Pages

Wednesday, August 19, 2009

மாயை வந்த விதத்தை விசாரிப்பதில் என்ன பலன்?



105.
ஞானங் காரண மறிபொருள் காரிய நாமரூ பப்பேய்கள்
ஆன தெப்படி யழிந்ததெப் படியென வாய்குதல் பலனன்றே
மான மைந்தனே தீர்க்கசொப் பனசகம் வந்ததும் பாராமல்
போன தும்நினையாமலுன் போதமாய்ப் பூர்ணமாயிருப்பாயே

காரணம் ஆன ஞானம் அறி பொருள் (அறியப்படும்) நாம ரூப பேய்கள் (ஆன) காரியம் ஆனது எப்படி? அழிந்தது எப்படி என ஆய்குதல் (ஆராய்ச்சி செய்தல்) பலனன்றே. மான (பெருமையுள்ள) மைந்தனே, தீர்க்க சொப்பன சகம் வந்ததும் பாராமல், போனதும் நினையாமல் உன் போதமாய்ப் பூர்ணமாய் இருப்பாயே.
[அத்வைத அனுபவம் அடைய வேண்டுபவன் அத்வைத சொரூபமாக இருப்பது தவிர்த்து ஆத்மா அல்லாததின் உற்பத்தி நாசத்தை விசாரிப்பானேன் என்பதாம்.]
--
எல்லாத்தையும் அறிகிற அறிவோட சொரூபமே காரணம். காரணத்தால உண்டானது காரியம்.
அதாவது அறிவால அறியப்பட்டவை அனைத்தும் காரியம்.

இங்கே பலவிதமாக பிரபஞ்சம் தோன்றுகிறது, இல்லையா? அதுவே காரியம்.

பிரம்மத்தின் தோற்றம் போய் இந்த பிரபஞ்சத்தில் பலவிதமாக தோன்றும் நாம - ரூப பேய்கள் எப்படி வந்தன, அவை அழிவது, [மீண்டும் தோன்றுவது] எப்படின்னு விசாரிக்கிறதிலே பயனில்லை. விசாரிச்சு தெரிஞ்சு கொண்டு என்ன செய்யப்போறோம்? :-) எப்படியோ வந்தாச்சு! அவற்றை ஒரேயடியாக நீக்கும் விதம் சொல்லி இருக்காங்க. ஆகவே நீண்ட கனவு போன்ற இந்த பிரபஞ்சம் உண்டான வழியையும் ஒழிக்கும் வழியையும் விசாரிப்பதை விட்டுட்டு நம் ஆத்ம சொரூபத்தில் நிலைத்து நிக்கிற வழியை பாக்கலாம்.

106.
அசத்தி லெம்மட்டுண் டம்மட்டும் பராமுக மாகினா லம்மட்டும்
நிசத்தி லுள்விழிப் பார்வையா மிப்படி நிரந்தரப் பழக்கத்தால்
வசத்தி லுன்மன நின்றுசின் மாத்திர வடிவமா யிடின் மைந்தா
கசத்த தேகத்தி லிருக்கினு மானந்தக் கடல்வடி வாவாயே

அசத்தில் [சத்திய புத்தியுடன் பார்க்கும் ஆதரவு] எம்மட்டுண்டு (எவ்வளவு உண்டு) அம் மட்டும் (அவ்வளவும்) பரா முகமாகினால் (விடுத்தால்) அம் மட்டும் (அவ்வளவுக்கும்)
நிசத்தில் (ஆத்மாவான சத்தில்) உள் விழிப் பார்வையாம். இப்படி நிரந்தரப் பழக்கத்தால் வசத்தில் உன் மனம் நின்று சின் மாத்திர வடிவமாயிடின், மைந்தா, கசத்த (வெறுக்கப்பட்ட) தேகத்தில் இருக்கினும் ஆனந்தக் கடல் வடிவு ஆவாயே.
--
அசத்தாகிய நாமரூபங்களில் உள்ள பற்று (வெளி முக பார்வை) எவ்வளவுக்கு எவ்வளவு விடப்படுகிறதோ அந்த அளவு உள்முக பார்வை கிடைக்கும். இப்படி நீடிச்சு செய்கிற பயிற்சியால மனம் வசப்பட்டு ஆன்ம சொரூபத்தில் நிலைக்கும். அந்த நிலையை அடைந்தா இந்த ஸ்தூல உடம்பில் இருந்தாலும் ஆனந்தமாக இருப்போம். இதுவே தன்னை தான் அறிதல்.

தெரிபொருளுந் தரிசனமுஞ் சேரும் போதிற்
சேர்ந்தசுக வறிவுமிகச் சிறந்த தாகும்
தெரிபொருளால் வளைப்புண்டாற் பந்த மாகும்
தெரிபொருளை விட்டகன்றால் திடங்கொள் வீடாந்
தெரிபொருளுந் தரிசனமுஞ் சேரும் போதிற்
சேர்ந்தவநு பூதியிடர் தீர்த்த தாகுந்
தெரிவுறவாங் கதுபற்றி நிற்பாய் நீரின்
றிந்நிலையாஞ் சுழுத்திதனை சேருவாயே
-வாசிட்டம்.


No comments: