Pages

Friday, December 14, 2012

என் உலகம் என் கையிலா? 2


பாவம், அவங்களுக்கு ஏன் எரிச்சல் நாம் கொடுக்கணும்ன்னு சில நல்லவங்க கேள்வி! நல்லா இருங்கப்பா!
இப்படி செய்யத்தான் பதஞ்சலி சொல்றார்

எப்படி இருந்தாலும் உதாசீனம் என்கிறது ஒரு மிக சக்தி வாய்ந்த ஆயுதம்
நம்பிக்கை வரலை சிலருக்கு! இல்லையா?
தினசரி வாழ்கையில இருந்து ஒரு உதாரணம் பார்க்கலாம். குழந்தை விளையாடிக்கொண்டு இருக்கு. அப்பா கூப்பிடறார். இனியா, நீ தனியா என்ன விளையாடுற? ஸ்கூலுக்கு நேரமாச்சு கிளம்பு! (இனியன் யார் பையன்பா? ஓ குசும்பர் பையனா? ச்சும்மா ஒரு எகன மொகன க்கு போட்டது, மன்னிச்சூ!)
இப்ப அப்பா கூப்பிடறதை கேட்டு பையன் வந்துட்டா ஒண்ணும் பிரச்சினை இல்லே. அப்படி இல்லாம, பதிலே சொல்லாம, விளையாடிகிட்டே இருந்தா எரிச்சல் வருமா வராதா? ஹா! அதான் விஷயம். இன்னிக்கு வெள்ளிக்கிழமைப்பா, ஸ்கூல் லீவுன்னு பல்பு கொடுத்தாக்கூட பரவாயில்லை. பிரச்சினை வராது. இதோ வரேன், வர மாட்டேன் போ எல்லாம் கூட ஓகே. அது அடுத்து உரையாடலை தொடரும்.

உதாசீனம்தான் எதிராளிக்கு இன்னும் எரிச்சல் மூட்டிவிடுவது. சூடான பதில் இல்லை. சூடான பதில் இருந்தா பின்னால் வாக்குவாதம் வரும். அதானே எதிராளி எதிர்பார்க்கிறது? அப்படி இல்லாம அவங்களை கடுப்பேத்தறதுக்கு உதாசீனம்தான் வழி.
(மேலே சொன்ன உதாரணத்தோட இன்னொரு வடிவம்தான் தன்னை போதுமான அளவு கவனிக்காத பெற்றோரை குழந்தைகள் அவங்களுக்கு பிடிக்காததை செய்து கவனத்தை ஈர்ப்பது. டீப் சைக்காலஜி சமாசாரம். இப்ப அதுக்கு போக வேண்டாம்.)

ஒரு சின்ன உதாரணத்தைத்தான் பார்த்தோம். நாம் எப்படி இருக்கப்போகிறோம் என்பது நம்மகிட்டத்தான் உண்மையில இருக்கு. இதைத்தான் சொல்ல வரேன்.
ஆகவே நமக்கு ஆளுமையில இருக்கிற பல விஷயங்களை நாமே தீர்மானிக்கலாம். தெய்வாதீனமா இருக்கற விஷயங்களில நாம் அதிகமா ஒண்ணும் செய்ய முடியாது. ப்ரார்த்தனை செய்யலாம். சில கர்மாக்களை செய்யலாம்.
மற்ற விஷயங்களில பலதும் நம்ம ஆதீனத்தில இருக்கு என்பதை நாம புரிஞ்சுக்கலை என்பதே காட்ட நினைக்கும் விஷயம்.
நிறைய பேருக்கு நிதானமா யோசிச்சு செயல்படுகிற பழக்கம் இல்லை. பெரும்பாலும் ஒரு ரிஃப்லெக்ஸாத்தான் செயல்படுகிறோம். இன்ன இன்ன செயலுக்கு இன்ன இன்ன எதிர்வினைன்னு சார்ட் போட்டு வெச்சிருக்கோம். அப்படி ஏன் வந்ததுன்னு திருப்பி யோசிக்கக்கூட மாட்டோம்! திட்டினியா திருப்பித்திட்டு. கேவலமா பேசினானா திருப்பி கேவலமா பேசு. இந்த ரீதியில கண்ணுக்குக்கண் ன்னு செயல்படுகிறோம். சரிதானா? இதுல என்ன லாபம் இருக்கு? விவாதங்கள் பலதையும் பார்க்கிறேன். ஒரு விவாதத்தால யாரும் விஷயம் புரிஞ்சுகொண்டு நடத்தையை மாத்திகிட்டதா பார்க்க / கேட்க்கக்கூடவில்லை! பரஸ்பரம் சேற்றை அள்ளி வீசறதும்..... விடுங்க.

ரைட். அப்ப என் உலகம் என் கையில்தான் பெரும்பாலும் இருக்கு. என் அம்மாவோ, அப்பாவோ, பையனோ, பெண்ணோ, மனைவியோ, மேலதிகாரியோ (அதாவது மத்த மேலதிகாரி), யாரானாலும் அவங்க கூட நான் எப்படி நடந்து கொள்வேன் என்பதை நான்தான் தீர்மானிப்பேன். அதை அவங்க தீர்மானிக்கிறாங்கன்னா நம்ம வாழ்கையை நாம் இன்னும் நம் கையிலே எடுத்துக்கலைன்னு பொருள்.

இப்படி சொல்கிறதாலே 'மத்தவங்க என்ன வேண்ணா சொல்லிட்டுப்போகட்டும். நான் கண்டுக்க மாட்டேன், நான் செய்கிறதைத்தான் செய்வேன்' ன்னு அர்த்தமில்லை.
குறிப்பா நான் சொல்கிற இந்த விஷயம் வளர்ந்த மனிதர்களுக்குத்தானே ஒழிய வயதில சின்னவங்களுக்கு இல்லை. பெரியவங்க ஒரு விஷயம் சொன்னா அதை கேட்டு, அதன் படி நடக்கிறது அவங்க கடமை.
நாமும் ச்சும்மா வீணுக்கு நான் என் வழிலதான் போவேன் என்கிறதும் சரியில்லை. மாற்றுக்கருத்துக்கு நாமும் உடன்படலாம், சில காரணங்களுக்காக. இவன் கரிவாயன், இப்படிச்சொல்லிட்டானே, போகட்டும் அப்படியே செய்வோம் முதல் இவர் அனுபவஸ்தர், சொன்னா சரியா இருக்க வாய்ப்புகள் அதிகமிருக்கு வரை பல வகை காரணங்கள் இருக்கலாம்.

இது ரெண்டும் இல்லாம பராதீனமும் இருக்கு. ......

Thursday, December 13, 2012

என் உலகம் என் கையிலா? - 1


என் உலகம் என் கையிலா?
சில நாட்கள் நடந்த கோளாறான சிந்தனைகளின் விளைவு! ஹும் படிச்சுடுங்க, நான் பாவம்!

கடந்த சில நாட்களா... சரி சரி உங்களுக்கு புரிஞ்சுடுத்து.
இந்த உலகம் உலகம் ன்னு சொல்லறாங்களே அது எது? நான் இருக்கிறதா நினைக்கிறதா, நீங்க இருக்கிறதா நினைக்கிறதா இல்லை அதுவா இருக்கிறதா?

முன் காலத்திலே 'கடவுள் ஒரு நாள் உலகைக்காணத் தனியே வந்தாராம்' ன்னு ஒரு பாட்டு உண்டு. அதில உலகம் எப்படிப்பா இருக்குன்னு கேப்பார். ஒருத்தன் வாழ்வே இனிமை ம்பான். இன்னொருத்தன் அதுவே கொடுமை ம்பான். இப்படி பாட்டு போகும்.

ஒரே உலகம் ஒத்தருக்கு இனிமையாவும் இன்னொருத்தருக்கு கொடுமையாவும் எப்படி இருக்க முடியும்? அது அப்படித்தான் இருக்கு என்கிறது நிதர்சனம். அப்படி இல்லைன்னு சொல்ல முடியாது.

ஒத்தர் அப்பாடா என்ன வெய்யில் என்கறார். இன்னொருத்தர் அதைப் பத்தியே ஒரு சிந்தனையும் இல்லாம வெயில்லே நடந்து போறார். சின்னப்பசங்க வெயிலான்னு ஆச்சரியமா சொல்லிட்டு அவங்க பாட்டுக்கு கிரிக்கெட் ஆடறாங்க! எலும்பும் தோலுமா மூட்டு வியாதிகளோட இருக்கற கிழம் ஒண்ணு அப்பாடா, சொகமா இருக்குனு கூடச்சொல்லலாம்!

அப்ப உலகம் ஒவ்வொருத்தர்கிட்டேதான் இருக்கு. அவரவர் மனசில இருக்கிறது போலவேத்தான் இருக்கு.

இந்த மனசு... , இந்த மனசுதான் பல விஷயங்களுக்கும் காரணம். வாழ்கையை கொடுமையாக்கவும் இதால முடியும்; இனிமையா ஆக்கவும் இதால முடியும்.
இப்படி ரொம்பவே ஜெனரலைஸ் செய்யறத்துக்கு முன்னாடி சில விஷயங்களை … ஹிஹிஹி... மனசில ஏத்திப்போம்!
காத்து அடிக்குது, வெயில் அடிக்குது, மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது (அட, நிசமா மழையே காணோம்ன்னாலும் கற்பனையிலதான் கொஞ்சம் கொட்டட்டுமே!) இதெல்லாம் நடக்கலைன்னு சொல்ல முடியாது. அது நம்மை பாதிக்காதுன்னு சொல்லவும் முடியாது. மழை இல்லைன்னு சொல்லி வெளியே போய் நனையாம திரும்பி வர முடியாது! ச்சும்மாவான்னா ஒரு கறபனையை வளத்துக்கொண்டு அது படி இருக்குன்னு சாதிச்சா.... பைத்தியக்காரன் பட்டம் சீக்கிரம் வந்துடும்!
இந்த இயற்கை சமாசாரங்கள் எல்லாம் தெய்வாதீனம். அதீனம் ன்னா ஆளுகை. அதுலேந்துதான் ஆதீனம் வந்தது.  சரி சரி, டைக்ரஸ் ஆக வேணாம்கிடக்கட்டும்.

என்ன சொன்னேன்? இயற்கை சமாசாரங்கள் எல்லாம் தெய்வாதீனம். இயற்கையா மழை பெய்யுது; பெய்யாம இருக்கு. நம்மால ஒண்ணும் பெரிசா செய்ய முடியலை. அதுவே மழை வேணும்ன்னு தெய்வத்தை வேண்டிக்கொண்டு சில கர்மாக்கள் செய்தா சில சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மழை பெய்யுது. இப்படி சில விஷயங்கள் நம் ஆளுகைக்கு உட்படாம தெய்வங்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருக்கு. இதை இப்ப இந்த பதிவுல விட்டுடுவோம்.

மீதி பல விஷயங்கள் நம் ஆளுகையில இருக்கு. கொஞ்சம் விவரமா பார்க்கலாம்.
சில வருஷங்கள் முன்னே ஒரு அம்மா என்கிட்ட பொலம்பிகிட்டு இருந்தாங்க. 'சில பேர் என்னை வேணும்ன்னு எரிச்சலூட்டறாங்க' என்பதே அதில முக்கிய விஷயம். கடைசியா என்ன செய்யட்டும் ன்னு கேட்டாங்க. இப்படி பொலம்பறதே கூட ஒரு மாதிரி ரிலீஃப்தான். இருந்தாலும் அவங்ககிட்ட கேட்டேன்..
அவங்களோட குறிக்கோள் என்ன?
நான் எரிச்சலாகணும்...
சரி, அவங்களோட குறிக்கோள் நிறைவேறக்கூடாதில்லையா? அதானே நீங்க விரும்பறது?
ஆமாம்.
சரிதான். எப்படி அது நிறைவேறாம இருக்கும்?
.. புரியலை.....
அதாவது அவங்க நீங்க எரிச்சலடையணும்ன்னு நினைச்சு சில விஷயங்கள் சொல்லறாங்க அல்லது சில வேலைகள் செய்யறாங்க.
ஆமாம்.
அவங்க நோக்கம் நிறைவேறக்கூடாதுன்னா நீங்க என்ன செய்யணும்?
அதானே உங்ககிட்டே கேட்டுக்கிட்டு இருக்கேன்!
அவங்க நோக்கம் நிறைவேறக்கூடாதுன்னா நீங்க எரிச்சலடையக்கூடாது.
ஆமாம், அது எப்படி முடியும்?
அது எப்படி முடியாது? எரிச்சலடைகிறது யார்? அவங்களா, நீங்களா? அது யார் ஆதிக்கத்தில இருக்கு?
எரிச்சலடைய வேண்டியது நான்தான். அது எப்படி எரிச்சலடையாம இருக்க முடியும்?
அது உங்க கண்ட்ரோல்லதானே இருக்கு!
அவங்க ப்ரொவோக் பண்ணறாங்களே?
ஆமாம். அப்படித்தான் சொன்னீங்க. உங்களுக்கு எது எரிச்சல் மூட்டும்ன்னு நல்லா ஸ்டடி பண்ணி வெச்சு இருக்காங்க. எதை சொன்னா உங்களுக்கு கோபம் வருது, எதை செய்தா கோபம் வருது...
ஆமாம். அதை எல்லாம் வேணும்ன்னு அவங்க செய்யறாங்க.
வேணும்ன்னு செய்யறாங்களோ அல்லது அது அவங்க இயல்போ, கிடக்கட்டும். நீங்க பதிலுக்கு கோபப்படாம எரிச்சல் அடையாம இருந்தாதான் அவங்களை தோற்கடித்ததா ஆகும்.

இந்த ஆர்க்யூமெண்ட் எல்லாம் கேட்டுட்டு அவங்க எரிச்சல் ஆகாம இருந்ததுதான் விசேஷம். ரொம்ப கண்ட்ரோல் செய்திருப்பாங்க போலிருக்கு.

அதுக்கு நான் என்ன செய்யணும்?
கொஞ்சம் யோசிக்கணும். அவங்க சொன்னது உண்மையா? உதாரணமா " நீ ஒரு முட்டாள்" ன்னு சொல்கிறாங்க. சாதாரணமா நம்ம எல்லாருக்குமே இதை கேட்டா கோபம் வரும். திட்டினது மேலதிகாரி (இல்லை, தங்கமணி ன்னு தனியா வேற சொல்லணுமா? அதான் மேலதிகாரின்னு சொல்லியாச்சில்லே?) மாதிரி இருந்தா மனசில திட்டிட்டு வெளிவே வந்துடுவோம். இல்லைன்னா சண்டை போடுவோம். இந்த சண்டையத்தான் தவிர்கப்பார்க்கிறோம். யோசிக்கலாம், அவங்க சொன்னது உண்மையா? ஆமாம்ன்னா உண்மைய சொன்னதுக்காக யாரையும் கண்டனம் செய்ய முடியாது. இல்லை பொய் ன்னா, என்ன செய்யலாம்ன்னு யோசிக்கணும். இவங்க சொல்கிறது பொய், உண்மைத்தன்மையை யாராலும் மாத்த முடியாது; சொல்லிட்டு போகட்டும்; எனக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. இப்படி யோசிக்க தோணியாச்சுன்னா அவங்க சொல்கிறதை பொருட்டாவே எடுத்துக்கொள்ள வேண்டாம். ஓஹோ அப்படியா ன்னு சிரிச்சுகிட்டே நகர்ந்துட்டா அவங்க எரிச்சல் ஆயிடுவாங்க!
(இன்னும் வரும்)