Pages

Tuesday, March 3, 2009

மீள் பார்வை - தன் மாத்திரையின் ரஜோ குணம்



சரி, அப்ப தன் மாத்திரையின் ரஜோ குணம்?
ரஜோ குணத்திலே 5 தன்மாத்திரைகளும் கூடி இருந்து ப்ராணன் முதலான 5 வாயுக்களும் உண்டாகும்.
ரஜோ குணத்திலே 5 தன்மாத்திரைகளும் பிரிந்து இருந்து கர்ம இந்திரியங்கள் உருவாகும்.

ரஜோ குணம்னாலே செயல்தான் நினைவு வரணும்.
செயலுக்கு மூச்சு அவசியம் இல்லையா? அதாவது ப்ராண வாயு அவசியம். அதான் பஞ்ச ப்ராணன்கள்.
அதே போல செயலுக்கு கருவிகள் அவசியம். அதான் கர்ம இந்திரியங்கள்.
சரியா போச்சா?

பஞ்ச ப்ராணன்கள்.
பிராணன் முதலான வாயுக்கள் 5.
கூட்டால உண்டானாலும் அந்த அந்த தன் மாத்திரையோட குணம் இருக்கும்ன்னு பாத்தோம் இல்லையா?
1.வியானன் - ஆகாயத்தின் ரஜோ குணத்தில பிறந்த இது ஆகாயம் எல்லா இடத்திலேயும் வியாபித்து இருக்கிறது போல உடம்பு முழுக்க வியாபித்து, ரத்தத்தை பரவ செய்து உடம்பை தாங்கி நிற்கும்.
2.பிராணன் - வாயுவோட ரஜோ குணத்தில உற்பத்தியானது. அதனால எப்போதும் உள்ளும் வெளியும் போய் வந்து கொண்டே இருக்கும். ஹ்ருதயத்திலே தங்கி எப்பவும் நகர்ந்து கொண்டு பசி, தாகம் இதையெல்லாம் உண்டாக்கும். இன்னும் சாப்பிடவே இல்லை; பசி பிராணன் போகிறது ன்னு கேட்டு இருக்கோம் இல்லையா? வெளியேந்து காற்றை உள் வாங்குகிறதும் இதுவே. மொத்தத்திலே மெடபாலிஸம் கவனிக்கறது முக்கியமா இதே.
3.அபானன் - நெருப்பின் ரஜோ குணம். அதோட ஒரு குணம் எதானாலும் சுத்தப்படுத்தறது இல்லையா? அதே போல இது மல ஜலாதிகளை வெளியே தள்ளி சுத்தப்படுத்திடும். மலச்சிக்கல் வராம இருக்க இது சரியா வேலை செய்யணும்.
4.சமானன் - நீர் தத்துவம். இதோட இடம் நாபி (தொப்புள்). நாம சாப்பிட்ட உணவு, குடிச்ச நீர் இதை எல்லாம் உள்வாங்கி செரிக்க வைக்கும். இது சரியா இல்லைனா அஜீரணம்தான், உடம்பு சரியா வளரவும் வளராது.
5.உதானன் மண்ணோட ரஜோ குணத்திலேந்து வந்தது. கண்டம் (தொண்டை) யிலே இருந்து காத்து உள்ளே வெளியே போவதை கட்டுப்படுத்தும். அதுதான் பேச்சுக்கு முக்கியம் இல்லையா?

இந்த அஞ்சு தவிர இன்னும் அஞ்சு உபவாயு இருக்குன்னு ஒரு பார்வை.
நாகன் - உடம்பை முறுக்கி ஆவ் ன்னு கொட்டாவி விடறப்ப இது வேலை செய்யுதுன்னு தெரிஞ்சுக்கலாம்.
கூர்மன் -விக்கலும் ஏப்பமும் வந்தா இதோட வேலைன்னு அறிவோம்.
கிரிகரன் - ஹச் (இல்லைங்க, செல் போன் கம்பெனி இல்லை, தும்மல்) உண்டாக்கறது இது.
தேவதத்தன் - சிரிக்கிறப்பவும், சோகப்படறப்பவும் சினிமாவிலே கதாநாயகி அழுது மூக்கை சிந்தி போடறப்பவும் - இது சுறுசுறுப்பா இருக்கு.
தனஞ்செயன்- நம்ம பிராணன் போன பிறகு உடம்பிலே தங்கி இருந்து 5 ஆவது நாள்ல அதை வீங்கி வெடிக்கப்பண்ணுவது.
இந்த 5 உபவாயுக்களும் பிராண வாயுவோடா வெவ்வேற நிலைதான், அதனால வாயுக்கள் அஞ்சுதான் ன்னும் சொல்கிறாங்க.

தனித்தனியா நின்னு வேலை செய்கிற தன் மாத்திரைகளோட ரஜோ குணம் என்ன ஆகுது?
கர்ம இந்திரியங்களா.
தனித்தனியா என்கிறதால வெவ்வேற இடங்கள்ல இருந்து கொண்டு வேலை செய்யும்.

கர்ம இந்திரியங்கள் ஐந்து:
1.வாக் - ஆகாய ரஜோ குணம். ஆதனால ஆகாயத்திலே பேச்சு பரவும்.
2.கை - வாயுவோட ரஜோ குணம். சலித்துகிட்டே இருக்கணும். ஏண்டா கை வெச்சுகிட்டு சும்ம இருக்க முடியாதுன்னா, ஆமாம்! அதோட இயபான குணம் அது!
3.கால் - அக்னியோட ரஜோ குணம்.
4.பாயுரு - ஜல மலம் கழிக்கிற வேலை. நீரோட குணம். ஓடிகிட்டே இருக்கணும். அதே போல கழிவுப்பொருள் வெளீயே போய்கிட்டே இருக்கணும். இல்லாட்டா பிரச்சினைதான்!
5.உபஸ்தம் - ஆண் குறி/ பெண் குறி : மண்ணோட ரஜோ குணம். ஆனந்தத்தை உண்டாக்கும்.


இந்த பதினேழும் அதாவது ஐந்து ஞானேந்திரியங்கள் + மனம் + புத்தி + ஐந்து வாயுக்கள், ஐந்து கர்மேந்திரியங்கள் = பதினேழு தத்துவங்களும், சுரர் அசுரர் நரர் விலங்குன்னு தோன்றி இருக்கிற உயிர்களுக்கு எல்லாம் (சீவர்க்கெல்லாம்) சூட்சும சரீரங்கள்.

முன்ன சொன்ன மாதிரியே இதெல்லாம் நாம பாக்கிற கை கால் இல்லை. அவற்றை இயக்கற சக்திகள்.

38.
இராசத குணத்தில் வேறிட் டெடுத்தகூ றைந்து மைந்தும்
பிராணவா யுக்களென்றும் பெருந்தொழிற் கருவியென்றும்
பராவிய பெயரா மிந்தப் பதினேழு மிலிங்க தேகம்
சுராசுரர்நரர் விலங்காய்த் தோன்றியவுயிர் கட்கெல்லாம்.

இராசத (ரஜோ) குணத்தில் எடுத்த (எடுத்து ஒன்றாக்கிய) கூறு ஐந்தும் பிராண வாயுக்கள் என்றும், வேறிட்டு எடுத்த (தனித்தனியே எடுத்து வைத்த) ஐந்தும் பெருந் தொழிற் கருவி (கர்மேந்திரியங்கள்) என்றும் பராவிய (பரவிய) பெயராம். இந்த பதினேழும் (ஞானேந்திரியங்கள் ஐந்து + மனம் + புத்தி + ஐந்து வாயுக்கள் + ஐந்து கர்மேந்திரியங்கள் = பதினேழு தத்துவங்களும்) சுரர் அசுரர் நரர் விலங்காய் தோன்றிய உயிர்கட்கு எல்லாம் (சீவர்க்கெல்லாம்) இலிங்கதேகம். (சூட்சும சரீரங்கள்)



1 comment:

Geetha Sambasivam said...

சாப்பிடற மாத்திரைகளிலே இருக்கிற மாதிரி இந்தத் "தன் மாத்திரை"யும், எல்லாத்தையும் தனக்குள்ளே அடக்கிண்டிருக்குனு புரிஞ்சுக்கறேன்.