Pages

Thursday, February 26, 2009

மீள் பார்வை- தாமச குணத்திலே படிகிற ப்ரம்ம சாயை




சரி அடுத்து தாமசம் என்கிற தமஸ்.

[மூல புத்தகத்திலே கொஞ்ச தூய தமிழா இருக்கு. ராசதம் ன்னு சொன்னா ராஜசம். மூலத்தை மாத்துக்கூடாது என்கிற கொள்கையாலே அப்படியே போடறேன். குழம்ப வேண்டாம்.]

சத்வ ஈசன் ஜீவர்களை படைச்சுட்டான். இந்த ஜீவர்களுக்கு புழங்கவும் வேலை செய்யவும் அனுபவிக்கவும் ஏதோ ஒரு களம் (field) வேணுமே! அந்த களம் இந்த தமஸாலதான் உருவாகும்.
ஆமாம் தமஸோமா ஜ்யோதிர் கமய ´தமஸ்´ தான்.

இந்த தமோ குணத்திலே பிரதி பலிக்கிற பிரம்மத்தின் சாயை இரண்டா பிரியும். ஒண்ணு ஆவரணம். இரண்டாவது விட்சேபம். (விக்ஷேபம்)
ஆவரணம் என்கிறது மறைப்பு. விட்சேபம் என்கிறது பல வகையா தோன்றுகிற விஷயம்.

ஆவரணம்ன்னா மறைப்பு. எந்த சக்தி நாம நம்மை சரியா, உண்மையா பாக்க முடியாம மறைக்கிறதோ அதுதான் ஆவரண சக்தி. இதோட சேட்டையாலதான் நாம ப்ரம்மம்ன்னு தோணாம வேற மாதிரி தோணுது. என்னதான் முயற்சி பண்ணாலும் அந்த நினைப்பை நீக்க முடியலியே! அது அவ்வளோ பவர்புல்! அனுபவத்திலே நம்ம மனசிலே இருக்கிற ஆசாபாசங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் இதுவே காரணம்,
இந்த ஆவரணம் போச்சுனாலே ஞானம் வந்துடும். ஆனா அவ்வளோ சுலபமில்லையே!



இரண்டாவதான விட்சேபம் சுவாரசியமானது!
ஆங்கிலத்துல multiplicity of phenomenon.
இந்த உலகம் பலவிதமா இருக்கு. மனிதர்களையே எடுத்துக்கலாம். ஒத்தர் மாதிரி ஒத்தர் இல்லே. தோற்றத்துல அப்படி இருந்தாக்கூட குணத்தில அப்படி இல்லே. இரட்டையர்கள் கூட கொஞ்சமாவது வித்தியாசமானவர்கள்தாம்.
அப்புறம் எத்தனை எத்தனை மிருகங்கள், தாவரங்கள்... தெரிந்தது, தெரியாதது. உலகம் பலவிதமா இருக்கு. அதோட...

இந்த உலகம் மாறிட்டே இருக்கு. ஒரு கணத்திலே இருந்தது அடுத்த கணம் இல்லை. மாலை சூரியன் அஸ்தமிக்கிறப்ப பாருங்க. வண்ணக்கோலங்களை மாறிட்டே இருக்கிறதை!
நாமும் ஒரு செகண்ட் இருக்கிறாப்பல அடுத்த செகண்ட் இல்லை. உடம்பில பல செல்கள் செத்து பலது புதுசா உருவாகிகிட்டு இருக்கு!
இன்னிக்கி பாத்த வானம் நாளை அதே போல இல்லை. தாவரம் அதே போல இல்லை.

உலகம் பலவிதமா தோணுகிறதும் இப்படி எல்லாமே புதுசு புதுசா விதவிதமா மாறிகிட்டே இருக்கிறதும் விட்சேப சக்தியாலதான்.
ரெண்டுமே தாமசத்திலேந்து வந்தாலும் ஆவரணம் பொல்லாது விட்சேபம் நல்லது. ஏன்னு அப்புறம் பாக்கலாம்.

35.
சீவ ஈஸ்வரர்களுக்கு சூட்சும சரீராதி உண்டான முறைமை கூறத்துவங்கி முதலில் சக்திகளின் தோற்றம் சொல்லல்:

ஏமமா யாவினோ தவீசனா ரருளி னாலே
பூமலி யுயிர்கட் கெல்லாம் போகசா தனமுண் டாகத்
தாமத குணமி ரண்டு சத்தியாய்ப் பிரிந்து தோன்றும்
வீமமா மூட லென்றும் விவிதமாந் தோற்ற மென்றும்.

ஏம மாயா வினோத ஈசனார் அருளினாலே, பூமலி (பொலிவு மிகுந்த) உயிர்கட்கு எல்லாம் போக சாதனம் (ஆன சூக்கும தேகம்) உண்டாக தாமத குணம் இரண்டு சக்தியாய் பிரிந்து தோன்றும். வீமமா (பயங்கரமான) மூடல் (ஆவரணம்) என்றும் விவிதமாம் தோற்றம் (விட்சேபம்) என்றும்.
தாத்பர்யம்: சித்தின் நிழல்தங்கிய தமோ குணமானது அறிவு விளங்காததாகிய ஆவரண சக்தியாகவும் அறிவு விளங்குவதாகிய விட்சேப சக்தியாகவும் தோன்றியது.

சரி, சீவன் வந்தாச்சு. அவனுக்கு வேலை செய்ய சக்திகளும் சாதனங்களும், விஷயங்களை உணர ஞான புலன்களும் வந்தாச்சு. ஆனா எதை உணர முடியும்? எதில எப்படி எதுக்கு வேலை செய்யணும். அதுக்கு ஏதோ சமாசாரம் வேணுமே? அதுக்குத்தான் விட்சேப சக்தி இருக்கு.
அப்படி என்ன படைச்சு இருக்கு? நம்மோட உடம்பு (சுவரை வெச்சுதானே சித்திரம் எழுத?) அந்தக்கரணங்கள் (இது வழியாதான் மோட்சத்துக்கு வழியை தேடணும்) புவனங்கள் - அதாங்க உலகங்கள் (இல்லாட்டா எங்கே வாழறது?) போகங்கள் (உடல்லே உயிர் தங்கணுமே?) இந்த விட்சேப சக்தியால சீவர்கள் அஞ்ஞானம் ஒழிஞ்சு மோக்ஷம் அடைய எது தேவையோ அதை எல்லாம் பகவான் படைச்சு இருக்கான். இதனால்தான் ஆவரணம் மோசம்; விட்சேபம் நல்லதுன்னு சொல்கிறது.

சரி. இப்ப இதெல்லாம் எப்படி தோன்றியது? இதுக்கு ப்ரம்மத்தோட சங்கல்ப மாத்திரத்திலேயே எல்லாமே பட்டுனு வந்துடுத்து என்கிறவங்கலும் இருக்காங்க. சிலர் வெவ்வேறு விதமா பதில் சொன்னாலும் இப்ப பாக்க போகிறது பரவலா ஒத்துகிட்டது.
முதல்லே பகவான் விட்சேப சக்தி மூலமா ஆகாயத்தை படைத்தான். அதிலேந்து வாயு. வாயுலேந்து அக்னி. அக்னிலேந்து நீர். நீரிலேந்து மண்.
இதெல்லாம் நாம இப்ப பாக்கிற மாதிரி இல்லை. அதெல்லாம் அப்புறமா வரும். இப்ப இதெல்லாம் சூக்ஷுமமா இருக்கு. பாக்க முடியாம... அதாவது பருப்பொருள் (solid) உருவாகாம அதுக்கான சக்தி தன்மை உருவாயிட்டது.


4 comments:

Kavinaya said...

செய்தி புரிஞ்சாலும் கலைச் சொற்களை நினைவு வச்சுக்கிறதுதான் கடினமா இருக்கு :(

திவாண்ணா said...

திருப்பி திருப்பி வரப்ப பழகிடும். கவலை வேண்டாம். ஒவ்வொரு இடத்திலும் நீளமா போனாலும் விளக்கமா சொல்லவே பார்க்கிறேன்.

Geetha Sambasivam said...

திரும்பப் படிக்கணும், இங்கே விக்ஷேபம் மறுபடியும் குழப்புது. அடுத்த பதிவிலே வர விக்ஷேபமும், இதுவ்ம் வேறேயா, இரண்டுக்கும் ஒரே அர்த்தமானு தடுமாற்றம் வருது. மறுபடி வரேன். :(((((((

திவாண்ணா said...

வாங்க வாங்க!
விட்சேபம் ஒண்ணேதான்.
மறு பதிவுகள் போட்டு வரதால கொஞ்சம் குழப்பமோ?