Pages

Wednesday, August 1, 2012

பாபங்கள் ப்ராயச்சித்தங்கள் - 7


பாபங்களுக்கு சாத்திரங்களால் விதிக்கப்பட்ட எல்லா ப்ராயச்சித்தங்களையும் சொல்லியது போல அனுசரிக்க கலியில் சாத்தியமில்லை என்று சொல்லி மஹரிஷி பராசரர் எளிய ப்ராயச்சித்தங்களை விதித்துள்ளார். இந்த காலத்தில் இவை அனுசரிக்கக்கூடியவை. சாந்த்ராயணம் என்பது ஒரு மாதம் வரையில் செய்யக்கூடிய பிராயச்சித்தம். இது போல பலவும் பல நாட்கள் விரதமிருந்து செய்யக்கூடியவை. இலகுவாக நினைக்கும் ப்ராஜாபத்ய க்ருச்சிரமே 12 நாட்கள் செய்ய வேண்டிய விரதம்.அதை சரியான முறையில் அனுஷ்டிப்பதும் கடினம்.

கலிக்காக சொல்லிய ப்ராயச்சித்தங்களின் பிரதிநிதியாக சொன்னது ஒன்று திரவியத்தை தானமாக கொடுத்துவிடுவது. யத் கலுவாவ தப இத்யாஹுஹு யத் ஸ்வயம் ததாதீதி….. ஸ்ருதியே இதை ஒரு தபஸ் என்கிறது. பணம் அபராதமாக விதிப்பது எல்லா நாடுகளிலும் நீதி மன்றங்களில் நடப்பதை பார்க்கிறோம்.

இந்த காலத்துக்கு பல நாள் சாத்தியமான தபஸ் களை ப்ராயச்சித்தமாக அனுஷ்டிக்க கடினம் என்பதால், ஜபம், ஹோமம், உபவாஸம், பிராணாயாமம், த்ரவ்யதானமாகிய இலகுவானவற்றை செய்து சுத்தியடைய சாத்திரங்கள் அனுமதிக்கின்றன.

ப்ராஜாபத்யம் என்னும் க்ருச்சிரத்தை ப்ராயச்சித்தத்தை- சகல பாபங்களுக்கும் பிரதிநிதியாக அனுஷ்டிக்க சாத்திரம் அனுக்ரஹித்து இருக்கிறது.உசநஸ் என்ற மஹரிஷியும் வேறு சில ரிஷிகளும் இதை கூறுகிறார்கள். மஹாபாதகமானாலும் அல்லது வேறு எந்த தண்டனை விதிக்கப்படாத பாபத்துக்கும் ப்ராயசித்தமாக இதையே பெருக்கி கணக்கு செய்து அனுஷ்டிக்கலாம் என மிதாக்‌ஷரையில் விக்ஞானேஸ்வரர் சொல்லி இருக்கிறார். இது இந்த காலத்துக்கு மிகவும் உபகாரமானது. இவ்வளவு இளக்கிக் கொடுத்த இந்த ப்ராயச்சித்தத்தை எப்படி அனுஷ்டிப்பது?

பிச்சை எடுத்து 3 நாட்கள் பகலில் மட்டும் உண்ண வேண்டும்.
அந்தபடியே இரவில் மட்டும் 3 நாட்கள் உண்ண வேண்டும்.
யாசிக்காமலே இருந்து கிடைத்ததை மட்டுமே 3 நாட்கள் உண்ண வேண்டும்.
3 நாட்கள் முழுக்க பட்டினியாக இருக்க வேண்டும்.

இப்படி இருப்பது உடல் ரீதியாக முடியாது சிறுவர்கள், வியாதியுள்ளவர், மிக வயதானவர் போல இருந்தால் இதே க்ரமத்தில் தொடர்ந்து மும்மூன்று நாட்களாக இல்லாமல் ஒவ்வொரு நாளாக 3 முறை செய்யலாம்.

இங்கு "பகல் மட்டும்தானே உண்ண வேண்டும்? சரி!" என்று இஷ்டத்துக்கு உண்ண முடியாது.
ஒரு கோழி முட்டை அளவு அல்லது வாய்க்குள் போகும் அளவு என்பது ஒரு கபளம். பகலில் மட்டும் சாப்பிடும் போதும் மொத்தம் 26 கபளங்கள் சாப்பிடலாம். இரவில் மட்டும் சாப்பிடும்போது 22 மட்டும். யாசிக்காமல் கிடைத்ததை உண்ணும்போது 22. இப்படி ஆபஸ்தம்பர் சொன்னார். ஆனால் சதுர்விம்சதி மதத்தில் இதையே முறையே 12, 15, 16 என்று சொல்லப்பட்டது. (இது பற்றி பின்னால் எழுத உத்தேசம்)

இந்த க்ருச்சிரத்தில் கால் அளவு, பாத க்ருச்சிரம் எனப்படும். பகலில் மட்டும் புசிப்பது என்பது ஒரு கால் பாகம்; இரவில் மட்டும் என்பது கால் பாகம்; கிடைத்ததை மட்டும் என்பது கால் பாகம். முழு பட்டினி என்பது கால் பாகம்.
ப்ராக்டிகலாக யோசித்த மஹரிஷிகளின் சாத்திரம் பகலில் மட்டும் புசிப்பது என்பது சூத்திரனுக்கு; இரவில் மட்டும் என்பது வைச்யனுக்கு; கிடைத்தது என்பது க்‌ஷத்ரியனுக்கு முழு பட்டினி அந்தணனுக்கு என விதித்தது.

இந்த கால் க்ருச்சிரம் போல அரை க்ருச்சிரமும் முக்கால் க்ருச்சிரமும் கூட உண்டு. கணக்கு எப்படி? கிடைத்தது மட்டும், பட்டினி இரண்டையும் மும்மூன்று நாட்கள் அனுஷ்டிக்க அது அரை க்ருச்சிரம். இரவு மட்டும் என்பதை மட்டும் தவிர்கிறது முக்கால் க்ருச்சிரம்.

No comments: