Pages

Friday, May 10, 2013

ரமணர் - கோதுமை சாதம்



கோதுமை ஆஹாரம் சாப்பிட்டால் பகவான் உடம்புக்கு நல்லதென்று பகவானுடைய டாக்டர் அபிப்ராயப்பட்டார். ஆசிரம நிர்வாகிகளுக்கும் இதை தெரிவித்தார். அவர்கள் பகவானை அணுகி கோதுமை பூரி செய்யலாமா என்று கேட்டார்கள். பகவான் "எதுக்கய்யா அவ்வளவு நெய் (?எண்ணை) செலவழித்து பூரி?” என்றார். நிர்வாகிகள் "செலவுக்கென்ன? டாக்டர் நல்லது என்று அபிப்ராயப்படுகிறார்; செய்கிறோம்" என்றார்கள். “சரிதான்! நீங்கள் ஒன்றும் பண்ண வேண்டாம். இந்த டாக்டர் கோதுமை நல்லது என்கிறார். அந்த டாக்டரோ கெடுதல் சாப்பிடக்கூடாது என்கிறார். அவரும் பெரிய டாக்டர். அவர் பெர்மிஷன் வேண்டாமா? நமக்கென்ன ஸ்வதந்தரமா என்ன? அந்த டாக்டரை கேளுங்கோ முதலில்” என்றார்.
பக்தர்கள் எல்லாம் யார் அந்த இன்னொரு டாக்டர் என்று திகைத்தார்கள். விசாரித்ததில் ஸ்டோர் ரூம் கைங்கர்யம் செய்யும் சுப்ரமண்ய முதலியார்தான் அது என்று தெரிய வந்தது. ரேஷனில் கோதுமை ஒரு பங்கு கொடுத்து வந்ததால், கோதுமை சாதம் சமைத்து எல்லாருக்கும் கோதுமை சாதம் பாதி, அரிசி சாதம் பாதி என்று பறிமாறி வந்ததில் பகவான் தனக்கு கோதுமை சாதம் மட்டுமே போடும் படி சொன்னாராம். 4-5 நாட்கள் போன பின் முதலியார் பகவானிடம், “இது சூடு. உங்களுக்கு ஆகாது" என்று சொல்லியும் பகவான் ஒப்புக்கொள்ளவில்லை. பந்திக்கு வந்தால்தானே பகவான் கோதுமை சாதம் போடச்சொல்கிறார் என்று நினைத்து அதை வேலைக்காரர்களுக்கு மட்டும் போட்டுவந்தார்களாம்.
டாக்டர் முதலியாரை அழைத்து, “என்னய்யா? பகவான் உடம்புக்கு கோதுமை சரிப்படாது என்றாயாமே? பகவான் உன் பர்மிஷன் வேண்டும் என்று சொல்கிறார்! ஏன் அப்படிச்சொன்னாய்?” என்று கேட்டார்.
முதலியார் தடுமாற்றத்துடன், "அந்த கோதுமை ஒரே புழுவாக இருந்தது. அதனால்தான் அப்படிச்சொன்னேன். பகவானுக்கு தெரிந்தால் அதை தனக்கு மட்டுமே போட வேண்டும் என்று சொல்வார். என்ன பண்ணுவது? அதை கூலியாட்களுக்கு போட்டு தீர்க்க வேண்டி இருந்தது. அதனால் அப்படிச்சொன்னேன்" என்றார்.
 பகவான் திரும்பி வந்து சோபாவில் அமர்ந்த போது அவருக்கு இது தெரிய வந்தது. அவர் புன் சிரிப்புடன் குத்தலாக "ஓஹோ நல்ல காரியம் செய்து இருக்கிறான்! நல்லதை எல்லாம் நாம் சாப்பிட வேணும்; புழுத்ததை எல்லாம் கூலிக்காரர்களுக்கு போட வேணும்! இப்படிச் செய்ததாக தெரிந்தால் பகவான் சந்தோஷப்படுவார் என்பது இவர்கள் நினைப்பு! இதை விட என்ன அவமானம் வேணும்? போறும் போறும்! பூரி எல்லாம் வேண்டாம். அதை கூலிக்காரர்களுக்கு கொடுங்கள். அவர்கள் சாப்பிட்டால் நான் சாப்பிட்டதாகாதா ?” என்றார்.

 

No comments: