Pages

Tuesday, April 7, 2015

ரமணர், அடியார்கள் - முருகனார் -2


ஒவ்வொரு முறை முருகனார் பகவானை தரிசிக்க வரும்போதும் பகவானைப் பிரிய மனமில்லாமல் நிலை கொள்ளாமலே இருப்பார். சென்னைப்போக ரயில் நிலையத்துக்கு கிளம்புவார். நிலை கொள்ளாமல் இங்கும் அங்கும் அலைவார். ரயில் வந்து நின்று கிளம்பிவிடும். ஆனால் இவர் அதில் ஏறாமல் திரும்பிவிடுவார்!
பகவான் முருகனாரிடம் ”ஏன் ரயில் வரலையா?” என்றூ கேட்பார்.
முருகனார் “ரயில் வந்தது. ஏற மனம் வரல்லை!” என்பார்.
பகவானும் “சரி சரி நாளைக்குப்போகலாம்” என்பார்.
சில நாட்களுக்குப் பின் பகவான் முருகனாரை ரயில் ஏற்றிவிட்டு வரும்படி யாரையேனும் அனுப்பி வைக்கலானார். அவர்களும் முருகனாரை வலுக்கட்டாயமாக ரயில் ஏறிவிட்டு வந்து ‘முருகனாரை நாடு கடத்தி விட்டோம்’ என்று சொல்வார்கள்!
முருகனாரை உலகோடு கட்டிப்போடும் ஒரே விஷயம் அவருடைய தாயார் மட்டுமே!

முருகனாரின் தாயார் பகவான் அடி சேர்ந்தார். கார்யங்களை முடித்துவிட்டு சிறிது அஸ்தியை தனுஷ்கோடியில் கரைத்துவிட்டு மீதியை ஒரு குடுவையில் போட்டு எடுத்துக்கொண்டு ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார். வெளியே இலுப்பை மரத்தடியில் வைத்துவிட்டு குளித்துவிட்டு வந்து பகவானை நமஸ்கரித்தார்.
பகவான் பரிவுடன் “அம்மா காரியம் எல்லாம் முடிஞ்சதா?” என்று கேட்டார்.
முருகனார் கண்கலங்கியபடி “முடிஞ்சது” என்றார்.
குஞ்சுஸ்வாமி பகவானிடம் “தாயாரின் அஸ்தியை கொண்டு வந்திருக்கார்” என்றார்.
நல்லது அக்னிதீர்த்தத்திலே கரைச்சுடுங்கோ” என்றார் பகவான்.
அப்படியே செய்யபட்டது.
பிறகு நேராக சொந்த ஊரான ராமநாதபுரத்துக்குப் போனார். தன் நண்பரான மேலைப்புரி சுப்பிரமணியஞ் செட்டியாரையும் உடன் அழைத்துச் சென்றார். தன் பூர்வீக வீட்டை அவருக்கு காட்டினார். “செட்டியார், வீட்டை உங்க பேருக்கு எழுதிடறேன்; என்ன விலை போறதோ அதுக்கு வித்துடுங்கோ. அந்த தொகையிலே மாசா மாசம் மீனாக்‌ஷிக்கு (மனைவி) பணம் அனுப்பிடுங்கோ” என்றார்.
செட்டியார் ஒப்புக்கொள்ளவில்லை. “பணம் மாசா மாசம் அனுப்ப சின்ன முதலீடு போதும். அதை நானே பண்ணிடறேன். இந்த ஏற்பாடெல்லாம் வேண்டாம்” என்றார்.
முருகனார் “பணம் அனுப்ப என்ன தேவையோ அதை வெச்சுண்டு மீதியை ரமணாசிரமத்துக்கு அனுப்பிடுங்கோ. இதை மறுக்காம செய்யணும்” என்றார்.
வீட்டை எழுதி கொடுத்துவிட்டு நேராக சென்னை சென்றார்.
அதற்குள் முருகனார் திரும்பவில்லை என்று அவரது மனைவி மீனாக்‌ஷி பதட்டமானார். அவர் ராமநாதபுரத்தில் இருப்பதாக கேள்விப்பட்டு கிளம்பி வந்தார். சென்னை கிளம்பிவிட்டதாக தெரிந்து கொண்டு சென்னைக்குத் திரும்பினார். வீடு பூட்டிக்கிடந்தது. வேலை பார்க்கும் பள்ளியில் அவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டதாக சொன்னார்கள். வீட்டில் இருந்த கொஞ்ச பாத்திரங்களோடு திருவண்ணாமலை வந்து சேர்ந்த முருகனார் அவற்றை ஆசிரமத்தில் கொடுத்துவிட்டு கட்டிய வேட்டி துண்டுடன்
இறைப்பணிக்கு சித்தமாக நின்றார்.

No comments: