Pages

Monday, January 31, 2011

ஆகாயத்தில் பறத்தல்:



Patanjali yoga sutra

  कायाकाशयोः सम्बन्धसंयमालघुतूलसमापत्तेश्चाऽऽकाशगमनम् ।।42।।

காயாகாஶயோ​: ஸம்ப³ந்த⁴ஸம்°யமாலகு⁴தூலஸமாபத்தேஶ்சா''காஶக³மநம் || 42||

காய ஆகாஶயோ​: = உடல் ஆகாசம் இவற்றின்; ஸம்ப³ந்த⁴ = சம்பந்த; ஸம்°யமாத் = ஸம்யமம் செய்வதாலும்; லகு⁴ தூல ஸமாபத்தேஶ்ச = மிக மெல்லிய பஞ்சு முதலானவற்றில் தாரணா-த்யான ஸமாதிகளாலும்; ஆகாஶ க³மநம் = ஆகாயத்தில் சஞ்சரித்தல் (உண்டாகிறது)
ஒரு இடைவெளி இருக்குமிடத்தில்தான் சரீரம் இருக்க முடியும். ஆகாசமோ எங்கும் வியாபித்து இருக்கிறது. சரீரம் இருக்குமிடத்தில் ஆகாசம் இருக்கவே இருக்கும். இந்த சம்பந்தத்தில் தாரணா, த்யானம் செய்து ஸாக்ஷாத்கரித்துவிட்டால் ஒருவனுக்கு பக்ஷிகள் போல வானத்தில் பறக்கும் சக்தி உண்டாகிறது. அல்லது பஞ்சு முதல் பரமாணு வரை உள்ள மிக நுண்ணிய லகுவான பொருட்களில் ஸம்யமம் செய்து லகுத்வம் என்ற குணத்தை ஸாக்ஷாத்கரித்துவிட்டால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் சக்தி கிடைக்கிறது.


Sunday, January 30, 2011

கேட்கும் திறன்...



Patanjali Yoga sutra:

श्रोत्राकाशयोः संबन्धसंयामाद् दिव्यं श्रोत्रम् ।।41।।
ஶ்ரோத்ராகாஶயோ​: ஸம்°ப³ந்த⁴ஸம்°யாமாத்³ தி³வ்யம்° ஶ்ரோத்ரம் || 41||

ஶ்ரோத்ர =சுரோத்திரம் என்னும் இந்திரியம்; ஆகாஶயோ​: = ஆகாயம் ஆகியவற்றின்; ஸம்°ப³ந்த⁴ = ஸம்பந்தத்தில்; ஸம்°யாமாத்³ = ஸம்யமம் செய்ய; தி³வ்யம்° = திவ்யமானதாக (மறைந்த சப்தம், தூரத்தில் உள்ள சப்தம், சூக்குமமான சப்தம்; இவற்றை கிரஹித்தல் ) ஶ்ரோத்ரம் = கேட்கும் திறன் ஆகிறது.

இதே போல் நுகர்தல், தொடுதல், சுவை, காணல் ஆகிய இந்திரியங்களுக்கு நிலம், வாயு, நீர், ஒளி ஆகிய ஐம்பூதங்கள் ஆதாரமாகும். சப்தங்களுக்கு ஆகாசமும், வாசனகளுக்கு நிலமும், சுவைக்கு நீரும், ரூபத்துக்கு தேஜஸும் ஆதாரங்களாகும். இவற்றின் சம்பந்தத்தை ஸம்யமம் செய்து ஸாக்ஷாத்கரித்துவிட்டால் இந்திரியங்களுக்கு -எங்கோ இருக்கும் ஒலியை கேட்பது போன்ற - அசாதாரண அதாவது திவ்யத் தன்மை ஏற்பட்டுவிடுகிறது.

Friday, January 28, 2011

அக்னி போல் சரீரம் ஜ்வலிக்க...


Patanjali yoga sutra
 समानजयात्प्रज्वलनम् ।।40।।
ஸமாநஜயாத்ப்ரஜ்வலநம் || 40||

(ஸம்யமமத்தால்) ஸமாந = ஸமானன் என்ற வாயுவை; ஜயாத் = ஜெயிக்க; ப்ரஜ்வலநம் = அக்னி போல் சரீரம் ஜ்வலிக்கிறது.
இந்த அக்னி நாபிச்சக்ரம் அருகில் உள்ளது.
இந்த சித்தி குறித்து காளிதாசன் குறிப்பிடுகிறார். “தாக்ஷாயணியின் தகப்பன் அவளை அவமதித்தான். அந்த சந்தர்பத்தில் அவள் யோகாக்னியின் மூலம் தன் பழைய சரீரத்தைவிட்டு புதிய சரீரத்தில் நுழைய பர்வத ராஜனின் பத்னியான மேனாதேவியிடம் வந்து சேர்ந்தாள்.”

Thursday, January 27, 2011

ஆகாயத்தில் செல்லும் தன்மை



Patanjali Yoga sutra:

उदानजयाज्जलपङ्ककण्टकाकदिष्वसङ्ग उत्क्रान्तिश्च ।।39।।
உதா³நஜயாஜ்ஜலபங்ககண்டகாகதி³ஷ்வஸங்க³ உத்க்ராந்திஶ்ச || 39||

(ஸம்யமமத்தால்) உதா³ந =உதானன் என்ற வாயுவை; ஜயாத் = ஜெயிக்க; ஜல = நீர்; பங்க= சேறு (பங்கஜம் = சேற்றில் முளைக்கும் [பூ]); கண்டகா = முள்; ஆதி³ஷு = முதலியவற்றில்; அஸங்க³ = சம்பந்தமின்மை; உத்க்ராந்திஶ்ச = ஆகாசத்தில் செல்லும் தன்மையும்; (உண்டாகிறது).

இந்திரியங்களின் விருத்தி உள் வெளி (ஆந்தரம், பாஹ்யம்) என இரு வகை. உருவம் சப்தம் முதலியன குறித்து ஏற்படும் அறிவு பாஹ்யம். உள்ளே வாயுக்களின் சலனத்தை ஒட்டி ஏற்படும் விருத்தி ஆந்தரம். இந்த உள் விருத்தி எல்லா இந்திரியங்களுக்கும் பொதுவானது. வாயுக்களின் சலனம் இல்லாவிடில் இந்திரியங்களும் உள் விருத்தி அடையா. மூக்கு முதல் ஹ்ருதயம் வரை சலனம் உள்ளது ப்ராண விருத்தி. ஹ்ருதயம் முதல் நாபி வரை உள்ளது ஸமான விருத்தி. இது உட்கொண்ட ஆகாரத்தை ரத்தமாக்குகிறது. (செரிமானம், சத்து உள்ளே செல்லுதல்). நாபி முதல் பாதம் வரை அபான விருத்தி. இது சரீரத்தின் கழிவுப்பொருட்களை வெளித்தள்ளுகிறது. மூக்கின் நுனி முதல் தலையின் உச்சி வரை உதானன். இதுவே உயரக்கிளம்ப ஏதுவாகும். (ஏனைய நூல் ஒன்றில் ஹ்ருதயம் முதல் உச்சி வரை என்றூம் சொல்லி இருக்கிறது) உடல் முழுதும் நிறைந்து உள்ளது வியானன். இவை எல்லாவற்றிலும் சிறந்தது ப்ராண விருத்தியே. இவற்றில் உதானனில் ஸம்யமம் செய்து ஜெயித்தவனால் நீர், சேறு, முள் ஆகிய எதன் மீதும் பாதிப்பு இல்லாமல் நடந்து போக முடிகிறது. மேலும் மரண காலத்தில் அர்ச்சிராதி மார்கங்கள் வழியாக மேலான லோகங்களை அடையவும் இயலும். இதையே ஆகாயத்தில் செல்லும் தன்மை என்றனர். மணிப்ரபை என்ற வ்யாக்கியான நூலில் தனிஷ்டப்படி மரணத்தை அடைவான் என்று பொருள் செய்யப்பட்டு இருக்கிறது.

Wednesday, January 26, 2011

உடலைவிட்டு உடல் பாயும் சித்தி..


Patanjali Yoga sutra:

बन्धकारणशैथिल्यात्प्रचारसंवेदनाच्च चित्तस्य परशरीरावेशः ।।38।।
ப³ந்த⁴காரணஶைதி²ல்யாத்ப்ரசாரஸம்°வேத³நாச்ச சித்தஸ்ய பரஶரீராவேஶ​: || 38||

ப³ந்த⁴காரண = பந்தத்துக்கு காரணமான (தர்ம அதர்மங்களுக்கு); ஶைதி²ல்யாத் = ஸம்யமம் மூலம் தளர்ச்சி ஏற்பட்டு இருப்பதினாலும்; ப்ரசார = நாடிகளில்; ஸம்°வேத³நாச்ச = ஸம்யமத்தாலும்; சித்தஸ்ய = சித்தத்தின்; பர ஶரீர ஆவேஶ​: = தன் சரீரத்தை விட வேறு சரீரத்தில் பிரவேசித்தல் (உண்டாகிறது).

இயற்கையில் எங்கும் நிறையக்கூடிய சித்தம் அந்தந்த ஜீவர்களின் தர்ம அதர்மங்களால் ஒரு உடம்பிலேயே கட்டுண்டு இருக்கிறது. இதுவே பந்தம் ஆகும். ஸம்யமத்தால் கர்ம நாசமடைந்து இந்த கட்டு தளர்ந்து போனதால் பந்தம் விடுகிறது. மேலும் நாடிகளில் ஸம்யமம் செய்ய சித்தத்தின் சஞ்சார ஸ்தானம் பற்றி அறியப்படுகிறது. இந்நிலை அடைந்த சித்தம் வேறு எந்த உடலிலும் பிரவேசிக்கலாம். இது ப்ரவேசித்தல் சித்தத்தின் ஆளுகையில் உள்ள பிராணன் இந்திரியங்கள் ஆகியவையும் கூடவே ப்ரவேசிக்கும். இதுவே பர ஶரீர ஆவேஶம் என்னும் உடலைவிட்டு உடல் பாயும் சித்தி ஆகும்.

Tuesday, January 25, 2011

மேலும் புருஷனைப்பற்றிய ஞானம்:



Patanjali Yoga sutra:

ततः प्रातिभश्रावणवेदनादर्शास्वादवार्ता जायन्ते ।।36।।

தத​: ப்ராதிப⁴ஶ்ராவணவேத³நாத³ர்ஶாஸ்வாத³வார்தா ஜாயந்தே || 36||

தத​: =அதிலிருந்து (பயிற்சியால் வரும் புருஷ ஸம்யமத்தில் இருந்து); ப்ராதிப⁴ = ஊஹ மாத்திரமான ஞானமும்; ஶ்ராவண = எந்த சப்தத்தையும் கேட்பதும்; வேத³நா = தோலால் எந்த தொடு உணர்வையும் அறிவதும்; ஆத³ர்ஶா = எந்த ரூபத்தையும் கண்ணால் பார்ப்பதும்; ஆஸ்வாத³= நாக்கால் எந்த ருசியையும் அறிவதும்; வார்தா = மூக்கால் எந்த வாசனையை நுகர்வதும்; ஜாயந்தே =ஏற்படுகிறது.

"அப்பாடா! இப்படி எல்லாமே தெரிய வரும் ன்னா வேற என்ன வேணும்" என்று தோன்றுகிறதா? அதைப்பற்றி அடுத்து சொல்கிறார்.

  ते समाधावुपसर्गा व्युत्थाने सिद्धयः ।।37।।
தே ஸமாதா⁴வுபஸர்கா³ வ்யுத்தா²நே ஸித்³த⁴ய​: || 37||

தே = அவை; ஸமாதௌ⁴ = (நிர்விகல்ப) ஸமாதி விஷயத்தில்; உபஸர்கா³= விரோதிகளாக; வ்யுத்தா²நே = ஸமாதியிலிருந்து வெளி வந்த காலத்தில்; ஸித்³த⁴ய​: ஸித்திகளாவன (ஆகின்றன).
யோகத்தின் பரம ப்ரயோஜனம் நிர்விகல்ப ஸமாதியை அடைவது. அந்த வழியில் ஸமாதி கலைந்து வெளிவரும் காலத்தில் ஏற்படும் இந்த சித்திகள் ஜீவனை திசை திருப்ப வாய்புண்டு. அப்போது அவை எதிரிகள் ஆகின்றன. ஆகவே இவற்றில் நிலைத்து நிற்காமல் மேலே சாதனை செய்ய வேண்டும்.

Monday, January 24, 2011

புருஷனைப்பற்றிய ஞானம். :



सत्त्वपुरुषयोरत्यन्तासंकीर्णयोः प्रत्ययाविशेषो भोगः  परार्थत्वात्स्वार्थसंयमात्पुरुषज्ञानम् ।।35।।
Patanjali Yoga sutra:
ஸத்த்வபுருஷயோரத்யந்தாஸம்°கீர்ணயோ​: ப்ரத்யயாவிஶேஷோ போ⁴க³​: பரார்த²த்வாத்ஸ்வார்த²ஸம்°யமாத்புருஷஜ்ஞாநம் || 35||

அத்யந்தா ஸம்°கீர்ணயோ​: = உண்மையில் வேறானவையான; ஸத்த்வ புருஷயோர் = சத்வ புத்தியுடையதும் ஆத்மாவுடையதும்; ப்ரத்யயா விஶேஷோ = தனித்தனியானவை என்ற ஞானம் இல்லாமையே; போ⁴க³​: =போகமாகும்; பரார்த²த்வாத் = புருஷனுக்காக ஏற்பட்ட அந்த போகத்தைக் காட்டிலும் உயர்ந்தது; ஸ்வார்த²= சித்த ஸ்வரூப- பிரதி பிம்ப விஷயமான; ஸம்°யமாத் = ஸம்யமம் செய்யும் போது உண்டாகும்; புருஷஜ்ஞாநம் = புருஷனைப்பற்றிய ஞானம்.

புத்தி சத்வ, ரஜ, தமோ குண நிலைகளை உடையது. புருஷனோ இவற்றில் எதிலும் சம்பந்தப்பட்டாமல் அன்னியமானவன். இந்த ஞானம் - நினைப்பு இல்லாவிட்டால் நான் சுகமாக இருக்கிறேன்; துக்கமாக இருக்கிறேன் என்று ஜீவனுக்கு சுக துக்க அனுபவ போகம் உண்டாகிறது. இங்கு புத்தி தனக்கென்று எந்த பிரயோஜனமும் எதிர்பாராமல் வேலை செய்கிறது; அது புருஷனான ஜீவனின் போகம் அபவர்க்கம் இரண்டின் பிரயோஜனத்தை மட்டுமே எதிர் பார்க்கிறது. இதனால் புத்தி மூலம் ஏற்படும் போகம் புருஷனுடையதே.
தெளிவான புத்தியில் புருஷனின் ப்ரதி-பிம்பம் (நிழல்) ஏற்படுகிறது. புத்தி காட்டித்தரும் விஷயங்களை இந்த புருஷ நிழல் அனுபவிக்கிறது. இந்த புத்தி பரார்த்தம் என்றும் புருஷ நிழல் ஸ்வார்த்தம் என்றும் சொல்லப்படுகின்றன. இந்த புருஷ நிழலில் ஸம்யமம் செய்வது ஸ்வார்த்த ஸம்யமம். இதனால் புருஷனைப்பற்றிய ஞானம் உண்டாகிவிடும்.


Friday, January 21, 2011

ஊஹத்தால் உண்டாகும் சித்தி, சித்த வாஸனா ஞானம்:



प्रातिभाद्वा सर्वम् ।।33।।

ப்ராதிபா⁴த்³வா ஸர்வம் || 33||

ப்ரதிபா என்பது முன் பின் எந்த ஆலோசனை காரணம் இன்றி மனதில் திடீரென ஏற்படும் ஒரு வித ஞானம். இதை ஆங்கிலத்தில் இன்ட்யூஷன் என்பர். தமிழில் ஊகம் எனலாம்.

ப்ராதிபா⁴த்³வா = பிரதிபையில் ஸம்யமம் செய்யின்; ஸர்வம் = எல்லாம் (தெரிய வருகிறது.)

சூரியன் உதயமாகு முன் அருணன் உதயாமாக உலகில் எல்லாம் தெரிவது போல; விவேக க்யாதி வரு முன் ஸூசகமாக சித்தத்தில் ப்ரதிபை தோன்றுகிறது. இதில் ஸம்யமம் செய்யும் யோகி மற்ற ஸம்யமங்களின் தேவை இன்றி எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறான்.

  हृदये चित्तसंवित् ।।34।।

ஹ்ரு«த³யே சித்தஸம்°வித் || 34||

ஹ்ரு«த³யே = ஹ்ருதயத்தில் (ஸம்யமம் செய்யின்); சித்த ஸம்°வித் = சித்தத்தின் அறிவு உண்டாகிறது.

இங்கு சொல்லப்படும் ஹ்ருதயம் பௌதிக ஹ்ருதயம்தான். (மார்பில் தாமரை மொக்கு போல் தலைகீழாக தொங்கும் மாம்ஸ பிண்டம்.)

Thursday, January 20, 2011

சித்தம் நிலை பெற உபாயம், சித்த புருஷர்களை காண:



कूर्मनाड्यां स्थैर्यम् ।।31।।

கூர்மநாட்³யாம்° ஸ்தை²ர்யம் || 31||

ஆமை போன்றது நெஞ்சுக்குழிக்கு (கண்டகூபத்துக்கு) கீழ் உள்ள நாடி. அதில் ஸம்யமம் செய்ய மனம் வெளியே சஞ்சரிக்காது. ஆமை உடலை உள்ளிழுத்துக்கொள்வது போல் மனம் உள்ளிழுக்கப்படும்.

  मूर्धज्योतिषि सिद्धदर्शनम् ।।32।।

மூர்த⁴ஜ்யோதிஷி ஸித்³த⁴த³ர்ஶநம் || 32||

மூர்த⁴ ஜ்யோதிஷி = உச்சந்தலையில் (பிரம்ம ரந்திரத்தில்) [ஸம்யமம் செய்ய]; ஸித்³த⁴ த³ர்ஶநம் = சித்த புருஷர்களின் தரிசனம் கிடைக்கிறது.

Wednesday, January 19, 2011

ஆந்தர சித்திகள்:



  नाभिचक्रे कायव्यूहज्ञानम् ।।29।।

நாபி⁴சக்ரே காயவ்யூஹஜ்ஞாநம் || 29||

நாபி⁴ சக்ரே = நாபியில் உள்ள சக்கரத்தில் (ஸம்யமம் செய்ய); காய வ்யூஹ = உடலைப்பற்றிய; ஜ்ஞாநம் = ஞானம் உண்டாகிறது.
நாபிச்சக்ரம் உடலின் நடுவில் இருந்து கொண்டு உடல் முழுதும் பரவியுள்ள நாடிகளுக்கு ஆதாரமாக உள்ளது. எனவே இதி ஸம்யமம் செய்ய முழு உடலைப்பற்றிய ஞானம் கிடைக்கும்.

  பசி, தாகங்களை நீக்குதல்:

कण्ठकूपे क्षुत्पिपासानिवृत्तिः ।।30।।

கண்ட²கூபே க்ஷுத்பிபாஸாநிவ்ரு«த்தி​: || 30||

கண்ட²கூபே =உள் நாக்குக்கு கீழே உள்ள கிணறு போன்ற இடத்தில் (ஸம்யமம் செய்ய); க்ஷுத் பிபாஸா = பசி, தாக; நிவ்ரு«த்தி​: = நீக்குதல் கிடைக்கிறது.

திருவிடை மருதூர் தேரோட்டம்.



From Tiruvidaimarutur

From Tiruvidaimarutur


Tuesday, January 18, 2011

நக்ஷத்திரங்கள்



चन्द्रे ताराव्यूहज्ञानम् ।।27।।
சந்த்³ரே தாராவ்யூஹஜ்ஞாநம் || 27||

சந்த்³ரே =சந்திர மண்டலத்தில் (ஸம்யமம் செய்ய); தாரா வ்யூஹ ஜ்ஞாநம் = நக்ஷத்திரங்களின் தனித்தனியான நிலைகளின் ஞானம் ஏற்படுகிறது.

  ध्रुवे तद्गतिज्ञानम् ।।28।।
த்⁴ருவே தத்³க³திஜ்ஞாநம் || 28||

த்⁴ருவே =துருவ நக்ஷத்திர மண்டலத்தில் (ஸம்யமம் செய்ய); தத்³க³தி = நக்ஷத்திரங்களின் சஞ்சாரம் ஜ்ஞாநம் (குறித்த) ஞானம் (ஏற்படுகிறது.)

இது வரை வெளியே உள்ளவற்றில் ஸம்யமம் செய்வதன் பலன்களை சொன்னார். இனி உள்ளே உள்ளவை. இவை ஆந்தர சித்திகள் ஆகும்.

Monday, January 17, 2011

பத லோகங்களில் ஞானம்:


भुवनज्ञानं सूर्ये संयमात् ।।26।।

பு⁴வநஜ்ஞாநம்° ஸூர்யே ஸம்°யமாத் || 26||

பு⁴வநஜ்ஞாநம்° = புவனங்களைப்பற்றிய அறிவு; ஸூர்யே =சூரியனில்; ஸம்°யமாத் = ஸம்யமம் செய்யின்.

சூர்ய மண்டலத்தில் ஸம்யமம் செய்யும் யோகிக்கு எல்லா உலகங்களையும் பற்றிய ஞானம் உண்டாகிறது.

இப்படியே எந்த இடத்தில் ஸம்யமம் செய்கிறோமோ அந்த இடத்தை பற்றி முழுதும் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.
---
புவனங்கள் ஏழு. பூமியின் சரியான நடுவில் மஹாமேரு பர்வதம் தூண் போல் உள்ளது. (north pole) மேருவின் பின் பக்கம் பூலோகம். அடியில் அவீசி நரகம். இதை அடுத்து வரிசையாக மஹாகாலம், அம்பரீஷம், ரௌரவம்,மஹாரௌரவம், கால சூத்திரம், அந்ததாமிஸ்ரம் என 6 நரகங்கள். மஹாகாலம் பூமியிலும்; அம்பரீஷம் நீரிலும்; ரௌரவம் நெருப்பிலும் மஹாரௌரவம் வாயுவிலும்; காலசூத்திரம் ஆகாசத்திலும்; அந்ததாமிஸ்ரம் தமஸ் ஆகிய இருளிலும் உள்ளன. இவற்றுக்கு பாப கர்மாக்களின் பலனை அனுபவிக்க ஜீவர்கள் செல்கின்றனர். புண்ணிய கர்மாக்களின் பலனாகிய சுகத்தை எல்லோரும் விரும்புகின்றனர்; ஆனால் புண்ணிய கர்மாக்களை செய்வதில்லை. பாப கர்மாக்களின் பலனாகிய துக்கத்தை எல்லோரும் வெறுக்கின்றனர்; ஆனால் பாப கர்மாக்களை ஆவலுடன் செய்கின்றனர்.
மேலும் மஹாதலம், ரஸாதலம், அதலம், சுதலம், விதலம், தலாதலம், பாதாலம் என 7 பாதாலங்கள் உள்ளன.

Friday, January 14, 2011

யானை பலம் பெறுதல், தூர திருஷ்டி:



बलेषु हस्तिबलादीनि ।।24।।

ப³லேஷு ஹஸ்திப³லாதீ³நி || 24||

ப³லேஷு = (யானை, கருடன், வாயு ஆகியோரின்) பலத்தில் ஸம்யமம் செய்ய; ஹஸ்தி ப³லாதீ³நி = அவற்றின் பலம் கிடைக்கும். இயற்கையிலேயே சித்தம் மிக்க பலம் வாய்ந்தது. ஸம்யமம் சேர்ந்தால் சாதிக்க இயலாதது ஏதுமில்லை.

  प्रवृत्त्यलोकन्यासात्सूक्ष्मव्यवहितविप्रकृष्टज्ञानम् ।।25।।

ப்ரவ்ரு«த்த்யலோகந்யாஸாத்ஸூக்ஷ்மவ்யவஹிதவிப்ரக்ரு«ஷ்டஜ்ஞாநம் || 25||

ப்ரவ்ரு«த்த்ய லோக ந்யாஸாத் = (பாதம் 1 சூத்திரம் 36) ஜ்யோதிஷ்மதீ ப்ரவ்ருத்தியில் ஜ்யோதிசில் ஸம்யமம் செய்யின்; ஸூக்ஷ்ம வ்யவஹித = ஸுக்ஷ்மமாக உள்ளவற்றில்; விப்ர க்ரு«ஷ்ட ஜ்ஞாநம் = அறிவு உண்டாகிறது.
வெகு நுண்ணிய பரமாணு, வெகு தூரத்தில் உள்ள மஹாமேரு, வெகு ஆழத்தில் உள்ள புதையல்கள் இவற்றின் தெளிந்த அறிவு உண்டாகிறது.

Thursday, January 13, 2011

மித்ரத்தன்மையும் கருணையும்:



 मैत्र्यादिषु बलानि ।।23।।

மைத்ர்யாதி³ஷு ப³லாநி || 23||

மைத்ரி ஆதி³ஷு =மைத்ரீ முதலானவற்றில்; (ஸம்யமம் செய்யின்) ப³லாநி = பலவிதம் (பலவிதமான சக்திகள் உண்டாகும்)

முன்பு உலகில் சுகமாக இருக்கும் சத்துக்களிடம் மித்ரத்தன்மை வேண்டும் என்று பார்த்தோம் இல்லையா? அப்படி செய்யும் யோகி அதில் ஸம்யமம் செய்யின் உலகில் உள்ள எல்லா ஜீவர்களையும் சுகம் அனுபவிப்போராக செய்யும் திறன் உண்டாகிறது.
துக்கமுளோரிடன் உள்ள துக்கத்தை போக்க வேண்டுமென பாவிப்பவனுக்கு துக்கத்தில் இருந்தோ அதன் காரணங்களில் இருந்தோ அப்பிராணிகளை காப்பாற்றும் திறன் உண்டாகின்றது. புண்ணியம் செய்வோரிடம் திருப்தியை எண்ணுபவனுக்கு எதிலும் நடுநிலை வகிக்கும் திறன் உண்டாகின்றது. பாபிகளிடம் சித்தம் செல்வது ஸம்யமம் ஆகாது. அதனால் பலனில்லை.


Wednesday, January 12, 2011

மரணம் எப்போது என அறிதல்...



सोपक्रमं निरुपक्रञ्च कर्म तत्संयमादपरान्तज्ञानमरिष्टेभ्यो वा ।।22।।
ஸோபக்ரமம்° நிருபக்ரஞ்ச கர்ம தத்ஸம்°யமாத³பராந்தஜ்ஞாநமரிஷ்டேப்⁴யோ வா || 22||

ஸோபக்ரமம்° = இப்போது பலன் தரும் நிலையில் உள்ளது; நிருபக்ரஞ்ச = வேறு காலத்தில்தான் பலன் கொடுக்கும், இப்போது கொடுக்காதது; கர்ம (என) கர்மம் (இரு வகையாகும்) தத் ஸம்°யமாத்³= அதில் ஸம்யமம் செய்வதில் இருந்து; அரிஷ்டேப்⁴யோ வா = (அல்லது) தோன்றும் அசுபக்குறிகளில் இருந்தோ; அபராந்த ஜ்ஞாநம் =மரணம் எப்போது என்ற ஞானம் ஏற்படுகிறது.


வெய்யிலில் உலர்த்திய துணி போல பலன் கொடுக்க தயாராக உள்ள கர்மா உடனடியாக பலனை கொடுத்துவிடும். மற்றபடி காற்று, வெய்யில் இல்லாத இடத்தில் உலர்த்திய துணி போல பலன் கொடுக்க தயாராக இல்லாத கர்மா உடனடியாக பலனை கொடுக்க முடியாது. அது அதன் காலக்கிரமத்தில்தான் கொடுக்கும். அது வரை அது சித்தத்தில் ஸம்ஸ்கார ரூபமாகவே இருக்கும். இந்த கர்மாக்கள் எப்போது பலன் தரும் என்பதை அறிவதன் மூலம் ஒருவன் தன் ஆயுளின் முடிவு காலத்தை அறிந்துகொள்ளலாம்.

சோப கர்மத்தை அறியும் யோகி அதை சீக்கிரம் அனுபவித்து முடிக்க முயற்சி செய்வான். அப்போதுதானே கணக்கு தீர்ந்து பூஜ்யத்துக்கு வந்து மோக்ஷம் கிடைக்கும்? ஏதேனும் கர்மம் அனுபவிக்க பாக்கி இருக்கும் வரை மறு பிறவி இருந்து கொண்டே இருக்கும். அதனால் யோகி பல உடல்களை எடுத்து அனுபவித்து தீர்த்துவிடுவான். ஒரே உடலால் அத்தனையும் அனுபவிக்க உடல் தாக்குப்பிடிக்காது.

யோக பயிற்சி இல்லாதவரும் தன் கடைசி காலம் நெருங்குவதை தெரிந்துகொள்ளலாம்.
கைகளால் காதுகளைப் பொத்திக்கொள்ள பிராணன்களின் சப்தம் கேட்காமை; நிமித்தமின்றி யமதூதர் போன்றோரை காண்பது; நிமித்தமின்றி சொர்கம் போன்றவற்றை காண்பது - இவை அசுப குறிகளாகும்.

மேலும் வைத்ய ரத்னாகரம் கூறுகிறது:
தனது நாக்கையும் மூக்கின் நுனியையும் இரண்டு புருவங்களின் மத்தியையும் ஆயுளின் இறுதியை எட்டியவர் காண்பதில்லை. அதாவது மரணம் சமீபித்துவிட்டால் இவற்றை காண முடியாது.
திடீரென பெருத்தும் இளைத்தும் திடீரென வேறு மாதிரி மாறி விடுபவர்களும் 6 மாதங்களுக்குள் இறப்பர்.
நல்ல குளிரால் பீடிக்கப்பட்டு இருந்தாலும், நல்ல சரீர புஷ்டி இருப்பினும் எந்த மனிதனின் நெற்றியில் பனி போன்ற வியர்வை உண்டாகிக் கழுத்துக் குழியில் தங்கி அங்கிருந்து மார்பு வரை வழிந்தோடுகிறதோ அவன் விரைவில் இறப்பான்.
இரவில் எரிச்சலும் பகலில் குளிரும் கண்டத்தில் சிலேஷ்மமும் (சளி) நாக்கில் வறட்சியும், கண்களில் குங்குமம் போன்ற சிவப்பும் நாக்கு கருமையடைந்து எப்போதும் நீர் வடிதலும் நரம்புகள் எப்போதும் ஸ்தூலமாகவும் ஸூக்ஷ்மமாகவும் இருப்பதும் மரண காலம் நெருங்கிவிட்டதை குறிக்கும்.

Tuesday, January 11, 2011

கண்ணுக்கு தெரியாமல்...



  कायरूपसंयमात्तद्ग्राह्यशक्तिस्तम्भे चक्षुष्प्रकाशसंप्रयोगेऽन्तर्धानम् ।।21।।
காயரூபஸம்°யமாத்தத்³க்³ராஹ்யஶக்திஸ்தம்பே⁴ சக்ஷுஷ்ப்ரகாஶஸம்°ப்ரயோகே³'ந்தர்தா⁴நம் || 21||

காய ரூப ஸம்°யமாத் = தன் உடலின் ரூபத்தில் ஸம்யமம் செய்வதால்; தத்³ க்³ராஹ்ய ஶக்தி = அதை கிரகிக்கும் சக்தி; ஸ்தம்பே⁴ = நின்றுவிடும்; சக்ஷுஷ் ப்ரகாஶஸம்° ப்ரயோகே³ = கண்களின் ப்ரகாச சக்தி சேராமையால்; அந்தர்தா⁴நம் = கண்ணுக்கு தெரியாமல் ஆகிறது.

நம் கோட்பாடுகளின் படி ஒரு பொருளை நாம் பார்க்க வேண்டுமானால் நம்மிலிருந்து ஒரு சக்தி கிளம்பி அந்த பொருளை அடைந்து அதனுடன் சேர வேண்டும். அப்போதுதான் அந்த பொருள் காணப்படும். தன் உடலில் ஸம்யமம் செய்வதால் அப்படி ஒரு சக்தி தன்னுடன் சேர உடல் மறுக்கும். அதனால் அந்த உடல் பிறர் கண்களுக்குத் தெரியாது. இது போலவே எல்லா இந்திரியங்களும். ஓசை, தொடுதல், சுவை, வாசனை ஆகியவற்றில் ஸம்யமம் செய்து அவற்றை பிறருக்கு புலப்படாதபடி மறைக்க இயலும். இப்படியும் சித்திகள் உண்டு.

Monday, January 10, 2011

பிறரின் சித்தத்தில் ஸம்யமம்..



 प्रत्यस्य परचित्तज्ञानम् ।।19।।
ப்ரத்யஸ்ய பரசித்தஜ்ஞாநம் || 19||

ப்ரத்யஸ்ய =ராகம் முதலானவை குடி கொண்டுள்ள தன் சித்த விருத்தியை ஸம்யமம் செய்ததால்; பரசித்த=மற்ற சித்தங்களின்; ஜ்ஞாநம் = அறிவு ஏற்படுகிறது.
பிறர் மனது எத்தகையது என்பதை அறிதலானது, ராகம் முதலானவை குடி கொண்டுள்ள தன் ஸம்ஸ்காரங்களை ஸாக்ஷாத்கரிப்பதால் ஏற்படுகிறது. அட! அதுதான் போன சூத்திரத்தில சொல்லிட்டாரே? ஏன் திருப்பி?

  न च तत्सालम्बनं तस्याविषयीभूतत्वात् ।।20।।
ந ச தத்ஸாலம்ப³நம்° தஸ்யாவிஷயீபூ⁴தத்வாத் || 20||

ஸ ஆலம்ப³நம்° = ராகம் முதலியன குடிகொண்ட; தஸ்ய = அந்த ஸம்யமத்துக்கு; அவிஷயீ பூ⁴தத்வாத் = விஷயமாக ஆகாததால்; ந ச தத் = அந்த பிறருடைய சித்தம் ஸம்யமத்தால் அறியப்பட மாட்டாது.
பிறர் சித்தம் சுத்தமாக இல்லாமையால் அதில் ஸம்யமம் செய்ய இயலாது; பொதுவாக அதை அறியலாமே தவிர அதில் ஏற்படும் சலனங்களை அறிய முடியாது.

குழப்புதா?
தெரிந்த ஏதோ ஒரு விஷயத்தில்தான் ஸம்யமம் செய்ய முடியும். தெரியாத விஷயத்தில் செய்ய இயலாது.
தன் சம்ஸ்காரத்தில் ஸம்யமம் செய்யும் போது அதே போல் சம்ஸ்காரம் இருக்கும் பிறரின் சித்தத்தில் ஸம்யமம் ஏற்பட முடியும். அப்போது அவருடைய சித்தத்தை அறிய முடியும்.
ஆனால் தன் சித்தத்தில் ஏற்படுவதற்கு மாறான விஷயங்கள் பிறர் மனதில் ஏற்பட்டால் அதை அறிய முடியாது.
ஒரு காட்சியை பார்க்கிறோம். நமக்கு ஏற்படும் அதே மனத்தாக்கம் பிறருக்கும் ஏற்படுமேயானால் அதை நாம் அறிந்து கொள்ளலாம். மற்றவருக்கு வேறு மனத்தாக்கம் ஏற்பட்டால் அதை அறிய முடியாது.

Friday, January 7, 2011

முற்பிறவியை அறியும் உபாயம்:



संस्कारसाक्षात्करणात्पूर्वजातिज्ञानम् ।।18।।

ஸம்°ஸ்காரஸாக்ஷாத்கரணாத்பூர்வஜாதிஜ்ஞாநம் || 18||

ஸம்°ஸ்கார =(சித்தத்தில் உள்ள) ஸம்ஸ்காரத்தை; ஸாக்ஷாத் கரணாத் = ஸாக்ஷாத்கரிப்பதால்; பூர்வ ஜாதி ஜ்ஞாநம் = முன் பிறவி குறித்த ஞானம் (உண்டாகின்றது)

சித்தத்தில் உள்ள வாசனைகளில் ஒன்று நினைவை மட்டும் தரும். இன்னொன்று பிறப்பு, ஆயுள், சுகம், துக்கம் ஆகிய அனுபவங்களை தரக்கூடியது. கோடி கல்பங்கள் ஆனாலும் ஒருவரது செய்கைகள் அதற்கான பலனைத்தராது தேய்வதில்லை (नाभुक्तम् क्षीयते कर्म कोटि शतैरपि - நாபு4க்தம் க்ஷீயதே கர்ம கோடி ஶதைரபி). ஒருவரால் ஒரு சமயம் செய்யப்பட்ட செய்கைகள் ஸம்ஸ்கார ரூபத்தில் தன் பலனைத் தரும் வரையில் அசைவற்று இருக்கும் (कताचित् स्वक्रुतम् कर्म कूटस्तमिव तिष्टति - கதாசித் ஸ்வக்ருதம் கர்ம கூடஸ்தமிவ திஷ்டதி)
பொதுவாகவே எவன் எதில் ஸம்யமம் செய்கிறானோ அங்குள்ளவற்றை ஸம்யம பலத்தால் அவன் அறிகிறான்.
இப்படிப்பட்ட ஸம்ஸ்காரங்களில் ஸம்யமம் செய்து அவற்றை நேரில் காண்பவனுக்கு எந்த அனுபவம் இந்த ஸம்ஸ்காரத்தை கொடுத்ததோ அந்த அனுபவம் என்ன என்று தெரிகிறது. இதுவே பூர்வ ஜன்ம ஞானமாகும். யோகி இதே போல மற்றவரின் ஸம்ஸ்காரத்தில் ஸம்யமம் செய்தால் அவருடைய பூர்வ ஜன்மத்தைப்பற்றி அறிகிறார்.

Thursday, January 6, 2011

எல்லா ப்ராணிகளின் சப்தம் குறித்த ஞானம்...



शब्दार्थप्रत्ययानामितरेतराध्यासात्संकरस्तत्प्रविभागसंयमात्सर्वभूतरूतज्ञानम् ।।17।।
ஶப்³தா³ர்த²ப்ரத்யயாநாமிதரேதராத்⁴யாஸாத்ஸம்°கரஸ்தத்ப்ரவிபா⁴க³ஸம்°யமாத்ஸர்வபூ⁴தரூதஜ்ஞாநம் || 17||

ஶப்³த³= சப்த; அர்த² = பொருள்; ப்ரத்யயாநாம் = சப்தம், அர்த்தம் இவற்றால் புத்தியில் ஏற்படும் விருத்தி; இதரேதர அத்⁴யாஸாத் ஸம்°கர = இரண்டாலும் ஏற்படும் குழப்பம்; தத் ப்ரவிபா⁴க³ =இந்த மூன்றும் தனித்தனி என அறிந்து; ஸம்°யமாத் =ஸம்யமம் செய்ய; ஸர்வபூ⁴த ரூத ஜ்ஞாநம் = எல்லா ப்ராணிகளின் சப்தம் குறித்த ஞானம் (ஏற்படுகிறது).
பசுவை கொண்டு வா என்ற சொற்களை கேட்பதாக வைத்துக்கொள்வோம். பசு என்று கேட்டதும் அந்த சப்தம் என்ன? அர்த்தம் என்ன? ஞானம் என்ன என்று கேட்டால் பசு என்பதே பதிலாகும். ஆனால் பசு என்பது ஒரு சப்தம் மட்டுமே: அதை கேட்டதும் உண்டாவது இன்ன பொருள் என்பதும் கற்பிக்கப்பட்டதே; அந்த சப்தம் இன்னதை குறிக்கிறது என்பதும் கற்பிக்கப்பட்டதே. இப்படி கற்பிப்பது சித்தத்தின் வேலை.
எல்லாம் ஒன்றாகவே இருப்பது போல தோற்றத்தை கொடுத்தாலும் அவற்றை பிரித்து தனித்தனியே ஸம்யமம் செய்பவன் உலகில் உள்ள எல்லா ப்ராணிகளின் சப்தத்தையும் அந்த சப்தத்தின் பொருளையும் ஞானத்தையும் அறிவான்.

ஸ்ரீமத் ராமாயணத்தில் கேகய ராஜா இப்படிப்பட்ட சித்தி அடைந்திருந்ததாக கதை உள்ளது. அவன் ராணியுடன் அந்தரங்கமாக இருக்கையில் திடீரென்று சிரிக்கிறான். ஏன் என்று அவனது மனைவி கேட்கையில் கட்டிலின் கீழ் இரண்டு எறும்புகள் பேசிக்கொண்டு இருப்பதை கேட்டதாயும் அதனால் சிரிப்பு வந்ததாயும் சொல்கிறான். அது என்ன என்று கேட்ட மனைவியிடன் "போக அங்கமான ஸத்ய ப்ரதிஷ்டை முதலியவற்றில் சித்தி அடைந்த ஒரு பெரியவர் பிராணிகள் பேசுவதை அறியும் முறையை உபதேசித்து இருக்கிறார். அதை வெளியில் சொல்ல முடியாது. அப்படி சொன்னால் உயிருக்கு ஆபத்து வருமென சொல்லி இருக்கிறார்" என்கிறான். இது போல பல பழைய கதைகளிலும் காணலாம்.

Wednesday, January 5, 2011

முக்காலத்தையும் அறிந்து கொள்ள....



परिणामत्रयसंयमादतीतानागतज्ञानम् ।।16।।
பரிணாமத்ரயஸம்°யமாத³தீதாநாக³தஜ்ஞாநம் || 16||

பரிணாம த்ரய= (தர்ம, லக்ஷண, அவஸ்தை என்ற) மூன்று பரிணாமங்களில்; ஸம்°யமாத்³ = ஸம்யமம் செய்ய; அதீத அநாக³த = இறந்த காலத்திலுள்ளதும், எதிர்காலத்தில் உள்ளதும் (பற்றிய); ஜ்ஞாநம் = ஞானம் (கிடைக்கும்)

சித்தம் இயற்கையில் சத்வமானது. அஞ்ஞானம் என்கிற அழுக்கால் மூடப்பட்டதால் இயற்கை குணம் வெளிப்படாமல் இருக்கிறது. ஸம்யமத்தால் இந்த அழுக்கை போக்கினால் இந்திரியங்களின் உதவி இல்லாமலே சித்தம் விஷயங்களை அறிந்துகொள்ளும்.
[ஸம்யமம்? முன்னேயே பார்த்தோம். தாரணை, த்யானம், ஸமாதி - இம் மூன்றும் ஒரே விஷயத்தில் செய்யப்படும் போது ஸம்யமம் எனப்படும். இந்த சொல் இனி அடிக்கடி வரும். ஆகையால் சரியாக புரிந்து கொள்ளுங்கள்.]

தர்மீயை பொறுத்த விஷயங்கள் எதிர்காலத்தில் இருந்துவிட்டு, நிகழ்காலத்துக்கு வந்து பின் இறந்த காலத்துக்கு சென்றுவிடுகிறது. தாரணை, த்யான, ஸமாதிகளால் ஸம்யமம் செய்ய முக்காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.

இப்படி மேலே இன்னும் பல விஷயங்களை சொல்லிக்கொண்டு போவர். கேட்க ஆசையாக இருந்தாலும் அடைய வேண்டும் என்ற உந்துதல் இருந்தாலும் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஸம்யமம் என்று ஒன்றைச்சொல்லுகிறார்களே அதுதான் நமக்கு பிரச்சினை. இது பல காலம் செய்த முறையான பயிற்சியால் உண்டாவது. There are no short cuts. யமம் முதலான வெளிமுகப் பயிற்சிகளும் தாரணை முதலான உள் முகப்பயிற்சிகளும் சரியாக செய்தால்தான் இவை சித்திக்கும். த்யானம் என்பது வெளி சிந்தனையே இல்லாமல் இருப்பது என்று சொல்லும் போது நாம் போக வேண்டிய தூரம் எவ்வளவு என்று அறிந்துகொள்ளலாம். இலக்குடன் முழுக்க முழுக்க ஒன்றிவிடுவதே ஸம்யமமாகும். இது நம்மால் சாதாரணமாக முடியாது. எதில் அப்படி ஒன்றுகிறோம் என்பதைப் பொறுத்து என்ன சித்திக்கும் என்று சொல்லப்படுகிறது.

Tuesday, January 4, 2011

தர்மீயான வஸ்துவுக்கு மாறுதல் உண்டாக காரணம்:



क्रमान्यत्वं परिणामान्यत्वे हेतुः ।।15।।

க்ரமாந்யத்வம்° பரிணாமாந்யத்வே ஹேது​: || 15||

க்ரமாந்யத்வம்° = தோன்றும் முறையில் உள்ள வேறுபாடானது; பரிணாமாந்யத்வே = மாறுதலடையும் தர்மங்களில் வேறுபாட்டுக்கு; ஹேது​:= ஏதுவாகும். (நினைவாக; தெரிவிப்பதாக; அந்த விஷயமாக அறிவை உண்டாக்குவதாக.)

தோன்றும் முறையில் உள்ள வேறுபாடானது மாறுதலடையும் தர்மங்களில் வேறுபாட்டுக்கு ஏதுவாகும்.
காரணம் காரியமாகும் போது ஒரே மாதிரி மாறுவதில்லை. இது ஏன் என்றால் தோன்றும் முறையில் உள்ள வேறுபாட்டால்.

மண் பொடியாக இருக்கலாம் அல்லது உருண்டையாக இருக்கலாம். நீரின் ஓட்டம் கல்லை அரித்து அரித்து மண் பொடி உண்டாகிறது. அவை திரண்டு மண் உருண்டை ஆகலாம். இது தோன்றும் முறை - கிரமம். இந்த தோன்றும் முறையில் உள்ள வேறுபாடானது அதன் தோற்றத்தில் -பொடியாக இருப்பதற்கும், உருண்டையாக இருப்பதற்கும் - வேறு பாட்டை உண்டு செய்கிறது.

மண்ணில்; புதைந்த மரம் கரியாகிறது. ஆனால் வேறுவிதமாக இது உண்டானால் - அதிக அழுத்தம் உண்டானால் அதுவே வைரமாக ஆகிறது. தோன்றும் முறையில் வேறுபாடு மாறுதல் என்ன என்பதை நிர்ணயிக்க காரணமாகிறது.

இதே போல் லக்ஷண பரிணாமமும் அவஸ்தா பரிணாமமும்.


PG: குதிரில் கொட்டி வைத்த நெல் அப்படியே விட்டால் காலப்போக்கில் பொடியாகிவிடுகிறது. (சூர்ணாவஸ்தை) இது எப்போது நிகழ்கிறது? எப்போதுமே நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. தானியத்தில் இந்த பரிணாமம் நடந்துகொண்டேதான் இருக்கும். திடு திப்பென்று தான்யம் பொடியாகிவிடுவதில்லை.

எப்போதும் நிலையாக இருப்பது தர்மீ மட்டுமே. சொரூபமோ, லக்ஷணமோ, அவஸ்தையோ மாறிக்கொண்டேதான் இருக்கும். காமம், சுகம் போன்ற சில பரிணாமங்கள் நேரில் அனுபவத்தால் தெரிகிறது. ஆனால் சில பரிணாமங்கள் பார்க்க முடியாதவை. ஆகமம், அனுமானம் போன்றவற்றால் ஊகித்து அறிய வேண்டியன.
அப்படிப்பட்ட மறைவான மாற்றங்கள் கீழ் கண்டவாறு பிரிக்கப்படுகிறது:
1. நிரோதம். 2. கர்மம். 3.ஸம்ஸ்காரம். 4. பரிணாமம். 5. ஜீவனம். 6. சேஷ்டை. 7. சக்தி.
இவ்வேழு விருத்திகளும் பரோக்ஷமானவை (காண இயலாதவை).
நிரோதம், ஸம்ஸ்காரம், பரிணாமம் பற்றி முன்பே பார்த்துவிட்டோம்.
புண்ணியமும் பாபமும் கர்மங்கள் ஆகும்.
சித்தம் முக்குண வடிவம்; அதில் ஒவ்வொரு கணமும் மாறுதல் நடப்பது அனுமானத்தாலேயே அறிய வேண்டி இருக்கிறது.
மூச்சு வருகிறது என்பதில் இருந்து உயிர் இருக்கிறது என - ஜீவனம்- ஊகித்து அறியப்படும்.
சரீரங்களின் சேஷ்டையில் இருந்து ஊகித்து அறியக்கூடிய சித்தத்தின் க்ரியைதான் சேஷ்டை. ஒருவன் முகத்தைப்பார்த்து இவன் கண்ணுல குறும்பு மின்னுது. ஏதோ குறும்பு செய்ய சிந்தனை ஓடுதுன்னு அறிகிறோம்.
கார்யங்களின் ஸூக்ஷ்ம -இருப்பே - அவஸ்தையே சக்தி.
---
இது வரை ஸம்யமங்களின் தர்மங்களை பார்த்தோம், இனி ஸம்யமத்தால் விஷய வசீகார ஞானம் பெறும் சித்திகள் சொல்லப்படும்.


Monday, January 3, 2011

மேற்சொன்ன பரிணாமங்களுடைய தர்மீ:



 शान्तोदिताव्यपदेश्यधर्मानुपाती धर्मी ।।14।।
ஶாந்தோதி³தாவ்யபதே³ஶ்யத⁴ர்மாநுபாதீ த⁴ர்மீ || 14||

ஶாந்த = ஒரு காலத்தில் வேலை செய்து முடித்த; உதி³த = தற்காலத்தில் புதிய வேலை செய்து கொண்டுள்ள; அவ்யபதே³ஶ்ய = காரியத்துக்கு சக்தியாக இருக்கிற; த⁴ர்ம =தர்மத்தை; அநுபாதீ தொடர்ந்து அனுபவிப்பது; த⁴ர்மீ =தர்மீ என்கிற வஸ்துவாகும்.

 ஒரு காலத்தில் வேலை செய்து முடித்த, தற்காலத்தில் புதிய வேலை செய்து கொண்டுள்ள காரியத்துக்கு சக்தியாக இருக்கிற தர்மத்தை தொடர்ந்து அனுபவிப்பது தர்மீ என்கிற வஸ்துவாகும்.

தர்மீ என்பது என்ன? அது ஒரு வஸ்து. எந்த காரியம் நடக்கவும் ஒரு சக்தி பின்னால் வேண்டி இருக்கிறது. அது இல்லாமல் காரியம் நடப்பதில்லை. காரியம் மாறிக்கொண்டே இருந்தாலும் அதன் பின் உள்ள சக்தி அப்படியே இருக்கிறது. அந்த காரியம் நடக்க காரணமாக இருப்பது இந்த தர்மீதான். இது காரியம் நடக்காத போதிலும் மறைந்து இருக்கிறது. தகுந்த நேரம் வரும் போது அது வெளிப்படும்.

யோக சித்தாந்தப்படி காரணம் என்பது தர்மீ; கார்யம் தர்மம். மண் தர்மீ; குடம் தர்மம். காரியம் முடிந்தாலும் காரணம் எஞ்சும். குடம் உடைந்தாலும் மண் எஞ்சும்.
காரணத்தில் காரியம் சக்தி ரூபமாக மறைந்துள்ளது. சரியான நேரத்தில் வெளிப்படுகிறது. எந்த காரணத்தில் எந்த காரியம் உள்ளதென நம்மால் பிரித்து அறிய இயலாது. இப்படி சக்தியாக மட்டும் இருக்கும் நிலை அவ்யபதேச்யநிலையாகும்.