Pages

Friday, September 5, 2014

எல்லாமே தப்பாக போகும்போது.....


வாழ்கை அதிசயமானது. அடுத்த அதிர்ச்சி எங்கிருந்து எப்போது வரும் என்று யாருமே சொல்ல முடியாது.  அடுத்து என்ன நடக்கபோகிறது என்று யாருமே நிச்சயமாக சொல்ல முடியாது! நாம் நினைத்ததெல்லாம் நினைத்தபடியே நடக்கும் என்றும் சொல்ல முடியாது. (நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நடப்பதையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை! அருமையான திரைப்பாடல்!) உண்மையில் நாம் திட்டமிட்டபடி எப்போதுமே நடப்பதில்லை. ஒரு சின்ன மாற்றமாவது இருக்கிறது. அது பெரிய விளைவை ஏற்படுத்தாதபோது நாம் அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறோம்! இருந்தாலும் எப்போதுமே நாம் நினைத்தபடி எல்லாம் நடக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மட்டும் போவதில்லை. அப்படி நடக்காத போது உணர்ச்சிவசப்படுகிறோம்! சின்ன வருத்தத்தில் இருந்து கடும் கோபம் வரை எது வேண்டுமானாலும் ஏற்படுகிறது.

என்ன செய்யப்போகிறோம்?
உடனடியாக செய்யக்கூடியது என்ன? நீண்ட கால திட்டமாக செய்யக்கூடியது என்ன?

உதாரணமாக ஒருவரை ஒரு வேலையை செய்யச்சொல்கிறோம். ஆபீஸ் என்று வைத்துக்கொள்வோம். முக்கியமான வேலை ஒன்றை ஒரு நபரிடம் ஒப்படைக்கிறோம். இதற்கு 2 மணி நேரம் ஆகும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இரண்டு மணி நேரத்தில் அது முடிந்து நம்மிடம் வந்து சேரவில்லை. என்னடா ஆச்சு என்று போய் பார்த்தால் ஆசாமி காபி சாப்பிட்டுக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டு இருக்கிறார். நமக்கு கோபம் மேலிடுகிறது. உடனே அவரை திட்டுகிறோம்.

என்னவெல்லாம் நடந்து இருக்கலாம்?

வேலையை ஒப்படைத்த போது அது முக்கியம், அவசரம் என்று சொன்னோமா? இல்லை என்றால் தப்பு நம்முடையது.

வேலையை கொடுக்கும்போது நம் மனநிலை என்ன? இரண்டு அது முடிந்துவிடும் என்று நினைத்திருந்தால் தப்பு நம்முடையது. அது இரண்டு மணி நேரத்தில் முடியும் சாத்தியக்கூறுகள்தான் இருந்தது. முடியும் என்று நினைத்தால் அது நம் தவறு.

ஆமாம், முடிந்துவிட்டதா என்று பார்க்கப்போன போது முடிந்துவிட்டதா என்று ஏன் கேட்கவில்லை? அதை முடித்து அவர் போக வேண்டிய இடத்துக்கு அனுப்பி இருக்கலாம். அல்லது வேலை கடினமானதாக இருக்கலாம். அதை எப்படி செய்வது என்று அவர் மற்றவர்களுடன் காபி குடித்துகொண்டு விவாதித்து கொண்டு இருக்கலாம்!
அவசரப்பட்டுக்கொண்டு தீர விசாரிக்காமல் ஒரு முடிவுக்கு நாம் வந்துவிட்டோமோ!

சரி ஒரு வேளை தவறு நம்முடையது இல்லை என்றால் என்ன செய்யலாம்?

இப்போதைக்கு செய்யக்கூடியது? ஏன்முடிக்க முடியவில்லை என்று விசாரித்து அவரால் முடியாது என்றால் வேறு ஒருவருக்கு கொடுக்கலாம். தாமதமானதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்கலாம். உதாரணமாக க்ளையண்டுக்கு தாமதமாகும் என்பதை தெரிவித்து சமாதானமும் சொல்லலாம். அதை விட்டு கோபத்தில் கத்தினால் மற்றவர்களும் மூட் அவுட் ஆகிவிடுவார்கள். சம்பந்தப்பட்ட நபரும் அவமானப்படுவார். மொத்தத்தில் நல்லது நடக்காது.

நீண்ட கால நடவடிக்கையாக இதில் செய்ய வேண்டியது?

விசாரித்ததில் இந்த நபர் இந்த மாதிரி வேலைகளை திறம்பட செய்ய முடியாது எனில் வேறு மாதிரி வேலை கொடுப்பதா; செய்ய முடியும் என்றால் ஊக்குவிப்பதா; அக்கறை இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதா அல்லது வேலையை விட்டு நீக்குவதா என்பதை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.


No comments: