Pages

Monday, September 21, 2009

பிரமம் இது, இது அல்ல!



136.
நித்தியம்பூ ரணமேகம் பரமார்த்தம் பரப்பிரம நிதானஞ் சாந்தஞ்
சத்தியங்கே வலந்துரியஞ் சமந்திருக்குக் கூடஸ்தன் சாட்சி போதம்
சுத்தமிலக் கியஞ்சநா தனஞ் சீவன் றத்துவம்விண் சோதி யான்மா
முத்தம்விபு சூக்கும மென்றிவ்வண்ணம் விதிகுணங்கண் மொழியும் வேதம்

நித்தியம் பூரணம் ஏகம் பரமார்த்தம் பரப்பிரமம் நிதானம் சாந்தம் சத்தியம் கேவலம் துரியம் சமம் திருக்கு கூடஸ்தன் சாட்சி போதம் சுத்தம் இலக்கியம் சநாதனம் சீவன் தத்துவம் விண் சோதி ஆன்மா முத்தம் விபு சூக்குமம் என்று இவ்வண்ணம் விதிகுணங்கள் மொழியும் வேதம்.

137.
அசலநிரஞ் சனமமிர்த மப்பிரமே யம்விமல மநுபா தேயம்
அசடமநா மயமசங்க மதுலநிரந் தரமகோ சரம கண்டம்
அசமநந்த மவிநாசி நிர்குணநிட் களநிரவ யவம நாதி
அசரீர மவிகார மத்துவித மெனவிலக்கா மநேக முண்டே

அசலம் நிரஞ்சனம் அமிர்தம் அப்பிரமேயம் விமலம் அநுபாதேயம் அசடம் அநாமயம் அசங்கம் அதுல நிரந்தரம் அகோசரம் அகண்டம் அசமநந்தம் அவிநாசி நிர்குண நிட் கள நிரவயவம் அநாதி அசரீரம் அவிகாரம் அத்துவிதம் என விலக்காம் அநேகம் உண்டே.
--
குறிப்பு - ஒரே பொருள் கொண்டதாக இங்கே கூறப்படும் சொற்கள் நூற்களில் சேர்ந்து வரலாம் - நித்தியம், ஸநாதநம் என்பது போல. அங்கே அவ்விரு சொற்களுக்கிடையே உள்ள சூக்குமமான பொருள் வேறுபாட்டை வியாக்கியானங்களிலிருந்து அறிந்து கொள்ளவேண்டும். பொதுவான பொருள் மட்டுமே இங்கே கொடுக்கப்படுகிறது.

நித்தியம், ஸநாதனம் - எப்போதும் இருப்பது
பூரணம் - முழுமையானது
ஏகம் - தன்னிகரில்லாமல் தானொன்றாக மட்டும் இருப்பது
பரமார்த்தம் - உண்மை
ப்ரஹ்மம் (பிரமம்) - பரந்து இருப்பது
நிதானம் - (nidaanam, not nidhaanam) முதற்காரணம்
சாந்தம் - ஆசாபாசங்கள் அடங்கி அவையின்றி இருப்பது
சத்தியம் - மூன்று காலங்களிலும் அழியாமல் மாறாமல் இருப்பது
கேவலம் - வேறொன்றுடன் தொடர்பு இல்லாதது
துரியம் - விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் இம்மூன்றையும் கடந்த நான்காவது
சமம் - வேறுபாடற்றது
திருக்கு - அறிவுமயமானது
கூடஸ்த(ம்/ன்), அசங்கம் - பற்றுதலற்றது
சாட்சி - ஒரு காரியத்தில் இறங்காமல் அதைப் பார்க்கமட்டும் செய்வது
போதம், அசடம் - தன்னைத்தான் அறிந்தது
சுத்தம், நிரஞ்சனம், விமலம் - ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலமற்றது
இலக்கியம் - ???
ஆன்மா - அறிபவன், (பரம்பொருளைக் குறிக்கையில்) அநித்தியமான வெளித்தோற்றங்களைக் கடந்தது
சீவன் - ஸம்ஸாரபந்தமுள்ள ஆன்மா
தத்துவம் - சாத்திர சித்தாந்தத்தில் உலகிலிருக்கும் ஒரு முக்கியபொருளாகக் கணிக்கப் பட்டது (எ-கா- அக்னி தத்துவமே சிவனின் நெற்றிக்கண்ணாம்), (பரம்பொருளைக் குறிக்கையில் ஆன்மா என்பதன் பொருளையே கொள்க)
விண் - ???
சோதி - ப்ரகாசிப்பது
முக்தம் - தளைகளற்றது
விபு - வியாபித்திருப்பது
சூக்குமம் - மேலோட்டமாய்ப் பார்க்கையில் தெரியாதது.
அசலம் - செயல்கள் அடங்கிய நிலையிலிருப்பது
அமிர்தம் - அழிவு இல்லாதது
அப்பிரமேயம், அகோசரம் - சாமானிய அறிவிற்கு எட்டாதது
அநுபாதேயம் - தானே அடையத்தக்க பரம லட்சியமாக இருப்பதால் வேறு லட்சியத்தை அடைவதற்கு உபயோகிக்கவியலாதது
அநாமயம் - சம்சாரம் என்ற வியாதியற்றது
அதுல - ஒப்பில்லாதது
நிரந்தரம் - இடைவெளியில்லாதது
அகண்டம், நிஷ்கலம் (நிட்களம்), நிரவயவம் - பகுதிகளாகப் பிரிக்கவியலாதது
அசமநந்தம் - ??
அவிநாசி - அழிவற்றது
நிர்குணம் - ஸத்துவம், ரஜஸ், தமஸ் என்ற குணங்களும் அவற்றிலிருந்து பிறந்த வெப்பம், தண்மை முதலிய குணங்களும் இல்லாதது
அநாதி - பிறப்பில்லாதது
அசரீரம் - உடல் இல்லாதது
அவிகாரம் - எப்பொழுதும் மாறுபாடற்றது
அத்துவிதம் அத்விதீயம் - தன்னைக்காட்டிலும் வேறு (இரண்டாவது) பொருளில்லாதது

2 comments:

Geetha Sambasivam said...

திரும்பப் படிக்கணும். :(

திவாண்ணா said...

பெரிய லிஸ்ட் தான். திருப்பி திருப்பி படிக்கலாம்.