமே; அருள் விலாசமே; அக விநாசமே;
இன்ப விகாசமே ...... (ஐயே)

சரணம் 4

கன்மாதி கட்டு அவிழ சென்மாதி நட்டம் எழ
வெம் மார்க்கம் அதனினும் இம்மார்க்கம் மிக்கு எளிது
சொல் மானத தனுவின் கன்மாதி சிறிது இன்றி
சும்மா அமர்ந்திருக்க அம்மா! அகத்தில் ஆன்ம ---
ஜோதியே; நிதஅனுபூதியே; இராது பீதியே;
இன்ப அம்போதியே ....... (ஐயே)
(வெம் மார்க்கம்= கடினமான பிற வழிகள்)
சரணம் 5

விண்ணாதிய விளக்கும் கண்ணாதிய பொறிக்கும்
கண்ணா(ம்) மனக்க(ண்)ணுக்கும் கண்ணாய் மன வி(ண்)ணுக்கும்
விண்ணாய் ஒரு பொருள் வேறு எண்ணாது இருந்தபடி
உள் நாடு உளத்து ஒளிரும் அண்ணாமலை என் ஆன்மா
காணுமே; அருளும் வேணுமே; அன்பு பூணுமே;
இன்பு தோணுமே .... (ஐயே)


கிறுக்கல்கள் - 68


ஒரு சீடன் புகார் செய்தான்: மாஸ்டர் நீங்க எங்க நம்பிக்கை எல்லாத்தையும் உடைக்கிறீங்க!
ஆமாம்பா. பூரண வஸ்துவை மறைக்கிற எல்லாத்தையும் உடைச்சு எரிஞ்சாத்தானே அகண்டமா முழுமையா ஜொலிக்கிற பரம் பொருளை உணர முடியும்?”
--

மழை வெள்ளம் இணையம் துண்டிப்பு உள்ளிட்ட சில பல காரணங்களால் பதிவுகள் தடைப்பட்டன. வருந்துகிறேன்.