Pages

Saturday, May 25, 2013

ரமணர் சொன்ன அஷ்டாவக்ர கீதை கதை -3



சூர்யாஸ்தமனம் ஆயிற்று. ராஜா திரும்பி வரவில்லையே என்று மந்திரி ப்ரதானிகள் கவலையடைந்து காட்டிற்கு வந்து பார்த்தால் பல்லக்கு இருந்ததே தவிர அஷ்டாவக்கிரரை காணவில்லை. ராஜா அசையாமல் சிலை போல நின்று கொண்டிருந்தார். எல்லாரும் பயந்து போய் நின்றார்கள். முக்ய மந்திரி அருகில் போய், 'பிரபு இந்த நிலைக்கு காரணமென்ன?' என்று கேட்டார். ராஜா பதில் சொல்லவில்லை. முனிவர்தான் ஏதோ மந்திரம் போட்டுவிட்டார் என்று நினைத்து முனிவரை தேடினார்கள்; கிடைக்கவில்லை. வேறு வழியின்றி ராஜாவை பல்லக்கில் இட்டு அரண்மனைக்கு எடுத்துச்சென்று கட்டிலில் படுக்க வைத்தார்கள். அவர்கள் படுக்க வைத்தபடியே ராஜா சலனமற்று இருந்துவிட்டார். அநேக சேவகர்களை அழைத்து எப்படியாவது முனிவரை தேடி அழைத்து வர வேண்டுமென்றும் அவர் இல்லாமல் திரும்பக்கூடாது என்று கடுமையாக உத்தரவிட்டு அனுப்பினார்கள்.

ஜனகர் ஆகாரம்தான் உட்கொள்ளவில்லை என்றால் பேச்சும் இல்லை. ஜலம் வாயில் இட்டாலும் விழுங்கவில்லை. இந்நிலையை கண்டு மஹாராணி மற்றும் ராஜ வம்சத்தினர் மற்றும் பரிவாரங்கள் துக்கத்தில் ஆழ்ந்தார்கள். விஷயம் எங்கும் பரவி விட்டது. பிரஜைகள் கலங்கினார்கள். சூரியோதமான பிறகு கூட ராஜா எழுந்திருக்கவில்லை. முனிவரும் வரவில்லை. சூரியம் அஸ்தமனம் ஆகும் போது ஒரு சேவகன் அஷ்டாவக்கிரரை பல்லக்கில் ஏற்றி அழைத்து வந்தான்.

அவரை பார்த்தவுடன் மந்திரிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஆனால் காரியம் கெட்டுவிடுமோ என்ற பயத்தில் கோபத்தை வெளிக்காட்டாமல் ஸ்வாமி 'எங்கள் பிரபுவுக்கு ஏதேனும் மந்திரம் போட்டீர்களா?' என்று விநயத்துடன் கேட்டார்.
'உங்கள் பிரபு மீது மந்திரம் போடுவதால் எனக்கு என்ன லாபம் அப்பா? ருந்தாலும் அதை உங்கள் பிரபுவிடமே கேட்பதுதானே?' என்றார் முனிவர்.
'நாங்கள் பிரபுவிடன் கேட்டாலும் எந்த பதிலுமில்லையே! இரண்டு நாட்களாக அவர் ஜலபானம் கூட செய்யவில்லை. எப்படியாவது ஆகாரம் உட்கொள்ளச்செய்யுங்கள் ஸ்வாமி' என்றார் மந்திரி.'
முனிவர் ராஜாவை நெருங்கி 'ராஜன்!' என்று அழைத்தார்.
'என்ன ஸ்வாமி ஆக்ஞை?' என்று பதில் கொடுத்தார் ஜனகர்.
'உனக்கு நான் என்ன செய்தேன்?'
'ஒன்றும் செய்யவில்லையே! அப்படி யார் சொன்னார்கள்?'
'அது சரி! அதற்கென்ன? நீ எழுந்து ஆகாரம் எடுத்துக்கொள்!'
அரசர் எழுந்து ஆகாரம் உட்கொண்டு மீண்டும் அசைவில்லாமல் உட்கார்ந்துவிட்டார்.
'கருணை கொண்டு எங்கள் பிரபுவை பழைய நிலைக்கு கொண்டு வாருங்கள்' என்று வேண்டிக்கொண்டார் மந்திரி. முனிவர் சரி என்று சொல்லி எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு கதவை சாத்தினார். பின் ஜனகரை நெருங்கி 'ராஜன் ஏன் இப்படி நிச்சலனமாய் இருக்கிறாய்?' என்று கேட்டார்.
 

No comments: