Pages

Wednesday, April 28, 2010

விக்ருதி 2


முன்னேயே முகமூடி பத்தி பேசின போது நாம ஜபத்தை இடைவிடாம செய்வது பத்தி கொஞ்சம் பேசினோம். ஒரு நாளில இதுக்குன்னு கொஞ்ச நேரம் ஒதுக்கி செய்து வர அதுவே தன் போக்கை பிடிச்சுக்கும். தானே ஓட ஆரம்பிக்கும்.
எதுலேயும் ஒரே வழின்னு எதுவும் இல்லை. ஒரே விஷயத்துக்கு பலப்பல வழிகள் இருக்கும். ஒவ்வொண்ணு ஒவ்வொத்தருக்கு ஒத்து வரும். அது போல இன்னொரு வழியையும் இப்ப பார்க்கலாம்.

பலருக்கும் நேரம் கொடுத்து உட்கார்ந்து ஜபம் செய்ய நேரமில்லை (ன்னு நினைக்கிறாங்க!); பொறுமை இல்லை; உடம்பு வணங்கறதில்லை. இப்படிப்பட்டவங்களுக்கு இந்த வழி பொருத்தமா இருக்குமோ என்னவோ?

யாரானாலும் எதுவும் செயலில்லாமல் இருக்கறதில்லை. குறிப்பா ராஜஸம்  அதிகமானவங்களுக்கு  ஏதேனும் வேலை செய்து கொண்டே இருக்கணும். அதான் இயல்பு. இதை கொஞ்சம் மாத்தி சாத்விகத்தை அதிகப்படுத்தறது செய்ய வேண்டிய விஷயமானாலும் அது கொஞ்சம் சிரம சாத்தியமே.

வேலை ஏதேனும்  செய்து கொண்டுதான் இருப்போம் ன்னு ஆன பிறகு அந்த வேலைகளோட  இறைவனை தொடர்பு செய்து பார்க்கலாமா?
சாதாரணமான, மலினமான விஷயங்களோட இறைவனை சம்பந்திக்க மனசு  ஒப்பாது.

இதை கொஞ்சம் ஆராயலாம்.

என்ன செய்ய உத்தேசிச்சு ஆரம்பிக்கிறோம் என்பது ஒரு முக்கிய விஷயம். இததான் சங்கல்பம் என்கிறாங்க. பூஜை செய்யப்போறேன் ன்னு சங்கல்பம் செய்யலாம். இதோட வேற விஷயத்தை சேர்க்கிறது சரி இல்லை. பூஜை செய்கிறதா சங்கல்பம் பண்ணிட்டு இன்னிக்கு என்ன டிபன்னு யோசனை செய்கிறது சரியில்லை.
ஹோமம் செய்யறேன்னு சங்கல்பம் செய்துவிட்டு மற்றபடி பேசிக்கொண்டு  இருந்தா தோஷம்ன்னு சொல்லறாங்க. ஹோமம் செய்தா செல்வம் கிடைக்கும்ன்னா  ஹோமம் செய்யும்போது வேற விஷயம் பேசினா செல்வம் குறைந்து போகுமாம். இது போல பகவானோட விஷயத்துல மத்ததை கலக்குறதுல சுவாரசியம் இல்லை. தப்பும் கூட.

இந்த விஷயத்தை சொல்லத்தான் புத்த இளம் துறவிகளோட கதை வந்தது. ப்ரார்த்தனை செய்வதுன்னு சங்கல்பம்ன்னா அப்ப சாப்பிடறது குற்றம். சாப்பிடுவோம்  என்கிறது சங்கல்பமானா அப்ப பகவானை பிரார்த்தனை செய்வது குற்றமில்லை.
(நீங்களும் இப்படி செய்தா மனைவிக்கு தெரியாம பாத்துக்குங்க. சமையல்
சரியில்லைன்னு கடவுளே காப்பாத்துன்னு வேண்டிக்கிறதா  நினைக்கப்போறாங்க!)

அப்ப மத்த விஷயங்களில் பகவானை கலக்கலாமா? சந்தேகமே இல்லாம ஆமாம் என்கிறதே பதில். வெகு சர்வ சாதாரணமாக அனேகமா எந்த  ஓட்டுனரும் வண்டி எடுக்கும்போது ஒரு சில வினாடிகளாவது சாமி கும்பிடாம எடுக்கறதில்லை.

அது போல பகவத் விஷயங்களில் மத்த விஷயங்களை கலக்கிறது மத்த விஷயங்களில் பகவத் விஷயத்தை கலக்கிறதும் ஒன்று போல தோன்றினாலும் ஒன்று இல்லை.

அக்னிஹோத்திரம் செய்கிறவங்க ஹோம காலத்திலே என்ன செய்யறாங்கன்னு பாத்தா கொஞ்சம் ஆச்சரியமா இருக்கும். அக்னியை எடுக்கறதுக்காக கிடுக்கியை எடுப்பார். அப்படி எடுக்கும்போது ஒரு மந்திரம் சொல்லுவார். கிடுக்கியால அக்னியை எடுக்கும்போது மந்திரம் சொல்லுவார். அக்னியை வைக்கும்போது  மந்திரம் சொல்லுவார்.  இப்படியே கன்னுக்குட்டியை அவிழ்த்துவிட, பால் கறக்கும்போது, பாலை காய்ச்சி இறக்க – இப்படி ஒவ்வொரு செயலுக்குமே ஒவ்வொரு மந்திரம் சொல்லுவார்.

இதைபோல நாமும் செய்யலாம். செய்யலாம்ன்னா அக்னி ஹோத்திரம் செய்யலாம்ன்னு சொல்ல வரலை. ஒவ்வொரு செயலுக்குமே இறைவன் நாமாவை சொல்லலாம். காலை எழுந்திருக்கும்போதே விஷ்ணுவை ஸ்மரிக்க வேண்டும் என்கிறது சாஸ்த்ரம். ராம ராம ன்னு சொல்லியே எழுந்திருப்போம். ஓ! ராமாவை காக்கா பிடிக்கிறேன்னு  நினைச்சுக்க வாய்ப்பிருக்கோ? சரி சிவசிவான்னு...ஓ அப்படி பேர்லேயும் ஒத்தர் இங்கே உறுப்பினரா இருக்காரோ?..ம்ம்ம் என்ன செய்யறது ?! நினைச்சா நினைச்சுக்கோங்க. ராமான்னே சொல்லறேன்.

ராம ராம ன்னு சொல்லி எழுந்து, ராம ராம ன்னுசொல்லி நடந்து, ராம ராம ன்னு
சொல்லி பிரஷ் எடுத்து, ராம ராமன்னு சொல்லி பேஸ்ட் எடுத்து .....
புரியுதில்லை? காலை எழுந்துக்கிறது முதல் இரவு தூங்க போகிறது வரை - யாரோ ஆபீஸ்ல தூங்க போகிறது வரை ன்னு திருத்தம் சொல்லறா மாதிரி இருக்கே?-  எத்தனை எத்தனை செயல்கள் செய்கிறோம்?

ஒவ்வொண்ணுத்தையும் நாமா சொல்லியே செய்து பழகலாமா?

சுலபம்ன்னு சொல்லலை. சிரம சாத்தியம்தான். ஆனா சாத்தியம்.
ஆரம்பத்துல கொஞ்சம் விழிப்போட இருந்தே சொல்லி பழகிட்டா அப்புறம்
தானியங்கியா இது நடக்க ஆரம்பிச்சுடும். அப்புறம் நிதி அமைச்சர்  ஒவ்வொண்ணா சர்வீஸ் டாக்ஸ் வலைக்குள்ளே கொண்டு வராப்போலே  - இன்னும் கோவில்லே அர்ச்சகர்தான் அது வாங்க ஆரம்பிக்கலே...தட்டுல அஞ்சு ரூபா போட்டேளா? சர்வீஸ் டாக்ஸ் அம்பது பைசா போடுங்கோ அண்ணா! ..... அந்த நாள் வந்துடுமோன்னு பயமா இருக்கு! ச்சே! அது கிடக்கட்டும் விஷயத்துக்கு வருவோம். - நிதி அமைச்சர் ஒவ்வொண்ணா சர்வீஸ் டாக்ஸ் வலைக்குள்ளே கொண்டு வராப்போலே நம் செயல்கள் ஒவ்வொண்ணா இந்த முறைக்கு கொண்டு வரணும்.
கொஞ்ச கொஞ்சமா எல்லா செயல்களும் நாம வலைக்குள்ளே அகப்பட்டு கொண்டா அப்புறம் பிரச்சினை இல்லை.

சிலருக்கு இதில் ஒரு ஆட்சேபணை வரலாம். "இது சும்மா மெகானிகலா இல்லே இருக்கு? இதுல பகவானோட இயைந்து இருக்க முடியுமா? நானும் ஜபம் பண்ணறேன்னு  சொல்லலாம். அவ்வளொதான்; ஒண்ணும் பிரயோசனம் இருக்காது.”
அப்படி இல்லை. இதை கடைபிடிக்க, கடைபிடிக்க அடுத்த நிலைக்கு  போய்விடுவோம்.
சும்மா இருக்கும் போது நாமம் தானே வந்து சேரும். நாம் முயற்சி செய்து
வரவழைக்கவேண்டாம். அந்த சமயத்தில் ஊன்றி ஜபம் செய்யலாம். இது இல்லைன்னா மனசு குதிரை எங்கான மேயப்போய் வேண்டாத சமாசாரமெல்லாம் இழுத்துண்டு வரும்.
கடந்த கால குப்பையை எல்லாம் இழுத்துப்போட்டு ஆத்திரப் பட்டு
வருத்தப்பட்டு.... தேவைதானா?
 மேலும் அவசர -க்ரைசிஸ்- சமயத்துல இது துள்ளி குதிச்சுகிட்டு தானே வந்து நிக்கும்.
இப்படி ஆன பிறகு நம் லௌகீக உலகத்தில இறைவனை கொண்டு வரதா இருக்காது. இறை உலகத்தில லௌகீகத்தை கொண்டு வரதா இருக்கும்.

இதைத்தானே கூடாதுன்னு சொன்னா மாதிரி இருக்கு என்கிறீங்களா?
அப்படி இல்லை. இன்னும் கூட நம் உண்மையான சங்கல்பத்துக்கு இது எதிரா
இல்லை. இறைவனோட எப்பவும் இருக்கறது எப்படின்னு இல்லை யோசிக்க
ஆரம்பிச்சோம்?

எனிவே இதைத்தான் மாத்தி யோசின்னு சொன்னேன். :-))

Tuesday, April 27, 2010

32. சத்ரு பயம், துன்பம் அகல:


32. சத்ரு பயம், துன்பம் அகல:

ஆர்த்தாநாம் ஆர்தி-ஹந்தாரம் பீ4தாநாம் பீ4தி-நாஸ2னம் |

த்3விஷதாம்2 காலத3ண்டம்2 தம்2 ராமசந்த்ரம்2 நமாம்யஹம் ||

துக்கப்படுபவர் துக்கத்தையும் பயந்தவர் பயத்தையும் அகற்றி சத்ருவுக்கு யம தண்டமாயிருக்கிற ராமனை நமஸ்கரிக்கிறேன்.

[1008 முறையும் ஜபிக்க சத்ரு பயம், துன்பம் அகலும்.]

Saturday, April 24, 2010

30. கார்ய ஜயம் உண்டாக:



இந்த இழையில் இட்டு வரும் ஸ்லோகங்கள் ப்ரஹ்ம ஸ்ரீ ஸோம தேவ ஸ2ர்மாவுடைய புத்தகம் ஸ்ரீ ஸ்தோத்ர சிந்தாமணி இலிருந்து எடுக்கப்பட்டவை.
-----------------
30. கார்ய ஜயம் உண்டாக:

ஸ்துதாஸித்வம் மஹாதேவி விசுத்3தே4நாந்தராத்மனா|

ஜயோ ப4வது மே நித்யம்2 ஸர்வ-கார்யே ப்ரஸாத3த: ||

ஓ மஹா தேவி! நீ எல்லோராலும், என்னாலும்சுத்த மனதுடன் ஸ்துதிக்கப்பட்டாய். உனதருளால் ஸகல கார்யத்திலும் ஜயமுண்டாகட்டும்.

(எந்த கார்யத்தையும் ஆரம்பித்தாலும் இதை 10 முறை ஜபிக்க ஜயம் உண்டாகும்.):

Friday, April 23, 2010

விசார சங்கிரகம் -28



40.ஜீவன் முக்த, விதேக முக்தர்களின் இலக்கணங்களெவை?

தேகம் நானல்ல; ஆன்ம சொரூபமாக விளங்கும் ப்ரஹ்மமே நான். பரிபூரண சொரூபியான என்னில் தேகாதி ப்ரபஞ்சங்கள் யாவும் ஆகாய நீலம் போன்று வெறுந்தோற்ற மாத்திரமேயாம் என்னுந்திட நிச்சய முள்ளவனே ஜீவன் முக்த னானாலும் மனோ லயமில்லாத வரையில் ப்ராரப்தவசத்தால் தோற்றும் த்ருஷ்ட விஷயங்களில் ஏக தேசம் துக்கம் தோன்றவும் கூடும். மனச்சலனம் நீங்காமையால் ஆநந்தானுபவ மிருக்காது. நெடுங்கால த்யானத்தால் சூக்ஷ்மமும் நிச்சலனமுமான மனத்திற்கே ஆத்மானுபவம் கூடும். இவ்விதம் சூக்ஷ்மமனதோடு சொரூபாநுபவமு முள்ளவனே ஜீவன் முக்தனெனப்படுகிறான். இந்த ஜீவன் முக்தி ஸ்திதியே நிர்க்குண ப்ரஹ்மமென்றும் துரிய மென்றும் சொல்லப்படுகிறது. இந்த சூக்ஷ்ம மனதும் லயித்து சொரூபாநு பவமு மின்றி ஆநந்தக் கடலில் மூழ்கி ஒன்றுந் தோற்றாமல் அம்மயமாக விருப்பவனே விதேக முக்தனெனப் படுகிறான். இவ்விதேக முக்தி ஸ்திதியே நிர்க்குணாதீத ப்ரஹ்ம மென்றும் துரியாதீத மென்றும் சொல்லப்படுகிறது. இதுவே முடிவு. துக்கசுக தாரதம்மிய பேதத்தால் பிரமவித்து, வரன், வரீயான், வரிஷ்டன் என நான்கு வகையாக கூறும் ஜீவன் முக்த பேதங்கள் பார்க்கும் பர திருஷ்டியை பற்றியன வன்றி ஞானமுக்தி பேத முண்மையிலில்லை.

தேகம் நான் அல்ல; ஆன்ம சொரூபமாக விளங்கும் ப்ரஹ்மமே நான். ஆகாய நீல நிறம் தோன்றுவது போல, பரிபூரண சொரூபியான என்னில் தேகம் முதலான ப்ரபஞ்சங்கள் யாவும் வெறுந்தோற்றம் மாத்திரமேயாம். இந்த திட நிச்சயம் உள்ளவனே ஜீவன் முக்தன். அப்படி ஆனாலும், மனோ லயம் இல்லாத வரையில் ப்ராரப்த வசத்தால் தோற்றும் த்ருஷ்ட விஷயங்களில் ஒரேயடியாக துக்கம் தோன்றவும் கூடும். மனச்சலனம் நீங்காமையால் ஆநந்த அனுபவம் இருக்காது. நெடுங்கால த்யானத்தால் சூக்ஷ்மமும் நிச்சலனமுமான மனத்திற்கே ஆத்மானுபவம் வரக் கூடும். இவ்விதம் சூக்ஷ்ம மனதோடு சொரூப அநுபவமும் உள்ளவனே ஜீவன் முக்தன் எனப்படுகிறான். இந்த ஜீவன் முக்தி ஸ்திதியே நிர்க்குண ப்ரஹ்மமென்றும் துரிய மென்றும் சொல்லப்படுகிறது. இந்த சூக்ஷ்ம மனதும் லயித்து சொரூப அநுபவமும் இன்றி ஆநந்தக் கடலில் மூழ்கி ஒன்றுந் தோற்றம் இல்லாமல் அந்த மயமாக இருப்பவனே விதேக முக்தன் எனப் படுகிறான். இந்த விதேக முக்தி ஸ்திதியே நிர்க்குணாதீத ப்ரஹ்மம் என்றும் துரியாதீதம் என்றும் சொல்லப்படுகிறது. இதுவே முடிவு. துக்க சுக தார தம்மிய பேதத்தால் பிரமவித்து, வரன், வரீயான், வரிஷ்டன் என நான்கு வகையாக கூறும் ஜீவன் முக்த பேதங்கள் வெளியிலிருந்து பார்ப்போரின் கண்ணோட்டத்தை பற்றியன அன்றி ஞான முக்தி பேதம் உண்மையில் இல்லை.


வாழ்த்து
மாசிவன்றா னேயாய் மனிதனுமாய் வாழ்ரமண
தேசிகன்றாள் வாழ்க தினம்.

மாசிவன் தானேயாய் மனிதனுமாய் வாழ் ரமண
தேசிகன் தாள் வாழ்க தினம்.

ஓம்
சாந்தி சாந்தி சாந்தி:
சுபம்.


24. பாலாரிஷ்டம் அகல:


24 விட்டுப்போய் உள்ளது.

24. பாலாரிஷ்டம் அகல:

ப்ரஹ்மா விஷ்ணு: ஸி2வ: ஸ்கந்த: கௌரீ லக்ஷ்மீர் மஹேஸ்2வர: |

ரக்ஷந்து ஜ்வர தா3ஹார்த்த2ம் முஞ்சந்து ச குமாரகம் || 
- ஆக்னேயம்

ப்ரும்மாதி தேவர்கள் நோயால் பீடிக்கப்படும் இக்குழந்தையை காக்கட்டும். 100 முறை ஜபித்து ஓலையில் அல்லது காகிதத்தில் எழுதி தொட்டிலில் அல்லது குழந்தையின் கழுத்தில் கட்டினால் பால அரிஷ்டம் அகலும்.

27. சீக்கிரம் விவாஹம் ஆக:


இந்த இழையில் இட்டு வரும் ஸ்லோகங்கள் ப்ரஹ்ம ஸ்ரீ ஸோம தேவ ஸ2ர்மாவுடைய புத்தகம் ஸ்ரீ ஸ்தோத்ர சிந்தாமணி இலிருந்து எடுக்கப்பட்டவை.
-----------------
27. சீக்கிரம் விவாஹம் ஆக:

ஜநகஸ்ய வச:விச்ருத்வா பாணீன் பாணிபி4: அஸ்ப்ருசன். |

சத்வாரஸ்தே சதஸ்ரூணாம் வஸிஷ்ட2ஸ்ய மதேஸ்தி2தா ||

ஜனகருடைய வார்த்தையை கேட்டு வஸிஷ்டர் உத்திரவு படி ராமன் முதலிய நான்கு பேரும் ஸீதை முதலிய நாலு பேருடைய கைகளைப்பிடித்தார்கள்.

இதைக்கன்யைகளோ அவர்களுடைய மாதா பிதாக்களோ நித்யம் காலையின் ராம பூஜை செய்து 108 முறை ஜபித்தால் சீக்கிரமாக விவாஹம் கைகூடும். சக்தி உள்ளவர் குரு மூலம் உபதேசம் பெற்று ராமாயணம் பால காண்டம் 73 ஆம் சர்க்கம் பூராவாக பாராயணம் செய்தால் உடனே பலன் உண்டாகும்.

Thursday, April 22, 2010

26. ஆண் குழந்தை பிறக்க:




26. ஆண் குழந்தை பிறக்க:
கௌசல்யா அஜநயத் ராமம் ஸர்வ லக்ஷண ஸம்யுதம் |
விஷ்ணோ: அர்த்த4ம் மஹாபா4கம் புத்ரம் ஐக்ஷ்வாக வர்த்த4நம் ||

ஸர்வ லக்ஷணம் பொருந்தியவரும் விஷ்ணுவின் பாதி பாகமுமான ராமனை கௌஸல்யை பெற்றாள்.
ப்ரதி தினம் இதை 108 முறை பாராயணம் செய்து ஸ்ரீராமருக்கு பாயஸம் நைவேத்யம் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் ஆண் குழந்தை பிறக்கும். [குறிப்பு: படிக்கத்தெரிந்தவர் உபதேசம் பெற்று பால காண்டம் 18 ஆம் சர்க்கம் பாராயணம் செய்தல் நலம்.]

விசார சங்கிரகம் -27




38.ஜீவன் சுபாவத்தில் ஆன்மாவாகவே யிருந்தும் அங்ஙனமாய தனது சுபாவ நிலையினை அறிய வொட்டாமல் மறைப்ப தெது?
தனது ஸ்வபாவ ஸ்திதியினை மறந்த மறதியே வடிவான ஆவரணசக்தியாம்.
ஜீவன் சுபாவத்தில் ஆன்மாவாகவே இருந்தும் அப்படிப்பட்ட தனது சுபாவ நிலையினை அறிய விடாமல் மறைப்பது எது?
தனது ஸ்வபாவ ஸ்திதியினை மறைத்தது எதுவென்றால் மறதியே வடிவான ஆவரணசக்தியாம்.

39.ஜீவன் தன்னை மறந்ததுண்டானால் எல்லோருக்கும் நான் என்ற அனுபவம் தோன்றுவதற்கேது வென்னை?
[ஜீவன் தன்னை மறந்தது உண்டானால் எல்லோருக்கும் நான் என்ற அனுபவம் தோன்றுவதற்கு ஹேது என்ன?]
ஆவரணம் ஜீவனை முற்றும் மறைத்து விடுவதில்லை. நான் ஆன்மாவென்ற ஸ்வபாவத்தை மாத்திரம் மறைத்து தேகம் எனத்தோற்றுவிக்கிறதே யன்றி சத்தாகவும் நித்தியமாகவுள்ள 'நான்' என்ற தனது இருப்பையே தனக்குத் தெரியவொட்டாமல் மறைப்பதில்லை.

ஆவரணம் ஜீவனை முற்றும் மறைத்து விடுவதில்லை. நான் ஆன்மா என்ற ஸ்வபாவத்தை மாத்திரம் மறைத்து தேகம் எனத்தோற்றுவிக்கிறதே அன்றி சத்தாகவும் நித்தியமாகவுள்ள 'நான்' என்ற தனது இருப்பையே தனக்குத் தெரியவொட்டாமல் மறைப்பதில்லை.


Monday, April 19, 2010

25.மலடு தோஷம் அகல:




25.மலடு தோஷம் அகல:

ப்ராஹ்மம்2 பாத்மம்2 வைஷ்ணவஞ்ச ஸை2வம் பா4கவதம் ததா2 |

ப4விஷ்யம்2 நாரதீ3யஞ்ச மார்க்கண்டே3யம் அத: பரம் ||

ஆக்3னேயம் ப்ரஹ்ம வைவர்த்தம்2 லைங்கம் வாராஹமேவச |

ஸ்காந்தம்2 ச வாமநம் கௌர்மம்2 மாத்ஸ்யம்2 கா3ருட மேவச ||

ப்ரஹ்மாண்டஞ்ச புராணாநி பட2தாம் புத்ரதா3நிச

இந்த 18 புராணங்களின் பெயரையும் நித்யம் ஒரு முறையும் கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ த்வாதசியில் 108 முறையும் ஜபித்தால் மலடு தோஷம் அகன்று புத்ரன் பிறப்பான்.

Wednesday, April 14, 2010

23. கண் நோய் அகல, ஆரோக்யமுண்டாக:



23. கண் நோய் அகல, ஆரோக்யமுண்டாக:

விவர்த்தநோ விவஸ்வாம்2ஸ்2ச மார்த்தண்டோ3பா4ஸ்கரோ ரவி: |

லோகப்ரகாஸ2க: ஸ்ரீமான் லோக சக்ஷு : மஹேஸ்2வர: ||

லோக ஸாக்ஷீ த்ரிலோகேஸ2: கர்த்தா ஹர்த்தா தமிஸ்ரஹா |

தபந: தாபநஸ்2சைவ ஸு2சி: ஸப்தாஸ்2வ வாஹந: ||

க3ப4ஸ்தி ஹஸ்தோ ப்ரஹ்மண்ய: ஸர்வ தேவ நமஸ்க்ரு2த: |

ஸ2ரீராரோக்3ய த3ஸ்2சைவ த4நவ்ரு2த்3தி4 யஸ2ஸ்கர: || 
- ஆதித்ய - ப்ரும்ம புராணம்

ஸூர்யனது சஹஸ்ர நாமக்களில் சிறந்தவை இவை. காலையில் ஸ்நாநம் செய்து நித்யம் 12 முறையும் ஞாயிற்றுக்கிழமை, மாத ஸங்க்ரமணங்களில் 108 முறையும் ஜபத்துடன் நமஸ்காரமும் செய்து சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்தால் கண் நோயும் மற்ற சகல ரோகங்களும் அகலும்.


விக்ருதி



விக்ருதி வருஷம்.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இன்று முதல் விக்ருதி வருஷம் ஆரம்பிக்கிறது. விக்ருதி என்பதற்கு மாற்றி செய்த என்பது பொருள் கொள்ளலாம்.

இப்போதெல்லாம் 'மாத்தி யோசி' என்று பிரபலமாகி வருகிறது இல்லையா?
நாமும் இந்த வருஷம் செய்யக்கூடியதை மாத்தி யோசிச்சு பார்க்கலாமா?

அதுக்கு முன்னே ஒரு சின்ன கதையை பார்க்கலாம். எல்லாருக்கும் தெரிந்தே இருக்கும். ஒரு பௌத்த மடாலயத்தில் சில சிறுவர்கள் இருந்தனர். குழந்தை  துறவிகள் ன்னு வைத்துக்கொள்ளலாம். ஒருவன் ஒரு முறை ப்ரார்த்தனை நேரத்தில் ஏதோ தின்று கொண்டு இருந்தான். அவனுடைய நண்பனுக்கு ஒரே அதிர்ச்சி. "ஏண்டா இப்படி செய்யலாமா?” என்று கேட்க, அவனும் "ஓ! செய்யலாமே!” என்று பதில் சொல்கிறான். ஆச்சரியப்பட்டுப்போன நண்பன் தலைமை குருவிடம் போய் "புத்தரை த்யானம் செய்யும் போது எதையும் சாப்பிடலாமா?” என்று கேட்டான். குரு கூடவே கூடாது என்றார். நண்பன் திரும்பி வந்து "பார்த்தாயா? நீ செய்தது தப்பு. குருவே சொல்லிவிட்டார்" என்றான். அவனோ "உனக்கு கேள்வி கேட்கத்தெரியவில்லை. இப்போது பார்!” என்று சொல்லிவிட்டு குருவிடம் போய் வணங்கிவிட்டு, “குருவே சாப்பிடும்போது புத்தரை த்யானிக்கலாமா?” என்று கேட்டான். "ஓ! த்யானிக்கலாமே! அது ரொம்ப நல்லது" என்றார் குரு!
மேலோட்டமா சிரிப்பா இருந்தாலும் அதிலே விஷயம் இருக்கு. இரண்டுமே ஒண்ணான்னு கொஞ்சம் ஊன்றி கவனிக்கணும்.

சாதாரணமாக நாம் லௌகீக வாழ்க்கை வாழ்கிறோம். உலகத்தில் இருக்கிற பல
ஈர்ப்புகளால அலைக்கழிந்து அல்லாடுகிறோம். நடுவில் ஏதோ கொஞ்ச நேரம்
இறைவனுடன் தொடர்பு வைக்கப்பார்க்கிறோம். பூஜையோ ஜபமோ ஏதோ செய்கிறோம்.
சத்சங்கத்தை தேடுகிறோம். இதில் இருக்கும் வரை எல்லாம் நன்றாக இருக்கிறது.

சமீபத்தில் திருப்பூரில் ஒரு நல்ல அனுபவம் கிடத்தது. நண்பர் ஒருவர்
வீட்டுக்கு போய் இருந்தேன். அன்று மாலை காஞ்சி மஹா பெரியவருக்கு பூஜை,
ருத்திர சமக பாராயணம், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் எல்லாம் இருந்தன. சுமார்
30 பேர் பங்கு கொண்டார்கள். அதன் பின் கலந்துரையாடல் இருந்தது. முகமூடி,
நாமஜபம் என்று சிலதை விவாதித்தோம். வெகு உற்சாகமாகவே நேரம் போயிற்று.
எல்லாம் முடிந்து கிளம்பும் போது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தேன். அவர்
சொன்னார் "ஜி, எல்லாம் சரிதான். நல்ல விஷயங்கள்தான் பேசினோம். இதிலே
இருக்கும் வரை மனசு சுத்தமாகத்தான் இருக்கு. வீட்டுக்குப்போய் டிவி யை
போட்டதும் எல்லாம் காணாமல் போய் விடுகிறது!” என்றார். எல்லோரும்
சிரித்தோம்.
ஆனால் இவர் சொன்னது உண்மைதானே? சத்சங்கத்தில் மனசு தூய்மை ஆகிவிட்டதாக
நினைக்கிறோம். உலக சமாசாரங்களில் ஈடுபடும் போது மனசு பழைய நிலைக்கு
திரும்பி விடுகிறது.
நாம பெரும்பாலான நேரம் உலக வாழ்க்கையில இருந்து கொண்டு கொஞ்ச நேரம்
இறைவனுடன் இருக்கிறோம் இல்லையா? ஆரம்ப காலத்தில் இது போதும்; ஆனால்
எப்போதுமே இது போதுமா?
அதுக்குத்தான் மாத்தி யோசி என்கிறேன்.
நாம பெரும்பாலான நேரம் இறைவனுடன் இருந்து கொண்டு அவசியமான நேரம் உலக
வாழ்க்கையில இருந்து பார்த்தால் என்ன?
முடியுமா? இல்லை முடியனுமா? உங்க கருத்தைச் சொல்லுங்களேன்!
(இதன் அடுத்த பகுதி சுமார் ஒரு வாரம் கழித்து வெளியாகும்.)


Tuesday, April 13, 2010

22. காலரா (விஷூசி) அகல:



22. காலரா (விஷூசி) அகல:

நமோ ப4க3வதி த்வம்மே விஷ்ணுஸ2க்தே ஹரா ஸு2ப4ம் |

உத்ஸாத3ய நய க்ஷிப்ரம் தூ3ரே கு(ku)ரு விஷூசிகாம் ||

- வாஸிஷ்டம்

ஓ விஷ்ணு சக்தியான பகவதியே! எனது நோயை அகற்றி விஷூசியை நாசம் செய்து வெகுதூரத்தில் எரி.


Monday, April 12, 2010

விசார சங்கிரகம் -26




37.மேற்கூறிய அனுஷ்டாங்களால் ஒருவாறு மனத்திலுள்ள அஞ்ஞான, சந்தேக, விபரீதமாகிய சர்வ பிரதிபந்தங்களும் நசிக்கப்பெற்று சித்தோப சாந்தம் வாய்க்கப்பெற்றாலும் ஓர் சந்தேக மாத்திரமுளது. அதாவது மனதை ஹ்ருதயத்தில் இருத்திவிட்ட பிற்கு அறிவொன்றுதான் பூரணமாக பிரகாசிக்கிறது. இங்ஙனம் மனமானது ஆன்மாகாரமடைந்து விட்ட பிறகு விசாரிக்கிறவன் யார்? தன்னைத்தானே பூஜிப்பதாக முடிவதால் இது ஆட்டைத்தோளில் போட்டுக்கொண்டு "ஆடெங்கே ஆடெங்கே" என்று தேடிய இடையன் கதையாகவன்றோ முடிகிறது?

ஜீவனே சிவன், சிவனே ஜீவன்; அந்த ஜீவன் சிவனேதான். உமியால் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறவரையில் நெல்லாக இருக்கிறது. உமி நீங்கினால் அரிசியாகிறது. அதைப்போல "கர்ம பாசத்தால் கட்டுண்டிருக்கிற வரையில் ஜீவனாயிருக்கிறான். அஞ்ஞான பாசம் நீங்கினால் சிவனாகிய தேவனாகப் பிரகாசிக்கிறான்" என்ற சுருதியின்படி மனோரூப ஜீவன், தான் கேவலம் ஆத்ம சொரூபமாகவே யிருப்பதை மறந்த மறப்பினாலேயே ஜீவனென்னும் நாமத்தோடு மனோரூபமாய்ப் பந்தப்பட்டிருத்தலால், எப்போதும் தானாகவே யிருக்கும் ஆன்மாவை தேடுவது இடையன் கதையாகவே யிருந்தாலும், தன்னை மறந்த ஜீவன் தன்னை ஆத்மாவென் றோர்காலறிந்து கொண்டே ஆத்மாவாகிய தெய்வமாய்விடுவானா? பூர்வ ஜன்மாந்தர வாசனா ப்ரதிபந்தத்தால் அடிக்கடி தன் ஆத்மாவாக யிருப்பதை மறந்து தேகாதிகள் நானென்று பிரமிப்பனன்றோ? ஒருவன் பெரிய உத்யோகஸ்தனைப் பார்த்துக்கொண்டே தானும் அவ் வுத்தியோகஸ்தனாய் விடுவானா? கிரமமாக அதற்கு முயற்சி செய்தாலன்றோ அவ் வுத்தியோகஸ்தனாதல் கூடும்? அங்ஙனமே தேகாதிகளை நானென்னும் மனோ ரூபமாகப் பந்தப்பட்டிருக்கும் ஜீவனும் கிரமப்படி ஆத்மானுசந்தான மென்ற முயற்சியைச் செய்து மனோநாசம் வாய்க்கப்பெற்றாலன்றோ ஆன்மாவாதல் கூடும்?
தேகாதிகள் நானென்ற இந்த நெடுங்கால 'தேகாதிகள் நானல்ல; ஆன்மாவே நான்' (சிவோகம், சிவோகம்) என்ற நெடுங்கால அனுசந்தானத்தாலேயே நசிக்கப்பெற்று மனோசமன ரூப பரம சீதள சிவ நிலையை அடைதல் கூடுமாகலான், மனமென்னும் அகங்கார ரூப ஜீவனானவன் சர்வ தேவாத்மகமாய் தானிருக்கும் ஆத்ம தேவதையே தான் என்று பலகாலம் தன்னைத்தானே பூஜித்து வாசனைகளே ரூபமாகக் கொண்டிருக்கிற மனமென்னும் பாசத்தை வென்று பரம கைவல்யத்தைப் பெறுதல் வேண்டும். இங்ஙனம் இடைவிடாது செய்யப்படும் இவ்வாத்மானுசந்தானம் மனோ நாசம் செய்து முடிவில் பிணஞ்சுடு தடி போலத் தானும் நீங்கிவிடும்; இதுவே மோக்ஷமாம்.

ஜீவனே சிவன், சிவனே ஜீவன்; அந்த ஜீவன் சிவனேதான். உமியால் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறவரையில் நெல்லாக இருக்கிறது. உமி நீங்கினால் அரிசியாகிறது. அதைப்போல "கர்ம பாசத்தால் கட்டுண்டிருக்கிற வரையில் ஜீவனாயிருக்கிறான். அஞ்ஞான பாசம் நீங்கினால் சிவனாகிய தேவனாகப் பிரகாசிக்கிறான்" என்பது சுருதி. அதன்படி மனோரூப ஜீவன், தான் ஆத்ம சொரூபமாகவே மட்டுமே இருப்பதை மறந்த மறப்பினாலேயேதான் ஜீவன் என்னும் நாமத்தோடு மனோரூபமாய்ப் பந்தப்பட்டு இருக்கிறது. எப்போதும் தானாகவே இருக்கிற ஆன்மாவை தேடுவது இடையன் கதையாகவேதான் இருக்கு. அப்படி இருந்தாலும், தன்னை மறந்த ஜீவன் தன்னை ஆத்மாவென்று ஒரு கால் தியரியா அறிந்து கொண்டால் ஆத்மாவாகிய தெய்வமாய்விடுவானா? அப்படி ஆகாது.
பூர்வ ஜன்மாந்தர வாசனைகள் என்கிற தடைகளால அடிக்கடி தன் ஆத்மாவாக இருப்பதை மறந்து தேகம் முதலானவை நான் என்று பிரமிப்பன் அன்றோ? ஒருவன் பெரிய உத்யோகஸ்தனைப் பார்த்துக்கொண்டே தானும் அந்த உத்தியோகஸ்தனாய் விடுவானா? கிரமமாக அதற்கு முயற்சி செய்தாலன்றோ அந்த உத்தியோகஸ்தன் ஆகலாம்? அதே போல "தேகம் முதலானவைகளே நான்" என்னும் மன வடிவிலே கட்டுப்பட்டிருக்கும் ஜீவனும் கிரமப்படி ஆத்ம அனுசந்தானம் என்ற முயற்சியைச் செய்து மனோநாசம் வாய்க்கப்பெற்றால்தான் ஆன்மாவாதல் கூடும்.
தேகம் முதலானவை நானென்ற இந்த நெடுங்கால 'தேகாதிகள் நானல்ல; ஆன்மாவே நான்' (சிவோகம், சிவோகம்) என்ற நெடுங்கால அனுசந்தானத்தாலேயே நசிக்கப்பெற்று மனோசமன ரூப பரம சீதள சிவ நிலையை அடைதல் கூடும். ஆகலான், மனமென்னும் அகங்கார ரூப ஜீவனானவன், சர்வ தேவ ஆத்மகமாக தானிருக்கும் ஆத்ம தேவதையே தான் என்று பலகாலம் தன்னைத்தானே பூஜிக்க வேண்டும். அப்படி பூஜித்து வாசனைகளே ரூபமாகக் கொண்டிருக்கிற மனமென்னும் பாசத்தை வென்று பரம கைவல்யத்தைப் பெறுதல் வேண்டும். இங்ஙனம் இடைவிடாது செய்யப்படும் இவ்வாத்மானுசந்தானம் மனோ நாசம் செய்து முடிவில் பிணஞ்சுடு தடி போலத் தானும் நீங்கிவிடும்; இதுவே மோக்ஷமாம்.

21. மறதி அகல, ஞாபக சக்தி வளர:



21. மறதி அகல, ஞாபக சக்தி வளர:

யாதே3வீஸர்வ பூ4தேஷு ஸ்ம்ரு2திரூபேண ஸம்ஸ்தி2தா |

நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம: ||

எல்லா பிராணிகளிடமும் ஞாபக சக்தி வடிவமாக இருக்கும் தேவியை நமஸ்கரிக்கிறேன். இதை தினசரி காலை 108 முறை ஜபிக்க மறதி அகன்று ஞாபக சக்தி வளரும்.


Wednesday, April 7, 2010

விசார சங்கிரகம் -25



28.ப்ரத்யாகாரத்தில் ப்ரணவத்தை மனோமயமாகத் தியானிக்கச் சொல்லியதின் தாற்பரியமென்ன?

ப்ரணவத்தியானம் செய்யச்சொல்லியதின் தாற்பரிய மிதுவாம். ப்ரணவமென்பது அகார உகார மகார அர்த்தமாத்திரை யென்னும் மூன்றரை மாத்திரைகள் கூடிய ஓங்காரமாம். இவற்றில் அகாரமென்பது ஜாக்ர விச்வஜீவ ஸ்தூல தேகங்களென்றும் உகாரமென்பது ஸ்வப்ன தைஜஸஜீவ சூக்ஷ்ம தேகங்க ளென்றும் மகார மென்பது சுழுப்தி பிராஜ்ஞ ஜீவ காரண தேகங்களென்றும் அர்த்த மாத்திரை யென்பது துரியம் அல்லது அஹம் சொரூப மென்றும் இதற் கப்பாற்பட்ட நிலை துரியாதீதமாகிய ஆநந்த மாத்திர சொரூப மென்றும் சொல்லப்படும். முன் தியானத்திற் கூறிய இந்நான்காவதான அஹம் சொரூபமே மற்ற அகார உகார மகாரங்களென்னும் மூன்று மாத்திரைக ளடங்கியுள்ள அமாத்திரை சொரூப மென்றும் மௌனாக்ஷர மென்றும் அஜபை யென்றும் ஜபியாமல் ஜபித்தலென்றும் பஞ்சாக்ஷராதி மந்திரங்களின் சாரமான அத்வைத மந்திர மென்றும் கூறப்படும். இவ்வெதார்த்த அர்த்தம் சித்தித்தற்பொருட்டே ப்ரணவத் தியானம் செய்யப்படுவதாம்.இந்த ஆத்மாநுசந்தான பக்திரூப தியானத்தின் பரிபாக அவஸ்தையே சமாதி யெனப்பட்டு நிரதிசயாநந்த மோக்ஷ கதியைக் கொடுக்கும். பெரியோர்களும் ஸ்வாத்மாநுசந்தான ரூப பக்தி யொன்றினாலேயே மோக்ஷமடைய வேண்டும் எனக்கூறியிருக்கின்றனர்.

28.நாம ரூபங்களிலே மனசை போக விடாம ஒரு முகப்படுத்த சொன்னதிலே (ப்ரத்யாகாரத்தில) ப்ரணவத்தை மனோ மயமா ஏன் தியானிக்கச் சொன்னாங்க?
ப்ரணவத்தியானம் செய்யச்சொல்லியதின் காரணம் இதான்: ப்ரணவமென்கிறது என்ன? அ உ ம ன்னு 3 எழுத்துக்கள். அப்புறம் எழுத்தில்லாம பாதி மாத்திரை. இதெல்லாம் சேர்ந்தது ஓங்கார சப்தம்.
இவற்றில:
அகாரம் என்பது ஜாக்ர, விச்வ, ஜீவ ஸ்தூல தேகங்கள்
உகாரம் ஸ்வப்ன, தைஜஸ, ஜீவ சூக்ஷ்ம தேகங்கள்
மகாரம் சுழுப்தி, பிராஜ்ஞ, ஜீவ காரண தேகங்கள்
அர்த்த மாத்திரை என்பது துரியம் அல்லது அஹம் சொரூபம். (இதெல்லாம் ஞான வழி முதல் பாகத்திலே இருக்கு. மறந்து போயிருந்தா தேடிப்பாருங்க!)
இதற்கு அப்பாற்பட்ட நிலை துரிய அதீதம் (துரியத்தை தாண்டியது) ஆகிய ஆநந்த மாத்திர சொரூபம் என்றும் சொல்லப்படும்.
முன் தியானத்திலே சொன்ன இந்த நான்காவதான அஹம் சொரூபம் என்னன்னா,
மத்த அகார உகார மகாரங்கள் என்னும் மூன்று மாத்திரைகள் அடங்கியுள்ள அமாத்திரை (கால அளவுக்குள்ளே வராத) சொரூபம். [அர்த்த மாத்திரைன்னு சொல்வது கொஞ்சம் குழப்பறதுதான். அது ஏதோ கால அளவை குறிக்கிறதா தோணும். அப்படி இல்லை. அமாத்திரை என்கிறதே சரியான அர்த்தத்தை கொடுக்கிறது.] மௌனாக்ஷரம் என்றும்; அஜபை என்றும்; ஜபியாமல் ஜபித்தலென்றும்; பஞ்சாக்ஷரம் முதலான மந்திரங்களின் சாரமான அத்வைத மந்திரம் என்றும் கூறப்படும். இந்த எதார்த்த அர்த்தம் சித்திக்கனும்னே ப்ரணவத் தியானம் செய்யப்படுகிறதாம். இந்த ஆத்மாநுசந்தான பக்திரூப தியானத்தின் பரிபாக அவஸ்தையே (state) சமாதி யெனப்பட்டு நிர் அதிசய ஆநந்த மோக்ஷ கதியைக் கொடுக்கும். பெரியோர்களும் ஸ்வாத்மாநுசந்தான ரூப பக்தி யொன்றினாலேயே மோக்ஷமடைய வேண்டும் எனக்கூறியிருக்கின்றனர்.
{ஓங்காரத்தின் முடிவில என்ன இருக்கும்? மௌனமே! நிர்குண பிரமத்தை சப்தத்தால உணர்த்த முடியாது. மௌனமே சுட்டிக்காட்டும்.}
இந்த யதார்த்த அர்த்தம் சித்தித்தல் பொருட்டே ப்ரணவத் தியானம் செய்யப்படுவதாம். இந்த ஆத்மாநுசந்தான பக்திரூப தியானத்தின் பரிபாக அவஸ்தையே (state) சமாதி யெனப்பட்டு நிர் அதிசய ஆநந்த மோக்ஷ கதியைக் கொடுக்கும். பெரியோர்களும் ஸ்வாத்மாநுசந்தான ரூப பக்தி ஒன்றினாலேயே மோக்ஷமடைய வேண்டும் எனக்கூறியிருக்கின்றனர்.