Pages

Saturday, January 11, 2014

"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க"


போன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. குறிப்பா கணவன் மனைவி இடையிலே இருக்கும் எதிர்பார்ப்புகள் அவை பொய்த்து போகும் போது உண்டாகிற மன வருத்தம், அழுத்தம்..... கடேசில அதனால எதிர் பார்ப்பு இல்லாம இருங்கன்னு முடிச்சாங்க.
வழக்கம் போல நம்ம கோளாறான சிந்தனை ஆரம்பிச்சுடுத்து. இது சரியா? (ஸ்டேட்மேன்ட் ஐ சொன்னேன், சிந்தனையை இல்லே!)
எதிர்பார்ப்பு இல்லாம செயல்கள் நடக்கறது அபூர்வம். அப்படி செய்யறவர் யாரானா ஞானியா இருக்கணும்! அவருக்குத்தான் சங்கல்பம் எதுவும் இராது.
மனிதர்கள் ஆனா நமக்கு சாதாரணமா சங்கல்பம் இருக்கவே இருக்கும். சங்கல்பம்ன்னா எதோ பெரிய விஷயம் இல்லை. இப்படி இதை செய்யனும்ன்னு ஒரு நினைப்பு. இப்படி இதை எதுக்கு செய்யனும்? எதோ நடக்கணும் ன்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதுக்குத்தான்.
இந்த இப்படித்தான் நடக்கணும் என்கிற எதிர்பார்ப்பைத்தான் பகவான் கிருஷ்ணன் வேண்டாண்டா ன்னு அர்ஜுனனுக்கு சொன்னான். எதிர்பார்ப்பே வேண்டாம் ன்னு சொல்லலை.
எதிர்பார்ப்பு இல்லாமல் அநேகமா எந்த செயலும் இல்லை. பசிக்கிறது; சாப்பிட்டால் பசி தீரும் ன்னு எதிர்பார்த்து சாப்பிடுகிறோம். தாகம் எடுக்கிறது; தண்ணீர் குடிச்சா அது தீரும் ன்னு எதிர்பார்த்து தண்ணீர் குடிக்கிறோம். இதுப்போலத்தான் பலதும். என்ன, எதிர்பார்ப்பு பெரிசா இருக்கலாம் அல்லது சின்னதா இருக்கலாம். அவளோதான் வித்தியாசம்.
எந்த காரியம் நம்மைத்தவிர மற்றவர்களை அதிகம் நம்பி இல்லையோ அது நடக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம். அப்ப கூட எதிர்பார்த்தபடியே நடக்கும்ன்னு சொல்ல முடியாது.
ரிசல்ட் நம்ம எதிர்பார்ப்புக்கு குறைவாக இருக்கலாம்; அதிகமாக இருக்கலாம்; வேறு மாதிரி இருக்கலாம். இல்லை எதிர்பார்த்தது போலவே இருக்கலாம்.
இப்ப பக்கத்து ஊருக்கு போய் ஒத்தரை சந்திக்க ஆசை இருக்கு. நினைச்சது போல போய் சந்திக்கலாம். போகிற வழியில பஸ் லேட், ரோட் ரோக்கோ, ஆட்டோ கிடைக்கலை என்கிற ரீதியில பல பிரச்சினைகளை சந்திச்சு இந்த காரியம் முடியலாம். இல்லை வெகு சுலபமா பஸ் ஸ்டேன்ட் போகிற வழியில் நண்பர் ஒருத்தர் எங்க போறீங்கன்னு கேட்டு, அட நானும் அது பக்கத்தில்தான் போறேன் வாங்க ன்னு கார்ல கொண்டு விடலாம். அல்லது கிளம்பும்போது சந்திக்க போகிற நபர் வெளியூர் போயிருக்கிறதா தகவல் வந்து நாம் போகாம இருக்கலாம். இப்படி ஏராளமான பாசிபிலிடி இருக்கு. இதுல எது வேணுமானாலும் நடக்கலாம்.
இப்படி உத்தேசிச்சது எப்படி நடந்தாலும் "சரி, ரைட், அடுத்து" ன்னு ஏத்துக்கிற மனப்பான்மைதான் முக்கியம்.
ஆசையையும் எதிர்பார்ப்பையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. லட்டு திங்கணும் என்கிறது ஆசை. திங்க லட்டு கிடைக்குமா என்கிறது பாசிபிலிடி. தோசை டிபனா இருக்கணும் என்கிறது ஆசை. அது தோசையா உப்புமாவா என்கிறது அவரவர் கொடுப்பினை! ஆசை நிராசையா ஆகும் போது மனசை கையாளவும் கத்துக்கணும்!
இறங்குகிற காரியம் நிறைவேறும் வாய்ப்பு 90%, 20 % 50% என்றெல்லாம் ஒரு கணக்கு போடுவதுதான் எதிர்பார்ப்பு. அது பொய்க்கலாம் நிறைவேறலாம் சொல்ல முடியாது. அனுபவத்தில் இந்த கணிப்பு இன்னும் சரியாக வரும் வாய்ப்பு அதிகம்.
அதனால எதிர்பார்ப்பு இல்லாம இருக்கத் தேவை இல்லை. எதிர்பார்ப்பு சரியாக இருக்கணும்! தப்பான கணிப்புதான் துன்பத்தை கொடுக்கும்; பிரச்சினைகளை உண்டு பண்ணும்! சரியான கணிப்போ அல்லது ரிசல்ட்டை எதானாலும் ஏத்துக்கிற பக்குவமோ இருந்துட்டா வாழ்கை சொர்க்கம்!
எதிர்பார்ப்பே இல்லாதவருக்கு என் நமஸ்காரங்கள்! :-)))



No comments: