Pages

Monday, March 25, 2013

ரமணர் 5 -ஆன்மீக வழி


 ரமணர் என்றால் படித்த பலருக்கு நினைவு வருவது அவருடைய 'நான் யார்?' என்ற விசாரணைதான். ஆனால் இதை அவர் மெத்த படித்து ஞான விசாரம் செய்பவரிடமே கேட்பார். அவர்கள் இதற்கு ப்ரம்மாஸ்திரம் என்று பெயர் வைத்து இருந்தார்கள்! ஏன் என்றால் ஏதேனும் கேள்வி கேட்டால், இதை கேட்கிறவன் யார்? என்று கேட்பார். அதற்கு அவர்களிடம் விடை இருக்காது. காவ்ய கண்ட கணபதி போன்ற அறிஞர்கள் பகவானிடம் கேள்வி கேட்கும்போது நீங்கள் ப்ரம்மாஸ்திரம் போடவில்லை என்றால் ஒரு கேள்வி கேட்கிறேன் என்றே ஆரம்பிப்பார்களாம்.

பகவான் பலருக்கும் அவரவர் செய்து வரும் சாதனையையே ஊக்குவிப்பார். பகவானே, நான் தினசரி பூஜை செய்து வருகிறேன் என்றால் ஆஹா, அப்படியே செய்து வாருங்கள் என்பார். நான் தினசரி மந்த்ர ஜபம் செய்து வருகிறேன் என்றால் ரொம்ப சந்தோஷம் அப்படியே செய்யுங்கள் என்பார்.
ஒரு நாள் ஒரு வடக்கத்தியர் ஒர் சீட்டெழுதி பகவானிடம் கொடுத்தார். "ஸ்வாமி, எனக்கு ப்ருந்தாவனத்துக்குப்போய் அங்கே க்ருஷ்ணனின் நிஜ ரூபத்தை தரிசித்தால் என் கஷ்டங்களை எல்லாம் தீர்க்கவல்ல சக்தி கிடைக்குமா? அவரை தரிசித்து என் பாரத்தை எல்லாம் அவரிடம் ஒப்படைக்க விரும்புகிறேன்.” என்றார்
பகவான் "அதெற்கென்ன அப்படியே செய்யலாம். அவரைப் பார்த்த பின்பு நம் பாரமெல்லாம் அவர் பொறுப்புதான். இப்பொழுது மட்டும் அந்த கவலை உங்களுக்கு ஏன்? இப்போதே நம் பாரத்தை எல்லாம் அவர் மீது போட்டுவிட்டால் அவரே கவனித்துக்கொள்வார்" என்றார் பகவான். “நான் இப்போது க்ருஷ்ணரின் நிஜ ரூபத்தை தரிசிக்க வேண்டுமென்றால் ப்ருந்தாவனத்துக்கே போய்தான் த்யானம் செய்ய வேண்டுமா? அல்லது எங்கிருந்து தியானித்தாலும் போதுமா" என்றார் அவர்.
"தன்னைத் தான் அறிந்தால் இருக்கிற இடமே ப்ருந்தாவனமாகும். அது எங்கோ இருக்கிறதென்று தேடியோட வேண்டாம். போகத்தான் வேண்டுமென்று தீவிர முனைப்பு இருக்கிறவர்கள் போகலாம். ஆனால் போகாமலிருந்தால் பிரயோஜனமில்லை என்று நினைக்க வேண்டாம்." என்றார் பகவான்.

தற்காலத்தில் பல 'ஆன்மீக வழிகாட்டிகள்' "இப்படி செய்யுங்கள்; இது மட்டுமே பலன் கொடுக்கும்; இதை மட்டுமே செய்யுங்கள்; என் வழியைத்தவிர வேறு ஒன்றும் வேண்டாம்" என்று சொல்லி பலரும் தம் அன்றாட கடமைகளை விடச்செய்து வருகிறார்கள். ஒரு விஷயம் சொல்வதென்றால் கேட்பவர் அதற்கு தகுதி உடையவரா/ அதற்கு மட்டுமே தகுதி உடையவரா என்று தெரிய வேண்டாமா? இவர்களது சிஷ்யகோடிகள் இன்னும் மேலே பல படிகள் போய், கர்மாக்கள் நடக்கும் இடம் போய் "இதெல்லாம் விட்டுவிட்டு நாங்கள் சொல்வதை மட்டும் செய்யுங்கள்; நீங்கள் செய்வது தப்பு!” என்று பிரசாரம் செய்கிறார்கள். இப்படியெல்லாம் இல்லாமல் குருவித்தலையில் பனங்காயை ஏற்றாமல் அல்லது இருக்கிற நிலையில் இருந்து கீழே பிடித்து இழுக்காமல் கருணையுடன் அவரவர் வழியில் செல்ல ஊக்குவித்தவர் பகவான்.

8 comments:

ஸ்வாமி ஓம்கார் said...

ரமணரோ ரமணர்...!

Geetha Sambasivam said...

//தற்காலத்தில் பல 'ஆன்மீக வழிகாட்டிகள்' "இப்படி செய்யுங்கள்; இது மட்டுமே பலன் கொடுக்கும்; இதை மட்டுமே செய்யுங்கள்; என் வழியைத்தவிர வேறு ஒன்றும் வேண்டாம்" என்று சொல்லி பலரும் தம் அன்றாட கடமைகளை விடச்செய்து வருகிறார்கள். ஒரு விஷயம் சொல்வதென்றால் கேட்பவர் அதற்கு தகுதி உடையவரா/ அதற்கு மட்டுமே தகுதி உடையவரா என்று தெரிய வேண்டாமா? இவர்களது சிஷ்யகோடிகள் இன்னும் மேலே பல படிகள் போய், கர்மாக்கள் நடக்கும் இடம் போய் "இதெல்லாம் விட்டுவிட்டு நாங்கள் சொல்வதை மட்டும் செய்யுங்கள்; நீங்கள் செய்வது தப்பு!” என்று பிரசாரம் செய்கிறார்கள்.//

ஆன்மிகத்துக்கு அர்த்தமே இல்லாமல் போயிட்டிருக்கு! :(((((

Unknown said...

அன்புடையீர்,

தங்களது, சந்தியாவந்தனம், காயத்ரி மந்திரம் பற்றிய குறிப்புகள் மிகவும் அருமை.

நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்பு, புதுப்பாளையம்
ராஜகோபால சுவாமி சன்னதியில்,
ஆவணி அவிட்ட நிகழ்ச்சியில் பங்கு கொண்டு அங்கேயே பெரியவர்கள் , மஹனீயர்கள்
உயர்திரு M N கிருஷ்ணமூர்த்தி அவர்கள், உயர்திரு K சீனுவாசன்
போன்ற மறைந்த காபெரியவர்களிடம் ஆசீர்வாதங்கள் வாங்கிய பல இனிய நிகழ்ச்சிகள் எனக்கு ஞாபகம்
வருகின்றது.

அன்னை காயத்ரியை வழிபட்டபோது எனக்கு ஏற்பட்ட சந்தோஷங்கள், அவளை மறந்துபோனதும்
எனக்கு ஏற்பட்ட துயரங்கள் , மீண்டும் அவளை சரணடைந்தவுடன்
துயரங்கள் சந்தோஷமாக மாறிய அனுபவங்களும் எனக்கு ஞாபகம் வருகிறது.

ஆரம்பம் முதல் இன்று வரை தங்களுடைய பதிவுகளை
எல்லாம் , படிக்க இன்றுதான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

தங்களுடைய சிந்தனாற்றல் , பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

வாழ்க வளமுடன்.

அன்புடன்

வெங்கட்ராமன்
பாண்டிச்சேரி
nsv1951@yahoo.com

திவாண்ணா said...

ரமணர் O ரமணர்?

திவாண்ணா said...

ரமணர் O ரமணர்?

திவாண்ணா said...

கீ அக்கா, ஆமாம்!

திவாண்ணா said...

வென்கட் ராம் சார் நமஸ்காரம். நம்ம ஊர் காரரா? முகம் பாத்தா மாதிரிதான் இருக்கு. ஆனா சரியா நினைவு இல்லை. நாம் சந்திச்சு இருக்கோமா?

Unknown said...

எனக்கு கடலூர் சொந்த ஊர். இந்தியன் பேங்க் கடலூரில் 1982 வரை வேலை செய்து , பிறகு
பாண்டிச்சேரி யில் ஓய்வு பெற்று, settle ஆகிவிட்டேன்.
தங்கள் தந்தை கடலூரில் எங்கள் வங்கி வாடிக்கையாளர்.
என் தந்தை "ஸ்ரீவத்ஸன்" என்ற பெயரில் அந்த காலத்தில் சிறுகதை எழுதிவந்தார். அவர் கோர்ட்டில் வேலை செய்துவந்தார்.
திரு MNK, டாக்டர் நாராயணன் எங்கள்
தூரத்து உறவினர்கள்.

தங்களை கணேஷ் எலெக்ட்ரிகல்ஸ் ,
கடையில் , அண்ணா லக்ஷ்மி நாராயணனுடன் பார்த்திருக்கிறேன். பழக்கம் இல்லை.
தங்களைப் பற்றி லக்ஷ்மி அண்ணா சொல்லியிருக்கிறார்.

anbudan

venkatraman