Pages

Friday, November 20, 2009

காயத்ரி அனுபவங்கள் -9



சில நாட்களாக ஊரில் இல்லாததால் பதிவு போட முடியவில்லை. மன்னிக்கணும். இன்று கொஞ்சம் நேரமிருப்பதால் மற்ற பதிவுகளையும் ஷெடூல் செய்துவிடுகிறேன்.
---------
எந்த மந்திரமானாலும் அதற்கு சில சட்ட திட்டங்கள் உண்டு.
மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை அல்லவா? அதனால்தான் அப்படி.

எந்த மந்திரமானாலும் குரு மூலமாக உபதேசம் வாங்கி ஜபம் செய்தால் மட்டுமே முழுமையான பலன் பெற முடியும். இல்லையானால் முழுமையான பலன் கிடைக்காது. (மேலும் சில இன் பில்ட் பாதுகாப்புகள் மந்திரங்களுக்கு உண்டு! இங்கே சொல்லவில்லை. குரு சொல்லுவார்.)

முன் காலத்தில் கராத்தே போன்ற கலைகளை யார் வேண்டுமானாலும் ஒருவரிடம் போய் காசு கொடுத்து கற்றுக் கொள்ள முடியாது. சரியான நபர்களை தேந்தெடுத்து மட்டுமே சொல்லித்தருவார்கள். தவறாக பயன்பட்டுவிடக்கூடாது என்பதே காரணம். இது இப்போது கடைப்பிடிக்கப்படாததால் விளைகிற அனர்த்தங்களை பார்த்து வருகிறோம் அல்லவா? சில வருடங்கள் முன் ஒரு பல்கலைக்கழக ஹாஸ்டலில் ஒரு மாணவனை ரேகிங்க் செய்யும்போது ஒரு கராத்தே அடி கொடுக்கப்போய் மாணவன் இறந்து போனார்.

அதே போல மந்திரங்களும் தகுந்த பாத்திரத்தை தேர்ந்தெடுத்தே உபதேசம் செய்யப்படும். ஒவ்வொருவருக்கும் பொருத்தமான மந்திரமும் இருக்கும். அதை குருவே உணர்வார்.
அதனால் குரு உபதேசம் இல்லாமல் மந்திர ஜபம் செய்யலாகாது. "பின்னே, அப்படி இல்லாமல் இன்னார் ஜபம் செய்து பயன்பெற்று இருக்கிறார்களே?” என்றால் அது "தெய்வத்தால் ஆகாதெனினும் மெய் வருத்த கூலி தரும்" கதை போன்றதாகும்.

மந்திர ஜபம் செய்வோருக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும். ஆசார அனுஷ்டான விஷயங்களை பொருத்து இது அமையும். முறைப்படி செய்யாது போனால் சில விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்படக்கூடும்.

பலர் நினைப்பது போல இது அந்தணருக்கு மட்டுமே இல்லை. காலப்போக்கில் அப்படி ஆகிவிட்டது.
நான்கு வர்ணங்களில் முதல் மூன்று வர்ணத்தாருக்கும் பிரம்மோபதேசமும், பூணூலும், காயத்ரியும் உரியன. நான்காம் வர்ணத்தவர் அவர்களது தர்மத்தை அனுசரிப்பதாலேயே மேன்மை பெற்று விடுவதால் அவர்களுக்கு இது தேவை இல்லை. அவர்களது வேலைகளை உத்தேசித்து அவர்களால் தேவையான ஆசாரத்தையும் கடை பிடிக்க இயலாது.

காலப்போக்கில் மக்கள் ஆசாரத்தை விட விட இப்போது வெகு சிலரே கடைபிடிக்கிறார்கள். மேலை நாட்டு படை எடுப்புகளால் க்ஷத்திரியர்கள் சண்டை போட்டே காலம் கழிக்க ஆசார அனுஷ்டானம் போயிற்று. வைச்யர் திரைக்கடலோடியும் திரவியம் தேட ஆரம்பிக்க அவர்களுக்கும் போயிற்று. இப்போது அசிரத்தையால் அந்தணர்களுக்கும் இது மறைந்து வருகிறது.

அதற்காகத்தான் இதைப்பற்றி எழுத ஆரம்பித்தேன்.

சிலர் ஏன் பெண்களுக்கு இல்லை? வேத காலத்தில் சில பெண் வேத பண்டிதர்களும் இருந்து இருக்கிறார்களே என்றெல்லாம் கேட்கலாம்.
அது ஒரு காலம்.

காலப்போக்கில் மனிதனின் சக்தி குறைந்து வருகிறதா இல்லை அதிகமாகிறதா என்று ஒரு கேள்வி. சந்தேகமே இல்லாமல் குறைந்துதான் வருகிறது.
தசரதர் தேவர்களுக்கு தேவாசுர போர்களில் உதவி செய்ய போனதாக இதிகாச / புராணம் சொல்கின்றன. மேலும் பல அரசர்கள் அப்படி செய்து உள்ளார்கள். இப்போது தேவர்களை பார்க்கிறதே முடியவில்லை!
சத்ய யுகத்திலே பலரும் தவம் செய்தே காலம் கழித்தார்கள். துவாபர யுகத்தில் யோகம் செய்து கழித்தார்கள். திரேதா யுகத்தில் யாகங்கள் செய்து கழித்தார்கள். இப்போதோ பொருள் ஈட்டுவதிலேயே குறியாக இருக்கிறோம்.
இப்படியாக மனிதனின் ஆன்ம சக்தியாகட்டும் தேக சக்தி ஆகட்டும் குறைந்து கொண்டே வருகிறது. ஏன் அவ்வளவு? பிரதாப சிம்மன் பயன்படுத்திய இரும்பு கவசம் ஜெய்பூர் அரண்மணையில் இருக்கிறது. அவனோ அதை மேலே போட்டுக்கொண்டு சண்டையே போட்டான். இப்போது உள்ள மனிதர்களால் அதை தூக்கக்கூட முடியவில்லை. நாலு பேர் சேர்ந்தே தூக்க வேண்டி இருக்கிறதாம்!
இப்படி க்ஷீணித்து போய்விட்ட நிலையில் ஆன்ம சக்தி குறைந்துவிட்ட சமயத்தில் பெரியோர்களால் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அந்தணர்களுக்கு சைவ உணவே விதிக்கப்பட்டது. பெண்களுக்கு வேத பாடங்கள் வேண்டாம் அல்லது வேள்வி செய்யும் காலத்தில் பயனாகும் மந்திரங்கள் சொல்லி வைத்து சொல்லப்பட வேண்டும் என்று மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

இதனல்தான் வேத கால பெண்மணிகள் வேதம் பயின்று இருந்தார்களோ இல்லையோ (வேத ரிஷிகளான அவர்களது கணவர்களிடம் தத்துவ விஷயம் தெரிந்து கொண்டு இருக்கலாம். வேத பாடங்களுக்கு எப்போதும் அதிகாரமில்லை என்றும் ஒரு கருத்து உண்டு ) இப்போது அதற்கு அதிகாரமில்லை.

இதற்காக வருந்த வேண்டாம். நாம ஜபம் ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து ஜபித்து பயன்பெறுங்கள். அல்லது குருவை கண்டுபிடித்து தகுந்த மந்திர உபதேசம் பெறுங்கள்.

இல்லை காயத்ரி மீது அவ்வளவு ஈடுபாடு இருந்தால் யோ தேவ ஸவிதா என்று ஆரம்பிக்கும் சுலோகத்தை கற்று ஜபியுங்கள். இதுவும் பலம் வாய்ந்தது என்று என் அக்கா சொல்லி இருக்கிறார். பொருள் காயத்ரியின் பொருளேதான்.

யார் மீதும் எந்த காழ்ப்பும் இல்லாமலே எழுதி இருக்கிறேன். சரியான படி எடுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!



No comments: