Pages

Monday, October 29, 2012

உண்மையான பக்தி - 6


பக்தர்: இந்த மாதிரி அசட்டு வியவகாரங்களுக்கு வ்யாசரேதான் காரணமோ என்று தோன்றுகிறது! இவர் அந்தந்த தேவதைகள் குறித்து பல புராணங்களை எழுதி இருக்கிறார். ஒவ்வொன்றிலும் அது எது குறித்த புராணமோ அந்த தேவதையையே பர வஸ்து என்கிறார். அதனால் வ்யாசரின் அபிப்ராயத்தில் யார்தான் பரவஸ்து என்று சிரத்தை உடைய யாருக்கும் நிர்ணயிக்க முடியாமல் இருக்கிறது!

ஸ்வாமி: வ்யாசர் மூடர் அல்ல, ஜனங்களை ஏமாற்ற அவர் ஒரு காரியமும் செய்வதில்லை என்று நம்புகிறீர்களா?

அதில் ஆட்சேபணை ஒன்றுமில்லை.

எல்லாவற்றுக்கும் மேலான பர வஸ்து ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்ற நியாயம் அவருக்கு தெரிந்து இருக்க வேண்டும் இல்லையா?

தெரிந்துதான் இருக்கும். அதுதான் எனக்கு பிரச்சினையே. ஒவ்வொரு தேவதையையும் பரவஸ்து என்று அவர் சொல்வது எனக்கு அர்த்தமாகவில்லை.

வ்யாசர் ஒவ்வொரு தேவதையையும் பரவஸ்து என்று சொல்லவில்லை; பர வஸ்துவேதான் ஒவ்வொரு தேவதையும் என்றுதான் சொல்கிறார் என புரிந்து கொண்டால் பிரச்சினையே இராது.

அதெப்படி?

பர வஸ்துவுக்கு சொந்தமாக பெயரோ ரூபமோ கிடையாது. ஆனால் அதுவே நமக்கு வழிபடும் பொருளானால் அதற்கு ஒரு பெயரும் ரூபமும் வேண்டி இருக்கிறது. உண்மையில் அது ஸ்வபாவத்தில் ரூபம் அற்றது, அதை அரூபம் என்றே சொல்ல வேண்டும். இருந்தாலும் வியவகாரத்தில் எல்லா ரூபங்களும் அவருடையதே ஆகும்.

இது எனக்குப்புரிகிறது. ஆனால் வியாசர் ஒரு மூர்த்தி பற்றி சொல்லும் போது- உதாரணமாக சிவன் பற்றி சொல்லும்போது பர தத்துவத்துக்கு உரிய லட்சணங்களை மட்டும் அவருக்கு கொடுப்பதில்லை. இதர தேவதைகளுக்கு உரிய விசேஷமான அம்சங்களையும் இவருக்கு உள்ளது போல சொல்கிறார். சிவனை பர வஸ்துவின் அழிக்கும் அம்சமாக சொல்லாமல் விஷ்ணுவும் ப்ரம்மாவுமே இவர்தான் என்கிறார். அல்லது அவர்கள் இவருடைய அம்சமேயாவர் என்றோ சந்ததி என்றோ சொல்லிவிடுகிறார்.
 

1 comment:

Geetha Sambasivam said...

//வ்யாசர் ஒவ்வொரு தேவதையையும் பரவஸ்து என்று சொல்லவில்லை; பர வஸ்துவேதான் ஒவ்வொரு தேவதையும் என்றுதான் சொல்கிறார் என புரிந்து கொண்டால் பிரச்சினையே இராது.//


அருமை, சின்னக் குழந்தைங்களுக்குக் கூடப் புரியும்படியா இருக்கு. நன்றி.