Pages

Friday, August 3, 2012

பாபங்கள், ப்ராயச்சித்தங்கள் - 9


சாந்தராயணத்துக்கு சமமானவை: ம்ருகாரேஷ்டி, பவித்ரேஷ்டி, மித்ராவிந்தா பசு, மூன்று மாதங்கள் அனுஷ்டிக்கும் க்ருச்சிரம், பத்தாயிரம் தில ஹோமம், இரண்டு பராக க்ருச்சிரம், லக்ஷம் காயத்ரீ, இவை சமமாகும்.

ப்ரத்யாம்னாய விஷயத்தில் ப்ராஜாபத்யத்துக்கு ஒரு பசு தானம் கொடுப்பது, சாந்தராயணத்துக்கு இரண்டு, பராக, தப்த க்ருச்சிரங்களில் மும்மூன்று என சொல்லி இருக்கிறது.

இப்படி பசு தானம் செய்ய சக்தி இல்லை என்றால் என்ன செய்வது? 12 ஆயிரம் முஷ்டி (பிடி) புல்லை பசு மாட்டுக்கு கொடுக்க வேண்டும். சக்தி இருக்கிறது, ஆனால் சரியாக வாய்ப்பு அமையவில்லை என்றால் (இந்த பிரச்சினை இப்போது அதிகமாகவே இருக்கிறது!) பசுவுக்கான விலையை கொடுக்கலாம்.

மஹாநதியில் ஸ்நாநம் என்றால் எவை மஹாநதிகள்?

பட்டியல் இதோ: கங்கை, ஸரஸ்வதீ, யமுனா, நர்மதா, பிபாசா, விதஸ்தா, கௌசிகீ, நந்தா, விரஜா, சந்த்ரபாகா, ஸரயூ, சராவதீ, ஸிந்து, க்ருஷ்ணவேனீ, சோணா, தாபினீ, பாஷாணகா, கோமதீ, கண்டகீ, பாஹுதா, பம்பா, தேவிகா, காவேரீ, துங்கபத்ரா, ஸுசக்ஷு, அருணா.
(இதெல்லாம் எங்கே இருக்குன்னு பாத்து சொலுங்கப்பா!)

ப்ராயச்சித்தம் விதிக்கும் போது நபரை பார்த்து விதிக்கப்படும். (விபரீத பொருள் செய்து கொள்ளக்கூடாது!) வேத பராயணம், ஹோமங்கள் செய்யக்கூடியவர்களுக்கு அவற்றை விதிக்க வேண்டும். தர்மம் இல்லாதவர்களுக்கும் வித்யை இல்லாதவருக்கும், ப்ராம்ஹணன் என்று பெயருக்கு மட்டும் இருப்பவர்களுக்கு ப்ராஜாபத்யாதி க்ருச்சிரங்கள்; பணம் உள்ளவர்களுக்கு அபராதம் - இப்படி ப்ராயச்சித்தம் சொல்ல வேண்டும்.

சாதாரண பாபங்களுக்கு ஸ்நாநம், ஸந்த்யோபாசனம், ப்ராணாயாமம், உபவாஸம், பஞ்சகவ்யம் உட்கொள்ளுதல் ஆகியவற்றை செய்யலாம். நித்தியம் செய்யணும்  என்கிற அனுஷ்டானங்களிலேயே பல பாபங்களுக்கு ப்ராயச்சித்தம் வந்து விடுகிறது.

க்ரியா ப்ராயச்சித்தங்கள்: இதெல்லாம் இல்லாமல் ஜபம் ஹோமம் போன்றவற்றை செய்யணும் போதே கூட சில தவறுகள் நடக்கலாம். மந்தர லோபம், க்ரியா லோபம் , சிரத்தா லோபம் என்றெல்லாம் சொல்வார்கள். இதற்கெல்லாம் அந்தந்த கர்மாவை சொல்லும் கல்பத்திலேயே –புத்தகத்திலேயே-  ப்ராயச்சித்தம் சொல்லப்பட்டு இருக்கும்.

ப்ராஜாபத்ய ப்ரதிநிதிகள்: ஒரு கன்னுக்குட்டியுடன் கூடிய பால் கறக்கும் பசுவை நான்கு மாதத்துக்கு தேவையான உணவு (வைக்கோல்), பால் பாத்திரம், மணி, கயிறு போன்றவற்றுடன் தானம் செய்வது ஒரு ப்ராஜாபத்ய க்ருச்சிரத்துக்கு ப்ரதிநிதி ஆகும். இப்படி கொடுக்க முடியாதவர்கள் அதற்கான விலையாக ஒரு நிஷ்கம் கொடுக்கலாம். இந்த நிஷ்கம் தங்கத்தின் அளவு என்று தெரிகிறது. எவ்வளவு என்று தெரியவில்லை. ப்ராயச்சித்தம் செய்யும் நபரின் சக்தியை பொருத்து முடியாவிட்டால் அரை நிஷ்கம், அதுவும் முடியாவிட்டால் கால் நிஷ்கம் என்று கோமூல்யத்தை கொடுக்கச்சொல்லி இருக்கிறது. இந்த அனுகல்ப ப்ராஜாபத்யம் முழுக்க முழுக்க சாஸ்த்ர சம்மதம். சிஷ்டர்களாலும் கடைபிடிக்கப்படுகிறது. இதுவே இந்த காலத்தில் சகலருக்கும் ப்ரயோஜனமாகக் கூடியது என்று தோன்றுகிறது.