Pages

Friday, May 17, 2013

ரமணர் -ஸ்துதியும் நிந்தையும்...


சில பக்தர்கள் எங்கிருந்தோ ஆச்ரமத்துக்கு வந்தார்கள். எல்லாரும் ஸ்நான பானாதிகளை முடித்துக்கொண்டு வந்தார்கள். ஒரு பெரிய தட்டில் பக்ஷணங்கள், பழங்கள் எல்லாம் வைத்து பகவான் சந்நிதியில் வைத்து நமஸ்கரித்து உட்கார்ந்தார்கள். சற்று நேரம் கழித்து எல்லாரும் கோவிலுக்கு போய் வருவதாக சொல்லி எழுந்தார்கள்.  
அவர்களில் ஒருவர் கைகளை கூப்பி, “ஸ்வாமி நான் ஒரு காரியம் தொடங்கும் முன் பகவானைப் ப்ரார்த்தித்துக்கொண்டேன். தங்கள் அனுக்ரஹத்தினால் அது கை கூடியது. என் முன்னேற்றத்துக்கு தங்கள் அனுக்ரஹம்தான் காரணம்” என்று ஒரு நாழிகை புகழ்ந்து பேசிவிட்டு சென்றார்.
அவர் எதையோ நினைத்துக்கொண்டாராம். அவர் கர்மாவைப்பொருத்து அது பலித்தது! அது பகவான் அனுக்ரஹத்தினால் நடந்ததாக ஸ்தோத்ரம் பண்ணினார். இன்னொருவர் நினைப்பது அவரது கர்மா காரணத்தினாலே நடப்பதில்லை. அவர் பகவான் அனுக்ரஹம் செய்யவில்லை, என்ன பிரயோஜம் என்று நொந்துக்கொள்கிறார். இது (ஸ்துதி) வந்தாற்போலதான் அதுவும் (நிந்தை) வருகிறது. இரண்டையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டியதுதான்” என்றார் பகவான்.
அதற்கு எடுத்துக்காட்டுவது போல ஒரு நிகழ்ச்சி நடந்தது. யாரோ துஷ்டர்கள் பகவானை நிந்தித்து எழுதிய கடிதம் ஒன்று வந்தது. ஆச்ரமத்தார் மத்தியான ஓய்வு நேரத்தில் அதை பகவானுக்கு படித்துக்காட்டினார்களாம். மூன்று மணி போல முருகனார், விஸ்வநாத ப்ரம்ஹச்சாரி ஆகிய பக்தர்கள் வந்த பின் பகவான் அந்த கடித்த்தைப்பற்றி சொல்லி சிரித்து "என்ன ஓய், வெங்கட்ரத்தினம், ஆபீஸுக்குப்போய் அந்த கடிதத்தை கொண்டு வாருமேன்! இவர்களில் யாராவது படித்து எல்லாரும் கேட்கட்டும்” என்றார்.
"ஓ அது எதற்கு?” என்றூ வெங்கட்ரத்தினம் சொல்லிவிட்டு போகாமலே இருந்தார்.
"எதற்கா? நீங்கள் எல்லோரும் ஸ்வாமி ஸ்வாமி என்று பெரியதாக சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களே, அந்த கடிதத்தை பார்த்தால், நம் ஸ்வாமித்வம் எல்லாம் தெரியும். போய்க்கொண்டு வா. எல்லோரும் பார்க்கட்டும்” என்றார்.
வெங்கட்ரத்தினம் நகரவில்லை.
பகவான் அவரைப்பார்த்து, “என்ன? யாராவது பகவானைப்பற்றி அப்படிப்பட்டவர் இப்படிப்பட்டவர் என்று புகழ்ந்து பெரிதாக ஸ்தோத்ரம் பண்ணி எழுதினால் கொண்டு வந்து எல்லாரும் கேட்க பத்து பேரை படிக்க வைக்கிறாயே? இதை ஏன் கொண்டு வந்து படிக்க வைக்க மாட்டேன் என்கிறாய்? ” என்று கேட்டு பக்தர்களிடம் "பார்த்தீர்களா இவன் சேட்டையை?” என்றார்.
"அதை ஏன் படிக்க வேண்டும் என்றார் முருகனார்.
"ஓஹோ! அதுவா சமாசாரம். எல்லாரும் முன்னேயே கலந்து பேசிக்கொண்டாற்போல் இருக்கிறது. போகட்டும் நமக்கென்ன?” என்று சொல்லி மந்தஹாஸத்துடன் மௌனமானார் பகவான்.
 

No comments: