Pages

Tuesday, July 14, 2015

அடியார்கள் - தேசூர் அம்மா


பகவானுக்கு ஆபரேஷன் செய்து இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு பகவானை தரிசிக்க தேசூரம்மா வந்தார்கள். அப்போது அவருக்கு தொன்னூறு வயது. தள்ளாத வயது. பகவானைப் பற்றி கேள்விப்பட்டதில் இருந்து தன் உடற்குறை மறந்து போயிற்று. ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தாள். அவள் ஸ்கந்தாஸ்ரம காலத்தவள். ஆகவே புதியவர்களுக்கு அவளை அடையாளம் தெரியவில்லை. பழங்காலத்தவர்களுக்குக் கூட அடையாளம் கண்டுபிடிப்பது சிரமமாகவே இருந்திருக்கும்.
சேவகர்கள் யாருக்கும் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டனர்.
இதை குஞ்சு ஸ்வாமி பார்த்துவிட்டு நேரே பகவானிடம் சென்று தெரிவித்தார்.
பகவான் ஆச்சரியத்துடன் தேசூரம்மா வந்திருக்காளா? கூட்டி வா! கூட்டி வா!” என்றார்.
குஞ்சுஸ்வாமி கூட்டிச்சென்றார்.
உள்ளே சென்றவர் பகவானின் உடல் நிலையை பார்த்து கதறி அழுதார்.
பகவான் மெதுவாக தோன்றி மறைகிற உடம்புக்கு ஏன் வருத்தப்படறே? நான் எப்பவும் உன் பகவாந்தானே?” என்றார்.

பகவானின் நோய் தீவிர கட்டத்தில் இருந்த போது கட்டி ஒரு காலிப்ளவர் அளவுக்கு பெரியதாக வளர்ந்து இருந்தது. மிகுந்த சிரமம். அவ்வப்போது கையை ஒரு ரப்பர் ஷீட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். உதவிக்கு இருந்த ஒருவர் பகவானிடம் கேட்டார் பகவானே! கையை இவ்வளோ சுலபமா தூக்கறேளே? வலி வேற அதிகமா இருக்குமே? எப்படி முடியறது?’
பகவான் சொன்னார்: “ இதுல என்ன இருக்கு? இந்த உடம்பு செத்தா தூக்க நாலு பேர் வேணும். இப்போ நான் ஒருத்தான் தூக்கிண்டு இருக்கேனே?”

பகவானுக்கு இரண்டாவது ஆபரேஷன் நடந்தது. பக்தர்கள் பெரும்பாலானோர் நம்பிக்கை இழந்தனர். தரிசிப்பவர்கள் எல்லாரும் பகவானே! திருவுளங்கொண்டு கையை சரிப்படுத்திக்க வேணும். இல்லைன்னா நாங்கள் கைவிடப்படுவோம்!” என்று ப்ரார்தித்த வண்ணம் இருந்தனர்.
அப்போது பகவான் இன்னைக்கு கார்த்தாலே சுப்ரமணியம் சண்டே டைம்ஸ் வந்திருக்குன்னு ஒரு கதையை வாசிச்சு சொன்னான்.
ஒரு நாலு வயசு பெண் குழந்தைக்கு அவா அப்பா அம்மா ப்ரார்த்தனை செய்ய சொல்லிக்கொடுத்து இருந்தாளாம். தினசரி ப்ரார்தனை செய்து விட்டுத்தான் அவள் தூங்குவாளாம். ஒரு ராத்திரி பெரிய புயல் மழைவானத்துலே இடியும் மின்னலுமா இருந்ததாம். அதை பாத்துட்டு அந்த குழந்தை பகவானே ! நீ உன்னை பத்திரமா பாத்துக்கோ! உனக்கு ஏதாவது ஆச்சுன்னா எங்க கதி என்ன ஆகிறது?” ந்னு ப்ரார்த்தனை பண்ணித்தாம். அது பகவான் வானத்திலே மட்டும்தான் இருக்கிறதா நினைச்சு ப்ரார்த்தனை பண்ணித்து! அதே போலத்தான் இருக்கு இப்ப இவா எல்லாரும் ப்ரார்த்தனை பண்ணறது!
 

No comments: