Pages

Tuesday, April 21, 2009

தடைகள்



சீடனுக்கு இப்ப ரொம்பவே வியப்பா போச்சு. கொஞ்சம் பயமும் வந்து இருக்கலாம். பிரம்ம அனுபவம் நிலைக்காம போயிடுமா? ஏன்? எவ்வளவு முயற்சிக்கு அப்புறமா இந்த கூடஸ்தன் பிரம்மம் என்கிற வேறுபாடு கூட போய் அத்வைதமா, எங்கும் ஒண்ணேயாய், பரிபூரணமாய் நம்மை அறிந்து கொண்டோம்! அந்த அனுபவம் போயிடுமா? அப்படி செய்யக்கூடிய தடை எதெல்லாம்? அதை எப்படி நீக்கறது? வேற யாரை கேக்கணும்? அதான் எதிரே குரு இருக்காரே!

¨ஐயா! தடைகள் எவை, எப்படி அவற்றை ஒழிக்கறது?¨ன்னு கேட்கிறான்.

குரு சொல்கிறார். ¨அப்பா, இந்த உசந்த ஞானத்துக்கு மூணு தடைகள் - அஞ்ஞானம், சந்தேகம், விபரீதம்ன்னு இருக்கு. இது மூணும் துன்பத்தை தரும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல் என்கிற மூணு உபாயத்தாலே இதையெல்லாம் ஒழிக்கலாம்.¨

89.
பிரதி பந்தங்கள் யாவை? அவற்றை நீக்குதல் எப்படி?

தடைகளே தெனிலஞ்ஞான சந்தேக விபரீ தங்கள்
படர்செயுமிந்த மூன்றும் பலசன்மப் பழக்கத் தாலே
உடனுடன் வரும்வந் தக்கா லுயர்ஞானங் கெடுமி வற்றைத்
திடமுடன்கெடுப்பாய் கேட்டல் சிந்தித்தறெளிதலாலே

தடைகள் ஏது எனில் அஞ்ஞானம், சந்தேகம், விபரீதங்கள். படர் செயும் (துன்பம் தரும்) இந்த மூன்றும் பல சன்ம பழக்கத்தாலே (வாசனையால்) உடனுடன் (அடிக்கடி) வரும். வந்தக்கால் உயர் ஞானம் கெடும் (நஷ்டமாகும்). [ஆதலால்] இவற்றை திடமுடன் (தைரியத்துடன் முழுதும் நீங்கும் வரை நின்று) கெடுப்பாய் (நீக்குவாய்) [முறையே] கேட்டல், சிந்தித்தல், தெளிதலாலே. (சிரவண மனன நிதித்தியாசங்களாலே)

சில மந்திர சக்திகள் கைவந்தவர்களாலே அக்கினியைக்கூட கட்டுப்படுத்திடலாம். அப்படிப்பட்டவங்க கொழுந்துவிட்டு எரிகிற தீயிலே புகுந்து வெளியே வருவாங்க. கர்நாடகாலே அப்படி ஒத்தர் இருக்கிறதா கேள்வி பட்டு இருக்கேன். அதை அவர் தன்னை சுத்தப்படுத்திக்கிற ஒரு வழியா வைச்சு இருக்காராம். மணி, மந்திரம், மருந்து இவற்றால அக்னியை தாங்கற சக்தி பெற்றவங்களை அக்னி எப்படி கொஞ்சமும் சுடாம இருக்குமோ அப்படி ஞானம் மக்கினதா இருந்தா - அதாவது அஞ்ஞானம், சந்ந்தேகம், விபரீதம் ஆகியவற்றால தடை செய்யப்பட்ட ஞான அக்னியா இருந்தா - சம்சாரம் பந்தம் கொஞ்சம் கூட நாசமாகாது. நெடுங்காலம் உறுதியோட கேட்டல், சிந்தித்தல், தெளிதல் இதையெல்லாம் பயிற்சி பண்ணி இடையூறுகளான மடம், சந்தேகம், விபரீதம் இவற்றை போக்கணும்.

90.
பிரதி பந்தத்தை நீக்காவிடினும் அந்த ஞானத்தால் பவம் நீங்காதோ? அந்த அசம்பாவனை முதலியவற்றை நீக்க கேட்டல் முதலானவற்றை கொஞ்சம் அப்பியாசித்தால் போதாதோ?

அக்கினி கட்டுப்பட்டா லற்பமுஞ் சுடமா ட்டாது
மக்கின ஞானத்தாலே வந்தபந்த மும்வேவாது
சிக்கெனப் பழகிக்கேட்டல் சிந்தித்த றெளிதலாலே
விக்கின மடஞ்சந்தேகம் விபரீதம் போக்குவாயே

அக்கினி கட்டுப்பட்டால் (மணி மந்திர ஔஷதங்களால் அடக்கப்பட்டால்) அற்பமும் (கொஞ்சம் கூட) சுட மாட்டாது. [அது போல்] மக்கின ஞானத்தாலே (பிரதி பந்தங்களுடன் கூடிய ஞானத்தாலே) {theoretical knowledge} வந்த (ஆரோபமாய் தோன்றிய) பந்தமும் (சம்சாரமும்) வேவாது (நாசமாகாது). சிக்கெனப் பழகி (நெடுங்காலம் உறுதியாக நேசத்துடன் பழகி) கேட்டல், சிந்தித்தல், தெளிதலாலே விக்கின (இடையூரான) மடம், சந்தேகம், விபரீதம் போக்குவாயே.



7 comments:

Geetha Sambasivam said...

//மடம், சந்தேகம், விபரீதம் போக்குவாயே.//

எனக்கு இதை எல்லாம் போக்கணும்னு வேண்டிக்கிறேன். :(((( இன்னும் இவை எல்லாம் இருக்கிறதாலேயோ என்னமோ இது ரொம்பவே நன்னாப் புரியறது.

திவாண்ணா said...

//எனக்கு இதை எல்லாம் போக்கணும்னு வேண்டிக்கிறேன்.//

அடடா! குரு சீடனை இல்லை இதை எல்லாம் போக்கிக்கன்னு சொல்கிறார்? எப்படின்னு இன்னும் விளக்கமா பினால சொல்லுவார். அது நம்ம கையிலேயேதான் இருக்கு!

Geetha Sambasivam said...

//சீடனை இல்லை//

நானும் குருவருளைத் தான் வேண்டிக்கிறேன்.

திவாண்ணா said...

நான் சரியா எழுதலை.
இது சீடன் முயற்சி எடுத்து செய்ய வேண்டியது. குருவருளும் வேணும்தான்.

கிருஷ்ண மூர்த்தி S said...

செங்குத்தான பாறை மேல கஷ்டப் பட்டு ஏறியாச்சு...கீழே பாக்காதேன்னார் கைட். மனசுல கீழ பாத்தாத்தான் என்னன்னு ஒரு நினைப்பு, கீழே பாத்தா அதல பாதாளம்..யம்மா இங்கேருந்து கீழ விழுந்தா எலும்பு கூட மிஞ்சாதே, எப்படி சமாளிக்கப் போறோம்னு பயம்,
அப்பத்தான் வழிகாட்டியா வந்தவர் சொன்னது புரிஞ்சது, இத்தனையையும் விட்டுத் தானே மேலே வந்தேன் இப்ப மறுபடி அதுக்கு இடம் கொடுக்கலாமான்னு...

இருங்க, பாறையைக் கொஞ்சம் கெட்டியாப் புடிச்சுக்கிறேன்:-)

திவாண்ணா said...

//இருங்க, பாறையைக் கொஞ்சம் கெட்டியாப் புடிச்சுக்கிறேன்:-)//

:-)))))))))

Geetha Sambasivam said...

அஹோபிலம் நினைவில் வந்தாலும், அவர் சொல்லுவதின் அர்த்தம் புரிகிறது. நான் இன்னும் கீழே தான் இருக்கேன். மேலே ஏறணும்.