Pages

Wednesday, November 25, 2009

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள் -13








கடைசியாக முன் சொன்னது போலவே ஒருவரது அனுபவம். இந்த கடிதம் போன வருடம் எங்களுக்கு வந்து சேர்ந்தது. கை எழுத்து இட்டு இருந்தாலும் யாரென்று கண்டு பிடிக்க முடியவில்லை. இதை வெளியிடலாமா என்ற பலத்த யோசனைக்குப்பிறகு வெளியிடலாம் என்று முடிவு செய்தேன். ஏன் என்றால் இப்படிப்பட்ட வேலைகளில் இறங்க உத்தேசிப்போருக்கு விளைவுகள் இப்படியும் இருக்கும் என்று தெரியவேண்டும் என்பதே. இந்த மாதிரி நல்ல உள்ளங்களின் நற்சிந்தனைகள்தான் எங்களுக்கு தொடர்ந்து வேலை செய்ய உற்சாகத்தை தருகிறது.
இதன் படத்தை இங்கே பார்க்கலாம்.(தேடி அப்புறம் போடுகிறேன்) கீழே அதில் உள்ளதை (எ.பி உடன்) எழுத்து வடிவில் கொடுத்து இருக்கிறேன்.

கடலூர் 5/8/08
நமஸ்காரம்.
நான் தினமும் காயத்ரி ஜபம் செய்து வருகிறேன்.
தாங்கள் வேத பாடசாலை துவக்கி வேதம் சொல்லிககொடுப்பது வேதத்தை பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்துவது அறிந்து தாங்கள் நீண்ட நாட்கள் எல்லா நன்மைகளும் பெற்று வாழ இறைவனிடம் தினமும் பிரார்த்திக்கிறேன்.

எனக்கு ஏற்கெனவே உள்ள கஷ்டத்தை விட தற்போது ஏற்பட்ட உச்சநிலை கஷ்டத்தை அனுபவிக்கும் போது ஏற்கெனவே ஜபம் செய்யாத போது நான் பட்ட மன உளச்சலை விட தற்சமயம் எந்த ஒரு கஷ்டமும் இல்லாதது போல் மனதில் முழு நிம்மதியுடன் இருப்பது கண்டு காயத்ரியை நினைப்பது அல்லாமல் தங்களையும் நினைத்துக்கொள்கிறேன். ஏற்கெனவே உள்ள 100% கோபதாபங்களில் தற்சமயம் 5% கூட கோபம் இல்லையே என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கஷ்டங்களிடையே மன 100% உளைச்சலை குறைத்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை பொருமையாக தீர்மானிக்கும் எண்ணத்தை அருளிய காயத்ரி தேவிக்கும் அந்த காயத்ரி தேவியை நித்தம் பூஜிக்க வழிகாட்டிய தங்களுக்கும் எனது கோடானு கோடி நமஸ்காரங்கம். தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ காயத்ரி தேவியை தினம் வேண்டுகிறேன்
அநேக நமஸ்காரம்.
(கையெழுத்து)

Tuesday, November 24, 2009

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள் -12



அமைதியாக என் ப்ளாக்கை வாசிப்பவர்கலில் என் அக்காவும் ஒருவர். (உடன் பிறந்த அக்கா)
கடந்த பதிவுகளை பார்த்துவிட்டு அதிசயமாக ஒரு மெய்ல் அனுப்பினார். அனுமதியுடன் பிரசுரம்:
-----
அன்புள்ள தம்பி ,
ஜபயக்ன மகிமை படித்தேன் .எனக்கு என்ன அனுபவம் என்று யோசித்தேன் .
ஒன்றும் சொல்ல தெரியவில்லை என்பதாலேயே ஒன்றும் இல்லை என்று ஆகிவிடாது .
பிரச்சினை வந்து பின் சரியாக போவது ஒருபுறம் .
வருவது தெரியாமலே சரியாகி இருக்கும்
அப்படிதான்
அப்படியேதான் என் அனுபவத்திற்கு வராமல் பகவான் பார்த்துகொண்டுவிட்டார் என்றே சொல்லணும்
It is not like problem came and got solved.It got dissolved or it was solved without (prior to)our notice.
one nijam, kathai alla. Sri G went to see Maha Periyava.Kanchi Periyava asked them whether they experienced any rain on the way.G 's wife replied that it was windy near sunguvar chathiram but it didnot rain.Periyava smiled and kept quiet.While returning they stopped near a pottikadai at sunguvar chathiram to have soda.That tea-vala is known to them for a longtime.He said your jeep just escaped by a fraction of a second ,as a huge tree branch got broken and landed on the ground due to strong wind. What do you think abt this?

சின்ன கொப்புளம் வந்து பெரிசாகி ரணமாகியும் சரி பண்ண பாடு பட்டு வேண்டி சரியாகலாம் .
அல்லது கடவுள் அருளால் அமுங்கியும் விடலாம்தானே.அதை கவனித்து கூட இருக்க மாட்டோம் .
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிருக்கலாம்

Well done,keep it up!
With all the best wishes,
affly
------------------


Sunday, November 22, 2009

காயத்ரி அனுபவங்கள் -11




இந்த ஜப யக்ஞம் ஆரம்பிக்கும் போது செலவு குறித்து கேள்வி எழுந்தது. வசூல்
ஏதும் வேண்டாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. ஏன் என்று கேட்டார்கள்.
வசூலுக்கு போக நேரம் இருந்தால் அந்த நேரத்தில் சிலரை போய் பார்த்து ஜபம்
செய்யுங்கள் என்று கேட்கலாம். அல்லது ஜபம் செய்கிறீர்களா ஏதேனும்
பிரச்சினை இருக்கிறதா என்று விசாரிக்கலாம். அதுவே முக்கியம் என்றோம்.

இந்த நேரத்தில் குழு அங்கத்தினர் ஒருவர் அருமையான யோசனை ஒன்றை முன்
வைத்தார். ஜப காலத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அடிப்படையாக
கொண்டது அது. ஓ! உங்களுக்கு அந்த கட்டுப்பாடுகள் குறித்து ஒன்றுமே
சொல்லவில்லையே மன்னிக்கணும்.

சாதாரணமாக கடைபிடிக்க வேண்டிய சிலவற்றையே கட்டுப்பாடு என்று சொல்லி
வைத்தோம். தினசரி மூன்று வேளை சந்தியா உபாசனை, வீட்டு விலக்கு நாட்களில்
ஸ்திரீக்கள் சமைத்து உண்பதில்லை, தினசரி ஒரு ரூபாயாவது தானம்
செய்வது, தினசரி அப்பா அம்மாவுக்கு நமஸ்காரம் செய்தல், சினிமா, டிவி
பார்ப்பதில்லை, பிரம்ம யக்ஞம் செய்தல். இவற்றில் முதல் இரண்டு
கட்டாயம் என்றும் மற்றது விரும்பத்தக்கது என்றும் திட்டம் செய்தோம். இந்த
கட்டுப்பாடுகள் குறித்து நிறைய சர்ச்சை நடந்தது. கடைசியில்
கட்டுப்பாடுகள் ஏதேனும் இருக்கத்தான் வேண்டும் என்று முடிவாயிற்று.
பெரும்பாலான கட்டுப்பாடுகள் அப்படியே ஒப்புக்கொள்ளப்பட்டன.

இதில் தினசரி ஒரு ரூபாய் தானம் என்று உத்தேசித்தோம் இல்லையா? அதை
உண்டியலில் போட்டு சேமித்து யக்ஞத்து செலவுக்கே பயன்படுத்திக்கொள்ளலாமே
என்ற யோசனை முன் வைக்கப்பட்டது. சாதகர்கள் எப்படி இதை ஏற்பர் என்ற
சந்தேகம் இருந்தாலும் பரீட்சார்த்தமாக முயற்சிக்கலாம் என்றும் இதை
செலுத்தினால்தான் ஹோமத்தில் பங்கேற்கலாம் என்று சொல்வதில்லை என்றும்
முடிவு செய்தோம். முதல் வருட ஹோமம் முடிந்த பிறகு இது குறித்து சாதகர்கள்
என்ன நினைக்கிறார்கள் என்று விசாரித்ததில் எல்லாரும் இதை வரவேற்பது
தெரிந்தது. ஹோமத்தன்று பலரும் ஒரு ரூபாய் நாணயமாக நூறு ரூபாய் கொண்டு
வந்து கொடுத்ததிலேயே இதை ஒருவாறு ஊகித்து இருந்தோம். தானே செலவு செய்து
ஹோமம் செய்வதாக அவர்களுக்கு தோன்றியதில் ஒரு பெருமிதம் அடைந்ததாக
தெரிந்தது. இது தவிர நெய் கால் கிலோ கொண்டு வரச்சொன்னோம். பலரும்
கொண்டுவந்தனர். அல்லது அதற்கான தொகையை செலுத்தினர்.
முதல் சில வருடங்கள் செலவு கையை கடித்தாலும் பின்னால் கொட்டகை போடுவதை
தவிர்த்தபின் வரவும் செலவும் சரியாகிவிட்டது. நெய்யும் ஹோமத்துக்கு
வேண்டிய அளவு தானாகவே வந்து விடுகிறது. இதில் பெரிய விஷயம் என்ன என்றால்
இப்படி மற்றவர்களும் அவரவர் ஊரில் ஏற்பாடு செய்து நிகழ்ச்சி நடத்துவதை
இது ஊக்குவிக்கிறது என்பதே! செலவு பற்றி கவலை பெரிசாக இல்லை அல்லவா?

Saturday, November 21, 2009

காயத்ரி அனுபவங்கள் -10



காயத்ரி ஜபத்தில் பங்கேற்ற அனைவருக்கும் இதே போல அனுபவமா என்றால் தெரியாது என்றே சொல்ல வேண்டும். தங்கள் அனுபவங்களை சிலர் பகிர்ந்து கொண்டனர். அவற்றையே எழுத முடிந்தது. மேலும் சில அந்தரங்கமானவை. எந்த விசேஷ அனுபவமும் பெறாதவர் இருக்கத்தான் இருப்பர். ஏன் என்று புரிய முதலில் ஏன் இப்படி அனுபவங்கள் நிகழ்கின்றன என்று புரிய வேண்டும்.
நமக்கு என்ன கிடைக்கும் என்பது பெரும்பாலும் நம் கர்ம வினையை பொருத்தது. அதை மீறியா ஏதும் கிடைக்கும்? என்றால் இல்லை என்பதே பதில். பின்னே எப்படி இந்த அனுபவங்கள் ஏற்படுகின்றன? இவை பொய்யா?
கர்ம வினைகள் என்ன செய்கின்றன? அவை ஒரு தகுந்த சூழலை ஏற்படுத்துகின்றன. இந்த சூழலில் நமக்கு வேண்டியது கிடைக்க சாதகமானதும் இருக்கும், பாதகமானதும் இருக்கும். புண்ணியங்கள் நல்ல சூழலையும், பாபங்கள் பாதகமான சூழலையும் தோற்றுவிக்கும். நமக்கு வேண்டியது எவ்வளவு கிடைக்கும் என்பது அப்போது நாம் எடுக்கும் முயற்சியையும் பொருத்தது.
காவிரியில் தண்ணீர் நிறைய ஓடுகிறது. நாம் ஒரு குடத்தை கொண்டு போனால் ஒரு குடம் தண்ணீர் கொண்டு வரலாம். ஒரு சொம்பு கொண்டு போனால் சொம்பு தண்ணீர்தான் கிடைக்கும்.
புண்ணிய பாபங்களை அனுபவித்தே கழிக்க வேண்டும். நிறைய பாபம் செய்து இருக்கிறேன். நிறைய புண்ணியமும் செய்து இருக்கிறேன். தானிக்கி தீனி சரி போயிந்தி என்று சொல்ல முடியாது.
ஆனால் நாம் செய்கிற பாபங்களுக்கு பிராயச்சித்தங்கள் உண்டு என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. பிராயச்சித்தம் என்றால் பாபம் முழுக்க போய் விடாது. ஆனால் பெருமளவு குறையும்.
வேண்டுமென வருத்திக்கொள்வது ஒரு வகை பிராயச்சித்தம். உண்ணா நோம்பு போன்றவை இது போல. ப்ராணாயாமம் போன்ற சில கிரியைகளும் பிராயச்சித்தம் ஆகும். மந்திர ஜபங்களும் பிராயச்சித்தம் ஆகும். அதில் முக்கியமானது காயத்ரி. அதனால் காயத்ரியை அதிக அளவில் ஜபிக்க பாபங்கள் வெகுவாக நீங்கி காரியங்கள் நடக்க தகுந்த சூழ்நிலை மேலோங்கிவிடும்.

ஒரு சின்ன உதாரணம் பார்க்கலாம்.

ஒரு பெரிய புல்வெளி. அதில் ஒரு பசு மாட்டை கட்டிப்போட்டு இருக்கிறது. மாடு எவ்வளவு புல் மேய முடியும்? கயிறு அனுமதிக்கிற அளவு ஒரு வட்டத்தில் மேயலாம். அந்த வட்டத்துக்குள்ளேயே சில மரங்கள் இருக்கலாம், புதர்கள் இருக்கலாம். அவை மாடு தேவையான அளவு மேய முடியாமல் தடுக்கலாம். இந்த புதர்களை நீக்கிவிட்டால் மாடு தேவையான புல்லை தடை இல்லாமல் மேய்ந்து கொள்ளும்.
உலக போகங்களே புல்வெளி. பசு மாடு நாம். கயிறு நம் கர்மா. மரம் புதர்கள் நம் பாபங்கள். இவற்றை நீக்குதல் பிராயச்சித்தங்கள். பிராயச்சித்தங்களால் நம் பாபங்களை குறைத்துக்கொண்டால் கர்மா அனுமதிக்கிற அளவு முழுமையாக உலக போகங்களை அனுபவிக்கலாம்.

இப்ப புரியும் ஏன் சிலருக்கு வியக்கத்தக்கதாக அனுபவங்கள் ஏற்படுகின்றன, ஏன் சிலருக்கு இல்லைன்னு. சட்டியில் இல்லாதது அகப்பையில் வராது.
அப்படியானால் கொடுத்து வைக்காத சிலருக்கு ஒரு நல்லதும் காயத்ரி ஜபத்தால் ஏற்படாதா? என்றால் அப்படியும் இல்லை.
ஜப காலத்தில் நடத்தும் ஒரு கூடுதலில் வந்திருந்தவர்களை அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொண்டோம். ஸ்ரீ சீ. ஜப யக்ஞத்தில் வெகு நாட்களாக பங்கு கொள்பவர். அவருக்கு மனைவியின் உடல் நலத்தில் ஆரம்பித்து ஏகப்பட்ட பிரச்சினைகள். இவர் என்ன சொல்லுவார் என்று விஷயம் தெரிந்த சிலர் ஆச்சரியப்பட நண்பர் பேச ஆரம்பித்தார்.
"மூன்று வருஷங்களாக ஜபம் செய்து வருகிறேன். ஆரம்பித்த போது நிறைய பிரச்சினைகள் இருந்தன. இப்போது ..." என்று சொல்லி நிறுத்திய போது பெரும்பாலானோர் எல்லாம் சரி ஆகிவிட்டது என்று சொல்லுவார் என எதிர்பார்த்தனர்.
"இப்போதும் நிறைய பிரச்சினைகள் இருக்கு."
பலரும் ஏமாந்து போனது அவர்கள் முகத்தில் தெரிந்தது.
"ஆனால் பெரிய வித்தியாசம். இப்ப "வாழ்க்கைனா இப்படித்தான் இருக்கும்; சுக துக்கங்கள் வந்து வந்து போகும்" என்று புரிந்துவிட்டது. அதனால இப்போ பிரச்சினைகள் வந்தாலும் கஷ்டப்பட்டாலும் ரொம்ப துக்கப்படுவதில்லை."
கேட்ட பேரில் எவ்வளவு பேருக்கு என்ன புரிந்ததோ, நான் வெகு ஆச்சரியப்பட்டேன். இறைவன் க்ருபை எவ்வளவு இருக்கிறது! இந்த ஞானம் மட்டும் வந்துவிட்டால் எங்கோ போய்விடலாமே!


Friday, November 20, 2009

காயத்ரி அனுபவங்கள் -9



சில நாட்களாக ஊரில் இல்லாததால் பதிவு போட முடியவில்லை. மன்னிக்கணும். இன்று கொஞ்சம் நேரமிருப்பதால் மற்ற பதிவுகளையும் ஷெடூல் செய்துவிடுகிறேன்.
---------
எந்த மந்திரமானாலும் அதற்கு சில சட்ட திட்டங்கள் உண்டு.
மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை அல்லவா? அதனால்தான் அப்படி.

எந்த மந்திரமானாலும் குரு மூலமாக உபதேசம் வாங்கி ஜபம் செய்தால் மட்டுமே முழுமையான பலன் பெற முடியும். இல்லையானால் முழுமையான பலன் கிடைக்காது. (மேலும் சில இன் பில்ட் பாதுகாப்புகள் மந்திரங்களுக்கு உண்டு! இங்கே சொல்லவில்லை. குரு சொல்லுவார்.)

முன் காலத்தில் கராத்தே போன்ற கலைகளை யார் வேண்டுமானாலும் ஒருவரிடம் போய் காசு கொடுத்து கற்றுக் கொள்ள முடியாது. சரியான நபர்களை தேந்தெடுத்து மட்டுமே சொல்லித்தருவார்கள். தவறாக பயன்பட்டுவிடக்கூடாது என்பதே காரணம். இது இப்போது கடைப்பிடிக்கப்படாததால் விளைகிற அனர்த்தங்களை பார்த்து வருகிறோம் அல்லவா? சில வருடங்கள் முன் ஒரு பல்கலைக்கழக ஹாஸ்டலில் ஒரு மாணவனை ரேகிங்க் செய்யும்போது ஒரு கராத்தே அடி கொடுக்கப்போய் மாணவன் இறந்து போனார்.

அதே போல மந்திரங்களும் தகுந்த பாத்திரத்தை தேர்ந்தெடுத்தே உபதேசம் செய்யப்படும். ஒவ்வொருவருக்கும் பொருத்தமான மந்திரமும் இருக்கும். அதை குருவே உணர்வார்.
அதனால் குரு உபதேசம் இல்லாமல் மந்திர ஜபம் செய்யலாகாது. "பின்னே, அப்படி இல்லாமல் இன்னார் ஜபம் செய்து பயன்பெற்று இருக்கிறார்களே?” என்றால் அது "தெய்வத்தால் ஆகாதெனினும் மெய் வருத்த கூலி தரும்" கதை போன்றதாகும்.

மந்திர ஜபம் செய்வோருக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும். ஆசார அனுஷ்டான விஷயங்களை பொருத்து இது அமையும். முறைப்படி செய்யாது போனால் சில விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்படக்கூடும்.

பலர் நினைப்பது போல இது அந்தணருக்கு மட்டுமே இல்லை. காலப்போக்கில் அப்படி ஆகிவிட்டது.
நான்கு வர்ணங்களில் முதல் மூன்று வர்ணத்தாருக்கும் பிரம்மோபதேசமும், பூணூலும், காயத்ரியும் உரியன. நான்காம் வர்ணத்தவர் அவர்களது தர்மத்தை அனுசரிப்பதாலேயே மேன்மை பெற்று விடுவதால் அவர்களுக்கு இது தேவை இல்லை. அவர்களது வேலைகளை உத்தேசித்து அவர்களால் தேவையான ஆசாரத்தையும் கடை பிடிக்க இயலாது.

காலப்போக்கில் மக்கள் ஆசாரத்தை விட விட இப்போது வெகு சிலரே கடைபிடிக்கிறார்கள். மேலை நாட்டு படை எடுப்புகளால் க்ஷத்திரியர்கள் சண்டை போட்டே காலம் கழிக்க ஆசார அனுஷ்டானம் போயிற்று. வைச்யர் திரைக்கடலோடியும் திரவியம் தேட ஆரம்பிக்க அவர்களுக்கும் போயிற்று. இப்போது அசிரத்தையால் அந்தணர்களுக்கும் இது மறைந்து வருகிறது.

அதற்காகத்தான் இதைப்பற்றி எழுத ஆரம்பித்தேன்.

சிலர் ஏன் பெண்களுக்கு இல்லை? வேத காலத்தில் சில பெண் வேத பண்டிதர்களும் இருந்து இருக்கிறார்களே என்றெல்லாம் கேட்கலாம்.
அது ஒரு காலம்.

காலப்போக்கில் மனிதனின் சக்தி குறைந்து வருகிறதா இல்லை அதிகமாகிறதா என்று ஒரு கேள்வி. சந்தேகமே இல்லாமல் குறைந்துதான் வருகிறது.
தசரதர் தேவர்களுக்கு தேவாசுர போர்களில் உதவி செய்ய போனதாக இதிகாச / புராணம் சொல்கின்றன. மேலும் பல அரசர்கள் அப்படி செய்து உள்ளார்கள். இப்போது தேவர்களை பார்க்கிறதே முடியவில்லை!
சத்ய யுகத்திலே பலரும் தவம் செய்தே காலம் கழித்தார்கள். துவாபர யுகத்தில் யோகம் செய்து கழித்தார்கள். திரேதா யுகத்தில் யாகங்கள் செய்து கழித்தார்கள். இப்போதோ பொருள் ஈட்டுவதிலேயே குறியாக இருக்கிறோம்.
இப்படியாக மனிதனின் ஆன்ம சக்தியாகட்டும் தேக சக்தி ஆகட்டும் குறைந்து கொண்டே வருகிறது. ஏன் அவ்வளவு? பிரதாப சிம்மன் பயன்படுத்திய இரும்பு கவசம் ஜெய்பூர் அரண்மணையில் இருக்கிறது. அவனோ அதை மேலே போட்டுக்கொண்டு சண்டையே போட்டான். இப்போது உள்ள மனிதர்களால் அதை தூக்கக்கூட முடியவில்லை. நாலு பேர் சேர்ந்தே தூக்க வேண்டி இருக்கிறதாம்!
இப்படி க்ஷீணித்து போய்விட்ட நிலையில் ஆன்ம சக்தி குறைந்துவிட்ட சமயத்தில் பெரியோர்களால் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அந்தணர்களுக்கு சைவ உணவே விதிக்கப்பட்டது. பெண்களுக்கு வேத பாடங்கள் வேண்டாம் அல்லது வேள்வி செய்யும் காலத்தில் பயனாகும் மந்திரங்கள் சொல்லி வைத்து சொல்லப்பட வேண்டும் என்று மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

இதனல்தான் வேத கால பெண்மணிகள் வேதம் பயின்று இருந்தார்களோ இல்லையோ (வேத ரிஷிகளான அவர்களது கணவர்களிடம் தத்துவ விஷயம் தெரிந்து கொண்டு இருக்கலாம். வேத பாடங்களுக்கு எப்போதும் அதிகாரமில்லை என்றும் ஒரு கருத்து உண்டு ) இப்போது அதற்கு அதிகாரமில்லை.

இதற்காக வருந்த வேண்டாம். நாம ஜபம் ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து ஜபித்து பயன்பெறுங்கள். அல்லது குருவை கண்டுபிடித்து தகுந்த மந்திர உபதேசம் பெறுங்கள்.

இல்லை காயத்ரி மீது அவ்வளவு ஈடுபாடு இருந்தால் யோ தேவ ஸவிதா என்று ஆரம்பிக்கும் சுலோகத்தை கற்று ஜபியுங்கள். இதுவும் பலம் வாய்ந்தது என்று என் அக்கா சொல்லி இருக்கிறார். பொருள் காயத்ரியின் பொருளேதான்.

யார் மீதும் எந்த காழ்ப்பும் இல்லாமலே எழுதி இருக்கிறேன். சரியான படி எடுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!



Thursday, November 12, 2009

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-8



கடலூரில் ஏழு வருஷம் ஜப யக்ஞம் நடந்த பிறகு மற்ற ஊர்களில் இதை பரப்பலாமா
என்று யோசித்தோம். பார்க்கும் வெளியூர் நண்பர்களிடம் இதைப்பற்றி பேசுவோம். ஆரம்ப முதலே சென்னை உள்பட சில ஊர்களில் இருந்து விண்ணப்பங்கள் வந்தன. ஆனால் அவர்கள் வருடா வருடம் வர முடியவில்லை. அவரவர் ஊரிலேயே நடக்க வேண்டும் என்று யோசித்தோம். முதல் கட்டமாக நெய்வேலியை பிரித்து அங்கேயே நடத்து முயன்றோம். அவர்கள் உறுதியாக கடலூருக்குத்தான் வருவோம் என்று சொல்லிவிட்டார்கள். வேலூரில் ஒரு வைதீகர் ஸ்ரீ க. அவருடைய பந்துக்கள் இங்கே கடலூரில் இருந்ததால் அவரை முன்னமேயே சந்தித்து இருந்தேன். அவரே இதைப்பற்றி ஒரு முறை பிரஸ்தாபித்தார். விவரங்கள் கேட்டுக்கொண்டு சிலரை அனுப்பலாமா என்றார். தாராளமாக என்றோம்.

5 பேர்களை தேர்ந்து எடுத்து அடுத்த ஹோமத்துக்கு அனுப்பி வைத்தார்.

அனைவரும் டாக்டர், ஆடிட்டர் போல நிலையில் இருப்போர். வந்தவர்கள் ஹோமம் செய்து மிகவும் மகிழ்ந்து போனார்கள். அவர்களிடம் "அடுத்த வருடம் உங்கள் ஊரிலேயே செய்கிறீர்களா?” என்றோம். "அவசியமாக!” என்று பதில் வந்தது.

கொஞ்சமும் காலம் தாழ்த்தாமல் அந்த வருஷமே துவக்கிவிட்டார்கள். ஆவணி மாதம் ஆரம்பித்து தை மாசியில் ஹோமம் செய்கிறார்கள். இந்த வருடம் மூன்றாவது முறை
ஜப யக்ஞ ஹோமம்.

பங்களூரில் ஒரு நண்பர் என் பையருக்கு. குடும்பத்தில் வேத சம்பந்தம் விட்டுப்போய் சில தலை முறைகள் ஆகிவிட்டாலும் இவருக்கு மட்டும் வேதத்தில் சிரத்தை ஏற்பட்டு முயன்று சில சூக்தங்கள், ருத்திரம், சமகம் போல சில பாடங்களை கற்று வந்தார். என் பையர் நெரூர் போக வேண்டி வந்தபோது தொலை தொடர்பு இல்லாததால் வழி காட்டுதலுக்கு என்னிடம் சொல்லிவிட்டு போனார்.

டாக்டர் என்று தெரிந்து கொண்ட நண்பர் ஸ்ரீ. ஹ. சில மருத்துவ பிரச்சினைகளையும் முன் வைத்தார். அவருடைய அம்மாவுக்கு மார்பக புற்று நோய் கண்டு மருந்து கதிர் மருத்துவங்களுக்கு பலனில்லாமல் அறுவை செய்து இருந்தார்கள். அதில் மீண்டும் புற்று வளர ஆரம்பித்துவிட்டது. டாக்டர்கள் ஜனவரி தாண்ட மாட்டார் என்று சொல்லிவிட்டார்கள். இதை அவர்கள் அம்மாவிடம் சொல்லவில்லை. பிப்ரவரியில் அவருடைய தம்பிக்கு திருமணம் ஏற்பாடு செய்ய முயற்சி நடந்து கொண்டு இருந்தது.  அதையாவது பார்த்துவிட்டு போகலாமே என்பது குடும்பத்தார் எண்ணம். மேலும் இவருக்கு குழந்தை பேறு இல்லாமல்
இருந்தது.

நான் சொன்னேன், "அப்பா! எங்கள் மருத்துவத்திலோ ஆகக்கூடியது எல்லாம் பார்த்து இருக்கிறீர்கள். இனி ஒன்றும் செய்வதற்கில்லை.”
ஏதாவது மந்திர ஜபம் செய்தால் பலிக்குமா?
யார் கண்டது பலித்தாலும் பலிக்கலாம். கர்மாவை பொறுத்து!
என்ன ஜபம் செய்யலாம்?
எனக்கு இருப்பது ஒன் பாய்ன்ட் ப்ரோக்கிராம். காயத்ரியை விட சிறந்த மந்திரம் இல்லை. பிராயச்சித்தம் இல்லை.
எவ்வளவு செய்ய வேண்டும்?
தினசரி ஆயிரம்?
யப்பா! அவ்வளவு எப்படி முடியும்?
சரி! நீங்கதானே கேட்டீங்க என்ன செய்யணும்ன்னு?
முடியுமா? நான் ஸாப்ட்வேர் எஞ்சினீர். நேரம் கிடைக்கிறது கஷ்டம்.
மனசு வைத்தால் நேரம் கிடைக்கும். முயற்சி பண்ணிவிட்டு அப்புறம் முடியும், முடியாதுன்னு தீர்மானம் செய்யலாமே?

சரி என்று அவரும் தன் ஜபத்தை ஆரம்பித்தார். கஷ்டமாக இருந்தாலும் முயற்சி தொடர்ந்தது. ஆனால் அதிகம் செய்ய ஒரு ஊக்கம் இல்லை.
அடுத்த முறை பேசியபோது "வேலூரில் ஜப யக்ஞம் துவங்குகிறார்கள். நீங்களும் சேர்ந்து கொள்ளுங்களேன்" என்றேன்.
ஸ்ரீ க. வின் தொலைபேசி எண்ணை அவருக்கு கொடுத்தேன்.
அடுத்த நாள் இரவு அழைப்பு வந்தது. ஸ்ரீ க விடம் தொலபேசி தொடர்பு கொண்டாராம். ஜப யக்ஞ விவரம் கேட்டுக்கொண்டார். "படிவம் அனுப்புகிறேன். கடைசி நாள் ஆகிவிட்டது, இருந்தாலும் பரவாயில்லை!” என்றார். ஸ்ரீ க.
முகவரி கேட்டு எழுதும் போது ஸ்ரீ கவின் பக்கத்தில் அதுவரை அவருடன் பேசிக்கொண்டு இருந்தவர் வியப்புடன் "அங்கேதானே என் வீடு!” என்றார்.
பார்த்தால் ஸ்ரீ ஹ. உடைய பக்கத்து வீட்டுக்காரர்! அவர் மூலமாகவே படிவம்
அனுப்பப்பட்டது.

ஒரு லட்சம் முடியவில்லை என்றாலும் கணிசமாக ஜபம் செய்தார். ஹோமத்திலும் கலந்து கொண்டார். நானும் அங்கே போயிருந்ததால் சந்திக்க முடிந்தது. இதற்குள் தம்பி கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டது. பத்திரிகை கொடுத்தார்.
வேலை பளுவில் அவரை அப்புறம் மறந்தாயிற்று. சமீபத்தில் அவர் ஔபாசனம் ஆரம்பிக்க எண்ணி கேட்டுக்கொண்டதால் பையர் போய் ஆரம்பித்து வைத்துவிட்டு வந்தார். பையர் அங்கே இருக்கும்போது வேறு விஷயத்துக்காக தொடர்பு கொண்டேன். எதிரிலேயே ஸ்ரீ ஹ. இருந்ததால் பேசுகிறாயா என்றார்.
 பேசலாமே!
சுருக்கமாக,
தம்பி திருமணம் நன்றாக நடந்தது; அம்மா இன்னும் உயிருடன் இருக்கிறார். பிரச்சினை ஏதும் இல்லை. மனவி கர்ப்பமாக இருக்கிறார்!

அட இப்படித்தானே நடக்கும்!
பிகு: இதை எழுதிய பின் சமீபத்தில் அவரது அன்னை வேறு காரணங்களால் ஊருக்கு  போய்விட்டார்கள்.

Wednesday, November 11, 2009

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-7




சுமார் ஏழு வருடங்கள் டவுண் ஹாலில் கொட்டகை போட்டு நடத்தி வந்தோம்.
அதே சமயம் முக்கால் வாசி சாதகர்கள்  திருப்பாதிரிப்புலியூர் பகுதி, அதைத்
தாண்டிய பகுதிகளில் இருந்து வந்து கொண்டு இருந்ததாலும், நெய்வேலி மக்கள்
திருப்பாதிரிப்புலியூருக்கு பேருந்தில் வருவது சுலபம் என்பதாலும் இடத்தை
மாற்றிவிட தீர்மாணித்தோம். அங்கே இருக்கிற பள்ளி ஒன்றில் கொட்டகை அமைத்து
நடத்தினோம்.

அடுத்த வருடம்  கும்பகோணத்தில் தீ விபத்து நடக்கவே கொட்டகைகள் போட தடை
விதிக்கப்பட்டது. ஷீட் போட்டு கொட்டகை அமைத்தால் சூடும் உள்ளே
இருப்பவர்களுக்கு தாங்காது, புகையும் வாங்காது.

அப்போது திருப்பாபுலியூரில் இருக்கும் சங்கர பக்த ஜன சபா கமிட்டியினர்
அவர்களாகவே வந்து அவர்களுடைய ஹாலில் நடத்தும்படி கேட்டுக்கொண்டார்கள்.
சில காரணங்களால் அந்த இடம் சரியாக பயன்படுத்தப்படாமல் இருந்தது.

ஹால் என்றால் எப்படி குழி தோண்டி ஹோமம் செய்வது?

பரவாயில்லை வருடா வருடம் தோண்டிக்கொள்ளலாம். நாங்களே சரி செய்து
கொள்கிறோம் என்றார்கள்.
மனசாகவில்லை.
எங்கள் வீட்டுக்கு வரும் நண்பரை கலந்தாலோசித்ததில் அவர் ஒரு வகையில்
செங்கல் வைத்து ஹோமம் செய்ய கற்றுக்கொடுத்தார். இந்த முறையில்
பயமில்லாமல் தரைக்கு ஒரு பாதகமும் வராமல் ஹோமம் செய்யலாம். அக்னியும்
நன்றாக ஜ்வாலை விட்டு எரியும்.
இப்படியே செய்து பார்க்க முடிவு செய்தோம்.

எங்களுக்கு வீடு கட்டிக்கொண்டு இருந்த மேஸ்த்ரியை கூப்பிட்டு செங்கல்
வேண்டும் என்று  கேட்டோம்.அவரும் தருகிறேன் என்றார். அப்புறம் இன்னொரு
பிரச்சினை. ஹோமம் முடிந்தபின் இத்தனை செங்கல்லையும் என்ன செய்வது?
யோசித்து மேஸ்த்ரியை நீங்களே இதை எடுத்துபோய் கட்டிடம் கட்ட உபயோகிக்க
முடியுமா என்றோம்? அவரும் செய்யலாம் சார் என்றார்.
அதே போல ஹோமத்துக்கு முன் தினம் வந்து எங்கள் வழி காட்டுதலில் ஹோமம்
குண்டம் தயார் செய்து கொடுத்துவிட்டு போய்விட்டார்.

ஆரம்பத்தில் இருந்து எங்கள் நிதி நிலை இப்படி அப்படிதான் இருந்தது.
அதனால் மேஸ்த்ரி என்ன பணம் வேண்டும் என்றூ கேட்டேன்.அவரோ ஒண்ணும்
வேண்டாம் சார். இது என் பங்காக இருக்கட்டும் என்றார்.

அடுத்த வருடம் அவரே எப்போ சார்  ஹோமம் என்று  விசாரித்தார்.

குண்டம் அமைத்து கொடுத்தார். அந்த வருஷம் கையில் கொஞ்சம் பணம் தேறியது.
அதனால் கூலி கொடுக்க முன் வந்தேன்.
"வேண்டாம் சார்! என்றார்.
"ஏன் மேஸ்த்ரி?"
சார், இந்த ஹோமம் முடிஞ்ச பிறகு அந்த கல்லை வெச்சு கட்டிடம் கட்ட
ஆரம்பிச்சா ஸ்டாப் ஆகாம வேல ஓடிப்போகுது சார். அதிலே அவ்வளொ பவர்
இருக்குது என்றார்!

அண்மையில் அவர் ஒரு - அவர் லெவல் க்கு மிகப்பெரிய கட்டிடம் -
மருத்துவ மனை கட்டி இருந்தார். அதனால் எனக்கு அது உண்மை என்று  தெரியும்.
சாதாரணமாக என்னதான் செல்வ சீமானாக இருந்தாலும் ஏதோ காரணமாக கட்டிட வேலை
தடை பெறுவது உண்டு. இதிலோ ஒரு தடையும் இல்லை. வேலை படு வேகமாக
நேர்த்தியாகவே முடிந்தது.

இதை கேள்வி பட்ட சிலர் அடுத்த வருடம் என்னிடம் வந்து அந்த ஹோமத்தில்
வைத்த செங்கல் தர முடியுமா என்று கேட்டர்கள். நான் கல் எல்லாமே
மேஸ்த்ரியுடையது., அவருக்கு கொஞ்சம் திரவியம் கொடுத்துவிட்டு
வாங்கிக்கொள்ளுங்கள் என்றேன். அவர்களும் அதே போல பணம் கொடுத்து
வாங்கிச்சென்றனர்.
எனக்கே நன்றாக தெரிந்த ஒரு ஆசிரியை அப்படி வாங்கிச்சென்று தடை இல்லாமல்
கட்டிட வேலை முடிந்தது. இத்தனைக்கும் அவர்கள் வருமானம் அப்படி ஒன்றும்
அதிகமில்லை.

கூட்டங்களில்  சொல்வதற்கு எனக்கு இன்னும் ஒரு விஷயம் அகப்பட்டது.
ஏன்பா காயத்ரியின் பெருமை ஒரு மேஸ்த்ரிக்கு தெரிகிறது. உனக்கு தெரியலையே? :-))

Tuesday, November 10, 2009

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-6



ஏறத்தாழ ஆரம்ப நாட்களில் இருந்து பதிவு செய்து ஜபம் செய்பவர்களில் ஒருவர் ஸ்ரீ பா. இவரும் இப்போது விடுப்பு பெற்ற பின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.

வருடா வருடம் லட்சம் முடித்துவிடுவார். விபத்து ஒன்றில் சிக்கி காலில் ஊனம் இருப்பதால் வெகு நேரம் உட்கார முடியாது. தன் மகனை தனக்கு பதில் உட்கார்ந்து ஹோமம் செய்ய சொல்லுவார்.

இவர் மாப்பிள்ளை இப்போது இருக்கும் வழக்கப்படி வெளிநாட்டில் இருக்கிறார். கைக்குழந்தையுடன் ஊருக்கு வந்து விடுமுறையை கழித்த  தன் பெண்ணை விமானம் ஏற்றி விடபோனார்.

பாகேஜ் செக் இன் எல்லாம் முடிந்து அறிவிப்பு வர காத்து இருந்தார்கள். இவர்களது விமானத்துக்கு முந்தைய விமானம் கிளம்ப இருப்பதாகவும் பயணிகள் வர வேண்டும் என்று அறிவிப்பு வந்தது. அப்போது திடீரென்று குழந்தை அழ ஆரம்பித்தது. என்ன செய்தும் அழுகை நிற்கவில்லை. செய்வது அறியாமல் திகைத்தனர். விமானம் ஏறும் திட்டம் கைவிடப்பட்டது. இவருக்கு வேறு இஷ்ட தெய்வமில்லை. காயத்திரியை மனசில் வேண்டிக்கொண்டார்.

முந்தைய விமானம் ஏற அறிவிப்பு வந்திருந்ததாக சொன்னேன் இல்லையா? அதற்கு விரைந்து கொண்டிருந்தவர்கள் இந்த அழுகிற குழந்தையை திரும்பி பார்த்துக்கொண்டே போனார்கள். விரைகின்ற பயணிகளில் இருவர் -சகோதரிகள்-  வடக்கத்தி பெண்கள் பாதை பிரிந்து வந்து இவர்களை பார்த்து ஏன் குழந்தை அழுகிறது என்று கேட்டனர். இவர்களும் ஒன்றும் புரியவில்லை என்று சொன்னார்கள். அவர்கள் இவர்களுடைய பக்கத்தில் இருந்தவர் மூலமாக இந்த குழந்தைக்கு உரம் விழுந்துடுத்து என்கிட்டே கொடுங்க சரி செய்கிறோம் என்றார்கள். முன் பின் தெரியாதவர்கள். இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. விமானம் ஏறவோ நேரம் ஆகிக்கொண்டு இருந்தது. இருவரில் ஒரு பெண்மணி ஏறத்தாழ வலுக்கட்டயமாக குழந்தையை பிடுங்கிக்கொண்டு படிக்கட்டு அருகில் போனார். ஏதோ செய்தார். சட் என்று அழுகை நின்றது. திரும்பி வந்து குழந்தையை கொடுத்துவிட்டு சரியாகிவிட்டது, இன்னும் பத்து நிமிடங்கள் கழித்து பால் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு விமானத்தை பிடிக்க ஓட்டமும் நடையுமாக விரைந்து காணாமற்போயினர்.! குழந்தை சிரித்துக்கொண்டு இருந்தது!

இவருக்கே இரண்டு வருடங்கள் முன் இன்னொரு அனுபவம்.
தன் மகனை பொறியியல் கல்லூரியில் சேர்க்க சென்றார். ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் சேர்க்க விருப்பம். மார்க் ஷீட் கிடைத்த உடன் விரைந்து சென்றும் அலுவலகத்துக்கு சென்ற போது எல்லா இடங்களும் நிறைந்துவிட்டது என்றும், இனி வாய்ப்பே இல்லை என்றும் சொல்லிவிட்டார்கள்.

சரி கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று வெளியே வந்தார்கள். அங்கே அவர்கள் வாடகைக்கு அமர்த்தி சென்று இருந்த கார் ஓட்டுனர் சார் ஒரு சக்கரம் பஞ்சர் ஆகிவிட்டது. இதோ மாற்று சக்கரம் பொருத்திவிடுகிறேன், பிறகு போகலாம் என்று சொல்ல இவருக்கு இன்னும் கஷ்டம் அதிகமாகி விட்டது.

அம்மா காயத்ரி ஏன் இப்படி சோதிக்கிறாய் என்று பிரார்த்தனை செய்துவிட்டு சக்கரம் மாற காத்து இருந்தார்கள். பத்து நிமிடங்கள் கழித்து சரி செய்துவேறு சக்கரம் பொருத்திய பின் வண்டி ஏறப்போன அதே நேரம் அலுவலகத்தில் இருந்து பணியாளர் ஓடி வந்து "சார் உங்களை ஆபீசிலே கூப்பிடறாங்க!" என்றார்.

குழப்பத்துடன் திரும்பி போனால். "சார்! இப்போதுதான் ஒரு போன் வந்தது ஏற்கெனெவே இடம் ஒதுக்கிய ஒருவர் வேறு இடத்தில் சீட் கிடைத்ததால் வரவில்லை என்று தெரிவித்தார்கள் . நீங்கள் விரும்பினால் பணம் கட்டி பையனை சேர்த்துவிடலாம்" என்றனர்!
காயத்ரிக்கு நன்றி சொல்லிக்கொண்டே பணம் கட்டினார்கள்.


Friday, November 6, 2009

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-5



ஒரே பிரச்சினை.

"என்ன பிரச்சினை?”
"வீட்டிலே ஜெ பாட்டுக்கு எப்ப பாத்தாலும் ஏதோ தியானத்திலே இருக்கான்.
எந்த வேலையை தேடவும் முனையலை. வாழ்க்கையிலே பிடிப்பே இல்லாத மாதிரி
இருக்கான்.”
ஏதோ பெரிய சமாசாரம் இது ன்னு தோன்றியது.
"அவரோட தினசரி வேலையை அவரே பாத்துக்கிறாரா?”
"பாத்துக்கிறார்.”
"அவரை அவர் போக்கிலேயே விட்டுங்க. மாத்த முயற்சி செய்ய வேணாம். தேவையானால் நான் வந்து உங்க அப்பா அம்மாகிட்டே பேசறேன்.”
வந்த தம்பி நான் வீட்டுக்கு வந்து ஜெ ஐ மாத்த முயற்சி செய்வேன்ன்னு நினைச்சார் போல இருக்கு. சரின்னு அரை குறை மனசோட கிளம்பி போனார். தொடர்பு
கொள்ளவே இல்லை.
அடுத்த வருடம் யக்ஞத்தில் ஜெ வெறும் பார்வையாளராக மட்டும் வந்து போனார்.
சிரித்துக்கொண்டே ஜபம் எல்லாம் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார். சில மாதங்களுக்குப்பின் ஜெ வுடன் அவர் தம்பி வந்து சேர்ந்தார்.
"என்ன விஷயம்?”
"இவர் பிரச்சினை அதிகமா இருக்கு.”
“????”
"சரி! இவன் ஆன்மீகத்திலேதான் போவான் போல இருக்குன்னு **** ஆசிரமத்திலே
கொண்டுவிட்டோம்.”
"ம்ம்ம்..”
"மூணு மாசத்துக்குள்ளே அவங்க போன் பண்ணி அழைச்சுண்டு போக சொல்லிட்டாங்க.”
"ஏன்!!!!!”
"இவர் பாட்டுக்கு உலாவ போயிடுவார். எங்கே போவார்ன்னு யாருக்கும் தெரியாது.
ஆளை காணோமேன்னு போய் தேடி அழைச்சுண்டு வரணும். ஆசிரம வளாகத்திலெ எங்கே வேணுமானால் இருப்பார். அங்கே எடுக்கிற வகுப்புகளிலேயும் கலந்துக்கிறதில்லை. ஒண்ணும் சரிப்பட்டு வரலை.
திடீர்ண்ணு பாத்தா கண்ணிலேந்ந்து கண்ணீர் வர மௌனமாக இருப்பார். ஆதனால்
அவர்கள் அழைத்து போக சொல்லிவிட்டார்கள். இப்ப என்ன செய்யறது?”
ஜெ வை "என்ன சமாசாரம்?"ன்னு கேட்டேன். அவர் சிரித்துகொண்டே எனக்கு ஒரு
பிரச்சினையும் இல்லை. இவர்கள்தான் கவலைப்படுக்கிறார்கள். என்னால் இவர்களுக்குத்தான் தொல்லை என்றார்.

"இதோ பாருங்கள்! இவரை என்ன செய்வது என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. நாளை **** போய் என் வழிகாட்டியை சந்திக்க இருக்கிறேன். அவரிடன் கேட்டு வருகிறேன். திங்கள் அன்று வாருங்கள்" என்று சொல்லி அனுப்பினேன்.

ஞாயிறு தாத்தாவை (யார் என்று தெரிகிறதல்லவா? என் வழி காட்டி) பார்க்கபோனேன். மற்ற விஷயங்கள் பேசிவிட்டு இவரை பற்றி சொன்னேன். அவர் "டேய்! அவர் என்ன ஸ்டேஜிலே இருக்கார் தெரியுமா? துரியத்திலே இருக்கார். அவருக்கு இப்போ மாத்ரு பாவத்துடன் ஒரு வழிகாட்டுதல் தேவை. **** ஐ போய் பாக்கச்சொல்" என்றார்.

கடலூர் திரும்பினேன். இரண்டு பேருமே மீண்டும் வந்தார்கள். சேதியை சொன்னேன்.
ஜெ சிரித்துக்கொண்டே "நான் **** இல் இருந்த போது சக பயணி ஒருவர் அவரிடம்
போகும்படித்தான் என்னிடம் சொன்னார்" என்றார். "சரி! அவரை சந்தியுங்கள்”
என்றேன்.
ஜெ கதை இத்துடன் முடிகிறது.
நீங்கள் கொஞ்சம் ஏமாந்து போவீர்கள் என்றூ தெரியும். இருந்தாலும் வேறு
வழியில்லை. அந்த குடும்பம் எங்கள் ஊரைவிட்டு போய்விட்டார்கள். பிறகு என்ன
ஆயிற்று என்று தெரியவில்லை.


Thursday, November 5, 2009

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-4

மூன்றவது வருட யக்ஞத்தில் கொஞ்சம் சுதாரித்துகொண்டோம்.  இரண்டாம் வருட
மெத்தனத்தை நீக்க கூடுதல் உழைப்பு கொடுத்து மேலும் ஒருங்கிணைப்பாளர்களை
சேர்த்து கொஞ்சம் சமாளித்துவிட்டோம்.
கடலூரில் மொத்த அந்தணர் குடும்பங்களே குறைவான எண்ணிக்கையில் இருந்ததால்
பக்கத்தில் விழுப்புரம், நெய்வேலி ஆகிய ஊர்களையும் எங்கள் திட்டத்தில்
சேர்த்து இருந்தோம்.
இந்த வருடம் நெய்வேலிக்கு ஸ்ரி  நா. ஒருங்கிணைப்பளராக அகப்பட்டார்.
முன்னால் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் உடல் நிலை சரியில்லாமல் போக அவரே
நா. வை பார்த்து பேசி பொறுப்பை கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டார்.
நா. சத்தான மனிதர். நல்ல உழைப்பாளி. சேர்ந்த முதல் வருடம் பொறுப்பு
தாமதமாக வந்து சேர நேரம் அதிகம் இல்லாததால் சரியாக செயல்பட முடியவில்லை.
64 பேர்களை சேர்த்தார். அடுத்த வருடம் 108 இலக்காக வைத்து முடித்தார்.
நாங்களும் நெய்வேலிக்கே போய் கூட்டங்கள் நடத்தி உற்சாகப்படுத்தினோம். நா.
கொஞ்சம் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபட்டதில்லையாகையால் ஆரம்ப காலங்களில்
கொஞ்சம் வருத்தப்பட்டார். மீட்டிங்க் இருக்கிறது என்று தெரிவிப்பார்.
பதிவு செய்தவரும் ஆஹா வருகிறேன் என்பார். ஆனால் வர மாட்டார். இது நா.
வுக்கு மிகுந்த வருத்தம் தந்தது. "மாமரத்தில் எவ்வளவு பூ பூக்கிறது?
எல்லாமே பிஞ்சாகிவிடுகிரதா? எல்லா பிஞ்சும் காயாகி விடுமா? எல்லா காயும்
பழமாகிவிடுமா? பழுக்கும் அத்தனை பழமும் நமக்கு உண்ண கிடைக்குமா?
இயற்கையில் இப்படி ஒரு நியதி இருக்கிறது. கவலைப்படாதீர்கள். யாருக்கு
கொடுப்பினை இருக்கிறதோ அவர் பயன்பெறுவார். அவர்கள் யார் என்று
தெரியாததால் நாம் பலரையும் சந்தித்து பேச வேண்டி இருக்கு" என்று
சமாதானப்படுத்தினோம்.

உள்ளூரில் நடந்த மீட்டிங்க் ஒன்றில் எவ்வளவு ஜபம் ஆகி இருக்கிறது என்றூ
விசாரித்து கொண்டு இருந்தோம். தொய்வு இருந்தால் என்ன பிரச்சினை என்று
கேட்டு இயன்றால் உதவி வந்தோம்.
மூன்றாம் வருடம் ஒருவர் 3 இலட்சம் முடித்ததாக சொன்னேன் இல்லையா! இவர்
பெயர் ஜெ. இந்த முறை எவ்வளவு என்று கேட்ட போது 11 லட்சம் முடித்து
அப்புறம் எண்ணுவதை நிறுத்திவிட்டேன் என்றார். ஆஹா! வித்தியசமான ஆசாமியாக
இருக்கார் என்று எண்ணி எப்படி இவ்வளவு ஜபம் செய்கிறீர்கள் என்று
கேட்டேன்.
"நான் எங்கே செய்கிறேன்? ஜபம் பாட்டுக்கு ஓடுகிறது; நான் வேடிக்கை
பார்க்கிறேன்" என்றார்! அப்போது எனக்கு இது அவ்வளவு சரியா புரியவில்லை.

மனதில் பல லேயர் இருக்கு. இது பழகியவர்களுக்கு புரியும். மேலோட்டமாக
இருப்பது ஒன்று. இதில அன்றாட சமாசாரங்கள் ஓடும். ஜபம் செய்ய
உக்காருகிறோம். கொஞ்சம் மனசை குவித்து செய்ய ஆரம்பிக்கிறோம். கொஞ்ச நேரம்
ஆச்சு. ஏதேதோ சிந்தனைகள். திடீரென்று "அட! ஜபம் செய்யும் போது இதெல்லாம்
எதுக்கு?" என்று வெட்கப்படுகிறோம். திருப்பி ஜபம் செய்ய நினைக்கிறோம்.
என்ன ஆச்சரியம்! அது பாட்டுக்கு ஓடிக்கொண்டே இருக்கு. நிற்கவேயில்லை.
அதாவது மேலோட்ட சிந்தனைகள் இருக்கும்போதும் அடி மனதில் ஒரு அடுக்கில்
ஜபம் ஓடுகிறது. இப்படி பயிற்சியால் செய்ய முடியும். இந்த ஜபத்தை சும்மா
வேடிக்கை பார்க்கலாம். அது பாட்டுக்கு ஒரு வேகத்தில் லயத்தில் ஓடும்.
இப்படி வேடிக்கை பார்க்க பழகினால் அது மேலே மேலே கொண்டு போய் சாட்சி
பாவத்தில் விடும்.

ஜெ செராமிக்ஸ் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அந்த துறையில்
இவர் நல்ல படிப்பு படித்து இருந்தார்.
ஹோமம் முடிந்த பின் ஒரு நாள் இவருடைய தம்பி இவருடன் என்னை பார்க்க வந்தார்.
என்ன விஷயம்?
ஒரே பிரச்சினை.
.......

Wednesday, November 4, 2009

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-3



லினக்ஸ் புதுசு நிறுவப்போய் பேக் அப்ப பண்ணது எல்லாம் எங்கேன்னு தேடறேன். அதானால தாமதம்.
------------------

முன்னே பணி இட மாற்றுதல் ஒருவர் மனைவிக்கு கிடத்ததாக சொன்னேன் இல்லையா? அவர்கள் ஏழு வருடங்களாக முயற்சி செய்து வந்ததை சொல்லாமல் விட்டு விட்டேன். ஆமாம் ஏழு வருட முயற்சியில் கிடைக்காததுதான் காயத்ரியால் கிடைத்தது.

முதல் வருஷம் காயத்ரி ஜபயக்ஞம் நடத்திய போது அதை வருடா வருடம் நடத்தும் கற்பனை ஏதும் இல்லை. நிகழ்ச்சி முடிந்த பின் என் ஆன்மீக வழிகாட்டியுடன் பேசிக்கொண்டு இருந்த போது இந்த நிகழ்ச்சிக்கு உழைத்தவர்களை அழைத்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி இதைப்பற்றி யோசிக்கச்சொன்னார். நாங்களும் அப்படி செய்ததில் அவரவர் பகுதியில் யக்ஞத்தில் கலந்து கொண்டவர்களுடன் பேசியதில் அனைவரும் இதை வரவேற்றதாகவும் அடுத்தது எப்போ என்று கேட்பதாகவும் சொன்னார்கள். அடுத்த வருடமும் இதே கால கட்டத்தில் நிகழ்ச்சி நடத்துவதாக ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
நவம்பர் மாதம் வேலையை துவக்கினோம். இந்த முறை கொஞ்சம் அலட்சியம் வந்துவிடக்கூடும்,மெத்தனமாக இராதீர்கள் என்று எச்சரித்தும் ஒருங்கினைபாளர் பெரும்பாலானோர் அசட்டையாக இருந்துவிட்டனர். எல்லாரும் போன முறை போல ஜபம் செய்துவிடுவார்கள் என்று நம்பிவிட்டனர். களப்பணிதொய்ய அது பதிவு செய்தோர் எண்ணிக்கை ஜப எண்ணிக்கை இரண்டிலும் பிரதிபலித்தது.

இரண்டாம் ஹோமம் 18-06-2000 அன்று முன் போல டவுண்ஹாலிலேயே!

இந்த முறை 62 பேர்கள்தான். இருந்தாலும் மொத்த எண்ணிக்கை ரொம்பவும் குறையவில்லை. என்னடா என்று பார்த்தால் ஒருவர் 3 லட்சம் செய்து இருந்தார்!
இந்த ஜபகாலத்தில் ஒரு சில கூடுதல்கள் ஏற்பாடு செய்து ஜப காலத்தில் என்ன அனுபவம் என்று விசாரிக்க ஆரம்பித்தோம். அந்த கூட்டத்க்கு வந்தவர்களில் ஒருவர் ரெய்கீ மாஸ்டர் ஸ்ரீ பா. முன்னே பத்து பதினைந்து நிமிடம் ரெய்கி கொடுப்பதில் தெரிந்த எபெக்ட் 3-5 நிமிடங்களிலேயே தெரிவதாக சொன்னார்.


2005 ஆம் ஆண்டு ஜபத்தில் பதிவு செய்து தொடர்புக்கு வந்தவர் ஸ்ரீ ரெ. பதிவு காலம் முடிந்து ஜப காலம் துவங்கியதும் பகுதி வாரியாக கூடுதல்கள் நடத்துவோம். ஜப யக்ஞத்தைப்பற்றிய முழு விவரம் சந்தேகங்களுக்கு பதில்கள் ஜபம் செய்ய உற்சாகப்படுத்துதல் எல்லாம் நடைபெறும். அத்தகைய நிகழ்ச்சி ஒன்றில் அவரை சந்தித்தேன். திருமணம் ஆகவில்லை. ரயில்வே எஞ்சினீயராக வேலை. கூட்டம் நிகழ்ந்த இடத்துக்கு பக்கத்திலே வீடு இருந்ததால் தவிர்க்க முடியாமல் வர நேர்ந்தது போலும்.

எடுத்த எடுப்பிலேயே "பிராம்மணனைப்போல முட்டாள் இல்லை" என்று நான் சொல்ல கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார். அது நான் கவனத்தை கவர செய்யும் யுக்தி. "பின்னே, இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரம் உபதேசம் ஆகி இருந்தும் அதை ஜபம் செய்து பயனடையாமல் நான் கஷ்டப்படுகிறேன் என்று புலம்புபவர்களை என்ன சொல்வது?" என்று காயத்திரியின் பெருமை பக்கம் பேச்சை கொண்டு போய் விடுவேன்.

ரெ சில நடைமுறை சந்தேகங்களை கேட்டார். அந்த வருட ஜப காலம் முடிந்து ஹோமம் நடந்து முடிந்தது. கொஞ்சம் தயக்கத்துடன் என்னை பார்க்க வந்தார். இந்த ஹோமத்துக்கு நீங்கள் நன்கொடை வசூலிப்பது இல்லை என்று தெரியும், ஆனால் கொடுத்தால் வாங்கிக்கொள்வீர்களா என்று கேட்டார். இசைவை தெரிவித்ததும் ஒரு நல்ல தொகையை கொடுத்தார். பின்னாலேயே ஒரு பத்திரிகையை நீட்டினார்.

"என்ன சமாசாரம்?" என்று விசாரித்தேன்.

"எனக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது. இன்னும் 2 மாதங்களில் ...அவசியம் வர வேணும்" என்று கேட்டுக்கொண்டார். வாழ்த்தி அனுப்பி வைத்தோம். பின்னால் விசாரித்ததில் சில விஷயங்கள் தெரிய வந்தன, இவர் ஆரம்பத்தில் ஒன்றும் ஆர்வமாக இல்லை. கூட்டத்தில் பிராமணனை திட்டப்போக அது இவரை கொஞ்சம் உசுப்பி விட்டது. கொஞ்சம் யோசித்தார். நாலு வருஷமாக பெண் பாத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒண்ணும் அமையவில்லை. இவர் ஏதோ சொல்கிறாரே, செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்தார். வீட்டில் டிவி யை தூக்கி பரணில் போட்டார். "டிவி அவசியமாக பார்த்தே ஆக வேண்டும்!" என்ற தன் தாயை தன் அண்ணன் வீட்டுக்கு கொஞ்ச காலம் இருந்து வர அனுப்பினார். ஒரு லட்சம் பூர்த்தி செய்தே ஆக வேண்டும் என்று உறுதியுடன் செய்து பூர்த்தி செய்தார். திருமணமும் நிச்சயம் ஆகிவிட்டது.

ரெ இப்போது எங்கள் ஒருங்கிணைப்பாளர் குழுவில் முக்கிய அங்கத்தினர்!