Pages

Monday, December 8, 2008

பரிட்சை விடைத்தாள் -3




இது மௌலியோட பார்வை. தொடாத ஒரு விஷயத்தை தொட்டு இருக்கார். அது பத்தி பின்னால் எழுதுவேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கர்மா என்று ஆரம்பித்து நித்ய-நைமித்திக கர்மாக்களை விளக்கி நிஷ்காம்ய கர்மாவிற்கு வந்து கீதை ஸ்லோகங்களை பிரிச்சு மேஞ்சுட்டார் திவாண்ணா. ஆரம்பம் முதல் அழகிய மணவாளரது வெண்பாக்களையும் அளித்து, மேலும், பையர், தனது மறுபாதி, வேளுக்குடியார்ன்னு ஒரு குருப்பையே துணைக்கு வைத்துக் கொண்டு பதிவுகளை எழுதியது அழகு. நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. கீழே வருவது எனது சொந்த புரிதல்கள். தவறுகள் இருப்பின் அது எனது புரிதலால் மட்டுமே. திவாண்ணா மற்றும் படிப்பவர்கள் பிழைதிருத்தினால் மகிழ்வேன்.



யத: ப்ரவ்ருத்திர் பூதானாம்

யேன ஸர்வமிதம் ததம்

ஸ்வகர்மணா தமப்யர்ச்ய

ஸித்தம் விந்ததி மானவ ॥18.46॥



அதாவது அவரவர் ஸ்வகர்மாவை அடிப்படையாகக் கொண்டு கர்மங்கள் செய்தால் அதுவே தனக்குப் ப்ரீதியாகிறது என்று கூறியிருக்கிறான் கண்ணன். இந்த கர்மாவின் பலனையும் ஈஸ்வர-ப்ரீதியாக செய்யவேண்டும். அது அவ்வளவு சுலபமானதல்ல. கர்மாக்களால் புண்ணியம் அல்லது நன்மை ஏற்படுவதில்லை. ஆனால் பற்றினைத் துறந்து கர்மாவைச் செய்வதால்தான் நன்மை கிடைக்கிறது. சரி, விதிக்கப்பட்ட கர்மாவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தொடர்வதால் என்ன நடக்கும்?, சிரத்தை உருவாகும், அதன் மூலம் புலன்களை அடக்கி முடிவாக கர்மா நம்மை பற்றற்ற நிலைக்குக் கொண்டு செல்லும்.



கல்பம், நிருக்தம், சந்தம் வியாகரணம் போன்ற எல்லா அங்கங்ளையும் கொண்ட வேதத்தை அத்யயனம் செய்தாலும், பரமாத்மாவை அடைதலைக் குறிக்கோளாக கொள்ளாது, லெளகீக சுகத்தில் ஒருவன் இச்சை கொண்டால், அவனது அந்திம-காலத்தில் வேதம் இறகு முளைத்த பறவை போல அவனை விட்டு விலகிச் சென்றுவிடும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆக, கர்மாவைச் செய்தல் மட்டும் பெரிதல்ல, பண்ணும் கர்மா, கர்மாவின் பலன் போன்ற எல்லாமும் ஈஸ்வரனை நோக்கியே இருக்க வேண்டும்.



சரி, கர்மா என்பதில் எல்லாம் அடக்கம், எது நல்ல கர்மா, எது தவறானது என்று எப்படி அறிவது?, அதற்கும் கண்ணன் பதில் சொல்லியிருக்கிறான். எது செய்யக்கூடிய கர்மா, எது செய்யக்கூடாதது என்பதை அறிந்து கொள்ள சாஸ்திரங்களே பிரமாணம் என்கிறான்.





ப்ரக்ருதே: க்ரியமாணாநி குணை: கர்மாணி ஸர்வச:

அஹங்காரவிமூடாத்மா கர்தாஹமிதி மந்யதே॥3.27॥



ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணநி ஸர்வச

ய: பச்யதி ததாத்மானம் அகர்த்தாரம் ஸ பச்யதி ॥13.29॥



என்பதாக கீதையில் மூன்று வகையான கர்மங்களை பற்றி கூறியிருக்கிறான் கண்ணன். அவை, க்ரியமாண கர்மா (நிகழ்காலத்தில் செய்வது), ஸஞ்சித கர்மா, ப்ராராப்த கர்மா எனப்படுகிறது.



அதாவது சாஸ்திரம் சொன்ன விதிமுறைகளின்படி செய்வது சுபமான க்ரியமாண கர்மம். அதே சமயம் காம-க்ரோத-லோப-ஆஸக்தியால் (குருட்டுப் பற்று) தூண்டப்பட்டு சாஸ்திரம் கூடாது என்று கூறும் செயல்களைச் செய்வது அசுப க்ரியமாண கர்மா.
இதே போல, அநேக மனிதப் பிறவிகளில் எந்த கர்மாக்கள் பற்றிக் கொண்டிருக்கிறதோ அவை சஞ்சித கர்மா என்று கூறக் கேட்டிருக்கிறேன். இந்த சஞ்சித கர்மாவின் முடிவாக பயன் மற்றும் சம்ஸ்காரம் வருகிறது.
இந்த சஞ்சித கர்மாவிலிருந்தே, இக்கர்மாவின் பயனே ப்ராரப்தம் என்று எங்கோ படித்த நினைவு. அது பற்றிய தொடர்பினை இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கலாமோ என்று நினைக்கிறேன். ஒரு வேளை தனித்தனி பதிவுகளைப் படித்ததில், எனக்கு அந்த புரிதலுக்கு வரவில்லையோ?. திவா அண்ணா வழிகாட்டினாலும் நான் சேர வேண்டிய இடத்திற்கு இன்னும் தொலைவு அதிகம் என்றே தோன்றுகிறது. பராம்பிகை அருளட்டும்.

9 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எது செய்யக்கூடிய கர்மா, எது செய்யக்கூடாதது என்பதை அறிந்து கொள்ள சாஸ்திரங்களே பிரமாணம் என்கிறான்//

அந்தச் சாஸ்திரங்களாவன எவை என்பது பற்றியும் கீதையில் வருகிறதா திவா சார்/மெளலி அண்ணா?

//அவை, க்ரியமாண கர்மா (நிகழ்காலத்தில் செய்வது), ஸஞ்சித கர்மா, ப்ராராப்த கர்மா எனப்படுகிறது.//

உம்ம்ம்
சஞ்சிதம், பிராரப்தம், ஆகாம்யம் என்றும் வாசித்த நினைவு!
திவா சார், சஞ்சிதம் எல்லாம் கர்மத்தில் சேர்த்தியா, இல்லை கர்மம் செய்ததனால் உண்டான வினைகளில் சேர்த்தியா?

//கர்மாவைச் செய்தல் மட்டும் பெரிதல்ல, பண்ணும் கர்மா, கர்மாவின் பலன் போன்ற எல்லாமும் ஈஸ்வரனை நோக்கியே இருக்க வேண்டும்//

வரிக்கு வரி உடன்படுகிறேன்!
கர்மத்தின் பலன் கண்ணனே (இறைவனே)!

Geetha Sambasivam said...

//இந்த சஞ்சித கர்மாவின் முடிவாக பயன் மற்றும் சம்ஸ்காரம் வருகிறது.
இந்த சஞ்சித கர்மாவிலிருந்தே, இக்கர்மாவின் பயனே ப்ராரப்தம் என்று எங்கோ படித்த நினைவு. அது பற்றிய தொடர்பினை இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கலாமோ என்று நினைக்கிறேன்//

இரண்டும் ஒண்ணு இல்லை?? வேறே வேறேயா??

முதல்லே எல்லாராலேயும் நமக்கு விதிச்ச கர்மா இது தான் என்று புரிஞ்சுக்கற பக்குவம் இருக்குமா?? சந்தேகம் தான் இல்லையா?? அதான் எளிமையா பக்தி பண்ணினால் கூட நீ அதுவும் எனக்கே அர்ப்பணம்னு பண்ணு என்று கண்ணன் சொல்றான் என்பது என் கருத்து.

பக்தி பண்ணுவதையும் அதன் பலனை எதிர்பாராமல், வியாபாரம் ஆக்காமல், நான் இது தரேன், நீ இதைக் கொடுனு கேட்காமல் அவனுக்கே அர்ப்பணம்னு பண்ணணும். அதுக்கு முயன்றால் பார்க்கப் போனால் இது தான் முதல்படி, நான் இதிலேயே இருக்கேன் என்பதால் இதையே சொல்றேனோ என்னமோ?

இதுக்கான அஸ்திவாரத்தைப் பலமாப் போட்டுட்டால் பின்னர் ஒவ்வொன்றாய்த் தானாய்ப் புரிபடும்னு நம்பறேன்.

திவாண்ணா said...

வாங்க கேஆர்எஸ்,
தர்ம சாஸ்திரம்தான் சொல்லப்படுவது.

சஞ்சிதம் - மூட்டையாக கொண்டு வந்தது மடிசஞ்சி என்று கேள்வி பட்டு இருப்போம். மடியாக வஸ்திரங்களை மூட்டை கட்டி கொண்டு போக உதவுகிறதைதான் அப்படி சொல்கிறோம்.
பிராரப்தம் இந்த ஜன்மத்தில் பலன் கொடுக்க ஆரம்பித்துவிட்டவை.
ஆகாமி அல்லது கிரியமாணா என்பது நம் இன்றைய செயல்களையும் சேர்த்து இனி வரப்போவது.

வேதாந்தத்தில் நல்ல உதாரணம்.
ஒரு வில்லாளி அம்புகளை எய்து கொண்டு இருக்கிறான். சிலவற்றை எய்துவிட்டான். அவை பிராரப்தம். இதன் போக்கை இனி தடுக்க முடியாது.
சிலதை எய்யப்போகிறான். அவை ஆகாமி. அதை எய்துவிடாமல் நிறுத்தலாம். முதுகில் இருக்கிற அம்பறாதூளியில் அம்புகள் உள்ளன. அவை சஞ்சிதம்.
இன்னும் ஒரு வகையில் சொல்லும்போது:
நெற்களஞ்சியத்தில் இருப்பது சஞ்சிதம். அதில் இருந்து எடுத்து கடையில் வைத்து இருப்பது ஆகாமி. விற்றது பிராரப்தம்.
---------------
நாம் இங்கே கர்மா என்று சொல்வது கர்ம வினையைதான். இந்த குழப்பம் வருமோ என்பதும் இது வரை இது பற்றீ எழுதாததற்கு காரணம். சாதாரணமாக கர்மா - வேலை. இங்கே கர்மா என்பது ஒட்டு மொத்தமாக செய்த வேலையின் வினையை குறிக்கிறது. சுத்தி பாத்தால் ஒண்ணுதான்.

திவாண்ணா said...

@ கீதா அக்கா
//இந்த சஞ்சித கர்மாவிலிருந்தே, இக்கர்மாவின் பயனே ப்ராரப்தம் என்று எங்கோ படித்த நினைவு. அது பற்றிய தொடர்பினை இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கலாமோ என்று நினைக்கிறேன்//

இரண்டும் ஒண்ணு இல்லை?? வேறே வேறேயா??//

மேலே சொல்லிட்டேன். சஞ்சிதம் மொத்தமாக. பிராரப்தம் இந்ந்ந்த ஜமாவில பலன் கொடுக்க ஆரம்பிச்சுவிட்டது.

// முதல்லே எல்லாராலேயும் நமக்கு விதிச்ச கர்மா இது தான் என்று புரிஞ்சுக்கற பக்குவம் இருக்குமா?? சந்தேகம் தான் இல்லையா??//

ரொம்பவே! உணர்ச்சி வசப்படாமல் இதுதான் எனக்கு வித்திச்ச கர்மம் என்று உணர்வது எல்லாராலேயும் முடியலை.

// அதான் எளிமையா பக்தி பண்ணினால் கூட நீ அதுவும் எனக்கே அர்ப்பணம்னு பண்ணு என்று கண்ணன் சொல்றான் என்பது என் கருத்து.//

சரிதான்.!

பக்தி பண்ணுவதையும் அதன் பலனை எதிர்பாராமல், வியாபாரம் ஆக்காமல், நான் இது தரேன், நீ இதைக் கொடுனு கேட்காமல் அவனுக்கே அர்ப்பணம்னு பண்ணணும். அதுக்கு முயன்றால் பார்க்கப் போனால் இது தான் முதல்படி, நான் இதிலேயே இருக்கேன் என்பதால் இதையே சொல்றேனோ என்னமோ? //

காமத்துடன் பக்தி முதல் படி. நீங்க சொல்கிறது ரெண்டாவது.

// இதுக்கான அஸ்திவாரத்தைப் பலமாப் போட்டுட்டால் பின்னர் ஒவ்வொன்றாய்த் தானாய்ப் புரிபடும்னு நம்பறேன்.//

எந்த மார்கமானாலும் தீவிரமா அதிலேயே மனசை செலுத்திட்டா போதும். அப்புறம் நாமே அதால இழுத்துப்போகப்படுவோம்!

மெளலி (மதுரையம்பதி) said...

கே.ஆர்.எஸ்,

திவாண்ணா சொல்லிட்டார் உங்க கேள்விக்கான பதிலை.

தஸ்மாச் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே
கார்யாகார்ய வ்யவஸ்திதெள
க்ஞாத்வா சாஸ்த்ர விதானோக்தம்
கர்ம கர்துமிஹார்ஹஸி

கீதை 16-24 ல் இந்த ஸ்லோகத்தை மனத்தில் வைத்துத்தான் நான் அதை எழுதினேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திவா said...
வாங்க கேஆர்எஸ்,
தர்ம சாஸ்திரம்தான் சொல்லப்படுவது//

//மதுரையம்பதி said...
கே.ஆர்.எஸ்,
திவாண்ணா சொல்லிட்டார் உங்க கேள்விக்கான பதிலை.
தஸ்மாச் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே
கார்யாகார்ய வ்யவஸ்திதெள
க்ஞாத்வா சாஸ்த்ர விதானோக்தம்
கர்ம கர்துமிஹார்ஹஸி//

சரி...
இன்னொரு பதிவில்,
எது தர்ம சாஸ்திரம் என்று கொஞ்சம் தொட்டுச் செல்லுங்களேன்!

தர்ம சாஸ்திரம் என்பது பொதுப் பெயரா இல்லை தனியான நூலா?

வேதங்களில் இருப்பதா? இல்லை வேதாங்க/உபநிடதமா? இல்லை வேறு புராணங்களா? எதைக் கண்ணன் காட்டிய தர்ம சாஸ்திரம் என்று கொள்வது?

திவாண்ணா said...

//தர்ம சாஸ்திரம் என்பது பொதுப் பெயரா இல்லை தனியான நூலா?

வேதங்களில் இருப்பதா? இல்லை வேதாங்க/உபநிடதமா? இல்லை வேறு புராணங்களா? எதைக் கண்ணன் காட்டிய தர்ம சாஸ்திரம் என்று கொள்வது?//

தர்ம சாஸ்திரம் என்பது பொதுப்பெயர்தான்.
பல மஹரிஷிகள் இயற்றி இருக்கிறார்கள். அனைத்தையும் படிப்பது கஷ்டம்தான். இப்போது நமக்கு கிடைப்பது வைத்யநாத தீக்ஷிதீயம் என்ற நூல். இது பல மஹரிஷிகளின் வாக்கையும் கம்பைல் செய்தது. இரண்டாவதாக கிருஹஸ்தனுக்கு அவரவர் சூத்திரப்படி செய்ய வேண்டும். ஏனெனில் சிலது சூத்திரங்களுக்கு இடையில் வேறூபடும்.

குமரன் (Kumaran) said...

ஸ்வகர்மாவைச் செய்வது மட்டுமில்லை; அதை சாத்வீகத் த்யாகத்தோடு செய்ய வேண்டும் என்று மிக அழகாகச் சொன்னீர்கள் மௌலி.

தர்ம சாஸ்த்ரங்கள் என்று சொல்லப்படுபவை ஸ்மிருதிகள் தான் என்று எண்ணுகிறேன். கால தேச வர்த்தமானங்களுக்குத் தகுந்த படி ஸ்மிருதிகள் / தர்ம சாஸ்த்ரங்கள் மாறும் என்றும் பெரியவர்கள் சொல்லப் படித்திருக்கிறேன். இன்றைய காலத்திற்கு ஏற்ற சாஸ்திரங்கள் இருக்கின்றனவா? உலக மக்கள் அனைவருக்கும் அந்த சாஸ்திரங்கள் பொருந்துமா? அந்த சாஸ்திரங்கள் யாருக்கு அவரவர் கர்மாவைச் சொல்லவில்லையோ அவர்கள் ஸ்வகர்மாவைப் பற்றி தெரிந்து கொள்வது?

திவாண்ணா said...

வாங்க குமரன். சீக்கிரமே தற்போதைய பதிவுகளை பிடிச்சுடுவீங்க போல இருக்கு. :-)

மௌலி பதில் சொல்லாட்டா நான் சொல்கிறேன்.
அலோ மௌலி...