Pages

Friday, June 19, 2015

அடியார்கள் - குஞ்சுஸ்வாமி-1



குஞ்சுஸ்வாமிக்கு சிறுவயதிலேயே வேதாந்த பாடம் சொல்லிக்கொடுத்தவர் மலையாளம் குப்பாண்டி ஸ்வாமிகள். அவர்தான் பகவானைப்பற்றியும் அவரிடம் சொன்னவர். ஒரு முறை பகவானை தரிசிக்க வந்தார். தரிசனம் முத்து கிளம்பும் போது குஞ்சுஸ்வாமியின் கையை பிடித்து பகவான் கையில் வைத்து இவனுடைய தகப்பனார் ரொம்ப நல்லவர். பையன் பெரிய ஞானியாகணும்ன்னு என்கிட்டே ஒப்படைச்சார் இவன் அதுக்கு தகுதியானவந்தான். ஆனா என்னால முடியலை. சில காரணங்களால யாத்திரை போயிட்டேன். இனி நீங்கதான் இவனுக்கு அடைக்கலம்.அவனை கைவிடாம காப்பாத்தணும்என உருக்கமாக வேண்டிக்கொண்டார்.
அன்றையில் இருந்து குஞ்சுஸ்வாமி ஆசிரமவாசியானார்.
ஆரம்ப காலங்களில் ஆசிரம நிர்வாகம் தண்டபாணிஸ்வாமி கையில் இருந்தது. அவரும் பகவானும்தான் சட்டினிக்கு அரைப்பார்கள், சேர்ந்தாற்போல சில நாட்கள் அரைத்ததில் பகவானுக்கு கைகளில் கொப்பளங்கள் வந்துவிட்டன. குஞ்சுஸ்வாமியும் மற்றவர்களும் தண்டபாணிஸ்வாமியிடம் இப்போதைக்கு துவையல் சட்டினி எல்லாம் வேண்டாம் என்று சொன்னார்கள். பகவானிடமும் நீங்கள் இனி இந்த அரைக்கும் வேலைகளை செய்ய வேண்டாம். செய்தால் நான் சாப்பிட மாட்டேன்என்று குஞ்சுஸ்வாமி மனம் வருந்தி சொன்னார்.
ஆனால் அடுத்த நாளும் புளிச்ச கீரையே சாப்பாட்டில் அமைந்தது! பகவானே அரைத்தார். ஆகையால் குஞ்சுஸ்வாமி துவையலை போட்டுக்கொள்ளவில்லை. இதை யாரோ பகவானிடம் போட்டுக்கொடுத்து விட்டார்கள்.
அடுத்த வேளை உணவுக்கு உட்கார்ந்த பகவான் குஞ்சுஸ்வாமியை கூப்பிடச் சொன்னார். “என்ன ஓய்? நான் சாப்பிடலாமா? “ என்று கேட்டார்.
குஞ்சுஸ்வாமிக்கு ஒன்றும் புரியவில்லை. திகைத்தார். பகவான் ஆமாம்! இவா சொல்லறதை எல்லாம் நான் கேட்கணும். இல்லைன்னா இவா சாப்பிட மாட்டா! இவா உத்திரவு படித்தானே நான் நடக்கணும்? வரப்ப எல்லாரும் சாதுவாத்தான் வரா. நாள் போகப்போக அதிகாரம் பண்ண ஆரம்பிச்சுடறா. இவா சொல்கிறபடிக்கு ஸ்வாமி ஆடணும். ஸ்வாமிக்கு ஒண்ணுமே தெரியாதில்லையா!” என்றார்.
குஞ்சுஸ்வாமி கண்கலங்கி அழுதார் அடுத்த இரண்டு நாட்கள் பகவான் குளிக்கப்போகலாமா? உக்காரலாமா? என்பது போல எதை எடுத்தாலும் குஞ்சுஸ்வாமியை உத்திரவு கேட்பதாகவே இருந்தார்.
குஞ்சுஸ்வாமி இனி தான் அங்கே இருக்க இயலாது என்று நினைத்தார், பகவானிடம் நாந்திருப்பதி போறேன் என்று சொன்னார். பகவான் எதுவும் பேசவில்லை.
பிற்பகல் பகவான் கிரிபிரதக்‌ஷிணத்துக்கு சிளம்பினார். ராமக்ருஷ்ணஸ்வாமி குஞ்சுஸ்வாமியிடம் எங்களோட கிரிபிரதக்‌ஷிணம் வந்துட்டு அப்படியே ரயிலுக்கு போயேன் என்றார். குஞ்சுஸ்வாமியும் தன் கொஞ்ச உடமைகளை மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு உடன் சென்றார். பகவான் அன்றைக்கு மிக மிக மெதுவாகவே நடந்தார். முந்திச்செல்வது முறையல்ல என்று எல்லாருமே அவர் பின்னே மெதுவாக நடக்க வேண்டியதாயிற்று.
குபேர லிங்கம் தாண்டும்போது ஆறரை மணி ரயில்வண்டி போவதை பார்த்து பகவான் உன் வண்டி போறது பார். சீக்கிரம் பறந்து போ! போ!” என்றார். எல்லாரும் சிரித்தார்கள். குஞ்சுஸ்வாமியை சமாதானப்படுத்தி ஆசிரமத்துக்கு கூட்டி வந்தார்கள். இரவு உணவு முடிந்த பின் தண்டபாணிஸ்வாமி குஞ்சுஸ்வாமியை பகவானிடம் கூட்டி வந்து பகவானுக்கு கோபம் வரும்படி நடந்ததுக்கு மன்னிப்பு கேக்கறான்.” என்றார். பகவான் அவனிடம் எனக்கு என்ன கோபம்? அவன் என்ன தப்பு செஞ்சான்? கையிலே கொப்பளத்தை பார்த்து மனசு கஷ்டப்பட்டு சாப்பிடலே. இதுல கோபிக்க என்ன இருக்கு? நான் கோபிச்சுண்டேனாம்; அவன் திருப்பதிக்கு புறப்பட்டானாம்! மஹா புத்திசாலித்தான்!
இவன் இங்கேயே சாப்பாட்டை பிடிக்காம சாப்பிடுவான். காரம் தாங்காம குழம்பு ரசத்துல எல்லாம் தண்ணி ஊத்திண்டு மருந்து மாதிரி சாப்பிடுவான். திருப்பதிக்கு போனா இவனுக்கு என்ன கிடைக்கும், என்ன சாப்பிடுவான்?
அப்புறம் இவன் குரு எங்கிட்ட வந்து இவன் எங்கேன்னு கேட்டா என்ன செய்வேன்? என் கையிலே பிடிச்சு கொடுத்து கைவிடக்கூடாதுன்னு ஒப்படைச்சு போயிருக்காரே? என்ன பதில் சொல்லுவேன்? இவன் என்னடான்னா திருப்பதி போறானாம் திருப்பதி!” என்று பேசி முடித்தபோது பகவான் ஒரு காலும் தன்னை கைவிட மாட்டார் என்று குஞ்சுஸ்வாமிக்கு புரிந்தது!

   

No comments: