Pages

Tuesday, September 15, 2009

த்வைத லோகத்தில சில ஆனந்த வகைகள்



131.
மனுடன் மனுடகந் தருவன் றேவநன் மாகந் தருவனொண் பிதிரோடே
பனுமா ஜானர்கள் கருமத் தேவர்கள் பகர்முக் கியரிந் திரனாசான்
கனமார் பிரஜா பதியென் விராட்டுபொன் கர்ப்பப் பிரமனென் றின்னோர்கள்
பினவாநந்தங்க ணுரையாம் பிரளய வெள்ளக் கடல்பிர மாநந்தம்.

மனுடன் (சார்வ பௌமன்), மனுட கந்தருவன் (மனிதனாயிருந்து புண்ணியம் செய்து கந்தருவன் ஆனவன்), தேவ நன்மா கந்தருவன் (பூர்வ கல்ப புண்ணியத்தால் இந்த கல்ப ஆதியிலேயே கந்தருவனானவன்) ஒண்பிதிரோடே (சிறந்த தம் உலகில் வாசம் செய்யும் அக்னிஷ்வாத்தா முதலான பிதிரர்) பனும் ஆஜானர்கள், (கல்ப ஆதியிலேயே தேவரானவர்) கருமத் தேவர்கள், (இந்த கல்பத்தில் கருமம் செய்து மகத் பதம் அடைந்து ஆஜான தேவர்களால் பூஜிக்கப்பட்ட தேவர் ஆனவர்) பகர் முக்கியர் (மேலான அஷ்ட வசு துவாதச ஆதித்யர் ஏகாதச ருத்திரர் ஆகிய 31 முக்கிய தேவர்கள்) இந்திரன், ஆசான் (ப்ருஹஸ்பதி), கனமார் (கனம் பொருந்திய) பிரஜாபதி என்னும் விராட்டு, பொன் கர்ப்பப் பிரமன் (ஹிரண்யகர்ப்பன்) என்று 11 இன்னோர்கள் பின (அநுபவிக்கும் ஒன்றுக்கொன்று நூறு மடங்கு அதிகமான) ஆநந்தங்கள் நுரையாம். பிரளய வெள்ளக் கடல் பிரமாநந்தம்.
--
மனிதரில் சிறந்தவன் சார்வ பௌமன் எனப்படுவான். இவன் அனுபவிக்கும் சுகத்தைவிட 100 மடங்கானது மனுட கந்தர்வனின் ஆனந்தம். "அட! இது யாருப்பா?"ன்னா இந்த கல்பத்தில மனுஷனா இருந்து செஞ்ச புண்ணியத்தால கந்தருவனா ஆனவர்.

இப்படியே அடுத்து அடுத்து வருபவர் ஆனந்தம் 100 மடங்கு அதிகம்ன்னு கணக்கு வெச்சுக்கங்க.
தேவ நன்மா கந்தருவன் என்பவர் பூர்வ கல்பத்தில செஞ்ச புண்ணியத்தால இந்த கல்பம் ஆரம்பிக்கிறப்பவே கந்தருவனா ஆனவர்.

சிறந்த தம் உலகத்தில வாசம் செய்கிற அக்னிஷ்வாத்தா முதலானவர்கள் பித்ருக்கள்.

தாம் செஞ்ச புண்ணிய காரியங்களால இந்த கல்ப ஆதியிலேயே தேவரானவர் ஆஜான தேவர்கள்.

கருமத் தேவர்கள் என்பவர் இந்த கல்பத்தில 40 சம்ஸ்காரங்களையும் சரியா செய்து பல யாகங்கள் செய்து உயர்ந்த நிலை அடைஞ்சு ஆஜான தேவர்களால பூஜிக்கப்பட்ட தேவரா ஆனவர்.

பகர் முக்கியர் ன்னு சொல்கிறது மேலான அஷ்ட வசுக்கள், துவாதச ஆதித்யர், ஏகாதச ருத்திரர் ஆகிய 31 முக்கிய தேவர்கள்.

அடுத்து இந்த தேவர்களுக்கு எல்லாம் தலைவனா இருக்கிற இந்திரன்.

அதுக்கும் மேல இந்திரனோட ஆசான் ப்ருஹஸ்பதி.

அதுக்கும் மேல கனம் பொருந்திய பிரஜாபதி என்னும் விராட்டு.

கடைசியா ஹிரண்ய கர்ப்பன் என்கிற பிரமன்.

இப்படி த்வைத உலகத்தவங்களை பட்டியல் போட்டாச்சு.
அப்ப மனுஷர்களோட ஆனந்தத்தை விட பிரம்மனோட ஆனந்தம் 100 பவர் 10.

ஆனாலும் இவர்கள் அனுபவிக்கும் ஆனந்தம் நுரை போலவாம், அத்வைத நிலையிலே இருக்கிற பிரமானந்தம் ப்ரலய காலத்து பெரும் கடல் போலவாம்.


1 comment:

கிருஷ்ண மூர்த்தி S said...

"த்வைத லோகத்தில சில ஆனந்த வகைகள்"

அப்ப, அத்வைதத்துல ஆனந்தமே இல்லையா? இல்ல எப்பவுமே ஒரே மாதிரி அலுப்பூட்டும் கேசரி ஒண்ணே தானா?

ஸ்ரீரங்கம் மோகனரங்கனை வேணுமானாக் கொஞ்சம் வித விதமான ஆனந்தமா எழுதச் சொல்லலாமே:-))