Pages

Tuesday, October 30, 2012

உண்மையான பக்தி - 7

 
ஸ்வாமி: நல்லது. வீட்டில் நடக்கும் ஒரு சாதாரண விஷயத்தை கவனிக்கலாம். ஒரு தனவந்தன் இருக்கிறான். அவனுக்கு நான்கு குழந்தைகள். அதில் ஒரு சின்ன குழந்தைக்கு பிறந்ந்த நாள் வருகிறது. அன்றைக்கு அந்த குழந்தைக்கே பிரதானம். அன்று அதுவே "உபாஸ்ய மூர்த்தி"! வீட்டின் நடுக்கட்டில் உயர்ந்த ஆசனம் போட்டு அதை உட்கார்த்தி வைத்து இருக்கிறார்கள், விலை உயர்ந்த உடைகளை அணிவித்து நகைகளை அணிவித்து அலங்கரித்து இருப்பர். அதற்காக தாயாரும் மற்ற குழந்தைகளும் கூட தான் போட்டுக்கொண்டு இருக்கும் நகைகளைக்கூட அன்றைக்கு தற்காலிகமாக அந்த குழந்தைக்கு போடுவதும் வழக்கம் உண்டு.

பக்தர்: ஆமாம். அப்படி வழக்கம் உண்டு.

அப்படி தங்கள் நகைகளை கொடுக்க வேண்டி இருக்கிறதே என தாயாரோ மற்ற குழந்தைகளோ வருந்துவார்களா? இன்றைக்கு இந்தக் குழந்தை எல்லா நகைகளையும் போட்டுக்கொண்டு இருக்கிறதே என்று பொறாமைப் படுவார்களா?

இல்லை.

இதே போல நமக்கு பிறந்த நாள் வரும் போது இந்த குழந்தையின் நகைகள் உள்பட நமக்கும் எல்லா நகைகளையும் அணிவிப்பார்கள் என்று மற்ற குழந்தைகள் அறிந்து உள்ளன அல்லவா?

ஆமாம்.

இன்றைக்கு இந்த குழந்தை தன் தாயாரிடமிருந்தும் மற்ற குழந்தைகளிடமிருந்தும் நகைகளை பிடுங்கிக்கொண்டதாக யாரேனும் குற்றம் சொல்வார்களா? இன்று 'உபாஸ்யமாக' இந்த குழந்தை இருக்க வேண்டும் என்று மற்றவர் நகைகளை கழற்றி இந்த குழந்தைக்கு போட்டதை தகப்பனின் பட்சபாதம் என்று யாரும் சொல்வார்களா?

மாட்டார்கள்.

நகைகள் உட்பட இத்தனை அலங்காரங்களும் யாருடைய ஆளுகையில் இருக்கிறது? யாருக்கு சொந்தம்?

தகப்பனாருடையதுதான்.

அப்படித்தான். அத்தனையும் அவர் சம்பாதித்ததுதான். இருந்தாலும் அவர் இதை எல்லாம் எப்போதும் போட்டுக்கொள்வாரா?

போட்டுக்கொள்வதில்லை.

அதாவது அத்தனையும் தனக்கு சொந்தமாக இருந்தாலும் தனக்கு என்று ஒரு போதும் உபயோகித்துக் கொள்கிறதில்லை. தேவைக்கு தகுந்தபடி அவ்வப்போது தன் குழந்தைகளுக்கு அணிவிப்பதிலேயே மகிழ்கிறார்.

ஆமாம். அப்படித்தான்.

ஆகவே தனக்கே பாத்தியதை இருந்தாலும் அவர் தான் போட்டுக்கொள்வதில்லை.

உண்மைதான்.

சுய ஆதீனத்தில் இரும்பு பெட்டியில் வைத்து இருக்கும் போது மட்டுமா நகைகள் அவருக்கு சொந்தம்? குழந்தை போட்டுக்கொண்டு இருக்கும்போது கூட அவருக்கு சொந்தம்தான்.

உண்மைதான்.

இப்போது ப்ரக்ருதி விஷயத்தை கவனிக்கலாம். பரம் பொருளான ரூபமில்லாத ப்ரம்மம் இந்த தகப்பனார் போல; தான் ஒரு நாளும் ஒரு விசேஷத்தையும் ஏற்றுக்கொள்வது கிடையாது. ஆனால் ஒவ்வொரு தேவதைக்கும் சொல்கிற விசேஷங்கள் இந்த ப்ரம்மத்துக்கே உரியவை. ஒரு பக்தானின் ஶ்ரேயஸை உத்தேசித்து ஒரு புராணத்தில் ஒரு தேவதையை உபாஸ்யமாக சொன்னால் அதில் அந்த தேவதைக்கே முதலிடம். பார்த்து மகிழும் தகப்பனாரும் ஏனைய குழந்தைகளும் போல மற்றவர் தள்ளி நிற்க வேண்டியதுதான். மற்ற தேவதைகளின் விசேஷங்கள், மற்ற குழந்தைகளின் நகைகளை இந்த குழந்தைக்கு அணிவிப்பது போல, இந்த தேவதைக்கே அளிக்கப்படும். ஒரு புராணத்தில் ஒரு தேவதைக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது என்பதற்தாக பட்சபாதம் சொல்ல முடியாது. வேறு ஒரு புராணத்தை சொல்லும்போது, மற்ற தேவதை பற்றி சொல்லும்போது அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஒவ்வொரு புராணத்திலும் வியாசருடைய எண்ணம் இப்படியே இருக்கிறது.

பரம் பொருளுக்கு எந்த விசேஷமும், பெயரும், ரூபமும் கிடையாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் அத்தகைய பாவனை ஏதோ சிலரைத்தவிர சாதாரணமாக யாருக்கும் ஏற்படுவதில்லை என்பதை அவர் நன்கு அறிவார். ஆகவே பக்தர்களின் உபாசனைக்காக பல தேவதா மூர்த்திகளை சொல்லி இருக்கிறார். இந்த மூர்த்திகள் சுத்த ப்ரம்மத்தின் அம்சமாகவே இருந்தாலும் தற்காலிக வியவகாரத்தில் அவையே பரம் பொருள் என பாவித்து சொல்லி இருக்கிறார். அவர் புராணம் எழுதியிருக்கிற மாதிரியில் ஒரு தேவதையை தீவிரமாக பக்தியுடன் உபாசித்து வந்தால் மற்ற தேவதைகளை உபாசிக்க அவசியமில்லாமல், அந்த மற்ற தேவதைகளின் உபாசன பலனை அடையும் படி சௌகரியம் செய்து இருக்கிறார். ஒரே தேவதையை உபாசித்தாலே மேலே பர ப்ரம்மத்தை அறியும் யோக்யதையையும் அடையலாம்.  
சிரமத்தை குறைத்து, பலனை அதிகப்படுத்தி கொடுப்பதிலும் , பரம் பொருள் தத்துவத்துக்கு பாதகமில்லாமல், பக்தனின் யோக்கியதைக்கு தக்கபடி சாதனங்களை சொல்லிக் கொடுப்பதிலும் வியாசருக்கு சமம் யாருமில்லை! அவரது நோக்கத்தை சரியாக அறியாமல் நமக்குள் சண்டை போட்டுக் கொண்டால் குற்றம் நம்முடையதே தவிர அவருடையதல்ல. உண்மையில் வியாசருக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டு இருக்கிறோம்.

2 comments:

Geetha Sambasivam said...

தங்கள் ஆயிரமாவது பதிவுக்கு ஆயிரம் வாழ்த்துகள்.

திவாண்ணா said...

அத தூக்கிட்டேனே?
ட்ராப்ட்டும் சேத்து 1000 கணக்கு காட்டித்து.....