Pages

Saturday, February 28, 2015

உள்ளது நாற்பது - 2

 
மங்க³லம்
உள்ளதல துள்ளவுணர் வுள்ளதோ வுள்ளபொரு
ளுள்ளலற வுள்ளத்தே யுள்ளதா – லுள்ளமெனு
முள்ளபொரு ளுள்ளலெவ னுள்ளத்தே யுள்ளபடி
யுள்ளதே யுள்ள லுணர்.

உள்ளதுஅலது உள்ளஉணர்வு உள்ளதோ உள்ளபொருள்
உள்ளலற உள்ளத்தே உள்ளதால் – உள்ளமெனும்
உள்ள பொருள் உள்ளல்எவன் உள்ளத்தே உள்ளபடி
உள்ளதே உள்ளல் உணர்.
ஆதி அந்தமில்லாது எப்போதும் இருக்கிற ஞான ஸ்வரூபம் ஒன்றே உண்மை. அது அல்லாமல் வேறு ஒரு உண்மையான வஸ்து உள்ளதோ? இல்லை. அந்த ஞான ஸ்வரூப சத்திய வஸ்துவானது, மனம் சகல நினைப்புக்களும் நீங்கி தன்னுள்ளே ஒடுங்கும் போது ஹ்ருதயத்தில் பிரகாசிக்கிறது. ஆகவே மனம் எப்படி அந்த சத்திய வஸ்துவை நினைக்க முடியும்? ஞான மயமான ஹ்ருதயத்தில் அந்த ஞான ஸ்வரூபம் உள்ளது போலவே மனம் அதன் உள்ளே மறப்போ நினைப்போ இல்லாது அம்மயமாகவே ஒடுங்கிக்கிடப்பதே அதை நினைத்தல் ஆகும் என அறிவாயாக.
முக்காலத்திலும் இருக்கக்கூடியது ஞான ஸ்வரூபம் ஒன்றே. மற்ற அனைத்தும் தோன்றி மறைவன. இந்த உலகம், ஜீவன் போன்ற அனைத்தும் அப்படியே. தோன்றி மறையும் காலம் சில வினாடிகளாகவோ பல ஆயிரம் வருடங்களாகவோ இருக்கலாம். இருந்தாலும் தோற்றம் என்று ஒன்று இருக்கும் எதற்கும் முடிவும் இருக்கிறது. முக்காலத்திலும் இல்லாத ஒன்றை சத்தியம் என ஏற்பதற்கில்லை. அதையே மித்யா என்பர்.
இந்த ஞானஸ்வரூபத்தை எங்கே எப்படி காண இயலும்?
எப்போதும் இருக்கும் இந்த ஞான ஸ்வரூபத்தில் இருந்தே மனம் எழுகிறது. மனம் தோன்ற இந்த உலகம் என்று ஒன்று அதனால் உணரப்படுகிறது. மனம் இல்லையானால் இந்த உலகம் இல்லை. அதனாலேயே மனம் உறங்கும் ஆழ் உறக்கத்தில் இந்த உலகம் நம்மைப்பொருத்த வரை இல்லாமல் போகிறது. விழித்து எழ மனம் மீண்டும் கிளம்புவதால் உலகம் தோன்றுகிறது.
மனம் தான் வந்த இடத்துக்கு மீண்டும் சென்றுவிட்டால்? அதாவது தான் தோன்றிய அந்த ஞானஸ்வரூபத்துக்கே சென்று ஒடுங்கி விட்டால் என்ன ஆகும்? அப்போது உறக்கத்தில் பிரபஞ்சம் காணமல் போவது போல காணாமல் போகும். அப்போது ஞானஸ்வரூபம் ஒன்றே இருப்பதால் அது மட்டுமே பிரகாசிக்கும். இப்படி நிகழ்ந்தால் பின் மனம் மீண்டும் எழுவதில்லை.
பெயர் வடிவம் என்பதெல்லாம் மனம் கற்பிப்பதே. மனம் புலன்கள் வழியாகவே ஒன்றை அறிகிறது. புலன்கள் வழி அல்லாது ஒன்றை அது அறிய இயலாது. ஞான ஸ்வரூபமோ பெயர் வடிவம் அற்றது. ஆகையால் அதை புலன்களால் அறிய முடியாது. ஆகவே மனதாலும் அதை அறிய முடியாது. முன்னே அறிந்து இராத ஒன்றை அதால் அறிய முடியாது. அது எப்போது அறியும்?
நினைப்பதும் மறப்பதும் மனதின் இயல்பே. மனம் தான் அறியும் இந்த பிரபஞ்சம் அநித்தியமானதாகையால் உண்மையல்ல என விலக்குமானால் மீதி இருப்பது அது தோன்றிய அந்த ஞான ஸ்வரூபமே. அதில் ஒடுங்கும் போதே மனது அதை அறிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அப்படி ஒடுங்கும் போது அதன் தனித்துவம் காணாமல் போய் அதுவும் ஞான ஸ்வரூபமாகவே ஆகிவிடுகிறது. ஆகவே மனம் என்று ஒன்று இருந்து கொண்டு ஞானஸ்வரூபத்தை நினைப்பது என்பது இயலாத ஒன்றாகி விடுகிறது.
இந்த ஞான ஸ்வரூபத்தையே நாம் பலவாறாக அழைக்கிறோம். நாம் புரிந்துகொள்ளும் பொருட்டு நாம ரூபமில்லாத ஒன்றை ஆன்மா, பரமான்மா, சிவம், பிரம்மம் என பலவாறாக அழைக்கிறோம்.
॥ सद्दर्शनम् ॥
|| ஸத்³³ர்ஶனம் ||
श्रीभगवद्रमणमहर्षि-विरचित-द्राविडग्रन्थस्य संस्कृतानुवादात्मकम्
ஶ்ரீப⁴க³வத்³ரமணமஹர்ஷி-விரசித-த்³ராவிட³க்³ரந்த²ஸ்ய ஸம்ʼஸ்க்ருʼதானுவாதா³த்மகம்

सत्प्रत्ययाः किं नु विहाय सन्तं हृद्येष चिन्तारहितो हृदाख्यः ।
कथं स्मरामस्तममेयमेकं तस्य स्मृतिस्तत्र दृढैव निष्ठा ॥ १ ॥
ஸத்ப்ரத்யயா: கிம்ʼ நு விஹாய ஸந்தம்ʼ ஹ்ருʼத்³யேஷ சிந்தாரஹிதோ ஹ்ருʼதா³க்²: |
கத²ம்ʼ ஸ்மராமஸ்தமமேயமேகம்ʼ தஸ்ய ஸ்ம்ருʼதிஸ்தத்ர த்³ருʼடை⁴வ நிஷ்டா² || 1 ||

 

Friday, February 27, 2015

உள்ளது நாற்பது - 1



உள்ளது நாற்பது

பாயிரம்

மெய்யின் இயல்புமதை மேவும்திறனும் எமக்கு
உய்யும் படிமுருகன் ஓதுகஎனப் - பொய்யுலகின்
கள்ளம்அறும் ஆற்றால் கனரமணன் கட்டுரைத்தான்
உள்ளது நாற்பது உவந்து.

உள்ளதுஒன்று அன்றுபல என்பார்கள் உட்கொள்ளுமாறு
உள்ளதுஒன்று என்றே தான்ஓதியஅவ் வுள்ளது
நாற்பது வெண்பாக்களை ஓர்கலிவெண்பா ஆக்கி
ஏற்ப அளித்தான் ரமணன் எண்.



Thursday, February 26, 2015

உள்ளது நாற்பது




பகவான் என்னும் அழைப்புக்கு வெகு சில மனிதர்களே பொருத்தமான பாத்திரமாக இருந்திருக்கின்றனர். ரமண மஹரிஷி அத்தகையவர். ‘தன்னை கண்டு கொண்ட அவர் சதா சர்வ காலமும் தன்னிலேயே தோய்ந்து இருந்தவர். அவருடையது என்று ’நான் யார்’ எனும் ஒரு வழியை அவருடன் இருந்த பண்டிதர்கள் சொன்னாலும் அவர் எந்த ஒரு குறிப்பிட்ட வழியையும் பின் பற்றும்படி யாரையும் வற்புறுத்தவில்லை. மாறாக சில கேள்விகளை மட்டுமே எழுப்பி அதற்கு விடை காணுமாறு தூண்டினார். யாரும் கேள்விகளை கேட்டால் அப்போது பதில் வருவதும் நிச்சயமில்லை. ஒன்று தானாகவே குழப்பம் தெளிந்துவிடும்; அல்லது திடீரென்று எப்போதோ பதில் வரும்.
இவர் இயற்றிய உள்ளது நாற்பதுஎன்ற நூல் அத்வைத சாரத்தை அப்படியே தருவது. ரமணர் திருவண்ணாமலை வாச ஆரம்ப காலங்களில் எழுதிய நான் யார்என்பதும் இதே பொருளை ஒட்டியது. அதில் நிறைய சம்ஸ்க்ருத பதங்கள் விரவி இருக்கும். ஆனால் இதில் தமிழ் பதங்களே உள்ளன. எளிய நடை. ஆனாலும் ஆழ்ந்து பார்த்தால் மட்டுமே உட் பொருள் புரிய வரும். இதை வரும் காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பார்க்கலாம்.
இதற்கு இன்னொரு சிறப்பு உண்டு. போன நூற்றாண்டின்  பெரும்பாலான ஆன்மீக நூல்கள் சம்ஸ்க்ருத மூலமும் பின்னர் தமிழாக்கமும் கொண்டு இருக்கையில் இது மட்டும் தமிழில் முதலில் உருவாயிற்று.
அவ்வப்போது பக்தர்கள் தாம் படித்து வரும் ஒரு நூலை பகவானிடம் காட்டி அது என்ன சொல்லுகிறது என்று சுருக்கமாக எழுதித்தரும் படி கேட்பார்கள். பகவான் அதை ஒரு பாடல் வடிவிலே எழுதித்தருவார். அவர்களும் அதை மகிழ்வுடன் பெற்றுச்செல்வர். சிலர் கோரிக்கையை ஏற்று தனிப்பாடல்களும் எழுதித்தருவது உண்டு. இவற்றை யாரும் கேட்டு வாங்கி தொகுத்தது கிடையாது. முருகனார் இதை செய்ய நினைத்து சேகரிக்க ஆரம்பித்தார். இப்படி எழுதியவை எத்தனையொ என்றே பகவான் சொல்லி இருக்கிறார். இருந்தாலும் 21 பாடல்கள் மட்டுமே கிடைத்தன. அதிலும் ஒவ்வொன்றும் பக்தரின் மனநிலைக்கு ஏற்ப எழுதியதாக இருந்ததால் அவற்றை ஒன்றாகும் போது கருத்து ஒத்து இயைந்து போகவில்லை. ஒரு நாள் பகவானிடம் நேரம் பார்த்து “சங்க இலக்கியங்களில் இனியன நாற்பது, இன்னா நாற்பது, கார் நாற்பது என்பது போல இந்த பாடல்கள் மொத்தம் 40 வருவது போல புதிய பாடல்களை பகவான் ஆக்கிக்கொடுத்தால் உலகத்துக்கு ப்ரயோஜனமாக இருக்கும். பகவான் நாங்கள் உய்யும் பொருட்டு உபதேசம் அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டதற்கு இணங்கி இது எழுதப்பட்டது. அவ்வப்போது பாடல்கள் எழுதி பகவான் கொடுக்க முருகனார் தொகுத்தார். ஆனால் புதியதாக எழுதியவற்றுடன் இயைந்து போகாத பழைய பாடல்களை தொகுப்பில் இருந்து நீக்க நேரிட்டது. மேலும் வேறு பாவினத்தை சேர்ந்தவையையும் நீக்க வேண்டி இருந்தது. இப்படியாக கடைசியில் அந்த 21 பாடல்களுமே நீக்கப்பட்டுவிட்டன! இறுதியாக ஒரு மங்கல பாடலும் 40 பாடல்களும் கொண்ட தொகுப்பு உருவாயிற்று. இதை ஸ்ரீ காவ்ய கண்ட கனபதி முனிவரிடம் காட்டினார்கள். அவர் இதில் நாம ரூப உபாசனை குறித்து ஒன்றும் இல்லை என கவனித்தார். (எப்படி இருக்க முடியும்!!?) மங்கல பாடலாக ஏதேனும் ஒரு தெய்வத்தை போற்றுவதாக இருக்க வேண்டுமே என்று சொல்லி, “மரணபயம் மிக்குஉளஅம் மக்கள் அரணாக மரணபவம் இல்லா மகேசன்” என்று தொடங்கும் பாடலில் மகேசன் எனும் ஈ ஶ்வர சப்தம் இருப்பதை கண்டு அதை கூடுதல் மங்கல பாடலாக வைக்கச் சொன்னார். இப்போது நாற்பதுக்கு ஒன்று குறைவாக இருப்பதால் பகவான் “தன்னையழித்து” என்ற பாடல் எழுதிச் சேர்த்தார். 1928 ஆகஸ்டில் இது இறுதி வடிவம் பெற்றது. அது 1931 இல் முதல் பதிப்பாக வெளியாயிற்று.
நீக்கப்பட்ட 21 பாடல்களுக்கு மேலும் பாடல்கள் இயற்றப்பட்டு உள்ளது நாற்பது அனுபந்தம் என்ற பெயரில் பின்னர் வெளியாயிற்று.
நாளை முதல் உள்ளது நாற்பது பதிவு பெறும்.