Pages

Tuesday, October 6, 2009

பூமிகளை பொருத்திப்பாக்க ...




154.
முன்னிலங்க ளேறியமூ வருமப்பி யாசிகளா முத்த ரல்லர்
பின்னிலங்கள் வரன்வரீயான் வரிட்டனெனுஞ் சீவன் முத்தர் பேத மாகுஞ்
சொன்னநடுப் பூமிவந்த ஞானிகளே பிரமவித்தாந் தூய முத்த
ரின்னமுமப் பூமிகளின் பெருமைதனை நீயறிய யான்சொல் வேனே

முன் நிலங்கள் (சுபேச்சை, விசாரணை, தனுமாசி ஆகிய மூன்று) ஏறிய மூவரும் அப்பியாசியாவார்கள். [சீவன்] முத்தர் அல்லர். பின் நிலங்கள் (அசம்சத்தி, பதார்த்த பாவனை என்ற மூன்று) வரன், வரீயான், வரிட்டன் எனும் சீவன் முத்தர் பேதமாகும். சொன்ன நடுப் பூமி (சத்துவாபத்தி) வந்த ஞானிகளே பிரம வித்தாம், தூய முத்தர். இன்னமும் அப் பூமிகளின் பெருமைதனை நீ அறிய யான் சொல்வேனே.

நமக்கு ஏற்கெனவே தெரிஞ்சதை வெச்சு பாத்தோம்னா சுலபமா இந்த நிலைகளை புரிஞ்சுக்கலாம். சுபேச்சை, விசாரணை, தனுமாசி என்கிற முதல் மூணு நிலைகள்ல இருக்கிறவங்க ஆன்மீக நாட்டம் உள்ளவங்க அவ்வளோதான். இவங்க முன்னேறினாலும் முன்னேறலாம்; இல்லை நல்ல வாசனை கழிஞ்ச பின் மற்ற வாசனைகள் இழுக்க கீழே இறங்கலாம். இல்லை முன்னேற்றம் தடைப்பட்டு அப்படியே நின்னுடலாம். சொல்ல முடியாது.

விஷய சம்பந்தம் இல்லாம இருக்கிற அசம்சக்தி என்கிற நிலையில அவரை பிரம்ம வரன் என்கலாம்.
பிரபஞ்சம் முதல் எல்லாத்தையும் அகண்ட பிரம்ம சொரூபமாக காண்கிற அனுபவம் அடைஞ்சு சாக்ஷாத்காரம் தவிர மற்ற எல்லா விஷயங்களில் இருந்தும் சம்பந்தத்தை உணர்விலிருந்து நீக்கிட்டார்ன்னு பாத்தோம் இல்லையா? இருந்தாலும் தானாக வெளியே அப்பப்ப வந்து கொஞ்சம் உணவு எடுத்துக்கிறது போல சிலது பண்ணிட்டு திருப்பி சமாதிக்கு போயிடுவாங்க.
பதார்த்த பாவனை நிலையில வெளியும் உள்ளும் எவ்வித பொருட்களின் தோற்றரவும் இல்லாது இருத்தல். அதாவது சமாதி அப்பியாசத்தால் பிரம்மான்ம ஐக்கியம் பூரணமாகி திரிபுடி என்னும் "காண்பவன்- காணப்படுவது- காட்சி" என்ற மூன்றும் நீங்கி இரண்டற்ற ஆனந்தம் அடைதல் ன்னு பாத்தோம். இவங்க பிரம்ம வரீயான்.(நினைவிருக்கா? இவர் தானா வெளியே வர மாட்டார். ஆனா மத்தவங்க இவரை வெளியே கொண்டு வரலாம்.)

துரியம் என்பது சாக்கிரம் சொப்பனம் சுசுப்தி என்ற மூன்று அவஸ்தைகளுக்கும் அப்பாற்பட்டது. திரிபுடி ஒழிந்து சாக்ஷாத்கார நிலையில் அழுந்தி பூரண மௌனமாய் தன்னாலும் பிறராலும் வெளிவராமல் நிர் விகல்ப சமாதி அடைஞ்சுடுவார். இந்த நிலைக்கு போனவர் தானாகவும் வெளி வர மாட்டார். பிறராலும் இவரை வெளிவரச்செய்ய முடியாது. இவர் பிரம்ம வரிட்டன்.

இதுக்கு  நடுவில நாலாம் நிலையில இருக்கிறவங்கதான் சீவன் முத்தர்.


4 comments:

Geetha Sambasivam said...

நான் முதல்நிலை கூட இல்லைனு தோணுது! :((((((

திவாண்ணா said...

ஏன்? சுபேச்சை இருக்கணுமே? இல்லாட்டா இதெல்லாம் இவ்வலவு நாள் படிச்சு இருக்க மாட்டீங்க !

Geetha Sambasivam said...

//இவங்க முன்னேறினாலும் முன்னேறலாம்; இல்லை நல்ல வாசனை கழிஞ்ச பின் மற்ற வாசனைகள் இழுக்க கீழே இறங்கலாம். இல்லை முன்னேற்றம் தடைப்பட்டு அப்படியே நின்னுடலாம். சொல்ல முடியாது.//

நல்ல வாசனைகள் இழுக்குதா? மற்றவை இழுக்குதானு புரியுதே! அதான்! இன்னும் இப்படியே தான் இருப்போமோனு தோணுது! :((((((

திவாண்ணா said...

கீழே வந்தாலும் திருப்பி மேலே போவோம். சீ சா....