Pages

Tuesday, March 2, 2010

குளியல்- தீர்த்தங்களில் குளியல்




புனித தீர்த்தங்களிலே குளிக்க குறிப்பிட்ட கிரமம் உண்டு.
சங்கல்பம், மந்திரங்கள் சொல்வது, தலையில் புரோக்ஷணம் செய்து கொள்வது, குளிக்கும் போது மந்திரங்கள் சொல்வது, குளித்து முடித்து தேவதைகளுக்கு தர்ப்பணம் செய்வது இப்படி 5 அங்கங்கள் அதுக்கு.
முதல்லே சங்கல்பம்: வழக்கம் போல் வடக்கோ கிழக்கோ நோக்கி குக்குடாசனத்தில் அமர்ந்து, ஆசமனம் செய்து தர்ப்பங்களுடன் கூடிய கைகளை வலது தொடை மேல் இடது கையை வைத்து அதன் மேல் மூடிய படி வலது கையை வைத்து இன்ன இடத்தில் இன்ன நேரத்தில் இன்னாராகிய நான் இந்த ஸ்வாமியின் சந்நிதியில் இன்ன நதியில் ஸ்னானம் செய்கிறேன் என்று சங்கல்பிப்பது.
பின் தீர்த்தத்தை நோக்கி வேதத்துக்கு அதிகாரமுள்ளவர் வருண சூக்தம் சொல்லவேண்டும். அதிகாரம் இல்லை, பயிற்சி இல்லை எனில் கீழ் காணும் ஸ்லோகத்தை கூற வேண்டும்.

அதிக்ரூர மஹா காய கல்பாந்த த3ஹநோப|
பை4ரவாய நமஸ்துப்4யம் அநுக்ஞாம் தா3து மர்ஹஸி||
[மிக க்ரூரமானவரும் பெரிய சரீரம் உள்ளவரும் ப்ரளயாக்னி போன்றவருமான பைரவரே உமக்கு நமஸ்காரம். ஜலத்தில் இறங்கி ஸ்நாநம் செய்ய உத்திரவு கொடும்.]
[பிழை திருத்தப்பட்டது 3/3/2010)
கங்கா ஸ்மரணம்:
கங்கே கங்கேதி யோப்4ரூயாத் யோஜனானாம் சதைரபி|
ஸயாதி ப்3ரும்மண: ஸ்தாநம் ப்3ரும்மணா ஸஹ பூஜ்யதே||
[கங்கே கங்கே என்று கூறுபவன் நூறு யோஜனை தூரத்திற்கு அப்பால் இருந்தாலும் ப்ரும்ம லோகத்தை அடைவான்;பிரும்மாவுடன் பூஜிக்கப்படுவான்]
து3ர்போஜன து3ரா லாப து3ஷ் ப்ரதிக்ரஹ ஸம்ப4வம்|
பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஜந்ஹுகன்யே நமோஸ்துதே||

விஷ்ணு ஸ்துதி:
ஸமஸ்த ஜக3தா3தா4ர ஸ2ங்க2சக்ர க3தா3த4ர|
மஹி தே3வ மமாநுஞாம் யுஷ்மதீர்த2 நிஷேவணே ||
த்வம் ராஜா ஸர்வ தீர்தா2நாம் த்வமேவ ஜகத:பிதா|
யாசிதம் தே3ஹி மே தீர்த்த2ம் ஸர்வ பாபாபநுத்தயே ||

[சேர்க்கப்பட்டது 3/3/2010)

பின் ஜலத்தில் இறங்கும் முன் அந்த ஜலத்தால் ப்ரோக்ஷணம் செய்து கொள்ள வேண்டும்.
யக்ஷ ப்ரச்ன கதையில் முதலில் பீமன் இப்படி செய்யாமல் ஜலத்தில் இறங்கினாராம். அதனால் நேரிட்ட பிரச்சினைகளும் கேள்விப்பட்டு இருக்கிறோம் அல்லவா? உபநயனமானவர்கள் ஆபோ ஹிஷ்டா என்ற மந்திரத்தால் ப்ரோக்ஷணம் செய்து கொள்ள வேண்டும். (மற்றவர் மந்திரமில்லாமல்)
பின் தீர்த்தத்தில் இறங்கி மூன்று முறை அகமர்ஷன ஸூக்தம் சொல்லியபடி முழுகி முழுகி எழுந்திருக்க வேண்டும். உடலை நன்கு தேய்த்து குளிக்க வேண்டும். இந்த சமயத்தில் பேசக்கூடாது. [பேசினால் காந்தியை இழக்கிறோம் என்கிறார்கள்!]

குளிரக்குளிர குளித்து கொண்டே இருக்கலாம். ஆனா எப்படியும் அதுக்கு முடிவு வந்தே ஆகணும் இல்லையா?
குளித்து முடித்ததும் ஆடையை பிழியாமலே ஜலத்தில் நின்று கொண்டே தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.
கிழக்கு பார்த்து நின்று பூணூல் இடது தோளில் இருக்க தேவ தர்ப்பணங்கள்.
வடக்கு பார்த்து பூணூல் மாலையாக தோள்களில் இருக்க ரிஷி தர்ப்பணங்கள்.
தெற்கு பார்த்து பூணூல் வலது தோளில் இருக்க பித்ரு தர்ப்பணங்கள்.
இரண்டு கைகளாலும் சேர்த்தெடுத்து பசுவின் கொம்பு உயரத்துக்கு இறைக்க வேண்டும்.

கடைசியிலே தண்ணீரை அசுத்தமாக்கியதுக்கு பிராயச்சித்தமாக யக்ஷ்மா என்ற தேவதையை உத்தேசித்து கரையிலே தர்ப்பணம் ஒண்ணும் உண்டு!

யன்மயா தூ3ஷிதம் தோயம் சாரீர மலஸஞ்சயை:|
தத்தோ3ஷ பரிஹாரார்த்த2ம் யக்ஷ்மாணம் தர்ப்ப யாம்யஹம்||
[என் உடல் மலத்தால் நான் ஜலத்தை அசுத்தமாக்கினேன். அந்த தோஷம் அகல யக்ஷ்ம தர்ப்பணம் செய்கிறேன்.]

இப்படிச் சொல்லி கரையில் இரு கைகளாலும் ஜலத்தை விட வேண்டும்.
பிறகு கரையேறலாம். உடம்பின் ஜலம் வடியும் வரை மௌனமாக நிற்க வேண்டும். உடம்பின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் விழும் ஜலம் ஒவ்வொரு தேவதையை திருப்தி செய்வதாக சொல்லப்படுகிறது. ஆகவே அவசரப்பட்டு துடைத்துக்கொண்டு இதை இழக்க வேண்டாம்.
குடுமி இருக்கிறவங்க அதை முன் புறமாக தொங்கவிட்டு பிழியலாம்.
இதற்கு மந்திரம்:
லதா வ்ருக்ஷேஷு கு3ல்மேஷு வர்த்தந்தே பிதரோ மம|
தேஷாம் ஆய்யாய நார்த்த2ந்து இத3மஸ்து சிகோ3தகம்.||
[கொடிகளிலும் மரங்களிலும் புதர்களிலும் உள்ள எனது பித்ருக்கள் சந்தோஷமடைய சிகா ஜலம் இது.]
இது பித்ருக்களுக்கு திருப்தி அளிக்கும். தலை முடியை கையால் தட்டிவிட்டு ஜலத்தை வெளியேற்றக்கூடாது. அது மற்றவர் மேல் சிறிது விழுந்தாலும் பாபம் ஆகும்.
மேல் துணியை எடுத்து 4 ஆக மடித்து துணியின் நுனி வழியாக பிழிய வேண்டும்.
கீழ் துணியை நுனிகளை திரட்டி பிழிய வேண்டும்.
இது இரண்டுக்கும் மந்திரம் உண்டு.
கரையில் குக்குடாசனத்தில் அமர்ந்து ஆசமனம் செய்ய வேண்டும். அப்போது மேல் துணி இடது மணிக்கட்டு மேலே இருக்க வேண்டும்.
இரண்டு உலர்ந்த துணிகளால் (துண்டு) தலையையும் உடம்பையும் துவட்டிக்கொள்ள வேண்டும்.
பின் தீர்த்தக்கரையில் ஓர் பிராம்ஹணனுக்கு கர்மாவில் குற்றங்கள் ஏதும் ஏற்பட்டிருந்தால் அதை விலக்க கொஞ்சம் தக்ஷிணை சக்திக்கு தக்கபடி தர வேண்டும்.
இப்படியாக தீர்த்த ஸ்நாநம்.

No comments: