Pages

Thursday, September 12, 2013

அனந்தப்பள்ளி அன்னதானம்....


 "ஆமாம், அது என்ன பெரியவா ஈஸ்வரனின் பூர்ணாவதாரம் என்றீர்கள்?” என்று கேட்க அடுத்த கதை வந்தது!......
--
இந்த கதையை சொல்லறத்துக்கு முன்னே மஹாபாரதக்கதை ஒண்ணை நினைவு படுத்தினா நல்லா இருக்கும்!
மஹா கோபியான துர்வாசர் தன் சிஷ்யர்கள் சிலருடன் திருதராஷ்ட்ரன் அரண்மனைக்கு விஜயம் செய்தார். திருதராஷ்ட்ரன் முறை படி அவரை வரவேற்றான். தன் மகன் துரியோதனை அழைத்து "அப்பா, இவரை நன்றாக கவனித்துக்கொள். இவர் ஆசீர்வாதம் செய்துவிட்டால் எப்பவுமே உனக்குத்தான் வெற்றி” என்றான்.
துரியோதனுக்கு இது பிடிக்கவில்லை. இருந்தாலும் அவரை உபசரித்தான். ஆனால் துர்வாசர் மகிழ்ந்ததாக தோன்றவில்லை.

தன் மாமா சகுனியிடம் இப்படி தெருவில் போகிறவர்களையும் காட்டுவாசிகளையும் உபசரிக்கும் நிலைக்கு வந்துவிட்டேனே என்று துரியோதன் புலம்பினான். சகுனி "டேய் கவலைப்படாதே! இதையே நமக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ளலாம். நான் சொல்கிறபடி செய். துர்வாசரை வழி அனுப்பும் போது நைச்சியமாக பேசி அவரை காட்டில் வசிக்கும் பாண்டவர்களிடம் அனுப்பிவிடு. அவருடைய ஆசீர்வாதங்கள் பலிக்குமோ என்னவோ, அவருடைய சாபம் ஒரு வழியாக்கிவிடும். இங்கேயே ராஜோபசாரங்களால் திருப்தி அடையாதவர் அங்கே காட்டில் பாண்டவர்கள் செய்யக்கூடிய சிறு உபசாரத்தால் எப்படி திருப்தி அடைவார்? சாபம் கொடுப்பார். நமக்கு நல்லது!” என்றான்.

துரியோதனன் அதே போல துர்வாசர் கிளம்பும் போது அவரை நமஸ்கரித்து, “ஸ்வாமி, எனக்கு கிடைத்த இதே பாக்கியம் என் சகோதரர்களுக்கும் கிடைக்க வேண்டும். காட்டில் வசிக்கும் பாண்டவர்களிடம் சென்று அவர்களது உபசாரத்தையும் தாங்கள் ஏற்க வேண்டும் ” என்று வேண்டிக்கொண்டான். துர்வாசருக்கும் பாண்டவர்களை காண வேண்டும் என்று தோன்றியதால் அவரும் பாண்டவர்களைத் தேடிக்கிளம்பினார். காட்டில் அவர்களை ஒரு நடுப்பகல் தாண்டிய நேரத்தில் கண்டுபிடித்தார். பாண்டவர்கள் அவரை வரவேற்று உபசரித்தனர். பக்கத்தில் நதியில் நீராடி வருகிறோம். உணவு தயாராகட்டும் என்று சொல்லி அனைவரும் நீராடச்சென்றனர். பாண்டவர்கள் திகைத்தனர். சூரியன் கொடுத்த பாத்திரத்தில் இருந்து தினசரி உணவு எடுத்து இருக்கும் அனைவருக்கும் பரிமாறிவிட்டு கழுவி வைத்துவிட்டால் அடுத்த நாள்தான் உணவு கிடைக்கும்
 
ஆபத்து வந்தால்தானே நாம் கடவுளை நினைக்கிறோம்! த்ரௌபதி க்ருஷ்ணனை வேண்டினாள்! கண்ணா, இது என்ன சோதனை! எல்லாருக்கும் உணவிட்டுவிட்டு பாத்திரத்தை கழுவி வைத்துவிட்டேனே! இப்போது திடீரென்றூ உணவு தயாரிக்க என்ன செய்வேன்? எங்கே போவேன். முனிவர் வேறு மஹா கோபிஷ்ட்டராயிற்றே! நீதான் காப்பாற்ற வேண்டும்!
உடனே அங்கே க்ருஷ்ணன் வந்து சேர்ந்தான்.

இப்போதுதான் உன்னை நினைத்தேன். ஒரு விஷயம்!
உன் விஷயம் எல்லாம் அப்புறம் ஆகட்டும். இப்போது எனக்கு மஹா பசி. உணவிடு!
ஹா! கண்ணா நீயுமா என்னை சோதிப்பாய்?
என்ன சோதனை? அதெல்லாம் ஒன்றுமில்லை. சாப்பாடு போடு.
அதைத்தான் சொல்கிறேன். உணவு பாத்திரம் காலி.
பரவாயில்லை இருப்பதை சாப்பிடுகிறேன்.
பாத்திரத்தை கழுவி வைத்துவிட்டேனே!
பரவாயில்லை அதை இங்கே கொண்டு வா!

பாத்திரத்தில் ஒரு மூலையில் ஒரே ஒரு பருக்கை சாதமும் கீரையும் ஒட்டிக்கொண்டு இருந்தது. த்ரௌபதி தலை குனிந்தாள்!
க்ருஷ்ணன் பருக்கையை எடுத்து உண்டான், தண்ணீர் குடித்தான் ஏதோ பெரிய விருந்து சாப்பிடது போல ஏப்பம் விட்டான். சரி சரி, நான் வருகிறேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட்டான்!

நீராடி கடன் முடித்து கரையேறிய துர்வாசர் மற்றும் அவரது சிஷ்யர்களுக்கு திடீரென்று வயிறு நிரம்பிய உணர்வு! இன்னும் ஒரு பருக்கைக்கூட உள்ளே போக முடியாது என்ற நிலை! இப்போது பாண்டவர்கள் உணவிட்டால் அதை எப்படி சாப்பிடுவது? பேசாமல் அவர்கள் கிளம்பி வேறு திசையில் போய்விட்டனர்!
--
ஆந்திராவில் மதனப்பள்ளி என்றொரு ஊர். அக்கம் பக்கம் எல்லாம் மலைவாசிகள், குறவர்கள் வசிக்கும் கிராமங்கள் ஏறத்தாழ 30-40 இருந்தன. அங்கே மஹா பெரியவா கேம்ப். உள்ளூர்வாசிகள் அன்னக்கொடி கட்டி அன்னதானம் செய்து கொண்டு இருந்தனர். அன்னக்கொடி கட்டிவிட்டால் வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அன்னதானம் செய்தே தீர வேண்டும். திடீரென்று ஒரு நாள் இந்த மலைவாசிகளிடம் ஒரு சலசலப்பு. டவுனில் அன்னதானம் செய்கிறார்களாமே! நாமும் போய் விருந்து சாப்பிட்டு வரலாம். காலையில் கிளம்பி ஆங்காங்கே மற்றவர்களையும் கூட்டிக்கொண்டு மதனப்பள்ளியை நோக்கி நடக்கலாயினர். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி சுமார் 200- 250 பேர் அன்னதான கூடத்தை நோக்கிப் போய் கொண்டு இருந்தனர். ஆனால் அங்கேயோ அன்றைய உணவுப்பறிமாறல் முடிந்துவிட்டது. வழக்கமாக இவ்வளவு பேர் என்று ஒரு கணக்கில்தானே சமைப்பார்கள்? இந்த நேரத்தில் இத்தனை மலைவாசிகள் உணவுக்கு வருவதாக தகவல் உணவு கூடத்துக்கு போயிற்று. அங்கே பொறுப்பில் இருந்தவர்கள் கையை பிசைந்தனர். துளிக்கூட மீதி இல்லையே! பாத்திரங்களைக்கூட கழுவி கவிழ்த்தாயிற்று! புதிதாக சமைக்கலாம் என்றால் முகாம் முடியும் தறுவாயாக இருந்ததால் ஸ்டோரும் காலி! என்ன செய்வது? மஹா பெரியவா திருவடிகளே சரணம்!

பிற்பகல் தரிசனம் கொடுத்துக்கொண்டு இருந்த பெரியவா திடீரென்று கார்யஸ்தரை அழைத்தார். “டேய், எனக்கு ரொம்ப பசிக்கறதேடா! ஏதாவது செய்யேன்!” கார்யஸ்தர் திகைத்தார்! பெரியவா இப்பத்தானே பிக்ஷை பண்ணா? அதுக்குள்ள பசிக்கிறதா! என்ன விந்தை இது?
"என்னடா யோசிக்கறே? எனக்கு இப்ப ரொம்ப பசிடா!"
"சாப்பாட்டுக்கடை முடிஞ்சுடுத்தே பெரிவா! இருந்தது எல்லாத்தையும் பறிமாறியாச்சு. மீதி ஒண்ணுமே இல்லையே!"
"சரி சரி, நீ ஒண்ணும் பண்ண மாட்டே. கிடக்கட்டும்."

தரிசனத்துக்கு வந்திருந்தவர்களை ஒரு நோட்டம் விட்டார். பெரும்பாலும் காலையே தரிசனம் செய்தவர்கள். அதனால் புதிதாக அவர்கள் கையில் ஒன்றுமில்லை. ஒருவர் மட்டும் கையில் சிறு பொட்டலம் வத்து இருந்தார். அவரை கிட்டே வரும்படி சைகை செய்தார். அவரும் கிட்டே வந்து தன்னிடமிருந்த பொட்டலத்தை மூங்கில் தட்டில் வைத்து நமஸ்கரித்தார். பெரியவா பொட்டலத்தை பிரிந்தார். உள்ளே கல்கண்டு இருந்தது. அதில் ஒன்றை எடுத்தார். அதையும் கீழே வைத்து கையால் தட்ட அது சுக்கு நூறாகியது. அதில் ஒரு சின்ன துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். கமண்டலத்தில் இருந்த நீரை ஒரு உத்தரணி அளவு வாயில் விட்டுக்கொண்டார். அடுத்து ஒரு பெரிய ஏப்பம் விட்டார்!

அப்பாடா! இப்பத்தான் பசி அடங்கித்து என்றார்! கல்கண்டு கொண்டு வந்தவரைப்பார்த்து நீ இன்னிக்கு மகத்தான தொண்டு செஞ்சிருக்கே! ஒரு இருநூறு பேருக்கு அன்னதானம் பண்ணிட்டே! என்றார்!

அன்னதான மண்டபத்தை நெருங்கிக்கொண்டு இருந்தது மலை வாசிகள் கூட்டம். ஆச்சு, இதோ இந்த மூலை திரும்பினால் மண்டபம் இருக்கு இடம் வந்துவிடும்.
திடீரென்று அவர்கள் எல்லாருக்கும் வயிறு நிரம்பிய உணர்வு! இன்னும் ஒரு பருக்கைக்கூட உள்ளே போக முடியாது என்ற நிலை! ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். இப்ப சாப்பிட முடியாது போலிருக்கே! ஆமாம் இன்னொரு நாள் வந்து பார்த்துக்கொள்ளலாம். கூட்டம் அப்படியே ஊரை சுற்றி வேடிக்கை பார்த்துவிட்டு கிராமத்துக்கு திரும்ப கிளம்பிவிட்டது!
 

No comments: